கடிதங்கள்
ச. தமிழ்செல்வனின் ‘செங்கொடி இயக்கத்தின் திசைவழி’ கட்டுரை, மூன்று மாநிலங்களில் அரசு அதிகாரத்தில் இருந்தது, நாடாளுமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தது போன்றவை இன்று பழம்பெருமையாய் மாறிவிட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு இளைஞர்களின் வருகை பெரும் நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது.
எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’ கட்டுரை இந்தி மொழிக் கவிஞர் விநோத் குமார் சுக்லவையும் அவரது படைப்புகளையும் சிறப்பான முறையில் அறிமுகம் செய்துவைக்கிறது. முகநூல் நமக்கு அதிகப்படியான சனநாயக விழுமியங்களை வழங்கியுள்ளது என நம்பினால், அதனை உருவாக்கியவர்களின் செயல்பாடுகள் சனநாயகத்திற்கு எதிராக எப்படி இருக்கிறது என்பதனை சாராவின் வில்லியம்ஸ்ஸின் ‘அவர்கள் கவனக்குறைவானவர்கள்’ என்ற புத்தகம் பேசுகிறதை சச்சிதானந்தன் சுகிர்தராஜா கட்டுரையில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
நவீன் ராஜனின் ‘நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்’ கட்டுரை கடந்த, பதினைந்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தலித் சினிமா எப்படி உருவாகி வந்துள்ளது என்ற வரலாற்றையும் அதன் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதையும் விளக்கமாகப் பதிவு செய்துள்ளது.
சா.ரு. மணிவில்லன்,
சென்னை-87.
உலகப் பதிப்புத் துறையில் ஒரு தமிழ்ப் பதிப்பாளராக தமது காத்திரமான தடங்களைப் பதித்துவரும் ‘காலச்சுவடு’ ஆசிரியரது ‘பெருமாள் முருகன் படைப்புலகப் பயணம்’ கட்டுரையில் எனது கவனத்தை ஈர்த்த வாக்கியங்கள் ஒன்று, “தமிழ் என்ற மொழியையோ, எந்த ஒரு தமிழ் எழுத்தாளரையோ உலகப் பதிப்புச் சூழல் அறிந்திருக்க வில்லை.” இரண்டு, “உலக அரங்கில் தமிழ் தத்தி நடப்பதைக் காணும் மகிழ்ச்சி இது.” மூன்று, “பெருமாள்முருகன் அளவுக்கு இன்று உலகளாவிய மொழிகளில் பயணித்த எழுத்தாளர்கள் இந்தியாவில் குறைவுதான்.”
எழுத்தாளர் பெருமாள்முருகன், தமது பேராசிரியர் பயணத்திற்குப்பின், தமது நீண்ட எழுத்தாற்றலால் உலகக் கவனத்தை ஈர்க்கும் அரிய சூழல் ஏற்படும் என்று நினைத்திருப்பாரா என்பது தெரியாது. அறிவறத்திற்கு என்றும் அழிவே இல்லை! இத்தகைய பேற்றுக்கு அடித்தலமானவை, நமது எழுத்தாளர்களது தற்காலப் படைப்புகளிலுள்ள உள்ளீட்டுத்தரம். அத்துடன், மொழிபெயர்ப்பாளர்களின் உள்ளார்ந்த மொழி ஆற்றல் பண்பு. முக்கியமாக, காலச்சூழலுக்கு ஏற்றவாறு, இவற்றிற்கான மதி நுட்பத்துடன் கூடிய முன்னெடுப்புப் பணியை மேற்கொண்டுள்ள காலச்சுவடு இதழ் ஆகியவையே ஆகும். இவை மேன்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துகிறேன்.
சி. பாலையா,
புதுக்கோட்டை.
மே இதழில் மக்கள் இசைமேதை எம்.பி. சீனிவாசன் நூலுக்கான தியடோர் பாஸ்கரனின் மதிப்புரையில் நூலின் சிறப்புகளை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார், நெகிழ்ச்சி அடைந்தேன். அதே நேரத்தில் நூலில் உள்ள பிழைகள், தகவல் குறைபாடுகளையும் தொழில்நுட்பக் குறைபாடுகளையும் உரிமையுடன் சுட்டிகாட்டி இருக்கிறார். அதற்காகவும் நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த பதிப்பில் குறைகள் அனைத்தையும் நேர் செய்துகொள்வேன். நூல் ஆக்கத்தின்போது தியடோர் பாஸ்கரன் போன்ற மூத்த அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களும் தகவல்களும் எனக்குப் பெரிதும் உதவின.
அறந்தை நாராயணன் எழுதி 1990இல் வெளிவந்த ஒரே ஒரு நூலைத் தவிர எதுவுமே இல்லை என்ற நிலையில் இருந்துதான் இந்த நூலை எழுதி விடுவது என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன். அவர் சொல்வதுபோல் கிடைத்தத் தகவல்கள் அனைத்தையும் நூலில் கொண்டுவந்துவிட்டேன். எம்பிஎஸ்ஸைப் பற்றி வேறொரு நூல் நான் எழுதுவேனா என்று எனக்குத் தெரியாது. அவர் சொல்வதுபோல் நூலை செப்பனிடுதல் அல்லது காப்பி எடிட்டிங் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அடுத்த பதிவில் இன்டெக்ஸ் சேர்ப்பதற்கு ஆன முயற்சியையும் செய்வேன்.
மு. இக்பால் அகமது,
மின்னஞ்சல்.
‘பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்’ என்னும் கண்ணனின் கட்டுரை; “மொழிபெயர்ப்புக்காக ஒரு படைப்பு தேர்வு செய்யப்பட அதன் உள்ளார்ந்த பண்பு பல சமயங்களில் போதுமானதாக இருப்பதில்லை. படைப்பைப் பற்றிய கதையும் படைப்பாளி பற்றிய கதையும் அவசியமாகின்றன.“இவை கட்டுரையில் வரும் வரிகள். பெருமாள்முருகனோடு சேர்த்துத் தம்முடைய பதிப்பகத்தின் மற்றைய குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளை கண்ணன் சொல்லிச் செல்கிறார். இந்த விஷயம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டியது.
இது நம் மொழிக்கும் பெருமாள்முருகனுக்கும் பொருந்தும். பெருமாள்முருகனுக்கு உலகத் தகுதிகள் கிடைத்துக் கொண்டிருக்கும்போது அவரோடு சேர்த்து ஒரு கைப்பிடி அளவாவது மேலும் தகுதியுள்ள ஆளுமைகளை நம் சமகால இலக்கியம் பெற்றுள்ளது. சற்று விவரமாகச் சொன்னால், காலச்சுவடு பதிப்பகத்துக்கு வெளியிலும்!
கோபாலகிருஷ்ணன்,
மின்னஞ்சல்.
எஸ். ராமகிருஷ்ணரின் ‘தமிழ் காமிக்ஸ் நாயகன்’ கட்டுரை என் மனதில் மலரும் நினைவுகளை மீட்டு எடுத்தது. அந்தக் கட்டுரையை வாசிக்கும்போது எனது பள்ளிப் பருவத்தில் வாசித்த காமிக்ஸ் புத்தகங்களின் நினைவுகள் மனதில் மலரும் நினைவுகளாக வந்தன. பள்ளிக்காலத்தில் ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும்போது அம்புலிமாமா, முத்து காமிக்ஸ், கோகுலம், அணில் போன்ற இதழ்களை முதலில் வாங்கி மகிழ்வுடன் வாசிப்பேன். பிறகு என் சகோதர, சகோதரிகளுக்கு ஆர்வமுடன் வாசிக்கக் கொடுப்பேன். யார் முதலில் படிப்பது என்பதற்காக எங்களுக்குள் சண்டை வரும். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.
இத்துடன் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தவறான தகவலைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இரும்புக் கை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயராக ‘அழிவு கொள்ளை தீமைக் கழகம்’ (அ.கொ.தி.க) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் முத்து காமிக்ஸில் வெளியான சாகச இரட்டை கதாநாயகர்கள் லாரன்ஸ் - டேவிட் ஆகியோரே அ.கொ.தி.க.வுக்கு எதிராகப் போராடும் கதாநாயகர்கள். ஜானி நீரோ அவரது மனைவி ஸ்டெல்லா ஆகியோரும் அந்தக் காலத்தில் இருந்த முக்கியமான கதாநாயகர்கள். ‘இமயத்தில் மாயாவி’, ‘மஞ்சள் பூ மர்மம்’ போன்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன.
பி. சம்பத்,
கோயம்புத்தூர்.
கருத்து முதல் வாதத்தின் அடிப்படையிலும் இட்டுக் கட்டி நிரப்புவதன் மூலமும் எந்த ஒரு ஆய்வு முடிவுகளையும் தவறென்று நிரூபிக்க முயற்சிக்கலாம். அதுபோன்று அமைந்ததுதான் கிருஷ்ணனின் கட்டுரை. அதை வாசிக்கும் போதே உணர முடிந்தது. அதற்கு எதிர்வினை செய்வதற்கான வழிமுறைகளை தேடிக் கொண்டிருந்தேன். நல்வாய்ப்பாக விரிவான தகவல்களோடு எதிர் வினையாற்றிய ஆசிரியருக்கும் வெளியிட்ட காலச்சுவடுக்கும் நன்றி. தமிழ் சினிமாவைப் பற்றி பேசும்போது கங்கை அமரனின் பங்களிப்பையும் பேசியாக வேண்டியத் தேவை உள்ளது. அவரும்கூட வணிக வெற்றியை ஒட்டிய திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தந்த அளவுக்கு அடையாள மீட்பு வெளிக்காட்டலுக்கான திரைப்படங்களை இயக்கவில்லை. முகநூல் பல்வேறு வகைகளில் உண்மையை மக்களுக்குக் கொண்டு சென்றதாக நம்பிய காலங்கள் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை கவனிக்கும் போது அதன் உண்மை முகம் வெளிவந்துவிட்டது. அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது சுகிர்தராஜாவின் திறனாய்வுக் கட்டுரை. முதலாளித்துவம் அனைத்தையும் விழுங்கும் தன்மைகொண்டது என்பதற்கு நிகழ்கால நடைமுறை உதாரணமாகக் கருதவும் வாய்ப்பளிக்கிறது. ஒரு புத்தகம் எடுத்துவரைப்பவற்றைக் கால நிகழ்வுகளோடு பொருத்தி நகைச்சுவை கலந்து படைக்கும் ஆற்றல் வியக்க வைப்பதோடு அடுத்த கட்டுரைக்காகக் காத்திருக்கவும் வைக்கிறது.
சி. சு. ஜெகன்நாதன்,
மின்னஞ்சல்.
சாரா அருளரசியின் ‘வாழிய நிலனே...’ கள யதார்த்தம் நேரடி அனுபவ நிகழ்வுகளைப் படித்த போது வலித்தது. பள்ளியின் வலிமை உணராதவர்கள் என்று பொதுவில் சொல்வதைவிடப் பள்ளியின் வலிமையைத் தனது வாரிசுகளிடம் கடத்தாத பெற்றோரே இதற்குப் பொறுப்பெனலாம். நுணுக்கமாகக் கவனித்தால் பெரும்பான்மைப் பெற்றோர் தன் சமூகம் சார்ந்த அரசியல் தலைவர் யார், அந்த அரசியலின் நிறம் மாணவனின் கையில் மணிக்கட்டுச் சுற்றிய கயிறாக மாறும்போது உவகை கொள்கிறார்கள் என்பது நிஜம். அதன் தொடர்ச்சிதானே குறிப்பிட்ட சமூக சமையல்காரரின் நளபாக உணவைப் பள்ளியில் பரிமாறக் கூடாது. என் பிள்ளை அந்த உணவைத் தொட மாட்டான் என்று வரிசை கட்டிப் பெற்றோர் நின்றதன் வெளிப்பாடு. நான் படித்த பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் நெருஞ்சி முள் அகற்றும் பணியைத் திறம்பட செய்திருக்கிறேன். தலைமுடியை ஒட்ட வெட்டாததற்கும் நகம் வெட்டாததற்கும் உடற்கல்வி ஆசிரியர் தண்டித்ததையும் கண்டிருக்கிறேன். “கண்ணை மட்டும் விட்டுவிட்டுப் பாக்கி எல்லா இடத்திலும் அடிங்க சார்” என்று அன்று ஆசிரியர்களிடம் வாய்மொழி உறுதிப் பத்திரம் வழங்கிய பெற்றோர் குரல்கள் இன்று காணாமல் போனதன் அதிதீவிர பாதிப்பே இதன் காரணம். வகுப்பறையிலுள்ள மாணவர்களின் இல்ல விலாசமும் பெற்றோர் விவரமும் அறிந்து பெற்றோரோடு, எந்தத் தொடர்பு வசதியும் இல்லாத காலத்தில் வாஞ்சையோடு தொடர்பில் இருந்த ஆசிரியர் கலாச்சாரம் காலாவதியானதும் தற்போதைய ஆசிரியர் பெருமக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நல்தேவையாகும். இன்றைய சூழலில் ஆசிரியர்கள் மீதான விமர்சனம், மாணவர்களின் வாழ்வியல் மீதான விமர்சனம் எதுவாக இருந்தாலும், கிராமமே திரண்டு பள்ளிக்குத் தேவையான பொருட்களைச் சீர்வரிசைபோலக் கொண்டுபோய்ச் சேர்க்கும் கிராமத்துச் செய்திகள் நம்பிக்கை தரும் பாலைவனச் சோலையாகத் தழைக்கிறது. யோசிக்கவைத்த கட்டுரை; சிறப்பு வாழ்த்துகள்.
விஜய் ஆரோக்யராஜ்,
கும்பகோணம்.