இருவர்

ஓவியம்: றஷ்மி
நாலா கன்னத்தை நக்கிக்கொண்டிருக்கிறாள். உப்புக் காகிதத்தை வைத்து யாரோ என் கன்னத்தில் அப்பியிருக்கும் இரவுநேர பாலேட்டைத் தேய்த்தெடுப்பது போன்ற உணர்வு எரிச்சலை மூட்டியது. இந்தச் சனியனை ஓங்கி அடித்துத் தட்டிவிடலாம், ஆனால் முடியாது. எல்லாச் சண்டைகளிலும் கடைசியில் அவள்தான் வெற்றிபெறுவாள், சூனியக்காரி. என் தூக்கத்தைக் கலைக்க அவளிடம் பல யுக்திகள் உண்டு, இதற்கு முன் சன்னமாக மியாவ்வ், மியாவ்வ் எனக் கத்தி ஓய்ந்திருப்பாள். இப்போதும் விழித்துக்கொள்ளாவிட்டால் அடுத்து இடது முன்னங்காலைக் கொண்டுப் வலது கையை பிராண்டத் துவங்கிவிடுவாள். பிராண்டுவதற்கு முன் போர்வையை விலக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரியும். தலையணைக்குள் புதைந்திருந்த மொபைல் போனைத் தேடியெடுத்துத் தேவையான மட்டும் கண்களைத் திறக்க, நேரம் மதியம் மூன்றைக் கடந்திருந்தது. கண்டிப்ப
