காலத்தின் குரல்
சிரமமான காரியம்
(மொழிபெயர்ப்பு முன்னுரைகள்)
க.நா. சுப்ரமண்யம்
(ப-ர்): ஸ்ரீநிவாச கோபாலன்
வெளியீடு:
யாவரும் பதிப்பகம்
24, கடை எண் B, S.G.P. நாயுடு காம்ளக்ஸ்,
தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம், பாரதியார் பூங்கா எதிரே,
வேளச்சேரி மெயின்ரோடு,
வேளச்சேரி, சென்னை-42
பக். 218 ரூ. 270
மொழிபெயர்ப்புத் துறையில் தீவிரமாக இயங்கியவர் கநாசு. இவர் மொழிபெயர்த்த படைப்புகள்குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மொழிபெயர்ப்பு, கதைச் சுருக்கம் முழுமையானது இல்லை, வெறும் அறிமுகம் மட்டுந்தான் என்று சொல்பவர்கள் உண்டு. இத்தகைய விமர்சனங்களை மீறி அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களைப் புதிய வாசகர்கள் அடையாளம் கண்டு வாசிப்பதும் அவருடைய மொழிபெயர்ப்பின் அடியொற்றியே புதிதாக இளம் மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகிவருவதும் அவர்மீதான பார்வையை மாற்றிக்கொள்ளச் செய்கிறது. இவர் மொழிபெயர்த்த ‘தேவமலர்’ (ஸெல்மா லாகர்லெவ்), ‘விலங்குப் பண்ணை’(ஜார்ஜ் ஆர்வெல்), ‘அன்புவழி’ (பேர் லாகர்குவிஸ்டு) ஆகிய படைப்புகள் நவீனத்துவத்தின் முன்மாதிரியாக இன்றும் அமைந்திருக்கின்றன.
கநாசு மொழிபெயர்த்த நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளையும் முன் குறிப்புகளையும் ஸ்ரீநிவாச கோபாலன் தொகுத்து யாவரும் பதிப்பகம், ‘சிரமமான காரியம்: மொழிபெயர்ப்பு முன்னுரைகள்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. அடிப்படையில் கநாசு தீவிரமான வாசகராக, தான் வாசிப்பில் கண்டடைந்த, பலராலும் நிராகரிக்கப்பட்ட நாவல்களைத் தன்னுடைய தேர்வாக்கி மொழிபெயர்த்திருக்கிறார். ‘மதகுரு’ நாவலை ஐம்பது முறைக்கும் மேலாக வாசித்த பின்னரே மொழிபெயர்ப்புச் செய்ய முன்வந்திருக்கிறார். இந்நூல் நாவலா, நாவல் இல்லையா என்கிற கருத்தை ‘மதகுரு’ நூலின் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார். அதேபோல ‘விலங்குப் பண்ணை’, ‘1984’ ஆகிய இரு நாவல்களையும் கம்யூனிசத்துக்கு எதிரான பிரச்சாரத் தன்மைகொண்டவை என்பதை மறுத்து “ஒரு தலைமுறை மனசாட்சியின் குரல்” என்று குறிப்பிடுகிறார்.
நாவல் இந்தியாவில் எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அதில் இந்தியத் தன்மை காணக் கிடைக்கிறது என்று சொல்லும் கநாசு, சிறந்த பத்து இந்திய நாவல்களின் பட்டியலில் தமிழ் நாவலைச் சேர்க்கவிலலை. பதிலாக அந்நூலின் முன்னுரையில் தமிழ் நாவல்களில் சிறந்த நாவல்களாக இருபது, முப்பது நாவல்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழுதியிருக்கிறார். கூடவே இதே முன்னுரையில் பதிப்பகத்தார்கள் பற்றிய குற்றச்சாட்டையும் குறிப்பிடுகிறார். 1985களிலேயே பதிப்பகம் வெளியிடும் நூல்கள் போதிய அளவு கைவசம் இருப்பு இல்லாதது, தேவையற்ற தரமற்ற நூல்களை வெளியிடுவது போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளதை இதன்மூலம் அறிய முடிகிறது.
கநாசுவிற்கு நாவல் வடிவத்தின் மேலிருந்த ஈர்ப்பும் ஆர்வமும் சிறுகதையின் மேல் இல்லை என்பதை இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது. அவருடைய சொந்த வாசிப்புத் தேர்வின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய மொழி எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே (பதிப்பகத்தாரின் நிர்ப்பந்தம் எதுவும் இல்லையென்று முன்னுரையின் மூலம் அறிய முடிகிறது. ‘நிலவளம்’ நாவலைத் தவிர்த்து.) தேர்வு செய்திருக்கிறார்.
ரஷ்யாவுடன் இலக்கியத்தில் போட்டி போடக்கூடிய நாடாக ஐரோப்பாவிலிருக்கும் ஸ்காண்டிநேவியா பகுதியைச் சார்ந்த ஸ்வீடன், நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளை அவர் முன்வைக்கிறார். தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ரஷ்ய இலக்கியத்தில் ஓரளவுக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது, அதனால் ஐரோப்பிய நாட்டைத் தேர்வு செய்திருப்பதாகத் ‘தேவமலர்’ கதையின் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார். ‘மதகுரு’ நாவலின் முன்னுரையிலும் டால்ஸ்டாய், தாமஸ் ஹார்டி ஆகியோருடன் ஸெல்மா லாகர்லெவ்வை ஒப்பிட்டு எழுதியதிலிருந்து இதைக் காணலாம்.
கநாசு மொழிபெயர்த்த கதைகளின் நிலம்சார்ந்த பின்னணி, அரசியல் அந்நாட்டு மக்களின் பன்பாட்டுச் சிக்கல்கள், ஆசிரியரின் குடும்பம் ஆகியவற்றை முன்னுரையில் ஓரளவுக்குச் சுருக்கமாகவும் தேவையான அளவுக்கும் கொடுத்திருக்கிறார்.
இவருடைய ‘உலக நாவல் அறிமுக’மும், ‘நிலவளம்’, ‘மதகுரு’ போன்ற நாவல்களும் ஒருவகையில் தற்காலத்தில் எழுதப்படும் நாவல்களின் முன்மாதிரி என்று சொல்ல வேண்டும். வெகுஜன வாசிப்பிற்குச் சுலபமாகக் கிடைக்கும் காதல் கதைகள், துப்பறியும் கதைகள் போன்றவற்றிலிருந்து தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு தலைமுறை வாசகர்களின் வாசிப்பைத் திசை திருப்பி எவராலும் கண்டடைய முடியாத அயல்மொழியின் ஆகச்சிறந்த இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்ததைக் காலத்தின் குரலாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நாவலைக் கலையாகத் திரளச் செய்வதில் இவருடைய மொழிபெயர்ப்பு முக்கியத்துவமடைகிறது.