புனைவில் இசைக்கப்படும் விடுதலை
1988 முதல் தற்போதுவரை பெருமாள்முருகனின் 128 சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தொழில் வழி அமைந்த சூழலும் குடியானவர்களின் அன்றாடமும் அவர்கள் ஆழப் பற்றியிருக்கும் சாதியமும் ஆண்-பெண் உறவுச் சிக்கலும் சிறார் உலகும் நாட்டுப்புறக் கூறுகளும் மூத்தோர் மீதான கரிசனை மிக்க பக்கங்களுமெனச் சிற்சில தருணங்கள் முதல் நீண்ட வாழ்வின் நினைவுகளைப் பகிர்தல்வரை விரிந்த தளத்தில் அமைந்தவை அவருடைய கதையுலகு.
கணையாழியில் வெளியான ‘நிகழ்வு’ என்னும் முதல் கதை, சூழலுக்குப் பொருத்தமில்லாத இளைஞன் தங்கள் வசிப்பிடத்தில் நிற்பதன் காரணமறிய அக்ரஹாரத்தைச் சார்ந்த சகல வயதினரும் முற்பட முனைவது கதையாகியுள்ளது. ஒரு வேற்றாளின் வருகையால் தங்களது அன்றாடம் சீர்குலைகிறது என்ற பாவனையைக் கதை முழுக்க அவர்கள் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அசோகமித்திரன் பாணியிலான இக்கதை, வெளியான இதழோடு பொருத்திப் பார்க்க வாய்ப்புத் தருவதாக உள்ளது.
அதற்கடுத்து இடதுசாரிப் பின்னணிகொண்ட தாமரை இதழில் வெளியான ‘முதல் சுவடு’ என்னும் ஆரம்பகாலக் கதையில் ஒரு இலட்சியப் போக்கான கதைமாந்தன் மையமாக உள்ளதைக் காண