பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்
காலச்சுவடு பதிப்பகம் 30, இதழ் 300 எனும் மைல்கல்லை எப்படிக் கொண்டாடலாம் என்று யோசித்துவருகையில் அதன் முக்கியப் பங்களிப்புகள் என்ன என்றும் பரிசீலிக்கத் தொடங்கினேன். காலச்சுவடு தமிழகப் பதிப்பகம் அல்ல, நாகர்கோவிலில் வேர்விட்டிருக்கும் பன்னாட்டுத் தமிழ்ப் பதிப்பகம்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல பண்பாட்டு ஆர்வங்களும் அரசியல் சார்புகளும் உடைய பல பரிமாணங்கள் கொண்ட ஒரு பன்னாட்டுக் குழுவின் பங்களிப்பு பரந்துபட்டதாக இருப்பது அதிசயமல்ல. ஆனால் காலச்சுவடின் சில முக்கியமான பங்களிப்புகள் எனது சிந்தையில் அழுத்தமாகப் பதியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. உதாரணத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் சு. இராசாராம் ஐந்து நூல்களைத் தொகுத்து வெளியிடும் திட்டத்தோடு (தமிழ்மொழிக் கல்வி, தமிழ் மொழி அரசியல், தமிழ் நவீனமயமாக்கம், மொழிபெயர்ப்புப் பார்வைகள், தமிழ் பதிப்பியல்) அணுகினார். அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இத்துறைகளில் பல தொகுதிகளாகத் தொகுக்கும் அளவுக்கு காலச்சுவடு ஆக்கபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் என்று நான் உணர்ந்ததில்லை.
ஒப்பீட்டிலக்கியப் பேராசிரியர் Claudine Le Blanc தலைமையில் லெட்டிசியா இபானஸ் முன்னிலையில் Sorbonne பல்கலைக்கழகத்தில் மார்ச் 21 அன்று நடைபெற்ற ‘காலச்சுவடு 30' நிகழ்வு.
சமீபத்தில் இளம் ஆய்வாளர் ஊ. முத்துப்பாண்டி, காலச்சுவடில் வெளிவந்த கறுப்பிலக்கியப் பிரதிகளின் பட்டியலை அனுப்பிவைத்தார். இரண்டு தொகுதிகளாக வெளியிடும் அளவுக்குப் படைப்புகள் வெளி வந்துள்ளன. இதுவும் காலச்சுவடின் அறியப்படாத ஒரு பரிமாணம் வெளிப்பட்டது போன்று இருந்தது.
இவைபோல இன்னும் பலவும் வெளிவரலாம். புதிய பார்வை புதிய பங்களிப்பை வெளிக்கொணரும். எனில் இவையும் இன்னும் பலவும் காலச்சுவடுக்கு இயல்பாகவே கிடைக்கப்பெறவும் அல்லது கேட்டு வாங்கப்பட்டுப் பிரசுரிக்கப்படவும் காரணமான கருத்தியல் என்ன? இத்தகைய பல்பொருள் பங்களிப்புகளை ஈர்க்க காலச்சுவடு முன்வைத்த பார்வை என்ன?
லிட்டில் கிட்டிங் (Little Gidding) என்பது இங்கிலாந்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். லண்டனின் மையத்திலிருந்து 70 சொச்சம் மைல்கள். ஒரு உன்னதக் கிறிஸ்தவச் சமூகத்தை உருவாக்கும் திட்டத்தோடு நிக்கோலஸ் பிரார் என்பவர் 1625இல் இதை நிர்மாணித்தார். பல்கலை, பதிப்பகம், மடம், புனித ஸ்தலம் இவற்றின் கலவையாக அமைந்தது. 1642ஆம் ஆண்டு மன்னர் முதலாம் சார்லஸ் லிட்டில் கிட்டிங்கிற்கு வருகைதந்தார். இதற்கு 300 வருடங்களுக்குப் பின்னர் 1936இல் எலியட் இக்கிராமத்திற்கு வந்தார். அவரது புகழ்பெற்ற ‘quartet’ கவிதைகளில் இறுதிக் கவிதை ‘Little Gidding.’
இக்கிராமம் ஒரு மதச்சமூகமாகக் கவனத்தில் இருந்தாலும் அதற்குப் பதிப்பு வரலாற்றில் ஓர் இடம் உள்ளது. அவர்தம் கொள்கைப்படி அவர்கள் உருவாக்கிய - கட்டமைத்த என்றும் சொல்லலாம் - புதிய, பழைய ஏற்பாட்டின் தொகுதிகளே அக்கிராமத்திற்குப் பதிப்பு வரலாற்றில் ஓர் இடத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. மத நூல்கள் புனிதங்களாகக் கருதப்பட்டுவந்தன, இப்போதும் கருதப்படுகின்றன. ஆனால் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் இக்குடியில் கடவுளின் பார்வையை ஒருங்கிணைத்து ஒரே தொகுதியாகப் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டை ஒரு தொகுதியாகவும் உருவாக்கினார்கள். இத்தொகுதிகள் முழுமையாக அச்சிடப்பட்ட பக்கங்களை வைத்தே உருவாக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டின் ஐந்து தொகுதிகளும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளும் சேகரிக்கப்பட்டன. அவற்றோடு பொருந்திப்போகும் படங்களும் கொண்டுவரப்பட்டன. பின்னர் அத்தொகுதிகள் அனைத்தும் பக்கம் பக்கமாகப் பத்தி பத்தியாக, சமயத்தில் வரிகளாகவும் வார்த்தைகளாகவும் வெட்டிப் பல தட்டுகளில் அடுக்கப்பட்டன. பின்னர் மேசையில் வைத்துப் படிக்கத்தக்க பெரிய வடிவில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒருங்கிணைந்த தொகுதி ஒன்றும், புதிய ஏற்பாட்டின் ஒருமித்த தொகுதி ஒன்றும் உருவாக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டின் ஐந்து தொகுதிகளும் இணைக்கப்பட்டு ‘கடவுளின் ஒருமித்த சட்டம்’ உருவாக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின் நான்கு தொகுதிகளும் இணைக்கப்பட்டு ஒன்றிசைந்த பைபிள் உருவாக்கப்பட்டது.
இந்தச் செய்திகளைப் படித்தபோது எனக்கு காலச்சுவடு 1990களில் உருப்பெற்ற விதம் நினைவுக்கு வந்தது.
தீவிர உள்ளடக்கமுடைய இதழையும் நூல்களையும் வெளியிட்ட முன்னோடி முயற்சிகளிலிருந்து மாறுபட்டு காலச்சுவடு 30 ஆண்டுகளாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவது ஏன்?
காலச்சுவடு தொடங்கப்பட்ட காலமும் சூழலும் வேறு. இந்தியா, பொருளாதாரத் தாராளவாதத்தைக் கைக்கொண்டு வளர்ச்சி அடைந்து வந்த காலம் அது. செயற்கைக்கோள்களை ஏவி அதன்வழி தொலைத்தொடர்புப் புரட்சி நடந்தது, கணினி யுகம் இந்தியாவில் கால் பதித்துப் பெரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கிய காலகட்டம். மேற்படி முன்னேற்றங்கள் அனைத்துமே இடதுசாரிக் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் அறிவுஜீவிகளாலும் கண்மூடித்தனமாக எதிர்க்கப்பட்டன. இக்கட்டத்தில் இருப்பு நிலையை ஆதரிக்கும் பழைமைவாதிகளாக அவர்கள் செயல்பட்டனர். தொலைத்தொடர்பு மேம்பட்டு, டிடிபி தொழில்நுட்பம் அச்சாக்கத்தைப் புரட்டிப்போட்ட சூழலில், நாகர்கோவிலிலிருந்தே இதழையும் பதிப்பகத்தையும் நடத்தும் வாய்ப்பு உருவாகிவந்தது. அடுத்த சில ஆண்டுகளில் கைப்பேசியும் இணையமும் நாமிருக்கும் இடத்தின் வரையறைகளைத் தாண்டிச்செல்ல வழிவகுத்தன. தொடங்கப்பட்ட காலத்தில் தென்திசையில் இந்தியாவின் கடைசிப் பதிப்பகமான காலச்சுவடு, தமிழின் பன்னாட்டுப் பதிப்பகமாக உருப்பெற இந்தப் பொருளாதார, தொழில்நுட்பப் பின்புலம் முக்கியக் காரணம். காலச்சுவடு மிகச்சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டாலும் சுராவின் 50 ஆண்டுகாலப் பணியின் பயன் வலுவான சமூக முதலீடாக இருந்தது.
1990கள், பல புதிய சிந்தனைகளும் விவாதங்களும் தமிழ்ச் சூழலை ஊக்கப்படுத்திய காலம். இவ்விவாதங்கள் வன்மங்களாக வளர்ந்து தனிநபர் தாக்குதல்களும் ஒடுக்குதல்களும் அறிவுலகில் பெரும் பிளவுகளை ஏற்படுத்திய காலமும்கூட. இவற்றை எதிர்கொண்டு கடந்து, மிரட்டல்களுக்கும் உருட்டல்களுக்கும் அடங்க மறுத்து, ஆக்கபூர்வமாக இணைந்து இயங்கும் ஒரு செயல்களத்தை காலச்சுவடு சாத்தியப்படுத்தியது.
இவற்றைத் தாண்டியும் காலச்சுவடு நின்று நிலைபெற சில அடிப்படையான பண்புகள் காரணம். முதலில் கருத்துச் சுதந்திரத்தில் எனக்கிருந்த ஆழமான, இன்றும் தொடரும் நம்பிக்கை. அதைப் பலியிட்டு எதையும் ஈட்ட முடியாது என்ற அறிதல். (தமிழகம் அளவுக்கு, கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக்கொண்ட படைப்பு, பதிப்பு, இதழியல், ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டபடியே அதைத் துச்சமாக, நக்கலாக இழிவுபடுத்துவோரை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.) கருத்துச் சுதந்திரத்தை மத்தாக வைத்தே காலச்சுவடின் கருத்தியல் திரண்டது. இதனால்தான் பல நம்பிக்கைகளை உடையவர்களும் - கருத்து வேறுபாடுகளுக்கு அதற்குரிய மரியாதையைப் பரஸ்பரம் அளித்தபடி - இணைந்து செயல்பட முடிந்தது. முரண்பாடுகளை விவாதித்தல் ஒருபுறம் இருக்க, இணைந்து பங்களிக்க வேண்டிய, பயணிக்க வேண்டிய பொதுத்திட்டத்தை அடையாளம் கண்டு இயங்க முடிந்தது.
1. காலச்சுவடு இதழின் உள்ளடக்கங்களில் பல மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஆனால் பலதரப்பட்ட கருத்துக்களையும் தாங்கி அது தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதில் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்கள் இணைந்து செயல்பட முடியும்.
2. புதுமைப்பித்தன் படைப்புகள்மீது பலவிதக் கருத்துகள் இருக்கும், இருக்க வேண்டும், அதுவே இலக்கியத்தின் அடிப்படை. ஆனால் அவருக்கு ஒரு சீரிய பதிப்பு வெளிவர வேண்டும் என்பதில் ஒருமித்துச் செயல்பட முடியும்.
இப்படிப் பல்வேறு கருத்துகளை வெட்டியும் ஒட்டியும் காலச்சுவடின் செயல்தளம் உருவானது, லிட்டில் கிட்டிங் பைபிள்கள்போல. மாறுபாடுகளை ஏற்று மதித்து விவாதித்து உருவான செயல்தளம்தான் காலச்சுவடின் ஆதார சுருதி. தமிழுக்கு காலச்சுவடின் பங்களிப்புகள் பலப் பலவாக இருப்பினும் அவற்றின் அடிநாதமான செயல்தளத்திலிருந்தே பிற பங்களிப்புகள் அனைத்துமே கிளர்ந்தெழுந்தன என்று நம்புகிறேன்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா (ஜனவரி 31), லண்டன் (மார்ச் 8), பாரிஸ் (மார்ச் 21) ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘காலச்சுவடு 30’ நிகழ்ச்சிகளில் பேசியதன் கட்டுரை வடிவம்.