கனன்றுகொண்டிருக்கும் எரிமலை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. இரு தரப்புக்கும் நடுவில் அமெரிக்கா நாட்டாண்மையாகச் செயல்பட்டது என்பதையும் வர்த்தகத்தை வைத்துச் சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று டிரம்ப் சொல்வதையும் இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுத்திருக்கிறது. எந்தக் காரணத்தை முன்னிட்டுப் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதுதான்.
பஹல்காம் பயங்கரவாதச் செயலால் நிகழ்ந்த மோதல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஆபத்தான மோதலுக்கான சாத்தியக்கூறை உண்டாக்கியது. இருபுறமும் பொதுமக்கள் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டிருந்தால், பின்வாங்குவது இரு தரப்பினருக்குமே மிகவும் கடினமானதாக இருந்திருக்கும்.
தேசியவாத வீர முழக்கங்களின் மொத்தக் குத்தகைதாரரான பாஜகவே ஆட்சியில் இருந்தாலும், அது நடைமுறையை உணர்ந்திருப்பதால்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. எனவே தற்போது நிகழ்ந்துள்ள சமாதானத்தை முழு மனதுடன் வரவேற்க வேண்டும். அதன் பிறகே இந்த மோதலின் வேர்கள், கிளைகள், எதிர்காலத்திற்கான நடவடிக்கைகள்பற்றி விவாதிக்க வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாதச் செயலையடுத்துப் பதிலடி நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் எதைச் சாதித்தது என்பதை உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரிக்காமல் தடுப்பதை உறுதிசெய்யும் அளவுக்கு அமையவில்லை என்பதே நிபுணர்கள் கருத்து. பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் இராணுவக் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தாக்கியது. பாகிஸ்தான் பதிலுக்கு இந்திய விமானங்களைத் தாக்கியது. இரு பக்கமும் டிரோன் தாக்குதல்களும் நடந்தன. பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைத் தவிர்த்துவிட்டு மோதலில் ஈடுபடுவது சாத்தியமல்ல என்பதை இது நிரூபித்துள்ளது. இதுவே போர் நிறுத்தத்திற்கும் காரணமாக அமைந்தது.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுவது, அத்தகைய ஆதரவை மழுங்கச்செய்வது, பாகிஸ்தான் ஆதரவுப் பயங்கரவாதத்திற்கு எதிராகச் சர்வதேச நெருக்கடியைக் கூட்டுவது ஆகிய நோக்கங்கள் நிறைவேறினவா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் சிலர் பாகிஸ்தானை உடைக்கும் அளவுக்கு அந்நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று கருதினார்கள். அது சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி நடந்தால் அதனால் இப்பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய குழப்பத்தை இந்தியாவால் சமாளிக்க முடியுமா? இரு நாடுகளுமே அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நிலையில் இந்தப் போர் மிக அபாயகரமான பரிமாணத்தை எடுக்கக்கூடிய நிலை உருவாகும்.
ராஜதந்திரரீதியாக இந்தியா எங்கே நிற்கிறது? இந்த மோதல் இந்தியாவின் நிலையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தீர்க்கமான வெற்றியும் தெளிவான அரசியல் முடிவும் இல்லாத ஆயுத மோதல், இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமான தளத்தில் நிறுத்தியிருக்கிறது. இந்த இரு நாடுகளுகிடையில் அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இருப்பதால் யார் சரி, யார் தவறு என்பது பற்றி உலக நாடுகள் அதிகம் கவலைப்படாது. போர் நடக்கக் கூடாது என்பதில்தான் அவை குறியாக இருக்கும்.
சீனா-பாகிஸ்தான் உறவு தற்போது உறுதியாக உள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த மோடி அரசால் முடியவில்லை. மோதல் நடக்கும் நேரத்திலேயே ஐஎம்எப் கடன் வழங்கியது. மேற்கு நாடுகள் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவைப் பல மட்டங்களில் ஆதரித்தாலும் போர் என்று வரும்போது அந்த ஆதரவு கைகொடுக்கவில்லை. சீனாவுடன் இந்தியா நெருங்குவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. சீன-ரஷ்யக் கூட்டணியும் வலுவாக உள்ளது என்பதால் ரஷ்யாவின் ஆதரவும் கிடைக்கவில்லை. உக்ரைன் போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடும் செயல்பாடுகளும் ஐரோப்பிய நாடுகளை எரிச்சலடையச் செய்துள்ளன. இவையெல்லாம் சேர்ந்து இந்தியா இப்போது அமெரிக்காவை அதிகம் சார்ந்துள்ள நிலையை உருவாக்கியுள்ளன. இதனால் டிரம்பின் எல்லாக் கருத்துக்களையும் மூன்றாம் உலக நாட்டைப்போல அவர் இந்தியாவை நடத்துவதையும் சகித்துக்கொள்ள வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள மாபெரும் நன்மை, இந்தியாவிற்குள் உள்ள மதரீதியான வேறுபாடுகளைப் பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்கச்செய்ய முடியாது என்ற நிரூபணம்தான். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தங்களால் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே துப்பாக்கியின் விசையை அழுத்தினார்கள். அந்தச் செய்தி இந்திய ஊடகங்களிலும் பரவலாக வெளியானது. பாஜக ஆட்சியில் இருப்பதால் இந்தச் செய்தி நன்றாகவே அழுத்தம் பெற்றது. ஆனால் இதை வைத்து இந்திய முஸ்லிம்கள்மீது விரோதம் பாராட்ட இந்துக்கள் தயாராக இல்லை. தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த இந்துக்களின் நேர்காணல்களும் முஸ்லிம்களுக்கு எதிரான கோபத்தையோ வெறுப்பையோ வெளிப்படுத்தவில்லை. இந்திய அரசின் பாதுகாப்பு எதுவுமின்றி நிர்க்கதியாக அவர்கள் நின்ற கட்டத்தில் அவர்களுக்குக் காஷ்மீர் மக்களிடமிருந்து கிடைத்த அபரிதமான ஆதரவை அவர்கள் மறக்கவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிமும் இந்துக்களைக் காக்க முனைந்து உயிரிழந்தார் என்பதையும் இந்துக்கள் மறக்கவில்லை.
இந்த மோதல் இந்திய அரசியலிலும் சமூகத்திலும் நிலவும் சில முக்கியமான போக்குகளை அடையாளம் காட்டியிருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து, அம்மாநிலத்தைப் பிரித்து, ‘ஜம்மு-காஷ்மீரையும்’ லடாக்கையும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக்கிய பிறகு அங்கே வேகமாக வளர்ச்சியும் அமைதியும் ஏற்பட்டுவருவதாக பாஜக அரசு பரப்புரை செய்துவருகிறது. ஜம்மு-காஷ்மீர் குறித்த அரசின் அறிக்கைகளில் ‘ஜீரோ பயங்கரவாதம்’ போன்ற வார்த்தைகள் இடம்பெற்றன. அரசின் கதையாடலை வைத்துப் பார்க்கும் ஒருவர் காஷ்மீர் அமைதி தவழும் சொர்க்க பூமியாக ஆகிவிட்டதாக நம்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அரசியல் தளத்தில் இத்தகைய பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வன்முறையால் சீரழிந்துள்ள இந்த மாநிலத்தில் அரசாங்கம் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பில் எந்தச் சுணக்கத்தையும் காட்டவே கூடாது. வன்முறைக்கு உட்பட்டவர்களின் கூற்றும் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் கருத்தும் பொதுவான நோக்கர்களின் கருத்தும் அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதை நிரூபிப்பதற்காக அங்கே சுற்றுலாவை ஊக்குவித்த அரசு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்குப் போதிய ஏற்பாடு செய்யவில்லை. இது அரசு நிர்வாகத்தின் அடிப்படையான தவறு. தாக்குதல் பற்றிய எந்த முன் தகவலும் இந்திய அரசுக்குக் கிடைக்கவில்லை என்பது உளவுத்துறையின் மாபெரும் தோல்வி. இத்தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆன பின்னரும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் யாரையும் கைது செய்யவில்லை.
“கற்பனைசெய்ய முடியாத பதிலடியைத் தருவோம்” என்று முழங்கிய பிரதமர், பயங்கரவாதிகள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியாத அளவுக்கு எச்சரிக்கையாக இருப்போம் என்று மக்களுக்கு வாக்களித்து அதன்படி செயல்பட வேண்டும்.
மோதலை பாஜக அரசு கையாண்ட விதம் அதன் அணுகுமுறையில் உள்ள பிரச்சினைகளை அம்பலப்படுத்துகிறது. பாகிஸ்தானுடன் நடந்த மோதல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பை மூன்று பெண் ராணுவ அதிகாரிகளிடம் (கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி) பாஜக அரசு ஒப்படைத்தது. இதில் கர்னல் சோஃபியா குரேஷி உள்ளிட்ட பல பெண் ராணுவ அதிகாரிகளின் பணி தொடர்பான சர்ச்சை எழுந்தபோது உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் கோரிக்கையை பாஜக அரசு எதிர்த்தது. இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான குறுகிய சேவை ஆணையம் குறிப்பிட்ட பதவிக்காலத்தைக் கொண்டுள்ளது. அதை நிரந்தர ஆணையமாக மாற்றினால் அவர்கள் ஓய்வு பெறும்வரை பணியாற்றலாம். இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த மாற்றத்திற்கு அனுமதி வழங்கியது. முன்னதாக, இந்த மாற்றத்தை எதிர்த்த அரசு, பெண்கள் ராணுவச் சேவைக்குத் தேவையான “உடல்ரீதியான வலிமை அற்றவர்கள்” என்று ஆட்சேபித்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இது பாலின அடையாளங்கள் சார்ந்த வகைமாதிரி பிம்பங்களை அடியொற்றிய கருத்து என்றும் சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கூறிய நீதிமன்றம், நிரந்தர ஆணையத்திற்கு மாற்றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதலாவதாக இருந்த கர்னல் சோஃபியா குரேஷியின் சாதனைகளையும் பாராட்டியது.
இந்திய ராணுவம், பாலின, சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டே பெருமளவுக்கு இயங்குகிறது. பாஜக அரசோ சாத்தியமான இடங்களிலெல்லாம் முடிந்தவரை இந்தச் சமத்துவத்தைக் குலைக்கவே பார்க்கிறது. பெண்களுக்கான நிரந்தரப் பணி ஆணையத்தை பாஜக எதிர்த்ததில் ஆண், பெண் சமத்துவத்துக்கு எதிரான அதன் பார்வை வெளிப்பட்டது. ஆனால் ராணுவ நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடப் பெண்களையே – அதில் ஒருவர் முஸ்லிம் – தேர்ந்தெடுத்ததன் மூலம் பாஜகவின் இயல்பான அரசியல் பார்வைக்கும் வெளி உலகிற்கு அது காட்டிக்கொள்ள விரும்பும் பிம்பத்திற்கும் இடையிலான முரண்பாடு தெளிவாகிறது. உள்ளூரில் ஆண்மை பீறிடும் இந்துத்துவ முகம் காட்டும் பாஜக, சர்வதேச அளவில் மதச்சார்பற்ற, பாலினச் சமத்துவ அடையாளத்தை முன்னிருத்த விரும்புவதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குத் தெரிவிப்பதற்காக முக்கிய நாடுகளுக்கு அரசு அனுப்பியுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்களிலும் இந்தப் போக்கு வெளிப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பாஜக வழங்குவது இதுவே முதல்முறை. இந்தக் குழுக்களில் இடம்பெறும் சிலர் பாஜகவின் தேசத்துரோகிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள். இந்த அரசு உலகிற்குக் காட்ட விரும்பும் முகம் எது என்பதை இதிலிருந்தும் புரிந்துகொள்ளலாம். அதன் சந்தர்ப்பவாத அணுமுறையையும் உணர்ந்துகொள்ளலாம்.
ராணுவ நடவடிக்கைகளைப் பற்றிப் பேசியபோது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்துப் பாஜகவின் உண்மையான பார்வையை அம்பலப்படுத்தியது. “நமது சகோதரிகளின் நெற்றித் திலகத்தை அழித்த அவர்களை (பயங்கரவாதிகள்) அழிக்க அவர்களுடைய சகோதரியையே அனுப்பிவைத்தோம்,” என்று அவர் சொன்னார். இந்த அமைச்சர் பயங்கரவாதிகளின் சகோதரி எனக் குறிப்பிட்டது கர்னல் சோஃபியா குரேஷியைத்தான். இவர் இன்றும் அமைச்சராகவே தொடர்கிறார். உச்ச நீதிமன்றம் இதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இன்னொரு அதிகாரி தலித், மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர் என்று தெரிந்திருந்தால் அதையும் பாஜக தன் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கும் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம் கோபால் யாதவ் எதிர்வினையாற்றினார்.
சம்பவம் நடந்த பிறகு பாஜக அதைக் கையாண்ட விதமும் கேள்விக்குரியது. 26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு உடனடியாக மன்மோகன் சிங் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தித் தாக்குதல்பற்றிச் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் விளக்கினார். தாக்குதல் நடந்தபோதே தேசியப் பாதுகாப்புக் காவலர்கள் அனுப்பப்பட்டார்கள். எந்த பயங்கரவாதியும் தப்பவில்லை; பயங்கரவாதச் செயல்களுக்குப் பாகிஸ்தானுடனான தொடர்பு நிரூபிக்கப்பட்டு, பாகிஸ்தானைச் சர்வதேச அளவில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதுகாப்புக் குறைபாட்டிற்கு அரசு பொறுப்பேற்றது. மகாராஷ்டிர முதலமைச்சரும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சரும் பதவி விலகினார்கள். மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். ஆனால் காஷ்மீர் பாதுகாப்பைப் பற்றிப் போலி வாக்குறுதிகளை நாடாளுமன்றத்தில் கர்ஜித்த அமித்ஷா பொறுப்பேற்கவில்லை. பதவியும் விலகவில்லை. பயங்கரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் எப்படி தப்பித்தார்கள், பாதுகாப்பு வழங்குவதில் என்ன குறைபாடு ஏற்பட்டது என்பது பற்றி எந்த பரிசீலனையும் அறிவிப்பும் இல்லை.
அரசாங்கம் எதிர்க்கட்சிகளையும் நாடாளுமன்றத்தையும் மதித்து, முக்கியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும், ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். 1971இல் போர் நடந்தபோது இந்திரா காங்கிரஸுக்கு 350க்கும் மேல் மக்களவை உறுப்பினர்கள் இருந்தார்கள். பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனசங்கத்திற்கு 22. இருந்தும் பிரதமர் இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாயியை அழைத்துப் பேசினார். போரைக் குறித்துக் கலந்தாலோசித்தார். இத்தகைய செயல்பாடுகளுடன் பாஜக அரசின் எதிர்வினைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிலுள்ள குறைகள் வெளிச்சமாகும்.
மோதல் வலுத்துப் போராக மாறக்கூடிய சூழல் உருவானபோது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் போர் விரும்பிகள் ஏமாற்றமடைந்தார்கள். கார்கில் போரின்போது மேலும் முன்னேற வாய்ப்பு இருந்தும் சமாதானத்திற்கு உடன்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாயி, மென்மையான மனம் கொண்ட கவிஞர் என்பதால் அப்படிச் செய்தார் என்றும், இப்போது ஆட்சியில் இருப்பவர் க்ஷத்திரியரான நரேந்திர மோடி என்றும் இந்த முறை பாகிஸ்தானுக்குத் தக்க பாடம் கிடைக்கும் என்றும் பேசிக்கொண்டிருந்த பாஜக ஆதரவாளர்கள் போர் நிறுத்தத்தால் அடைந்த ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு தங்கள் கதையாடல்களை மாற்றிக்கொண்டார்கள். எவ்வளவு சிறிய நாடாக இருந்தாலும் ஒரு நாட்டை மொத்தமாக ஒழித்துவிடுவது நடைமுறைச் சாத்தியமல்ல என்று பேச ஆரம்பித்தார்கள். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளாலேயே தங்கள் எதிரிகளான சிறிய நாடுகளை அடக்க முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, நடைமுறை சார்ந்த ராஜதந்திரம் பேச ஆரம்பித்தார்கள்.
உலகம் முழுவதும் கேட்கும் அளவுக்கு வீர முழக்கமிட்டாலும் பாஜக தலைமை நடைமுறை யதார்த்தம் அறியாததல்ல. சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இதோ பாருங்கள், அவர்கள் (சீனா) பெரிய பொருளாதாரம். சிறிய பொருளாதாரமாக இருக்கும் நாம் பெரிய பொருளாதாரத்துடன் சண்டையிடப் போகிறோமா? இது பின்வாங்குவது அல்ல, பொது அறிவோடு நடந்துகொள்வது...” என்று சொன்னார். எங்கே வீர முழக்கம் எழுப்ப வேண்டும், எங்கே அடக்கிவாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் அறியாததல்ல பாஜக தலைமை.
போருக்கான சில எதிர்வினைகளும், அவற்றை அரசு கையாண்ட முறையும் விவாதத்திற்குரியவை. பயங்கரவாதிகளின் முகாமைத் தாக்கியதாகவும் அதில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் கூறியது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் துணைப் பேராசிரியர் எஸ். லோரா, இந்தியாவின் தாக்குதலில் ஒரு குழந்தையும் பொதுமக்களில் இருவரும் கொல்லப்பட்டதாகக் கூறி அதைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருடைய நோக்கத்தில் பிழை இல்லை. ஆனால் இரு நாடுகளுக்கிடையில் ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும்போது கிடைக்கும் தகவல்களை அப்படியே எடுத்துக்கொண்டு அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேசுவதோ அவற்றைப் பரப்புவதோ விவேகமான செயலல்ல. உறுதிப்படுத்தப்படாத இந்தச் செய்தியைப் பதிவிடுவதை லோரா தவிர்த்திருக்க வேண்டும். அவர் அப்படிப் பதிவிட்டதற்காகச் சமூக ஊடகங்களில் பரவலான எதிர்ப்பு எழுந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது அதீதமான நடவடிக்கையாகவே தெரிகிறது. அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
மக்தூப்மீடியா.காமைச் (maktoobmedia.com) சேர்ந்த ஊடகவியலாளர் ரெஜாஸ் எம். ஷீபாவும் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக அசோகா பல்கலைக்கழகத்தின் அலி கான் மஹ்முதாபாத்தும் கைது செய்யப்பட்டார்கள். கூடவே அரசுக்கு ஒவ்வாத செய்தி வெளியிட்டமைக்காக தி வயர் இணையதளம் முடக்கப்பட்டது. போர் வரக்கூடிய சூழலில் தணிக்கைகள் பொதுவானவைதான். ஆனால் தற்போது நடந்தது போர் அல்ல. பயங்கரவாதத் தாக்குதலும் அதற்கான பதில் தாக்குதலும்தான். போரைக் காரணம் கூறி நடத்தப்படும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அரச அத்துமீறல்களைக் குடிமைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ள இயலாது. பாஜக அரசின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். போர் போன்ற காரணங்கள் பாஜகவின் இவை போன்ற ஏதேச்சதிகாரப் போக்கிற்கு வலுச்சேர்த்துவிடுகின்றன.
போர் ஆபத்திற்கு எதிராகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வெளியிட்ட அறிக்கை போரின் தீய விளைவுகளைத் தெளிவாகச் சுட்டியது என்றாலும் பஹல்காமில் நடந்த வன்செயலைப் பற்றிய அதன் கருத்து உண்மைக்குப் புறம்பானது. கொலை செய்தவர்கள் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தைக் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகு சுட்டுக் கொன்றார்கள் என்பது பொய்த் தகவல் என்று அறிக்கை கூறுகிறது. மத அடையாளத்தைக் கேட்டுத்தான் கொன்றார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தவர்களின் பேட்டிகளும் தி இந்து உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் இதைத் தெளிவாகக் கூறுகின்றன. எந்த நிலையிலும் போரைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் நடந்ததை நடக்காததாகக் கூற வேண்டியதில்லை. மதவாத பயங்கரவாதிகளுக்கு மதச்சார்பின்மை முலாம் பூச வேண்டியதில்லை. ஒரு அறிக்கை முழுக்க முழுக்க உண்மையின் அடிப்படையில் அமைந்தால்தான் அதற்கு நம்பகத்தன்மையும் உரிய பலனும் விளையும்.
அறிக்கை “சர்வதேச விசாரணைக்கு முன்வருவதாக பாகிஸ்தான் அறிவித்த நிலையில்” இந்தியா அந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை என்று வருத்தப்படுகிறது. பயங்கரவாதச் செயல்பாடுகளில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு இன்று உலகறிந்த உண்மை. தலிபானை உருவாக்கிய நாடு அது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மும்பையிலும் தில்லியிலும் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்புகள் ஆதாரப்பூர்வமாகத் திரட்டப்பட்டுச் சர்வதேசச் சமூகத்தின் முன் வைக்கப்பட்டன. பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கு உண்மையில் நடப்பது ராணுவ ஆட்சிதான் என்பதும் உலகறிந்த ரகசியம்தான். இந்நிலையில் பாகிஸ்தான் அமைதி விரும்பியைப் போலப் பேசுவதை நம்புவதற்கு அசாத்தியமான அப்பாவித்தனம் இருக்க வேண்டும். கூட்டறிக்கையை தயாரித்தவர்கள் யாரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அரசை விமர்சிப்பதில் இருக்கும் தீவிரமே அவர்களை இப்படிப் பேசவைக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி பின்புலமுடையவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதால் இதையும் சுட்டிக்காட்ட வேண்டும்: போர் நிறுத்தத்தை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறது.
இதுபோன்ற சமயங்களில் கூட்டறிக்கைகளை வெளியிடுவது இயல்பானதும் அவசியமானதும் ஆகும். அதில் கையெழுத்திடும் அனைவரும் அதன் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்பது சாத்தியமல்ல. போருக்கு எதிரான முயற்சியில் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்னும் உணர்வே பலரையும் இதில் இணைந்துகொள்ள வைக்கிறது. இந்நிலையில் அறிக்கையைத் தயாரிப்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். நுனி நாக்கில் அரசுக்கு ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலில் சீனாவின் உதவி கணிசமாக இருந்ததாகவும் செய்தி வந்தது. இந்தப் பதிலடியைத் தொடர்ந்து இந்தியா மேலும் தீவிரமான தாக்குதலில் இறங்கத் தயாரானபோதுதான் அமெரிக்கா தலையிட்டிருக்கிறது.
சீனா தன்னுடைய பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. அந்தத் தொழில்நுட்பத்தைச் சோதிக்க இந்த மோதலை வாய்ப்பாக அது பயன்படுத்திக்கொண்டது என்றும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமானால் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளைச் செய்ய வேண்டும். பாகிஸ்தானுடனான போர் சீனாவுடனான மறைமுகப் போராக ஆகிவிடக் கூடாது. சீனாவுக்கு இந்தியாவுடன் வர்த்தக உறவு தேவை. சீனாவுடன் வலுவான வர்த்தக உறவை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தானை சீனாவிடமிருந்து தனிமைப்படுத்தலாம்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை வழக்கமான அண்டை நாட்டுடனான எல்லைப் பிரச்சினை அல்ல. அதன் வேர்கள் வரலாற்றுக் காலம்வரை நீள்பவை. நவீன வாழ்வின் கூறுகளை உள்வாங்கி, நடைமுறை சார்ந்து யோசிப்பதுதான் வரலாற்றுப் பகைமையை மறந்து நட்புப் பாராட்ட ஒரே வழி. அதற்கான பக்குவம் இருதரப்பிலும் போதிய அளவு ஏற்படும்போதுதான் உண்மையான மாற்றம் பிறக்கும். அதுவரை இந்திய-பாகிஸ்தான் உறவு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய எரிமலையாகவே இருக்கும்.
அஞ்சலி: ஜெயந்த் விஷ்ணு நார்லிகர் (1938 & 2025)
பொது இயற்பியல், வான் இயற்பியல், பிரபஞ்சவியல் ஆகிய துறைகளில் பங்களிப்புச் செய்த ஜெயந்த் நார்லிகர் மறைந்தார். அவருக்குக் காலச்சுவடின் அஞ்சலி.
நார்லிகர் அறிவியல் ஆராய்ச்சிக்காகப் பத்மபூஷண் உட்படப் பல விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். அறிவியலைப் பரந்த அளவில் கொண்டுசெல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டவர். ஆங்கிலம், இந்தி, மராத்திய மொழிகளில் அறிவியல் கதைகளும் நாவல்களும் அறிவியல் நூல்களும் எழுதியுள்ளார்.
2022 அக்டோபரில் நார்லிகரின் நேர்காணலைக் காலச்சுவடு வெளியிட்டது; நேர்கண்டவர் பி.ஏ. கிருஷ்ணன். அவரது நேர்காணலுக்கான காலச்சுவடு இணையப்பக்கத்தின் இணைப்பை இங்கே தருகிறோம்: https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/43/search/articles/2-jeyanthnarlikarnerkannal