இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும்பாணர்
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும்பாணர்
இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் முத்திரை பதித்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மகா மதுர கவிஞர் வீ.வே. முருகேச பாகவதர். 21.10.1897ஆம் நாள் சென்னை வில்லிவாக்கத்தை அடுத்த கொன்னூரில் பிறந்த முருகேச பாகவதர் வில்லிவாக்கத்திலேயே வாழ்ந்து 21.10.1974ஆம் நாளில் காலமானார்.
தமிழ்க் கவிதையுலகில் தேசிய விடுதலையை பாரதியாரும் திராவிட இயக்க விடுதலையை பாரதிதாசனும் கவிதையாய் வடித்த பொழுது தென்னிந்திய அடித்தள மக்கள் விடுதலையை, அவர்களின் போராட்ட வரலாற்றைத் தமிழ் மரபில் நின்று பாடியவர் முருகேச பாகவதர் என்று ஆய்வு ரீதியாகக் கூறலாம். பண்டிதர் அயோத்திதாசர், தந்தை பெரியார் உள்ளிட்டோரின் சிந்தனை அடிப்படையில் சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வடிவமாக விளங்கினார்.
1918ஆம் ஆண்டிலிருந்து இவர் கவிதைகள் எழுதி வந்தார். அப்போதே நாடக ஈடுபாடும் ஆரம்பித்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டங்களில் சில நாடகக் கொட்டகைகளில் ‘பஞ்சமர்க்கு இடமில்லை’ என்ற போர்டு மாட்டி இருந்தபொழுது அதை நீக்க வேண்டும் என்பதற்காகவே நாடகக் கலைஞராக உருவானார். பல கலைஞர்களையும் உருவாக்கினார். நாடகம் நடத்துபவர்கள் தொடர்புகொண்டு அழைத்தபோது அந்த போர்டுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். இவ்வாறு போர்டுகளை நீக்க வைத்த இளமைப்பருவத்திற்குச் சொந்தக்காரர் மதுர கவிஞர்.
வெள்ளையர் வருகையும் அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் பல்வேறு தகவல் தொடர்பு வளர்ச்சிகளும் சமூகத்தில் பல்வேறு அசைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது அவற்றையெல்லாம் உள்வாங்கி இசைப் பாடல்களாகக் கொண்டுவந்த கவிஞர்களில் முதன்மையானவர் முருகேச பாகவதர். 1930களிலேயே அவரது நூல்கள் தமிழுவுலகில் நன்கு கவனம் பெற்றுவிட்டன. இதற்கான முக்கிய காரணம் பாடத் தேர்ந்தெடுத்த அவரது தலைப்பும் அதன் உள்ளடக்கமும்.
‘ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்த கீதங்கள்’ என்பது அவரது முதல் நூலின் தலைப்பு. ஆண்டவன், அரசன் பல்வேறு வள்ளல்கள் என அவர்களின் புகழினைப் பாடிக்கொண்டிருந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அடித்தள மக்களின் விடுதலையைச் செவ்விலக்கியத் தன்மையோடு பாடுபொருளாக மாற்றி முருகேச பாகவதர் கொண்டுவந்தார்.
அதனாலேயே அவரின் முதல் நூலை அக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கிய ராவ்பகதூர் எம்.சி ராஜா, தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி, திராவிடன் இதழ் ஆசிரியர் சனக சங்கர கண்ணப்பர் ஆகியோர் பாராட்டினர். இந்நூலுக்கான வாழ்த்துப் பாடல்களை ஓம் பிரகாச சுவாமிகள் மடத்தினரும் சுவாமி சகஜானந்தாவும் வழங்கியிருந்தனர். இவரது சொல்லாற்றலையும் பேச்சாற்றலையும் கணக்கிலெடுத்துக்கொண்ட சென்னை மாகாண அரசு 1929ஆம் ஆண்டில் மதுவிலக்குப் பிரச்சாரகராக இவரை நியமித்தது.அந்தவகையில் இவர் பாடிய பல பாடல்கள் ‘மதுவிலக்குக் கீர்த்தனங்கள்’ ‘அறிவானந்த கீதம்’ எனும் தலைப்புகளில் நூல்களாக உருவாகின.
தமிழ்ப் புலமை மரபில் செல்வாக்குப் பெற்றிருந்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, திருநீலகண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை, இராம நாடகம் சரித்திரக் கீர்த்தனை ஆகிய வடிவங்களிலிருந்து பழந்தமிழ் இலக்கிய கீர்த்தனை மரபை, இசை வடிவத்தைத் தன்னுடைய கவிதைகளுக்கான வடிவமாக மாற்றிக்கொண்டிருந்தார் முருகேச பாகவதர். பழைய இலக்கிய மரபை அதன் வடிவமும் சொற்சிறப்பும் மாறாமல் அப்படியே உள்வாங்கிச் சித்தர்கள் வெளிப்பட்டதைப் போல புதிய தளத்தில் முருகேச பாகவதர் வெளிப்பட்டார். சமரசம், சன்மார்க்கம் சென்னை சிங்காரம், மாதர் உரிமை, தமிழ்ச்சோலை, வெள்ளப் பாடல், காந்தியடிகள், காமராசர், தமிழமுதம் என்ற பல்வேறு தலைப்புகளில் பதினேழுக்கும் மேற்பட்ட நூல்களை வீ.வே. முருகேச பாகவதர் எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கவிஞரை இன்றும் தமிழக மக்கள் பெருமளவில் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
மங்களம் என்ற தன் துணைவியாரின் பெயரில் உருவாக்கிய ‘மங்கள நிலையம்’ சார்பில் ‘தமிழமுதம்’ நூலைக் கொண்டுவந்தார். இந்நூலுக்குத் தமிழ் அறிஞர்கள் டாக்டர் மு. வரதராசன், ரா. பி. சேதுப்பிள்ளை, அ.மு. பரமசிவானந்தம் தொடங்கி பலரும் வாழ்த்து வழங்கியுள்ளனர் அரசியல் தலைவர்களில் அமைச்சர் பூ.கக்கன், ம.பொ. சிவஞானம், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரைத்துள்ளனர்.
இந்தவகையில்தான் அவர் பண்டித அயோத்திதாசர் தொடங்கி அன்னை சத்தியவாணி முத்துவரையில் பல்வேறு அடித்தள மக்கள் விடுதலைப் போராட்ட நாயகர்களை, அறிஞர்களை, சிந்தனையாளர்களை, தலைவர்களை வெகுநேர்த்தியான கவிதையில் வடித்துத் தந்துள்ளார்.அதேநேரத்தில் காங்கிரஸ், பொதுவுடைமை, திராவிட இயக்கங்களின் பின்புலக் கருத்துகளையும் இணைத்துக்கொண்டு பாடியுள்ளதைப் பாடல்கள் காட்டுகின்றன.
1932ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சென்னைவந்த போது அவரை நேரடியாகச் சந்தித்தார். அதேபோல காந்தியடிகள் சென்னை வந்தபோதும் சந்தித்திருக்கிறார். அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்களுடனும் தலைவர்களுடனும் தொடர்பு இருந்துள்ளது. கவிமணி, திரு.வி.க, கலைவாணர், அறிஞர் அண்ணா உள்ளிட்டோரோடு தொடர்பில் இருந்து, அவர்களோடு இணைந்தும் செயல்பட்டவர்.
ஐம்பதுகளில் அரண், தாயகம் உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தியுள்ளார். எழுபதுகளில் மதுர கவிஞன் என்ற ஏட்டை நடத்தினார்.அத்தோடு அன்றைய தமிழகத்தில் வெளிவந்துகொண்டிருந்த குடியரசு தொடங்கித் தொண்டு, உரிமை, சமத்துவம், சமத்துவச் சங்கு, இந்திய தொழிலாளி முழக்கம், விடுதலை போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதிவந்தார் முருகேச பாகவதர். பற்பல கவியரங்குகளிலும் பங்கேற்றுக் கவிதைகளைத் தந்துகொண்டே இருந்தார்.
இசைச் சொற்பொழிவுகள், கதாகாலட்சேபம் என்று சொல்லப்படக்கூடிய கலைவடிவத்தைச் சமூக மறுமலர்ச்சிக்காகத் திரைப்படங்களில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ‘கிந்தனார்’ போன்று நடத்தியதை அனைவரும் அறிவோம். அவ்வகையில் மக்கள் நடுவே இசைச் சொற்பொழிவு வழங்கி வந்தார். புத்தர், இயேசுநாதர், மாணிக்கவாசகர், கம்பர், தேசிங்குராஜன், குமணன், பலியின் கொடுமை, காந்தியச் செல்வர் குமரப்பா, இரட்டைமலை சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர் போன்ற பல்வேறு தலைப்புகளில் இப்பொழிவை வழங்கியுள்ளார். திராவிட இயக்கங்கள் கலையைச் சமூக விடுதலைக்குப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக காந்திய இயக்கத்திலிருந்து முருகேச பாகவதர் வழிகாட்டினார்.
பக்தி இலக்கியத்தில் திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடியிருக்கிறார். அதே இசை வடிவத்தில் பின்வருமாறு முருகேச பாகவதர் பாடியிருக்கிறார்.
“மந்திரமாவது சோறு, மானத்தைக் காப்பது ஆடை
சுந்தரமாவது வீடு, துதிக்கப்படுவது அன்பு
வெந்துயர் தீர்ப்பது கல்வி மேன்மை அளிப்பது இங்கு
ஒழுக்கம்
சிந்தை கவர்வது தியாகம் இந்தச் செகத்தில் உயர்ந்தது
அறிவே.”
அயோத்திதாச பண்டிதர் மொழியில் கூறுவது போல் “பேசுவதெல்லாம் வேதாந்தம் அபகரிப்பது எல்லாம் அயலான் சொத்து” என்பதற்கேற்ப “நந்தனார் பாணன் தன்னை நடுவில் வைத்துத் தொழுவார் அந்த வம்சத்தவரை அண்டவிடாமல் அழுவார்” என்று எழுதியுள்ளார்.
“பன்னூறு பகுத்தறிவு நூல்கள் தந்தார்; பாழ் சாதி மதம் பேதம் எரித்தார்,” “இன்று எழுதும் எழுத்தாளர் மட்டும்தான் இருக்கின்றாரா இருந்தவரை மறக்கலாமா?” என்றெல்லாம் பண்டித அயோத்திதாசர் பற்றி இவர் எழுதியிருக்கிறார்.
அவர் எழுத்து மூலமாகக் கிடைக்கும் வாழ்க்கைக் குறிப்புகள், பாடல்கள் ஆகியவற்றைக் கொண்டுதான் இன்று நாம் அவரைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர் எழுதிய இசைக் கீர்த்தனைகள் இசைப்புலமைகொண்ட தமிழ்பபு்லவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
1946இலும் 1954இலும் பம்பாய் தாராவி தமிழர்கள் கவிஞரை இருமுறை சிறப்பு செய்துள்ளனர். 1958இல் சென்னை அரசாங்கமும் இவருக்குப் பொற்பதக்கம் தந்து பாராட்டியுள்ளது. தமிழ் வட்டம் சார்பில் 1973இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி மோதிரம் அணிவித்துச் சிறப்பு செய்து பாராட்டியுள்ளார்.இரு மகன்கள், இரு மகள்களைப் பெற்றவர்.
தமிழ் மொழியை, தமிழ் மக்களை நவீன மனிதர்களாக மாற்றுவதற்கு இசைத் தமிழ் மூலமாகவும் கவிதைத்தமிழ் மூலமாகவும் மகத்தான பணியாற்றிய மகாமதுரக் கவிஞர் முருகேச பாகவதரின் படைப்புகளை அண்மையில் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இதேவேளையில் அவரது படைப்புகளை அறிஞர் உலகமும் பரவலாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
என் சாதி, என் மதம், என் மொழி என்று அறிஞர்களை அணுகுவது ஆரம்ப நிலை. அதற்காக அப்படியே இருந்து விடமுடியாது. சிறந்த அறிவு, சிறந்த ஞானம், சிறந்த சிந்தனை எங்கிருந்து வந்தாலும் அவற்றை ஏற்று எடுத்துச் செல்ல வேண்டியது மிகத் தேவையானது. அவ்வகையில் தமிழ்ச் சமூகம் நவீன அறிவுச் சமூகமாக மாறுவதற்கு நல்லதொரு கச்சாப் பொருளாக விளங்குகிறார் கவிஞர் முருகேச பாகவதர்.
தமிழ்ச் சமூகம் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளட்டும்.
மின்னஞ்சல்: jayabalankannan74@gmail.com