ஜூன் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      “நம் நாடு தனது தார்மீக நெறியை இழந்துவிட்டது”
      புனைவில் இசைக்கப்படும் விடுதலை
      ஹெமிங்வேயைத் தொடரும் போர்ஹே
      தமிழ்ப் பல்கலைக்கழகம் வீழ்ந்துகொண்டிருக்கும் பதிப்புத்துறை
      இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
    • கதை
      மயானக் கொள்ளை
      தாழொடு துறப்ப
      வெள்ளைச் சீலை
    • திரை: டூரிஸ்ட் பேமிலி
      பெரியண்ணன் கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தவர் கதை
    • காலச்சுவடு 30 & 300
      பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      நம்பினால் நம்புங்கள்!
    • மதிப்புரை
      காலத்தின் குரல்
      பிரபஞ்ச தரிசனம்
      உடல்களின் உலகம்
      பெண் போராளியின் வரலாறு
    • அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025)
      நவீன தொல்குடி மனம்
    • பஹ்தியார் ஹிதாயத் கவிதைகள்
      கண்ணியம்
    • தலையங்கம்
      கனன்றுகொண்டிருக்கும் எரிமலை
    • கற்றனைத்தூறும்- 7
      அனைவருக்கும் கிடைக்குமா கல்வி?
    • புக்கர் பரிசு 2025
      ‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’
    • கவிதை
      உப்பாளன்
      உள்ளிரைச்சல்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2025 அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025) நவீன தொல்குடி மனம்

நவீன தொல்குடி மனம்

அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025)
கண்டராதித்தன்

குமார் அம்பாயிரத்தின் இலக்கியப் பயணம் 1990களின் இறுதியில் ஒகேனக்கலில் பிரம்மராஜன் ஒழுங்குசெய்த கவிதைப் பட்டறையிலிருந்து தொடங்கியது. அக்கவிதைப் பட்டறையில்  அவரது ஏழு கவிதைகள் பிரமாதமாகச் சிலாகிக்கப்பட்டதையும், தமிழ்க் கவிதைப் பரப்பில் கவிஞராக அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக மூத்த கவிகள் தெரிவித்ததையும் நண்பர்கள் வாயிலாக அப்போதே அறிந்திருந்தேன். குறிப்பாக ‘ஃபாசில்ஸ்’ என்ற அவரது முதல் கவிதையை நேர்ச் சந்திப்பின்போது எனக்கு வாசிக்கக் கொடுத்தார். கவிதை சார்ந்த எனது அப்போதைய மனப்பாடுகளுக்கு  அக்கவிதை ஈர்ப்பாக இல்லை என்றாலும் அதன் நவீன தன்மை கொடுத்த உளக்கிளர்ச்சியை இன்றும் மறுக்க முடியாது.

குமார் அம்பாயிரத்தின் கவிதைகள் நவீன மோஸ்தரிலும், கதைகள் தொல்குடி மனதும், அதீதப் புனைவும் சேர்ந்த ஒரு கலப்பினப் பசு போன்றும் அமைந்திருக்கும். திருவண்ணாமலை அருகில் வேங்கிக்காலில் 2009ஆம் ஆண்டிற்கு முன்பு கவிஞர் பழனிவேளுடன் குமார் அம்பாயிரத்தை அடிக்கடி சந்திக்கும் வழக்கம் இருந்தது. அப்போது ‘ஈட்டி’ தொகுப்பில் உள்ள சில கதைகளைக் கையெழுத்துப் பிரதியாக எங்களிடம் வாசிக்கக் கொடுத்த ஞாபகம் உள்ளது. குறிப்பாக ‘வழக்கு எண் 235-2020’, ‘ன்யாக்’ போன்ற கதைகளைக் கையெழுத்துப் பிரதியாகப் படித்து விவாதித்தது நினைவில் உள்ளது.

2011ஆம் ஆண்டில் குக்கூ குழந்தைகள் வெளி, உயிர் எழுத்து வெளியீடாக வந்த ‘ஈட்டி’ சிறுகதைத் தொகுப்பு மிகுந்த கவனத்தைப் பெற்றது. இத்தொகுப்பு  மாய யதார்த்தமும் பூடகமான அங்கதமும் தொல்குடி மனப்பாங்கும் சேர்ந்த கதைகளைக் கொண்டது. தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்ட தொல்கதைகளின் பின்புலமும், இப்பகுதி பழங்குடியினக் குரலும்,  நவீனமும்,  நுட்பமான விவரணைகளும் பெரும்பாலான கதைகளின் மனக்குரலாக இருப்பதைக் காண முடியும்.

‘மண்யோனி’ கதையில் வரும் பொன்வண்டு, கழுதைப் பொன்வண்டு, பெண்கள் சிறுநீர் கழிக்கும் விவரணைகளும், மழையிலிருந்து ஆடுகளை நனையாமல் யோனியில் எடுத்துவரும் கதையும் வடதமிழகத்தில் உலவிவரும் பல்வேறு நாட்டுப்புறக் கதையாடல்களின் மாற்று வடிவம்.

‘ஈட்டி’ கதையின் மையச்சரடு அவரது மலைப்பயண அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இக்கதையின்  விவரணைகளும்  மனிதர்களும்  செங்கத்தை   ஒட்டிய தொல்குடிக் கிராமங்களையும், ஜவ்வாது மலைத்தொடரின் மனிதர்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டி அமைந்தவை. ஒருமுறை அவருடனும், நண்பர்கள் சிலருடனும் அதிகாலை தொடங்கி முன்னிரவுவரை அடிவாரத்திலிருந்து நடுவே காடுகளைக் கடந்து நடந்து மலையேறிய அனுபவமும் நினைவுக்கு வருகிறது. இக்கதையில் மலைப்பிரதேசத்திற்குப் பயணப்பட்ட இரண்டு நாடோடி நண்பர்களில் ஒருவன் அங்கேயே தங்கிவிடுவதாகவும், மற்றொருவன் பயணங்களை இழக்க விரும்பாமல் அங்கிருந்து வெளியேறுவதாகவும் இருக்கும். உண்மையில் ஒரு நாடோடி தன் பயணத்தில் கண்டடைந்த தொல்குடி இன மக்களின் நம்பிக்கை, வாழ்வியல் முறைகளுக்குத் தன்னை ஒப்படைக்கிறான். இக்கதையில் யதார்த்தத்திற்கும் மனக்கிலேசத்திற்குமான  வேறுபாடே இரண்டு நண்பர்களாகி இருக்கிறார்கள், ஆனால் இருவரும் ஒருவரே என்றும் ஊகிக்கலாம்.

‘பனம்பூல் ஏந்திய தனிப்பாடல்’, ‘தேடூ’, ‘ஃ என்றொரு கதை’ எனத் தனித்தனியான தொன்மமும் அதீதப் புனைவுமாக குமார் அம்பாயிரத்தின் கதைகள் உள்ளன. ‘தனிமை’ வெளியீடாக வந்த ‘கருங்குருவிக் கவிதைகள்’ அவரது ‘ஈட்டி’ தொகுப்பைப் போல கவனம் பெறவில்லையென்றாலும் அக்கவிதைகள் நிறைவாக அமைந்தவை. குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பொயட்ரி காலாண்டிதழில் வெளியான இவருடைய கவிதைகள் மிகுந்த உற்சாகம் தருவதாக இருந்தன.

குமார்அம்பாயிரம் இயற்கையுடனிருத்தல், தொல்குடி மனப்பாங்கு, உதிரிகளின் கவலைகளுக்குச் செவிசாய்த்தல், குறியீடுகள், தொடர்ச்சியான எதிர் மனநிலை, நவீன தொன்மத்தைக் கட்டமைத்தல், இருத்தலியல் சிக்கல், வாழ்வியல் யதார்த்தம் ஆகியவற்றுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவற்றைத் தன் புனைவுகளின் ஊடாக அவர் கடக்க நினைத்திருக்கலாம்.

புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வம் குமார் அம்பாயிரத்தின் இறுதி நாட்கள்வரை இருந்ததெனச் சொல்லலாம். கவிஞர், புனைகதை ஆசிரியர், நம்மாழ்வாருடன் சிறிதுகாலப் பயணம், இயற்கை விவசாய ஆர்வலர், வடிவமைப்பாளர், டிஜிருடு வாத்தியக் கலைஞர் என இயங்கினார்.

எப்போதுமே அகால மரணம் துயரமளிப்பது. அது கவிஞர்கள், கலைஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் என்ற பேதம் பார்ப்பதில்லை. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்ற வரிகளே நமக்கு ஆறுதலாயிருக்க முடியும். சிறிதளவேயாயினும் அவரது எழுத்துகளுக்காகவும், பிற சமூக, கலைச் செயல்பாடுகளுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் குமார் அம்பாயிரம்.  

             மின்னஞ்சல்: sarayukandar@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.