ஆங்கிலச் சங்கிலியில் பிணைத்த தமிழ் நாக்கு
இப்போது அவர் தனது மேஜையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன்
கதவு திறந்திருக்கிறது. மாலை.
புல்வெளியில் குழந்தைகள் விளையாடுகிறார்கள்
(ரஃப் பாசேஜ் – வீடு திரும்புதல் 12)
ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்ற இந்தியக் கவிஞர் ஆர். பார்த்தசாரதி தமது தொண்ணூற்றியோராம் வயதில் நியூயார்க் நகரில் மறைந்தார். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், பதிப்பாசிரியர் என்ற நிலையில் புகழ் பெற்றிருந்தவர். கவிதையியலிலும் கல்விப்புல நடவடிக்கைகளிலும் செயல்பட்டு வந்தார். எனினும் 1980களுக்குப் பிறகு ஏறத்தாழ மறக்கப்பட்ட ஆளுமையாகவே இருந்தார். 2026 மார்ச் 7 அன்றைய மறைவுச் செய்திக்குப் பின்னரே மீண்டும் இலக்கிய உலகில் அவர் பெயர் கவனத்துக்கு வந்தது.
ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான ஜீத் தய்யில் பென்குவின் பதிப்பகம் வாயிலாகத் தொண்ணூற்று நான்கு இந்தியக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய பெருந்தொகுப்பை (The Penguin Book of Indian Poets (2022) வெளியிட்டார். அதில் ஆர். பார்த்தசாரதியின் சமகாலக் கவிஞர்களான நிஸிம் எசேக்கியேல், டாம் மொரேஸ், ஏ.கே. ராமானுஜன், யூனிஸ் டி சோஸா முதலானவர்களின் கவிதைகள் இடம் பெற்றிருந்தன. அதே காலப் பகுதியில் எழுதிய கவிஞர்களும் தொகுப்பு வெளியான காலத்துக்கு முன்பு மறைந்தவர்களுமான அருண் கோலாட்கர், டாம் மொரேஸ் போன்றவர்களுக்குச் சமர்ப்பணமும் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னணிக் கவிஞரான ஆர். பார்த்தசாரதியின் பெயர்க் குறிப்பைத் தவிரக் கவிதை எதுவும் தொகுப்பில் இடம் பெறவில்லை. இந்திய ஆங்கிலக் கவிதையை வாசிப்பில் பின்தொடர்ந்து வரும் எந்த வாசகரின் பார்வையிலும் இந்தத் தவிர்ப்பு தொந்தரவுத் தருவதாக உறுத்தியிருக்கும்.
இந்த அளவுக்கு இலக்கிய மறதியில் தள்ளப்படவேண்டியவர் அல்லர் ஆர். பார்த்தசாரதி என்பதை அவருடைய செயல்பாட்டுக் காலப் பங்களிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. 1960 முதல் 80கள் வரையான கால அளவில் இந்தோ ஆங்கில இலக்கியச் சூழலில் முனைப்பாகப் பணியாற்றியிருந்தார். சொந்தக் கவிதைத் தொகுப்புகள், இந்தியக் (ஆங்கிலக்) கவிதைத் தொகுப்புகள் என்று தொடர்ந்து வெளியிட்டார். கமலாதாஸ், நிஸிம் எசேக்கியேல், டாம் மொரேஸ், அடில் ஜுஸ்ஸவாலா, கேகி தாருவாலா முதலான கவிஞர்களின் வரிசையில் தொடர்ச்சியாக இடம் பிடித்தவர்களில் ஆர். பார்த்தசாரதியும் ஒருவர். அவருக்கு இணையாகவே ஏ.கே. ராமானுஜன், ஜயந்த மஹாபத்ரா, அருண் கோலாட்கர், திலிப் சித்ரே போன்றவர்களும் அணிவகுத்தனர். இந்தப் பெரும் வரிசை இந்திய ஆங்கிலக் கவிதைக்கு வலுவூட்டியது. அந்த நாட்களில் வெளியான இந்திய ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளில் எல்லாம் பார்த்த சாரதியின் கவிதைகள் இடம்பெற்றன. அவருடைய கவிதை சேர்க்கப்படாத தொகுப்பு அனேகமாக இல்லை. அந்த அளவுக்கு முதன்மையானவராகக் கருதப்பட்டார் அவர்.
இந்திய ஆங்கிலக் கவிதைகள் பெரும்பான்மையும் கற்பனைவாத (ரொமான்டிக்) மனநிலையில் எழுதப்பட்டவை; இந்திய வாழ்க்கையை ஆங்கிலக் கண்ணாடி வழியே பார்த்தவை; மேட்டுக்குடி இலக்கிய வாசகர்களின் ரசனைக்குரியவை என்று பிற இந்திய மொழி இலக்கியச் சூழல்களில் பொதுவாக விமர்சனம் நிலவியது. அது முற்றிலும் ஒதுக்கப்படத் தகுந்த விமர்சனமும் அல்ல. இந்தப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திய கவிஞர்களில் முன்னவராகக் கருதப்பட்டவர் நிஸிம் எசேக்கியேல். முன் குறிப்பிட்ட ஏ.கே. ராமானுஜன் உள்ளிட்ட கவிஞர்கள் இந்தப் போக்கைச் சமகால ஏற்புடையதாக நிறுவினார்கள். இந்திய வாழ்க்கையை இந்தியக் கண்ணோட்டத்தில் முன்வைக்கும் கவிதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பணியில் ஆர். பார்த்தசாரதியின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கவிஞர்களிடையே ஒரு பொதுத்தன்மையும் நிலவியது. எல்லாரும் இருமொழி விற்பன்னர்கள். தத்தம் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒரே சமயத்தில் எழுதியவர்கள். ராமானுஜன் கன்னடத்திலும் திலிப் சித்ரேயும் அருண் கோலாட்கரும் மராத்தியிலும் ஜயந்த மஹாபத்ரா ஒரிய மொழியிலும் கொண்டிருந்த அதே கவிப்பிரக்ஞையுடனேயே ஆங்கிலக் கவிதையாக்கத்திலும் ஈடுபட்டார்கள். இதில் விதிவிலக்கு ஆர். பார்த்தசாரதி. அவர் தமிழில் கவிதை எழுதியிருப்பதாக அறிய முடியவில்லை. ஆனால் அவரது கவிப்பிரக்ஞையை உருவாக்கியது தமிழ் மொழியும் அதன் பண்பாட்டுக் கூறுகளும் என்பதைச் சீரிய வாசகர் புரிந்துகொள்வது எளிது.
ஆர். பார்த்தசாரதி என்ற ராஜகோபால் பார்த்தசாரதி திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார். பள்ளி, கல்லூரிப் படிப்பைப் பம்பாயில் முடித்தார். சில ஆண்டுகள் அங்கேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிரிட்டிஷ் கவுன்சில் நல்கை பெற்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இங்கிலாந்து வாழ்க்கை பெரும்பாலான அந்நாள் இந்தியர்களைப் போலவே கலாச்சாரரீதியிலும் கல்விசார்ந்தும் அவரை அசைத்தன. அந்த உணர்வே அவரது கவிதையின் ஊற்றுக்கண்ணைத் திறந்தது. நாடு திரும்பிய பின்னர் சில காலம் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் இலக்கியப் பதிப்பாசிரியராக முதலில் சென்னையிலும் பின்பு தில்லியிலும் பணிபுரிந்தார். சாகித்திய அகாதெமியின் ஆங்கிலப் பதிப்புப் பிரிவுக்கு ஆலோசகராகவும் இருந்தார். அவரைக் கவிதை உலகத்தில் அடையாளப்படுத்திய இரண்டு நூல்களை சென்னைக் காலத்தில்தான் வெளியிட்டார். ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் இந்தியக் கவிஞர்கள் பத்துப் பேர் (Ten Twntieth Century Indian Poets (1976 ), என்ற தொகுப்பு. இரண்டாவது , அவரது சொந்த நீள்கவிதையான ‘ரஃப் பாசேஜ்’ (சிக்கலான காலம் - Rough Passage (1977 ). பின்னர் வெவ்வேறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கல்விப் பணியாற்றினார். மிக அண்மைக் காலம்வரையும் கவிதைப் பணிகளில் ஈடுபட்டிருந்தும் அறியப்பட்டவராக இல்லை. இந்திய ஆங்கிலக் கவிதையுலகம் மாறியதில் அவர் கைவிடப்பட்டிருக்கலாம்.
ஆர். பார்த்தசாரதியின் ஆங்கிலக் கவிதைகளின் அடியுரமாக இருந்தது தமிழுடன் அவர் கொண்டிருந்த மானசீகமும் ஆத்மார்த்தமுமான உறவு. தமிழ் ஓர்மை கொண்ட கவிஞன் ஆங்கிலத்தில் எழுதுவதை ‘வெளிவாழ்வு’ எழுத்து என்றே அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தலைமறைவும் அந்நியமாதலும் அவற்றின் விளைவான நினைவேக்கமும் கவிதையின் முதன்மைப் பொருள்களாக இருந்தன. அவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான ‘ரஃப் பாசேஜ்’ இந்த மனநிலையின் சான்றாகவே அமைந்தது. அவருக்கும் அவரது தமிழ்த் தொன்மைக்கும் நிகழும் உரையாடலே இந்த நீள் கவிதை. உண்மையில் இது நெடுங்கவிதையல்ல. முப்பத்தியேழு சிறு கவிதைகளின் தொகுப்பு. அந்தக் கவிதைகளும் மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டவை. ‘தலைமறைவு’ (Exile ), ‘விசாரணை’ (Trial), ‘வீடு திரும்புதல்’ (Homecoming) என்ற மூன்று பகுதித் தலைப்புகளும் கவிதையின் மையப் பொருளை விளக்குபவை. அன்று வெளிவந்திருந்த ஆங்கிலக் கவிதைகளின் இயல்புக்கு மாறான வடிவில் அமைந்தவை. இன்று வாசிக்கும்போதும் ‘ரஃப் பாசேஜ்’ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கியமான கவிதைகளில் ஒன்று என்ற எண்ணத்தை அளிக்கிறது.
இரண்டு வீடுகளில் ஒரே சமயம் வாழ்ந்தவராகத் தன்னைச் சொல்லிக்கொண்ட பார்த்தசாரதி “என்னால் ஒருபோதும் ஆங்கிலக் கவிஞராக மட்டுமே செயல்பட முடியவில்லை” என்றும் குறிப்பிட்டார். எனினும் இரு மொழிகளுக்கும் அவரது தனித்துவமான இலக்கியப் பங்களிப்புக் கிடைத்தது. ஆங்கிலத்துக்கு நேரடியாகவும்; தமிழுக்கு மறைமுகமாகவும். கவிதையியல் தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளும் அல்லாத இந்திய மொழிகளை முன்னிருத்தியே கருத்துக்களை முன்வைத்தார். பின்னாட்களில் அவற்றைக் கற்பிப்பவராகவும் இருந்தார். “என் கவிதைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையானாலும் அவற்றின் நடையும் உள்ளடக்கமும் தமிழுக்கு நெருக்கமானவை” என்று குறிப்பிட்டார். அந்த நெருக்கத்தின் விளைவுதான் சிலப்பதிகாரத்துக்கு அவர் வழங்கிய ஆங்கில வடிவம். ‘ஒரு சிலம்பின் கதை: இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்,’ ( The Tale of an Anklet : Cilappathikaram Of Ilanko Adikal ). இந்த மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதெமியின் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது. மணிமேகலைக்குச் செய்துவருவதாக அறிவித்திருந்த மொழியாக்கம் வெளியானதாக அறிய முடியவில்லை. அவரது
குறிப்பிடத்தகுந்த இன்னொரு மொழிபெயர்ப்பு ‘சமஸ்கிருத சிருங்காரக் கவிதைகள்’ (Erotic Poems from the Sanskrit (2017).
ஒரு வாசகனாக ஆர். பார்த்தசாரதியின் ஆக்கங்களை மூன்று வெவ்வேறு தருணங்களில் நேர்கொள்ள வாய்த்தது. இலக்கிய வாசிப்பு முற்றியிருந்த எழுபதுகளில் தேடலின் சேரிடப் புள்ளிகளில் ஆர். பார்த்தசாரதியும் ஒருவராக இருந்தார். புரிந்தும் புரியாமலும் அந்தக் கவிதைகளில் உழன்றிருந்தபோது வாசிக்கக் கிடைத்த கசடதபறவின் பின்னிதழ்கள் துலக்கமளித்தன. ஓர் இதழில் பார்த்தசாரதி கவிதைகளின் தமிழாக்கம் வெளியாகியிருந்தது. எம்.என். பதி என்ற பெயரில் மஹாகணபதி மொழிபெயர்த்திருந்தார். அது தமிழ்ப் புதுக்கவிதை வெவ்வேறு திசைகளிலிருந்து ஊட்டம் பெற்றுக்கொண்டிருந்த காலம். இந்திய ஆங்கிலக் கவிதைகளும் கவனத்துக்கு உரியவையாக இருந்தன. அந்தத் தாக்கத்தில் வாசித்த அன்றைய இந்திய ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளில் இடம் பெற்றிருந்த கவிஞர்களில் ஒருவராகவும் கவிதையாக்கத்தில் பின்தொடரத் தூண்டுபவராகவும் ஆர். பார்த்தசாரதியும் அவருடைய ‘ரஃப் பாசே’ஜும் இருந்தார்கள். தமிழ் அல்லது இந்திய மனத்தின் நிறங்களை ஆங்கிலத் தூரிகையால் தீட்டியவராக அவரை இனங்காண முடிந்தது. அதனால்தான் தொண்ணூறு வயது மரணத்துக்கு அகாலமல்ல என்றபோதும் மனம் கசிய யோசிக்க முடிகிறது.
