கடிதங்கள் 01.03.2026
‘கூட்டணி என்னும் நிர்பந்தம்’ சிறிய மீன்களைப் பெரிய மீன் கவ்வி பிடிப்பதுபோல், தேர்தல் களத்தில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் தயவில்தான் அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அரசியல் இருப்பைத் தக்கவைக்கப் பெரிய கட்சிகளுடன் போராட்ட வேண்டியிருக்கிறது. கூட்டணிக்காகத் தங்களது செயல்பாடுகளை ஒத்திவைத்துச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதைத் தலையங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. எஸ்.எஸ். ராஜகோபால், தெ. ஞானசுந்தமர் ஆகியோர் மறைவிற்கான அஞ்சலிக் கட்டுரைகளின் மூலம் அவர்களின் பணிகளை அறிய முடிந்தது. பொன்விழாக் காணும் சென்னை புத்தக கண்காட்சியின் மக்கள் திரள் மகத்தான சக்தி. அந்த சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும், வாசகர்கள், புத்தக அரங்க ஊழியர்களுக்கான வசதிகள் போதுமானதாக இல்லை. இக்கட்டுரையின் கருத்தை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கொண்டுசென்றால், பொன்விழா ‘பொன்னாக மிளிர’ வாய்ப்பு உருவாகும்.
சீனி.மணி
பூந்தோட்டம்
***
‘கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்’ தலையங்கம் சிறிய கட்சிகளின் (அவல) நிலையை வெகு சிறப்பாக வெளிக்காட்டியது. ஆனால் தமிழ்நாட்டோடு சுருக்கிக்கொண்டது ஏன் என்பதுதான் தெரியவில்லை. ஆளுகிற, ஆளப்போகிற கட்சியோடு கூட்டணி அமைத்தால்தான், சிறிய கட்சிகள் நிலைத்து நிற்க முடியும். தன்னலம் கருதாத, கொள்கைப் பிடிப்புடன் கூடிய தொண்டர்கள் எந்தக் கட்சியிலும் இல்லை. அது சிறிய கட்சி, பிற கட்சி என்றாலும். கொடி நாட்டுவதற்குக்கூட இன்று ஒப்பந்தக்காரர்கள் வந்துவிட்டார்கள். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கக்கூடக் கட்சிக்காரர்கள் தேவையில்லை என்ற நிலை. இந்த நிலையில் சிறிய கட்சிகள், தாங்கள் அரசியல் களத்தில் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டுமானால், ஏதாவதொரு பெரிய கட்சியுடன் விரும்பியோ, அல்லது விரும்பாமலோ கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தானாகவே ஏற்பட்டுவருகிறது. மக்கள் நலக் கூட்டணி மக்கள் மனதில் ஒரு சிறிய தாக்கத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டோமே. நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தனித்தே களம் கண்டுவருகிறது. என்ன முடிவை அது பெற்றது. இப்போதுதான் 8% வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் குறைந்தது 40% வாக்குகளையாவது அறுவடை செய்ய வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் சீமானைத் தவிர வேறொரு முன்னணித் தலைவரை சீமானே தயார் செய்யவில்லையே? சிறிய கட்சிகளின் கூட்டணி அவர்களாகவே விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்களின் கட்டாயம்.
‘பகடையாக்கப்படும் பெண்கள்’ தலையங்கம் இந்தியா முழுவதிலும் சுற்றி வந்துள்ளது. முதல்நிலைத் தலைவர்கள், மூத்த தலைவர்கள்கூட மூன்றாந்தரமாகப் பேசிவருவது தொடர்கதைதான். காங்கிரஸ் தலைவி சோனியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதே ஜோதிமணியைப்பற்றி பாஜக பிரமுகர் தொலைக்காட்சி நேரலையில் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை அரங்கேற்றினாரே? காங்கிரஸ் கட்சிகூடப் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லையே? பின் மற்ற கட்சிகள் என்ன எதிர்வினை ஆற்றும்? பொதுவெளியில் ஒரு பெண் குறித்து மூன்றாம் தரமாகப் பேசும்போதோ, பேட்டி கொடுக்கும் போதோ, மகளிர் உரிமைக்காக வாய்கிழிய பேசும் எந்த பெண் பிரமுகரும் எதிர்வினை ஆற்றாமல் பேசாமடந்தை ஆகிவிடுகிறார். மிஞ்சிப் போனால் அவர் அப்படிச் சொல்லவில்லை, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று மயிலறகு கண்டனம். தமிழகத்தில் பாலியல் தொல்லை மிக அதிக அளவில் நடைபெற்றுவருகிறது என்று தினந்தோறும் பேட்டி கொடுக்கும் தமிழிசைகளும் வானதிகளும் குஷ்புகளும் இதுவும் அதே மாதிரியான பாலியல் வன்கொடுமைதான் என்று எப்போது சொல்லப் போகிறார்கள்? பாதிக்கப்பட்டது ஒரு பெண். அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராகவும் இருக்கட்டும்; முதல் கண்டனக்குரல் மகளிர் உரிமை குறித்துப் பேசி வரும் மகளிர் அனைவரிடமிருந்து வரட்டும்.
என். பாபுஅருள் ஜோஷி
களக்காடு
***
நான் பள்ளியில் படித்தபோது ஆங்கிலம் எடுத்த ஆசிரியர் ஒரு வெளியூர் பெண். மென்மையானவர். அழகாக ஆங்கிலம் பேசிப் பாடம் எடுப்பது கிராம மாணவர்களாகிய எங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கும்.
ஒரு நாள் அற்புதமான ஒரு பாடத்தைக் கவனிக்காமல் பேசிக்கொண்டு இருந்தும் எதையோ தின்றும்கொண்டும் இருந்த ஒரு முரட்டு மாணவனை கடுமையாகத் திட்டி அடித்தும் விட்டார்,
அடுத்த நாள் அவர் தந்தை, உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பள்ளிக்கு வந்து விட்டார். வெள்ளை வேட்டி சட்டை முறுக்கு மீசை எனப் பையனைவிட முரட்டுத் தோற்றம்.
அவ்வூரின் ஆதிக்கச் சாதி என சொல்லப்படக்கூடிய பிரிவைச் சேர்ந்த ஊரில் பெரும்புள்ளிகளில் ஒருவரான அவர், வெளியூரைச் சேர்ந்த ஆள் பலமற்ற அந்தப் பெண் ஆசிரியரை தலைமையாசியர் அனுமதி பெற்று சந்தித்தார்
அவர் பணிவுடன் சொன்னார்: ‘அம்மா... ஊர்ல அவன் எப்படியும் இருக்கலாம்., ஆனால் பள்ளியில் அவனோட முழுப்பொறுப்பும் உங்களோடது... அவன் கண்ணை மட்டும் விட்டுட்டு அடிங்க. தோலை உரிங்க... நாங்க எதுவும் கேட்க மாட்டோம். அவனை நல்லபடியாக உருவாக்கிக் கொடுங்க” எனச் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
‘கற்றனைத்தூறும்’ தொடரில் கடந்த மாதம் இடம்பெற்ற கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சம்பவம் கண்டிப்பு அல்ல. தனி மனித வக்கிரம். யார் மீதோ இருக்கும் கோபத்தை மாணவர்களிடம் காட்டிக் கன்னாபின்னாவென அடிப்பது குற்றச்செயல். குற்றம் என்பது அடிப்பது மட்டும் அல்ல. அணைப்பதும் தலை கோதுவதும் முத்தமிடுவதும்கூட குற்றம்தான் - நோக்கம் தவறாக இருக்கும்பட்சத்தில்.
எனவே அடிப்பதோ அணைப்பதோ- அதன் பின் இருக்கும் நோக்கங்களே முக்கியம் என்பது நம் அனைவர் மனத்திலும் பதிவது நல்லதொரு மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
பிச்சைக்காரன்
சென்னை
***
மறைந்த தெ.ஞா.வுக்கு நல்லதோர் அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள். கம்பனில் கால ஆராய்ச்சி முழுக்க முழுக்க அவரின் ஆய்வே. அது பலருக்கும் பயன்பட்டுள்ளது. அதுபோலவே உடன் வந்து சேர்ந்த குகன், சுக்ரீவன், வீடணன் எல்லாரும் உடன் பிறந்தாரே என்று அவர் நிறுவுவதும் மிகவும் சிறப்பானது. தெ.ஞா.வைப் பொருத்தமட்டில் எத்தலைப்பினை எடுத்துக்கொண்டாலும் அதுபற்றி ஆய்ந்து தயாரித்துப் பேசக்கூடியவர். சாதாரணப் பேருந்து வசதியில்லாத ஒரு கிராமத்திற்கு எழுபதுகளில் நான் அழைத்தபோது ஒப்புக்கொண்டு முகம் சுளிக்காமல் வந்து இரண்டு மணிநேரம் உரையாற்றிய பெருந்தகை அவர். அவர் இடம் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடமே.
வளவ. துரையன்
முகலிவாக்கம்
***
