கிருஷ்ணனும் அவர் காமிராவும்
நம் நாட்டில் காட்டுயிர்களைப் படம்பிடித்த முன்னோடிகளில் ஒருவர் கிருஷ்ணன். அவரது சமகாலத்தில் வாழ்ந்த சிலர் வன உயிரினங்களை சாகச வேட்டை என்ற பெயரில் சுட்டு வீழ்த்தி, தோலையும் தலையையும் பாடம் செய்து சுவரில் மாட்டிக்கொண்டதுடன், படமும் பிடித்தனர். அவர்கள் விட்ட சரடுகளே இயற்கை வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் காமிராவை மட்டுமே கையில் எடுத்தவர் கிருஷ்ணன். இவர் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டதே 1940இல் தான். இந்தக்கலையைத் தானே கற்றுக்கொண்டு, சீக்கிரமே அதில் விற்பன்னர் ஆனார். அதிலும் காட்டில் வாழும் யானைகளையும் கழுகுகளையும் அவற்றின் வாழிடத்தில் பதிவு செய்தார். காட்டுயிர்ப் பேணலுக்கு புகைப்படக்கலை பங்களிக்கக் கூடும் என்று நம்பினார்.
“ஒவ்வொரு இறகும் ஒவ்வொரு மயிரும்” என்பது அவரது ஒளிப்படக் கொள்கை. படங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். கையில் எளிதாகப் பிடித்துப் படமெடுக்கக்கூடிய காமிராக்கள் வருவதற்கும் முன் இந்தத் துறையில் ஈடுபட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது 35mm ஃபிலிம் சுருள்களுக்கு முற்பட்ட காலம். காமிராவும் ஃபிளாஷ் போன்ற உதிரி பாகங்களும் அன்று வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட வேண்டியிருந்தன. அதுமட்டுமல்ல, ஒவ்வொருமுறை படமெடுக்கும்போதும் ஒரு ஃபிலிம் சட்டம் (frame) பயன்படுத்தப்படும். ஃபிலிம் பிரச்சினையே இல்லாத நம் காலத்தில் டிஜிட்டல் காமிரா பயனாளிகளுக்கு இதை உணருவது சிரமமாயிருக்கலாம். டிஜிட்டலோ, வேறு ஏதோ ஒரு காமிராவோ, அதன் சிறப்பு அம்சம் அது உருவாக்கும் பிம்பம்தான். அது எந்தக் கோணத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது, ஒளி எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றது என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர் எழுதினார் “ The lens does not see like the eye. But you should make the lens see like the eye.” இங்கு முக்கியமான சொல், பார்வை. ஒவ்வொரு படமும் அதை எடுத்தவரின் பார்வையைக் காட்டுகின்றது. கிருஷ்ணனின் படங்கள் இதற்குச் சான்றுகளாக உள்ளன. ஒவ்வொரு படமும் உயிர்ப்புடன் இருப்பதைக் காணலாம்.
எடுத்த படங்களைத் தானே உருத்துலக்கி அச்சிடுவார். இதற்கென வீட்டில் ஓர் இருட்டறையை உருவாக்கி வைத்திருந்தார். அங்கு அவர் வேலைசெய்வதைக் கூட இருந்து நான் கவனித்தது உண்டு. ஒளிப்படக்கலையில் பாதி வேலை இருட்டறையில்தான் என்பார். சில லென்சுகள், சில பாகங்கள் இவற்றை வாங்கி, அவரே ஒரு காமிராவை உருவாக்கி அதற்கு பாண்டரோசா ( Ponderous பெரிய) என்று பெயரிட்டிருந்தார். தோல் வார்களால் இணைக்கப்பட்டிருந்த இந்த காமிராவை, கழுத்தில் மாட்டிக்கொண்டு, அசைவில்லாமல் இருக்க அதை இரு கைகளாலும் நெஞ்சில் அழுத்திப்பிடித்துக்கொண்டு படமெடுப்பார். இவர் என்றுமே ஸ்டேண்ட் பயன்படுத்தவில்லை. பெருவாரியான படங்களை ஜீப்பிலிருந்தும் யானைமீதும் அமர்ந்து படமெடுத்தார். Photography from elephant back என்ற கட்டுரையை இவரால்தான் எழுத முடியும்
தென்னிந்திய உயிரினங்களைப்பற்றி An Ecological Survey of the Large mammals of Peninsular India என்ற தலைப்பில் ஆய்வு செய்ய அவருக்கு ஜவஹர்லால் நல்கை கிடைத்த போது, அவரது பணிக்கு ஒளிப்படக்கலையை வெகுவாகப் பயன்படுத்தினார். காட்டுயிர்களைப் புரிந்து கொள்வதற்கு ஒளிப்படம் உதவும் என்று நம்பினார். காட்டில் இயல்பாக இருக்கும் விலங்குகளின் நடத்தையைக் காட்டும் வண்ணம் படமெடுத்து, அவற்றைத் தனது களஅவதானிப்பிற்குச் சான்றாகப் பயன்படுத்தினார். காட்டில் ஓர் உயிரினத்தின் செயல் எதிர்பாராததாயிருக்கலாம். அதைப் பார்த்தவர் சொன்னால்கூட மற்றவர்கள் நம்பமாட்டார்கள். படம்பிடித்துக்காட்டினால் அது ஆவணமாகும். அறிவியல் ஏற்றுக்கொள்ளும்; மக்கள் நம்புவார்கள். திருக்குறுங்குடியருகே உள்ள ஏரிக்கரையில் ஒரு நாரை நீர்வாத்து (சிறகி) ஒன்றைப் பிடித்து விழுங்கியதை பைனாகுலரில் கவனித்த நண்பர் ஒருவர் என்னிடம் அதைப்பற்றிக் கூறினார். இது இருபது ஆண்டுகளுக்கும் முன். இன்று அத்தகைய காட்சியைப் படம்பிடித்து விடலாம்.
காமிராவின் பார்வை பாரபட்சமற்றது, ஆகவே உண்மையாக இருக்கும் என்பது கிருஷ்ணனின் வாதம். ஆய்வாளர் களத்தில் பார்க்கத் தவறிய சில காட்சிகளை காமிரா பதிவுசெய்து காட்டிவிடும். ஆனால் ஒன்று. உயிரினங்கள் சுயேச்சையாக, தமது வாழிடத்தில் இருக்க வேண்டும். இவரது படங்களையும் கட்டுரைகளையும் 1972 - 73 ஆண்டுகளில் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக சஞ்சிகை (Journal of the Bombay Natural History Society) வெளியிட்டது . இந்தத் தொகுப்பு ஒரு நூலாக India’s Wildlife என்ற தலைப்புடன் வெளிவந்தது. பம்பாயிலிருந்து வெளியான The Illustrated Weekly of India இதழில் The South Indian Diary என்ற பத்தியை ஒவ்வொரு வாரமும் இரண்டு படங்களுடன் தொடர்ந்து எழுதினார். காட்டில் அவரது அனுபவங்களை ஒளிப்படம், எழுத்து என்னும் ஊடகங்கள் மூலம் தனது வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அத்துடன் அவ்வப்போது அவர் கோட்டோவியங்களையும் சேர்த்துக்கொண்டார். அவருடைய ஒளிப்படங்களைக்கொண்ட இரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
வெளிமான். இந்திய உபகண்டத்தில் மட்டுமே உள்ளன. கலைமான் என்றும் அறியப்படும். கோடிக்கரை, வல்லம் முதலிய சரணாலயங்களில் வாழ்கின்றன. அதிவேகமாக ஓடக்கூடிய விலங்கு. இதன் கொம்பு மனிதர்களால் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் சுமார் 27,000 யானைகள் வாழ்வதாகக் கணிப்பு. ஆசிய யானைகள் அதிகமாக இருக்கும் நாடு நம்நாடுதான். அதிலும் பெருவாரியானவை மேற்குத்தொடர்ச்சி மலைகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. பெரியார் சரணாலயத்தில் இந்த மந்தை.
கான்ஹா சரணாலயத்தில் பாராசிங்காமான். நம்மூர் கடமான் போன்ற இவ்விலங்கு பன்னிரண்டு கொம்புகளை உடையது. எனவே பாராசிங்கா எனப் பெயர்பெற்றது. காசிரங்கா தேசீயப்பூங்கா இதன் மற்றொரு வாழ்விடம். அரியவகை விலங்கு.
நம் நாட்டின் தேசிய விலங்கான வேங்கைப்புலி காட்டுயிர்ப் பேணலுக்குக் குறியீடாக இருக்கின்றது. நாட்டில் இன்று சுமார் 3000 வேங்கைப்புலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆனைமலை, முதுமலை, களக்காடு முண்டந்துறை முதலிய சரணாலயங்களில் வாழ்கின்றன.
காட்டெருமை. சதுப்பு நிலக்காடுகளில் வாழும். நீண்டுவளைந்த கொம்புகள் இதன் முக்கிய அடையாளம். காசிரங்கா, ஜல்தப்பாரா, மானஸ் சரணாலயங்களில் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
காட்டுமுயல். புதர்க்காடுகளில் வசிக்கும் இது இறைச்சிக்காக வெகுவாக வேட்டையாடப்பட்டது. எனினும் இது வேகமாகப் பலுகிப்பெருகுவதால் இன்று எண்ணிக்கையில் நிறைய இருக்கின்றன.
காட்டுமாடு. உலகிலேயே உருவில் பெரிய மாட்டினம். ஆனைமலை, முதுமலை, பந்திப்பூர் போன்ற தென்னிந்திய சரணாலயங்களில் இவை கூட்டம் கூட்டமாகச் செழித்து வாழ்கின்றன. இவை எருமை இனமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லாங்கூர் மந்தி. கருத்த முகமும் நீண்ட வாலும் கொண்ட இந்த மந்திகளை இந்தியா முழுவதிலும் காடுகளில் காணலாம்.
காண்டாமிருகம். நூறாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய அற்றுப்போய்விட்ட இவ்விலங்கு தீர்க்கமான பாதுகாப்பால், சிறப்பாக 1905இல் கர்சன் பிரபு காசிரங்காவிற்கு வந்தபின், பாதுகாப்பு அளிக்கப்பட்டு இது பிழைத்திருக்கின்றது. இன்று கிழக்கு இந்தியாவில் நான்கு சரணாலயங்களில் ஆயிரத்திற்கும்மேல் வாழ்கின்றன.
பெட்டையும் குட்டியும். மிளா, கடமான் என பல பெயர்களில் அறியப்படும் சாம்பர் மான். இந்தியாவில் உருவில் பெரிய மானினம். சிறு மந்தைகளாக வாழும்.வேங்கைப்புலிக்கு முக்கியமான இரை இது.
சங்குவளை நாரை, பவளக்கால் நாரை, மஞ்சள்மூக்கு நாரை என்று பல பெயர்களால் அறியப்படும் இப்பறவை ஓர் உள்ளூர் உயிரினம். கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற காப்பிடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு பறவை எங்கு இனப்பெருக்கம் செய்கின்றதோ அது அந்தப் பகுதியைச் சேர்ந்தது.
ஆசியாவில் ஆண் யானைக்கு மட்டுமே கொம்பு (தந்தம்) உண்டு. கொம்பில்லாத ஆண் யானைகளும் உண்டு
அவற்றை மக்னா என்று குறிப்பிடுவர்.