பெரியண்ணன் கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தவர் கதை
டூரிஸ்ட் பேமிலி’ படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தப் படம் பற்றி எனக்குப் பல கேள்விகள் ஆரம்பித்துவிட்டன. இதற்குக் காரணம் ஆரம்பத்தில் திரையில் தோன்றிய ஒரு செய்தி: சிறீலங்காத் தமிழைப் புரிந்துகொள்ளும்படியாகத் தமிழ்ப் பொதுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கையில் இரண்டு கலாச்சார உட்குறிப்புகள் புதைந்திருக்கின்றன. ஏதோ யாழ்ப்பாணத் தமிழ் சுமேரியர்களின் பேச்சு மாதிரி விளங்கப்படுத்த வேண்டிய அன்னிய பாஷைபோலவும், மற்றது, இந்தியத் தமிழ் சினிமா ரசிகர்கள் “ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா” என்ற உயரிய தமிழ் வார்த்தைகளுடன் வளர்ந்து, சும்மா சூப்பர் ஸ்டார் என்றாலே மூளை உறைந்துவிடும் முழு மொக்கர்கள் என்ற கருத்தும் வெளிப்படுகிறது. தென் இந்தியாவில் மச்சி மாதிரி மொக்கர் / மொக்கன் ஈழத்தில் சரளமாகப் பேசப்படும் வார்த்தை. இது செல்லமான வார்த்தையா அல்லது வசைமொழியா என்பது யாரால் யாருக்கு, எந்தக் கட்டத்தில் சொல்லப்பட்டது என்பதில் இருக்கிறது. இந்த யாழ்ப்பாண அரும்பதம் இந்தப் படத்தில் இல்லை.
இந்திய ரசிகர்களுக்கு யாழ்ப்பாணத் தமிழைத் தடங்கல் இல்லாமல் புரியவைக்கவும்