உடல்களின் உலகம்
யாக்கை
(நாவல்)
கே.ஜே. அசோக்குமார்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் - 629 001
பக். 328 ரூ. 390
காமத்தைப் புனைகதைகள் இரண்டு விதமாக அணுகுகின்றன. ஒன்று, களிப்புடன் நின்றுவிடக்கூடிய கதைகள். மற்றொன்று, களிப்பின் பின்னிருக்கக்கூடிய வேட்கை, சுதந்திரம், சுயமரியாதை, அன்பு என்று சகலத்தையும் பேச முற்படும் கதைகள். இரண்டாம் வகைமை உடலரசியலைப் பேசும் கதைகளாகவும் பரிணமிக்கின்றன. காமத்தில் தொடங்கும் கதைகள் சுரண்டலுக்குள்ளாகும் மனித உடல்களின் போக்குகளை விவரிக்கின்றன. பண்பாட்டளவிலும், தனிப்பட்ட அளவிலும் பிறரின் நலனுக்காகவும், பொருளாதாரத் தேவைக்காகவும் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கும் பண்டமாக உடல் சுருங்கி விடுகிறது. அதற்கான விடுதலையைக் காமம் துய்ப்பில் தேடுவதற்குச் சிலர் முற்படுகிறார்கள். பலர் விடுதலை உடலுக்கு உண்டா எனும் கேள்வியுடன் சுரண்டலுக்கு இணக்கமாக வாழ்க்கையை நகர்த்திச்செல்கிறார்கள்.
இதே அம்சம் தத்துவ நோக்கிலும் அணுகப்படலாம். ஆன்ம விடுதலைக்குப் பெரும் தடையாய் இருப்பது மனித உடல். இச்சைகளுக்கும் தேவைகளுக்கும் ஓடிக்கொண்டே இருக்கும் பண்டமாக உடல் அமைகிறது. அதன் ஓட்டமும் அதன்வழி கிட்டும் அனுபவங்களும் போதாமைகளை விதைக்கின்றன. இச்சைகள் பெருகுவதும் ஓட்டம் தொடர்வதும் சங்கிலித் தொடராக அமைகிறது. உடலைத் துறத்தல் பல சமயங்களின் ஆன்ம தரிசனத்துக்கான ஓர் பகுதியாக முன்வைக்கப்படுகிறது. சமகால நோக்கில் இந்தத் தத்துவப் பார்வையும், உடல் குறித்த அவதானிப்புகளும் அமையப்பெற்றிருக்கும் நாவல் கே.ஜே. அசோக்குமாரின் ‘யாக்கை’.
நாயகன் சுப்ரமணியன் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிக்குச் சேர்கிறான். அங்கு உடன் பணிபுரியும் பத்மாவைக் காதலித்து மணந்துகொள்கிறான். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இல்லற வாழ்வின் கசப்பில் வீட்டைவிட்டு வெளியேறித் தேசாந்திரியாக மாறுகிறான். ஆர்ப்பரிக்கும் உடல் குறித்தத் தத்துவ விசாரங்களே நாவலாகிறது. பயணத்தில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களும் கதை சொல்லலில் செறிவாகப் பொருத்தப் பட்டிருக்கின்றன. முன் பின்னாக நகரும் கதையில் கடந்த காலமும் நிகழ்காலமும் பிணைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
உடலை மையப்படுத்திப் பேசப்படும் கதையில் நோய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலின் சுதந்திரத்தை முடக்கும் அம்சமாக நோயைச் சுட்ட முடியும். செயலற்றுப் பிறரின் துணைகொண்டு இயங்கும் சார்பு உலகத்தை நோய் உருவாக்கிவிடுகிறது. சுதந்திரம் பறிக்கப்படும், முடக்கப்படும் இடத்தில் கடந்த கால நினைவுகளே ஆசுவாசமாகிறது. பத்மா நோய் முற்றிப் படுத்த படுக்கையாக இருப்பதில் இந்நாவல் தொடங்குகிறது. காதலிக்கும்போது துய்த்த காமத்தின் பகுதிகள் உடலின் வேட்கை குறித்த பகுதிகளாகின்றன. திருப்தியுறாத பெண்ணின் மனமும் உடலும் சுப்ரமணியனுக்குப் புதிராகிறது. தன்னுடைய உடல் தேவையையும் பெண்ணின் உடல் தேவையையும் புரிந்து கொள்ள இயலாத நிலையில் தத்தளிக்கும் இடங்களாகக் காமம் குறித்துப் பேசப்படும் இடங்கள் அமைகின்றன.
பெண்ணின் உடலில் பிள்ளைப்பேறுக்குப் பிறகு வனப்புகள் மாற்றம்கொள்கின்றன. காமத்தின் அளவுகோல்கள் மாறுகின்றன. ஈர்ப்புகள் குறைகின்றன. உடலின் தேவைகள் பூர்த்தியுறாமல் கோபங்களும் சண்டை சச்சரவுகளும் மூள்கின்றன. இரண்டாம் குழந்தைக்குப் பின் பத்மாவின் வாழ்க்கை குறித்த பார்வைகள் மாற்றம் கொள்கின்றன. உடலுக்கு நிகராகப் பொருளாதாரத்தின் மீதான அக்கறை அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புகளின் மீது இச்சை கொள்கிறாள். உடலின் தளர்ச்சி அதற்கு இணையான மற்றொன்றை நோக்கி நகர்வதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.
உடல் மனதோடு இணக்கமாக அமைகிறது. ஒன்றின் தேவை மற்றொன்றின் அலைக்கழித்தலைப் பூர்த்தி செய்கிறது. உடல் தளரும்போது பொருளாதாரத்தை ஈடுசெய்வது முரண்பாடான ஒன்று. திருப்தி எனும் சொல்லின் அர்த்தம் பூர்த்தியடையாமல் பணத்தின் மீதான வேட்கை பெருகுகிறது. வேறொரு உடலின் மீதான சுரண்டலாக மாற்றம்கொள்கிறது.
சுப்ரமணியன் சிறுவயது முதலே உடல்மீதான தத்துவார்த்தத் தர்க்கத்தைச் சுமப்பவனாகச் சித்தரிக்கப்படுகிறான். அசௌகரியமான சில காட்சிகளும் அவை கொடுக்கும் அருவருப்புகளும் உடலின் தேவை குறித்த சந்தேகத்தை அவனுள் விதைக்கின்றன. இளமையின் துடிப்பில் காமத்தை துய்ப்பதும் காலத்தின் போக்கில் அவை காணாமல் போவதும் உடலைக் கைவிடுவதாக அவனுள் தேக்கம் கொள்கிறது. பத்மா உணரும் தளர்ச்சி பணத்தின் பக்கம் அவளை நகர்த்திவிடுகிறது. சுப்ரமணியனுக்கோ மாற்று வாய்ப்புகளற்று உடலின் தேவை குறித்த தர்க்கத்திற்குள் தன்னை அமிழ்த்திக்கொள்கிறான். அர்த்தமற்று ஆட்கொள்ளும் சலிப்பு அவனை வீட்டை விட்டு வெளியேற உந்தித் தள்ளுகிறது. தன்னுணர்தலை நோக்கிய பயணமாகத் திட்டங்களற்றுப் பயணிக்கிறான்.
சுப்ரமணியனுக்குத் தத்துவார்த்த உறுதுணையாக அமையும் கதாபாத்திரம் சாமியப்பா. பெண்களை உடலளவில் மட்டும் சுருக்கிப் புரிந்துவைத்திருக்கும் பாத்திரம். போகத்தின் பொருட்டே அவர்களின் சிந்தனையும் செயல்களும் அமையும் என்று திடகாத்திரமாக நம்புகிறார். சுப்ரமணியனுக்கு அவர் அவ்வப்போது கொடுக்கும் போதனைகளும் அதைச் சுற்றியே அமைகின்றன. அவரும் வீட்டைத் துறந்து தேசாந்திரியாக அலைகிறார். நாவலின் வேறு வேறு பகுதிகளில், வெவ்வேறான காலகட்டங்களில் சாமியப்பாவைச் சந்திக்க நேர்கிறது. சுப்ரமணியனின் மனப்போக்கை அவதானிக்கும் இடங்கள் நாவலின் பிற்பகுதிகளை முன்னறிவிப்பவையாக அமைகின்றன. மனதின் அலைபாய்தலுக்கு ஆட்பட்டு முறையற்று இருப்பவர்களுக்கு நோயே தண்டனையாகிறது. சாமியப்பாவுக்கும் விதிவிலக்கில்லை.
சுப்ரமணியன், பத்மா, சாமியப்பா ஆகியோரைத் தவிர்த்து நாவலில் முக்கியப் பங்காற்றும் கதாபாத்திரம் ரேஷ்மி. உடலைப் பேசுபொருளாகக் கொண்ட நாவலில் ரேஷ்மி பாத்திரமே முழுமையுணர்வை அளிக்கிறது. ரேஷ்மி ஒரு திருநங்கை. ஆண் – பெண் உடல் குறித்த இருமுனை தர்க்கங்களுக்கான பாலமாக அமைகின்றன ரேஷ்மியின் செயல்களும் பேச்சும். அவை சுப்ரமணியத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தேடலுக்கான விடையாகவும் அமைகிறது.
மேற்கத்தியத் தத்துவங்களில் உடலின் இன்பங்களை நுணுக்கமாக அணுகுவதன் வழியே ஞானத்தை அடைய வழி சொல்கிறார்கள். கிழக்கில் உடலைத் துறப்பதன் வழியே ஞானத்தை அடைய முடியும் என்கிறார்கள். உடலைத் துறக்கும்போது மரணம் அர்த்தம் இழந்துவிடுகிறது. வாழ்வதன் மீதும் பற்று அகன்றுவிடுகின்றது. பற்றின் முதற்புள்ளியாக உடலே அமைகிறது. தேவைகளும் ஆசைகளும் உடலிலிருந்தே பிறக்கின்றன. இரண்டு தத்துவ வழிகளிலேயும் பயணிக்கும் நாயகன் ஞானத்தைக் காட்டிலும் யதார்த்தத்தை அறிகிறான். பண்பாட்டு அம்சங்களில் உடல் கொள்ளும் அலைக்கழிப்புகளைப் புரிந்துகொள்கிறான். மரணிப்பதாகக் கனவு காணும் நாயகன் பதற்றத்துடன் எழுந்துகொள்கிறான். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தக் கனவுச் சம்பவம் நிகழ்கிறது. அருகில் இருக்கும் சாமியப்பாவிடம் தன் கனவைச் சொல்கிறான். வாழ்வதன் மீது கொள்ளும் பற்றின் வெளிப்பாடே இந்தப் பதற்றம் என்கிறார். பற்றின் மீதிருக்கும் பல்வேறு நுட்பமான பிடிப்பை நாவல் பேசுகிறது. பற்றற்று இருப்பதாகச் சொல்லப்படும் பாவனையை யதார்த்தச் சம்பவங்களின் வாயிலாகக் களைகிறது.
பதினேழு ஆண்டுகள் பத்மாவைப் பிரிந்திருக்கும் நாயகனின் பயணமே பெரும் பக்கங்களை ஆக்ரமித்திருக்கிறது. அனைவரின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கதையில் பதினேழு ஆண்டுகால இடைவெளியில் பத்மா படும் இன்னல்களைச் சொல்லாமல் விட்டிருப்பது முரண். நாவல் தன்னகத்தே சில குறைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றைக் கடந்து பேசாப் பொருளைச் சமகாலத்தோடு இணைத்துப் பேசியிருப்பது குறைகளைக் கடந்து கதையை அணுக்கமாக உணர உதவுகிறது. கதாபாத்திர வார்ப்பும், சம்பவங்களின் அவதானிப்புகளும் உடலை மையப்படுத்திச் சிந்திப்பதில் வழுவாமல் இருப்பது நாவலின் பெரும் பலம். உடல்களால் மட்டுமே ஆன உலகையும், அதற்கேயுண்டான தத்துவார்த்தத் தர்க்கங்களையும் பேசுகிறது ‘யாக்கை.’
மின்னஞ்சல்: krishik10@gmail.com