தமிழ்ச் சமூகத்தின் நன்றியறிதல்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டுக் கருத்தரங்கு 12.3.2026 அன்று சென்னையில் நடந்தேறியது. கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர். சரஸ்வதி ராம்நாத்தின் ஆளுமை, படைப்புத்திறன், மொழிபெயர்ப்பின் சிறப்பு எனப் பல்வேறு கூறுகளையும் எடுத்துரைப்பதாக ஐந்து அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. மலர்விழி தொடக்கவுரை ஆற்ற சரஸ்வதி ராம்நாத்தின் மகன் மருத்துவர் ரகுராமன் வரவேற்பு வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப. விமலா வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் சரஸ்வதி ராம்நாத் குறித்து ப்ரீதா ஜெயராமன் உருவாக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவரின் பன்முகத் திறன்களை வெளிக்காட்டும் விதமாக அழகிய கவிதைபோல அந்த ஆவணப்படம் திகழ்ந்தது.
இரண்டாம் அமர்வில் ஆர். சிவக்குமார், திருப்பூர் கிருஷ்ணன் ஆகிய இருவரும் உரை நிகழ்த்தினார்கள். அவரது மொழிபெயர்ப்புத் திறன் குறித்தும் மரபார்ந்த இலக்கிய பயிற்சி குறித்துமான கருத்துகளை இவர்கள் முன்வைத்தார்கள். அவருடனான தம் நட்பு குறித்தும் திருப்பூர் கிருஷ்ணன் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
‘சரஸ்வதி ராம்நாத்: வாழும் கணங்கள்’ மூன்றாம் அமர்வில் அவருடைய குடும்ப நண்பர்களும் உறவினர்களும் தம் அழியாத ஆத்மார்த்தமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எழுத்து, மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு அவர் வாழ்ந்து காட்டிய சலிப்பில்லாத வாழ்வு முறையையும் துன்பங்களைக் கண்டு சோராத அன்புள்ளத்தையும் கடைசி காலத்தில் நோயுற்றபோதும் தம் எழுத்துப் பணியை விட்டுவிடாத மன உறுதியைக் குறித்தும் உளவியல்துறை சார்ந்த மருத்துவர் வெங்கடேஸ்வரன், சரஸ்வதி ராம்நாத்தின் சகோதரியின் மகனான, புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வழக்கறிஞர் சுதா சிவக்குமார் ஆகியோர் நினைவுகூர்ந்தார்கள். அன்புக்குரியவரை நினைவுகூரும் அழகான தருணமாக இவ்வமர்வு திகழ்ந்தது.
நான்காம் அமர்வு சரஸ்வதி ராம்நாத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆறு நூல்களைப் பற்றிய அலசலாக அமைந்தது. இராதையுமில்லை ருக்மணியுமில்லை, கங்கைத்தாய், தர்பாரி ராகம், கோதானம், அமிர்தமும் விஷமும் ஆகிய மொழியாக்கங்கள் குறித்து முறையே சித்ரா பாலசுப்ரமணியம், சுப்ரமணி இரமேஷ், சுனில் கிருஷ்ணன், எம். கோபாலகிருஷ்ணன், தி. சிவக்குமார், என். ஸ்ரீராம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். தானே ஒரு படைப்பாளராக இருந்தும் மொழிபெயர்ப்பைத் தம் இடையறாத பணியாக ஒரு வேள்விபோல அவர் மேற்கொண்ட தன்மை குறித்தும் அவருடைய மொழிபெயர்ப்பின் தனித்தன்மைகளைச் சிறப்புற எடுத்துக் காட்டுவதாகவும் உரைகள் அமைந்திருந்தன.
ஐந்தாம் அமர்வில் ‘சரஸ்வதி ராம்நாத்தின் ஆளுமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாவண்ணனும் ‘இந்திய மொழிகளுக்குள் மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியும் சிறப்பான உரைகளை வழங்கினார்கள். காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரத்தின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.
- வேதவல்லி
