பிரபஞ்ச தரிசனம்
கேரள பழங்குடிக் கவிதைகள்
தேர்வும் மொழியாக்கமும்
நிர்மால்யா
வெளியீடு:
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
சென்னை - 73
பக். 188 ரூ. 200
சங்கத் தமிழ்முதல் வளமான இலக்கிய மரபுடைய மலையாள மொழியிலும் விளம்பு நிலைப் படைப்புகள் மீதான ஓர்மை இலக்கியத் தளத்தில் ஏற்பட்டிருக்கிறது. 35க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வாழும் கேரளாவில் பழங்குடி மக்களின் தாய்மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் மலையாள வரி வடிவத்தில் எழுதப்பட்டுத் தொடர்ந்து இலக்கிய இதழ்களில் வெளியாகின. அவை தொகுப்பட்டுக் ‘கேரள பழங்குடிக் கவிதைகள்’ ஆக வெளிவந்திருக்கிறது.
கேரளாவில் புழக்கத்தில் உள்ள 11 பழங்குடி மொழியில், 18 பழங்குடிக் கவிஞர்கள் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
முதுவான், றாவுளா, இருளர், முடுகா, முள்ளுக்குறும்பர், பணியர், மாவிலான் துளு உள்ளிட்ட மொழிகளில் மலையாள வரி வடிவத்தில் இக்கவிதைகள் எழுதப்பட்டு இருமொழியில் வெளியான. இத்தொகுப்பே கேரள பழங்குடிக் கவிதைகள்’ தொகுப்பாக வந்துள்ளது.
இலக்கியக் கோட்பாடுகளுக்குள் சிக்காத இக்கவிதைகள் காட்டாறுகள்போல் இயற்கையழகுடன் ஒளிர்கின்றன. பழங்குடி மொழிகளில் எழுதப்பட்ட உலகக் கவிதைகள் என்றால் மிகையில்லை.
பழங்குடி மக்களின் கவிதைகளில் மொழி, நிலம், தேசம் உள்ளிட்ட எல்லைகளைக் கடந்த பிரபஞ்ச தரிசனமே நிறைந்துள்ளது.
உலகின் ஆதிக்கவிகள் பழங்குடி மக்கள். நவீன கவிமொழிச் செயல்பாடுகளின் தொட்டிலாகப் பழங்குடிகள் விளங்குகிறார்கள். நவீன உலகின் ஆதிக்கவிகளாக அறியப்படும் வால்மீகிமுதல் பலரையும் பழங்குடி மக்களுடன் தொடர்புபடுத்தும் வழக்காறுகள் நிலவுகின்றன. எனினும் பல்வேறு கோட்பாடுகளுக்குள் தங்கியுள்ள இன்றைய நவ கவிதைகளிலிருந்து பழங்குடிகள் அந்நியமாகியுள்ளனர். அவர்களின் மொழிகள் இன்றைய பெருமொழி அதிகாரத்தில் தங்கள் இடத்தையும் இழந்துவிட்டன. அண்மைக்காலமாக இதில் வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியாகவே இத்தொகுப்பைக் வாசிக்க வேண்டியிருக்கிறது.
கவிஞர் அசோகன் மறையூர் தன் தாய்மொழியான முதுவான் பழங்குடி மொழியில் எழுதிய கவிதை பிரபஞ்சத்தின் தரிசனமாக உள்ளது.
பூவுக்குள் இருக்கும் தேனில்
சூரியன் கிடந்து
கொதிக்கின்றது.
சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும்
கொக்குகள்
வெந்தும் கருத்தும் போன
தினங்கள்
என்ற இக்கவிதையே பழங்குடிக் கவிதைகள் பிரபஞ்சத் தரிசனம் என்பதற்கு சான்றாகும் இதற்குமேல் வேறென்ன சான்று வேண்டும்?
கவிஞர் அஜயன் மடூர் தன் மொழியான முள்ளுக் குறும்பர் மொழியில் எழுதிய கவிதையிலும் இதனையொத்த பார்வையைக் காண முடிகிறது.
காட்டின் கோடைக்காலம்
எரிந்த காட்டில்
வற்றிய நதியில்
இலை உதிர்ந்த மரங்களில்
மூச்சுத் திணறிச் சாகும் முன்பு
என்ற வரிகளிலும் இதனையொத்த பார்வையை அறிந்துகொள்ள முடியும்.லிஜினா கடுமேனி மலைவேட்டுவன் மொழியில் எழுதியகவிதையில் சொல்கிறார்:
ஆதியில் மண்ணுக்கு வந்தவர்கள்
எங்கள் கூட்டத்தினர்.
ஆதியில் மண்ணில் பிறந்தவர்கள்
எங்கள் கூட்டத்தினர்.
காட்டிலும் மலையிலும் நடந்தோம்
காட்டுக்கிழங்கைத் தின்றோம்
காட்டில் வசித்தது அந்தக் கூட்டம்
நாங்கள் காட்டுவாசிக் கூட்டம்
என்று எழுதிச்செல்கிறார்.
மாவிலன் துளு மொழியில் கவிஞர் தன்யா வேங்கச்சேரி
மழை பெய்யும்போது
கலங்கிப் புரளும்போது
பார்த்ததுண்டா ?
முத்தமிட்டு முத்தமிட்டுத் திரும்பிப்போகும்
அலைகளை வாரியெடுத்ததுண்டா ?
எனக் கேட்கும் தன்யாவின் கேள்வியும் பார்வையும் ஆழ்ந்த உட்பொருளும் தரிசனமும் நிறைந்தது. பழங்குடி மக்களின் இக்கவிதைகளில் இந்தப் பார்வைகள் தளும்பி வழிபவை.
மின்னஞ்சல்: chinnathurai@kalachuvadu.com