பெண் போராளியின் வரலாறு
வீரப்போர் மங்கை குயிலி
(குறுங்காவியம்)
வானவில் கே. ரவி
தமிழில்: இலந்தை
சு. இராமசாமி
வெளியீடு:
நிவேதா பதிப்பகம்
சென்னை - 73
பக். 72 ரூ. 80
‘த பாலட் ஆஃப் த வாரியர் கேர்ல் குயிலி’ (The Ballad of the Warrior-girl, Kuyili). ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ள ‘வீரப்போர் மங்கை குயிலி’, 15 காண்டங்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் பாடுபொருளாகத் தமிழக வரலாற்றில் பெரும்பாலும் பேசப்படாத நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரமங்கை குயிலியின் வரலாறு அமைந்துள்ளது.
குயிலி பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்ற பின்னர் எட்டு ஆண்டுகள் அவர் மனைவி வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி குத்திக் கொன்றார்.
அதனால், வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார். குயிலி வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்றார். வெள்ளையரை எதிர்த்துப் போரிடும் போது சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் புகுந்த குயிலி தன் உடலில் எண்ணையைப் பூசி தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு ஆயுதங்களை அழித்தார். தன் நாட்டின் வெற்றிக்காகப் பலியான, வரலாற்றில் தவிர்க்க முடியாத குயிலியின் சிறப்பைக் கதைப்பாடல் வடிவில் இயற்றியிருப்பது சிறப்பு.
இந்த மொழிபெயர்ப்பு நூல் தமிழில் அமைந்திருப்பதால் நிறைய வேறுபாட்டைக் கொண்டதாகவும் அமையவில்லை. அதாவது, மூலத்திற்கும் மொழிபெயர்ப்பிற்கும் வேறுபாடு இல்லாதவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இலக்கண முறைக்கு உட்பட்டும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து, கும்மி, ஆனந்த களிப்பு, சந்த விருத்தம், இரட்டை ஆசிரிய விருத்தம், நாடோடிப் பாடல் வடிவம் ஆகிய சந்தங்கள் நூலில் பயின்று வந்துள்ளன. நூலில் ஆசிரியர் சந்த விருத்தத்தைக் கையாண்டிருப்பது சிறப்பு.
பாரதி பெண்மையை எவ்வாறு போற்றினாரோ அதே அளவு இந்த நூலிலும் பெண்மை போற்றப்படுகிறது. இரண்டாம் காண்டத்தில் ‘காட்டுக்குள்’ என்ற தலைப்பில் அமையும் பாடல்கள் பாரதியாரின் கண்ணம்மா கவிதையினை நினைவூட்டுவதாக அமைகின்றன, அவை:
சித்தம் இருள்நிறையக் – குயிலி
செய்கை மறந்துவிட்டாள்.
என்ற வரிகள்
வாலைக் குமரியடீ – கண்ணம்மா
மருவக் காதல்கொண்டேன்.
வேலுநாச்சியார் நல்ல நிருவாகத் திறமையைக்கொண்டவள், தர்க்கம் தெரிந்தவள், போர் ஞானம் கொண்டவள் என்பதற்குத் தமிழ் நூல்கள் காரணமாக விளங்குகின்றன என்பதுபோல ஆசிரியர் எடுத்துரைக்கும் விதம் புதுமை.
இந்திய நாட்டில் பல பெண்கள் வீர மங்கைகளாக வாழ்ந்ததைச் சரித்திரம் குறிப்பிடுகிறது, அதில் உலகறியா வீரதீரச் செயல்கள் செய்து நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துத் தனது இன்னுயிர் நீர்த்த தமிழ்நாட்டு வீர மங்கை குயிலியின் வீரத்தினை உலகறியச் செய்வதே நூலின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
உலகின் முதல் மனித வெடிகுண்டு என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் குயிலி ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்த பெண்ணாகவும் அறியப்படுகிறாள். அப்படிப்பட்ட சமூகப் பின்புலம் கொண்ட ஒருவரின் வரலாற்றை இன்றைய சூழலில் கதைப் பாடல் வடிவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பிரெஞ்சு முதலிய மொழிகளில் வெளியிட்டிருப்பது போற்றத்தக்கது.
தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா, உத்திரபிரதேசம் முதலிய பிற மாநிலங்களிலும் குயிலி தொடர்பான கருத்தாடலை இந்நூல் உருவாக்கியிருக்கிறது. குயிலியின் வரலாற்றை இந்நூல் தேசம் முழுவதும் பரவலாக்கம் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நிறைவாகப் ‘பெண்ணின் வீரத்தைச் சொல்லும் குயிலியின் வரலாற்றை வாசகர்கள் உலகெலாம் கொண்டுசெல்ல வேண்டும்’ என்று விரும்பிய நூலாசிரியரின் கனவினை நிறைவேற்றும் வகையில் குயிலியின் வரலாற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் வழிவகுக்கும்.
மின்னஞ்சல்: balrajnu@gmail.com