நவீன தொல்குடி மனம்
குமார் அம்பாயிரத்தின் இலக்கியப் பயணம் 1990களின் இறுதியில் ஒகேனக்கலில் பிரம்மராஜன் ஒழுங்குசெய்த கவிதைப் பட்டறையிலிருந்து தொடங்கியது. அக்கவிதைப் பட்டறையில் அவரது ஏழு கவிதைகள் பிரமாதமாகச் சிலாகிக்கப்பட்டதையும், தமிழ்க் கவிதைப் பரப்பில் கவிஞராக அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக மூத்த கவிகள் தெரிவித்ததையும் நண்பர்கள் வாயிலாக அப்போதே அறிந்திருந்தேன். குறிப்பாக ‘ஃபாசில்ஸ்’ என்ற அவரது முதல் கவிதையை நேர்ச் சந்திப்பின்போது எனக்கு வாசிக்கக் கொடுத்தார். கவிதை சார்ந்த எனது அப்போதைய மனப்பாடுகளுக்கு அக்கவிதை ஈர்ப்பாக இல்லை என்றாலும் அதன் நவீன தன்மை கொடுத்த உளக்கிளர்ச்சியை இன்றும் மறுக்க முடியாது.
குமார் அம்பாயிரத்தின் கவிதைகள் நவீன மோஸ்தரிலும், கதைகள் தொல்குடி மனதும், அதீதப் புனைவும் சேர்ந்த ஒரு கலப்பினப் பசு போன்றும் அமைந்திருக்கும். திருவண்ணாமலை அருகில் வேங்கிக்காலில் 2009ஆம் ஆண்டிற்கு முன்பு கவிஞர் பழனிவேளுடன் குமார் அம்பாயிரத்தை அடிக்கடி சந்திக்கும் வழக்கம் இருந்தது. அப்போது ‘ஈட்டி’ தொகுப்பில் உள்ள சில கதைகளைக் கையெழுத்துப் பிரதியாக எங்களிடம் வாசிக்கக் கொடுத்த ஞாபகம் உள்ளது. குறிப்பாக ‘வழக்கு எண் 235-2020’, ‘ன்யாக்’ போன்ற கதைகளைக் கையெழுத்துப் பிரதியாகப் படித்து விவாதித்தது நினைவில் உள்ளது.
2011ஆம் ஆண்டில் குக்கூ குழந்தைகள் வெளி, உயிர் எழுத்து வெளியீடாக வந்த ‘ஈட்டி’ சிறுகதைத் தொகுப்பு மிகுந்த கவனத்தைப் பெற்றது. இத்தொகுப்பு மாய யதார்த்தமும் பூடகமான அங்கதமும் தொல்குடி மனப்பாங்கும் சேர்ந்த கதைகளைக் கொண்டது. தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்ட தொல்கதைகளின் பின்புலமும், இப்பகுதி பழங்குடியினக் குரலும், நவீனமும், நுட்பமான விவரணைகளும் பெரும்பாலான கதைகளின் மனக்குரலாக இருப்பதைக் காண முடியும்.
‘மண்யோனி’ கதையில் வரும் பொன்வண்டு, கழுதைப் பொன்வண்டு, பெண்கள் சிறுநீர் கழிக்கும் விவரணைகளும், மழையிலிருந்து ஆடுகளை நனையாமல் யோனியில் எடுத்துவரும் கதையும் வடதமிழகத்தில் உலவிவரும் பல்வேறு நாட்டுப்புறக் கதையாடல்களின் மாற்று வடிவம்.
‘ஈட்டி’ கதையின் மையச்சரடு அவரது மலைப்பயண அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இக்கதையின் விவரணைகளும் மனிதர்களும் செங்கத்தை ஒட்டிய தொல்குடிக் கிராமங்களையும், ஜவ்வாது மலைத்தொடரின் மனிதர்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டி அமைந்தவை. ஒருமுறை அவருடனும், நண்பர்கள் சிலருடனும் அதிகாலை தொடங்கி முன்னிரவுவரை அடிவாரத்திலிருந்து நடுவே காடுகளைக் கடந்து நடந்து மலையேறிய அனுபவமும் நினைவுக்கு வருகிறது. இக்கதையில் மலைப்பிரதேசத்திற்குப் பயணப்பட்ட இரண்டு நாடோடி நண்பர்களில் ஒருவன் அங்கேயே தங்கிவிடுவதாகவும், மற்றொருவன் பயணங்களை இழக்க விரும்பாமல் அங்கிருந்து வெளியேறுவதாகவும் இருக்கும். உண்மையில் ஒரு நாடோடி தன் பயணத்தில் கண்டடைந்த தொல்குடி இன மக்களின் நம்பிக்கை, வாழ்வியல் முறைகளுக்குத் தன்னை ஒப்படைக்கிறான். இக்கதையில் யதார்த்தத்திற்கும் மனக்கிலேசத்திற்குமான வேறுபாடே இரண்டு நண்பர்களாகி இருக்கிறார்கள், ஆனால் இருவரும் ஒருவரே என்றும் ஊகிக்கலாம்.
‘பனம்பூல் ஏந்திய தனிப்பாடல்’, ‘தேடூ’, ‘ஃ என்றொரு கதை’ எனத் தனித்தனியான தொன்மமும் அதீதப் புனைவுமாக குமார் அம்பாயிரத்தின் கதைகள் உள்ளன. ‘தனிமை’ வெளியீடாக வந்த ‘கருங்குருவிக் கவிதைகள்’ அவரது ‘ஈட்டி’ தொகுப்பைப் போல கவனம் பெறவில்லையென்றாலும் அக்கவிதைகள் நிறைவாக அமைந்தவை. குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பொயட்ரி காலாண்டிதழில் வெளியான இவருடைய கவிதைகள் மிகுந்த உற்சாகம் தருவதாக இருந்தன.
குமார்அம்பாயிரம் இயற்கையுடனிருத்தல், தொல்குடி மனப்பாங்கு, உதிரிகளின் கவலைகளுக்குச் செவிசாய்த்தல், குறியீடுகள், தொடர்ச்சியான எதிர் மனநிலை, நவீன தொன்மத்தைக் கட்டமைத்தல், இருத்தலியல் சிக்கல், வாழ்வியல் யதார்த்தம் ஆகியவற்றுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவற்றைத் தன் புனைவுகளின் ஊடாக அவர் கடக்க நினைத்திருக்கலாம்.
புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வம் குமார் அம்பாயிரத்தின் இறுதி நாட்கள்வரை இருந்ததெனச் சொல்லலாம். கவிஞர், புனைகதை ஆசிரியர், நம்மாழ்வாருடன் சிறிதுகாலப் பயணம், இயற்கை விவசாய ஆர்வலர், வடிவமைப்பாளர், டிஜிருடு வாத்தியக் கலைஞர் என இயங்கினார்.
எப்போதுமே அகால மரணம் துயரமளிப்பது. அது கவிஞர்கள், கலைஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் என்ற பேதம் பார்ப்பதில்லை. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்ற வரிகளே நமக்கு ஆறுதலாயிருக்க முடியும். சிறிதளவேயாயினும் அவரது எழுத்துகளுக்காகவும், பிற சமூக, கலைச் செயல்பாடுகளுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் குமார் அம்பாயிரம்.
மின்னஞ்சல்: sarayukandar@gmail.com