இருளில் நகரும் பெண்கள்

மையிருளி
(நாவல்)
அமுதா செல்வி
வெளியீடு:
அடையாளம் பதிப்பகம்
1205/1, கனரா வங்கி அருகில், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி-621310
பக். 380
ரூ. 500
சமூகப் பணியில் முதுகலைப்பட்டம் பெற்ற அமுதா செல்வி எழுதி வெளியாகியுள்ள, ‘மையிருளி’ நாவல், 380 பக்கங்களில் பாலியல் தொழிலின் இருண்ட பக்கங்களின் நிழல்கள்மீது வெளிச்சமூட்டுகிறது. அதன் கோரமுகம் வாசகரை அச்சுறுத்துகிறது. இந்தியச் சமூகத்தில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் சுரண்டலையும் அதன் நீட்சியாய் நிகழ்த்தப்பட்டுவரும் கொடுமைகளின் உச்சத்தையும் புனைவின் சரட்டில் கோர்த்து நாவலை எழுதியுள்ளார். உண்மைகளின் தடங்களில் நாவல் செல்கிறது.
நூலாசிரியர் அரசு சாராப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு வாழ்ந்த பெண்கள் நலனுக்காகப் பணிபுரிந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த, பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைப் புனைவாக்கியுள்ளார். எனவே இந்த நாவலில் சிந்தப்படும் ரத்தம், கண்ணீருக்கு இள வெப்பம் உண்டு. அதைத்தான் பதினைந்து ஆண்டுகள் சுமந்து நம் கைகளுக்கும் கடத்தியுள்ளார்.
அறையின் மூலையில் பழைய பாயில் சுருண்டு கிடக்கும் சைலஜாவில் தொடங்கும் கதை அவளிடம்தான் முடிவடைகிறது. அதற்குள் எத்தனையோ சைலஜாக்கள் வேறுவேறு பெயரில் வருகிறார்கள். வருவதென்றால், காதல் பேசி ஏமாற்றி, வீட்டில் உள்ளவர்கள் வாங்கிய கடனுக்கு ஈடாக, வறுமையின் காரணமாக இழுத்து வரப்படுகிறார்கள். இவை எல்லாவற்றுக்குப் பின்னும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஒரு ஆண் இருக்கிறான் என்பதே அதிர்ச்சியற்ற உண்மை.
பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களை மீட்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள கேசவராஜ், செம்மலர், லீலா ஆகியோரையும் எண்ணற்ற பாதிக்கப்பட்ட பெண்களையும் புள்ளியாகக் கொண்டு சிக்கலற்றவாறு கதையைக்கொண்டு சென்றுள்ளார். இது ஒரு சவாலான எழுத்து. கிளைக் கதைகள் பலவும் வந்துபோகின்றன. ஆனால் நாவலின் மையச்சரடை சைலஜா என்னும் பாத்திரம் கையில் தந்துள்ளார்.
நேற்று இறந்த புருஷனை எரித்த சூடு அடங்கும் முன் தொழிலுக்கு வரும் சாவித்திரி, உடைந்துபோன பொம்மைகளை வைத்து விளையாடும் நான்கு வயது மகனோடு அறைக்கு வரும் உமா, உமாவுக்காக பணக்கார வாடிக்கையாளர்களை விட்டுத் தரும் ஜோதி, கமலா, ரேகா, கெங்கம்மா, மோனிஷா, கடவுள் கண்ணன்மீது பித்துக்கொண்ட காஜல் என்று பெண்களின் கதைகள் நீள்கின்றன.
கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகாவிலும் சோனாகட்சி, காளிகட், பெத்தாபுரம் என்று பல நிலப்பகுதிக்குக் கதை சென்றாலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள், துரோகங்கள் மட்டும் மாறவில்லை.
ஆண்களின் புத்தியில் உறைந்து கிடப்பதுபோல இந்தப் பெண்கள் யாரும் விரும்பி இந்த வாழ்க்கைக்குள் வருவதில்லை. அவர்கள் கடத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு இழுத்து வரப்படுகிறார்கள். குடும்ப அமைப்புக்குள் கட்டுப்பட்டுக்கிடக்கும் பெண்களும், கணவரால் குடும்பம் சந்திக்கும் பொருளாதார சிக்கலாலும் இதற்குள் தள்ளப்படுகிறார்கள். “கூலி வேலை செய்தாவது பிழைக்கலாம்” என்று அறிவுரையைத் தூக்கி வருபவர்கள் இக்கதையில் வரும் பெண்கள் பலரும் பாலியல் தரகர்களால் சுரண்டப்படுபவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெண்கள் அறைகளுக்குள் சந்திக்கும் பாலியல் வன்முறையின் பத்திகள் எளிதாக வாசிக்கக் கூடியன அல்ல. கடித்துக் குதறப்பட்ட மார்பகங்களைக் காட்டி அழும் சைலஜா மருந்திடப்பட்டு மீண்டும் உள்ளே அனுப்பப்படுகிறாள். புண்ணாய் வெடித்து இருக்கும் ஆண் உறுப்பு வாயில் திணிக்கப்பட்ட சரோஜாவைப் போல எத்தனை பெண்கள் அருவருப்பின் உச்சத்தைச் சந்தித்துக்கொண்டிருப்பார்கள்? நாவலில் வரும் கெங்கம்மா என்ற பெண், மலைக்கோவிலில் குளிர் நிறைந்த இரவில் வட்டக்கல்லில் கிடத்தப்பட்டு, செதுக்கிய குச்சி பிறப்புறுப்பில் செருகப்படுகிறது. இவ்வாறான சடங்குகளின் பெயரால் பெண்கள் சந்திக்கும் துன்பங்களுக்கு எப்போதுதான் ஓய்வு?அப்போது கெங்கம்மா ஒரு கேள்வி கேட்பாள்: “தனது பிறப்புறுப்பில் செறுகப்பட்ட குச்சிதான் சிவபெருமான் என்கி றார்கள். கடவுள் எப்படிக் குச்சி வடி வத்தில் இருக்க முடியும்? இந்த மக்கள் ஏன் கேள்வி கேட்பதே இல்லை?”
சதிக் கொடுமை பின்னணியில் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்களும் கதையில் வருகிறார்கள். மாமனார் வக்கிரத்தால் பாலியல் தொழிலுக்குள் வந்துசேர்ந்த வசந்தி என்ற பெண்ணும் உண்டு. வாழ்வின் நெருக்கடியால் கணவனால் கைவிடப்பட்டு நோயுற்றுத் தொட்டுத் தூக்க ஆளற்றுத் தெருவில் இழுத்துவரப்பட்ட பேரழகி சுமதி மகன் நந்தனால் நெருப்பூட்டப்படுகிறாள். கணவன் தந்த எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்ட தங்கம்மா, கணவனாலேயே துரத்தப்படுகிறாள். குழந்தையைக் காப்பாற்ற வேலைக்குச் செல்பவளை “தான் நோயுற்றவள்” என்று அவளே கதறியும் முதலாளி உள்ளிட்ட ஊர் ஆண்களால் பாதிப்புக்குள்ளாகிறாள்.மனநலம் குன்றியவளும் இரையாக்கப்படுகிறாள். இப்படி நூற்றுக்கணக்கான பெண்களின் துயரமிக்க வாழ்வை நாவல் முன்வைக்கிறது. எனவேதான் மை போன்ற இருளில் நகரும் பெண்களின் வாழ்வைக் குறிக்க ‘மையிருளி’ என்று பெயர் வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாவலில் எச்ஐவி தடுப்பு நடவடிக்கையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் காவல்துறையினர் செயல்படுவது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. அதே நேரம் ஒரு மாவட்ட ஆட்சியர் அதனை அணுகும் முறை கொஞ்சம் ஆறுதலாகிறது.
கல்பனாகோஷ் என்ற விதவைப் பெண்ணை வைத்து விதவைகள் எவ்வாறு இச்சமூகத்தால் கைவிடப்பட்டுப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள் என்பதை நாவல் எடுத்துரைக்கிறது. செம்மலர் என்ற பாத்திரம் நண்பர்களுடன் உரையாடுவதன் மூலம் பல கேள்விகள் சமயங்களை நோக்கி வைக்கப்படுகின்றன.“பாலியல் தொழிலாளிகள் பொருளாதாரத் தேவைகளுக்காக, சொகுசான வேலைக்காக இத்தொழிலில் இருப்பதாகப் பலரும் நினைப்பதுபோல் இல்லை. அவர்கள் இத்தொழிலில் தள்ளப்பட, மோசமான பொருளாதாரச் சூழலே காரணம்” என்றும் அதன் பின்னணி அழுத்தங்களையும் அப்பாத்திரத்தின் மூலம் வாசகருக்கு நாவலாசிரியர் புரிய வைக்கிறார். இத்தொழிலின் வேர்கள் எங்கெல்லாம் போய் நிற்கின்றன என்பதை செம்மலர் பாத்திரம் மற்றவர்களோடு உரையாடுகிறது.
காளிகட் கோயிலைச் சுற்றித்தான் தொழில் பலமாக நடக்கும். கொடுமைகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் சாட்சியாகக் காளியே இருப்பாள். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்களும் காளியையே சரணடைந்து நிற்பார்கள். அதே நேரம் பெத்தாபுரத்தில் அனைத்து வீடுகளிலும் ஏசுநாதர் படம் மாட்டப்பட்டிருக்கும். அப்போது அத்தெரு வழியே மதுரவாணியும் சைலஜாவும் நடந்துக்கொண்டே பேசிச் செல்வார்கள். “அத்தெருவுக்கு கிறிஸ்துவைப் போதிக்க வரும் போதகர்கள் பாலியல் தொழில் செய்யாதே என்று சொல்லவில்லையா” எனக் கேட்டுக் கொள்வார்கள். “பிறகு இவங்க வாழ்க்கையில் மதம் என்ன வேலையைப் பண்ணுது?”
இவ்வாறு காணிக்கையை மட்டும் மனதில் எண்ணும் மதங்கள் குறித்து அவர்களின் பார்வையின் மூலம் இந்து,கிறிஸ்தவ வேறுபாடின்றி மதவாதிகளின் அலங்கரிக்கப்பட்ட முகங்களின் பின் உள்ளவற்றைக் காட்சிப்படுத்த நாவல் முயல்கிறது.
நாவல் செல்லுமிடமெல்லாம் அந்தந்த நிலத்தின் வரலாற்றையும், மக்களின் வாழ்வையும் சேர்த்தே வாசகருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறது. ஒரு சில இடங்களில் நாவலாசிரியர் பேசும் விசயங்கள் துறுத்தலாக இருந்தாலும் அது கதையின் போக்கைத் தொந்தரவு செய்யவில்லை.
சைலஜாவின் பதற்றத்தைக் கூறும்போது, “அது பிடிபட்ட பறவையின் நடுக்கம்போல இருந்தது” என்று எழுதியிருப்பார். ரெட்சில்க் காட்டன் மரம்பற்றி ஒரு பத்தி எழுதப்பட்டு இருக்கும். பெத்தாபுரத்தின் மழைக்காலத் தெய்வமான மரிட்டம்மா கோவில் திருவிழாவும் வரும். மதுரவாணியைப் பற்றிச் சொல்லும்போது, “அவள் சில நேரம் உணர்வு ஓட்டிற்குள் சுருங்கி மறையப் போகும் சூரியனின் விளிம்பைப் பார்த்தவாறே மெளனத்தில் மூழ்கி கிடப்பாள்” என்று கூறியிருப்பார். மதுரவாணியும், சைலஜாவும் பேசிக்கொண்டே வரும்போது, அவர்களைப் பின்தொடர்ந்து அன்னநடை போட்டுக் கழுத்தை ஆட்டியபடியே வந்த கொக்குகளைப் பார்த்து, என் கழுத்து சுளுக்கியது என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் பெளத்தத் துறவிகள் தங்கள் துக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களைச் சொல்லும் உன்னதப் பாடல்கள் அடங்கிய பேராசிரியர் ரமணி மொழிபெயர்த்த ‘தெரகாதா’ என்ற பாடல் தொகுப்பிலிருந்து கவிதைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அப்பாடல்கள் பொருத்தமாகவும் மனதில் படியும் துயரத்தின் நிழலில் காவியத் தன்மையை அழுத்தமாக வரையவும் செய்கின்றன.
இந்நாவல் பாலியல் தொழிலில் சிக்கிய, இருளடைந்த பெண்களின் வாழ்வில் மறைந்திருந்த உண்மைகளைப் பேசுகிறது. அத்தோடு இந்த நாவலின் சிறப்பு முடியவில்லை.கடவுளின் பெயரால், மநு தர்ம அடிப்படைவாதிகளின் கொடும் கரத்தால் அழுத்தப்பட்டுப் பெண்கள், வரலாற்றில் பெற்ற துயரங்களின் வேர்வரை சென்றுள்ளது என்பதே உண்மை.
மின்னஞ்சல்: stalinsaravanan@gmail.com
