ராணுவத்தில முஸ்லிம்கள்
தலையங்கம்
ராணுவத்தில் முஸ்லிம்கள்
‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்று முழங்கி வந்த அரசியல் கட்சிகள் இப்போது ‘ராணுவத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன. தில்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்.) தலைவராயிருந்து மனித உரிமைகளுக்காக அரும்பணிகளைச் செய்துள்ளவருமான ரஜீந்தர் சச்சார் தலைமையில் மத்திய அரசு நியமித்துள்ள உயர்மட்டக் குழு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றே இந்தக் கூக்குரலுக்குக் காரணம்.
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையினைக் கண்டறிவதே ஆறு பேர் கொண்ட சச்சார் கமிட்டியின் நோக்கமாகும். 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி அமைக்கப்பட்ட அந்தக் கமிட்டி பதினைந்து மாதங்களுக்குள் தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளது. அது அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டு முடிய விருக்கும் நிலையில் திடீரென இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த உயர்மட்டக் குழுவின் நோக்கமும்கூட முஸ்லிம்களின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் கண்டறிவதாக இல்லை. குறிப்பாக மதரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வன்முறை குறித்தோ அவற்றைக் களைவது குறித்தோ அக்குழு ஆராயவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலையோடு முஸ்லிம்களை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய தகவல்களைச் சேகரிப்பது அக்குழுவின் பணிகளில் ஒன்று. ஆனால் உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தலித் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை பற்றி அக்குழு ஆய்வு செய்வதாக இல்லை. மேலும் பரிந்துரை எதையும் செய்கிற அதிகாரம் அந்தக் குழுவுக்கு இல்லை. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் முஸ்லிம்களின் விவரங்களைக் கண்டறிவதன் ஒரு பகுதியாகவே ராணுவத்தில் உள்ள முஸ்லிம்களின் விவரங்களை அக்குழு கேட்டுள்ளது. அதற்குத்தான் இவ்வளவு கூச்சலும் கண்டனமும்.
இது பற்றிக் குடியரசுத் தலைவரிடம் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் கொடுத்துள்ள மனுவில் “ராணுவத்துக்கு மதமில்லை” எனவும் அது “நாடு முழுமையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” எனவும் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றிய விவரம் கேட்பதை, “மத அடிப்படையில் ராணுவத்தில் இடஒதுக்கீடு செய்வதற்கான முன்னோட்டமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அந்தக் கட்சிகள். அப்படி இடஒதுக்கீடு வழங்குவது “நோயைவிட மோசமான சிகிச்சையாக இருக்கும்” என்று வர்ணித்துள்ளன. நோய் இருப்பதை அவர்கள் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதே இதற்கு அர்த்தம். உலகில் இந்தோனேஷியாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் (ஏறத்தாழ 14 கோடி). என்றாலும் சமூகம், பொருளாதாரம், கல்வி முதலான தளங்களில் தமது மக்கள்தொகைக்கேற்ற பங்கினை அவர்கள் பெறவில்லை என்பதே அந்த நோய். பிற துறைகளைக் காட்டிலும் போலீஸ், ராணுவம் முதலானவற்றில் முஸ்லிம்களின் பங்கு மிகமிகக் குறைவாக உள்ளது. நாட்டுப் பிரிவினைக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் மூத்த போலீஸ் அதிகாரிகளில் 40%ஆக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1958இல் வெறும் 7%ஆகக் குறைந்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள்தொகையில் ஒன்பது சதவீதம் பேர் முஸ்லிம்கள். அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் (ஐ.பி.எஸ்.) 112 பேரில் இருவர் மட்டுமே முஸ்லிம்கள் (1.26%). ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் அதிகாரிகள் 489 பேரில் 17 பேர் மட்டுமே முஸ்லிம்கள் (2.88%). 778 போலீஸ் இன்ஸ்பெக்டர்களில் 40 பேர் மட்டுமே முஸ்லிம்கள் (4.42%). சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளில் 3.71%, கான்ஸ்டபிள்களில் 3.55% முஸ்லிம்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 35 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர் என 2001 குடிக் கணக்கெடுப்பு கூறுகிறது. இது மக்கள்தொகையில் சுமார் ஐந்து சதவீதம். தமிழகக் காவல்துறையில் அவர்கள் எவ்வளவு சதவீதம் என்ற விவரம் இன்னும் திரட்டப்படவில்லை.
ராணுவத்தைப் பொறுத்தவரை அவர்களின் பங்கு மிகவும் குறைவு என்பதில் ஐயமில்லை. நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு இணை அமைச்சராயிருந்த மகாவீர் தியாகி, “நாட்டுப் பிரிவினையின்போது ராணுவத்தில் 32 விழுக்காடாயிருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1953இல் இரண்டு விழுக்காடாகக் குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார். இதனை ஆமோதிப்பதாகவே நேருவின் கருத்தும் இருந்துள்ளது. “நமது பாதுகாப்புப் படைகளில் முஸ்லிம்களே இல்லை. டெல்லி தலைமைச் செயலகத்தில் ஒரு சில முஸ்லிம்களே உள்ளனர்” என்று குறிப்பிட்ட நேரு, “இந்த மோசமான நிலையை மேம்படுத்த ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதுதான் மிகவும் கவலையளிக்கிறது” என்று எழுதியுள்ளார். அப்போதுதான் நிலைமை மோசமாக இருந்தது என்பதில்லை. 2001 ஏப்ரலில் ஜம்முவில் வெளியிடப்பட்ட ராணுவத்தின் அறிக்கையொன்றில் “ராணுவத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. காஷ்மீர் சட்டசபையில் கண்டனம் தெரிவித்த பின்பும்கூட ராணுவம் அதைத் திரும்பப் பெறவில்லை.
ராணுவத்தின் மதச்சார்பற்ற தன்மை குறித்து முழங்குபவர்கள் 1984இல் பொற்கோயில்மீது தாக்குதல் தொடுத்து சீக்கியர்களைக் கொல்வதற்குத் தயங்காத ராணுவம், காஷ்மீரில் உள்ள சரார்-இ-ஷரீஃப் மசூதி மீது 1995இல் தாக்குதல் தொடுக்கத் தயங்காத ராணுவம், 1992இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அங்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைக் கூறுவதில்லை.
பல்வேறு மாநிலங்களிலும் மதக் கலவரங்களின் போது காவல்துறை பக்கச் சார்போடு நடந்துகொண்டதாக அறிக்கைகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன. துணை ராணுவப் படையினர் (PAC) மதவெறியோடு நடந்து கொண்டதாக பிவந்தி, மீரட் முதலான இடங்களில் நடந்த மதக் கலவரங்கள் தொடர்பான ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் காவல்துறை, ராணுவம் முதலானவை இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
ராணுவத்துக்கு மதமில்லை என்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு இப்போதும் ராணுவத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிற ‘கூர்க்கா ரெஜிமென்ட்’, ‘சீக்கியர் ரெஜிமென்ட்’ முதலியவற்றைக் கலைக்க வேண்டுமென இதுவரை கேட்டதே இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மத, இன அடிப்படையிலான படைப் பிரிவுகளைக் கொண்ட ராணுவத்தை ‘மதமற்றது’ எனச் சொல்வது கேலிக்கூத்து அல்லவா?
இன்று மத அடிப்படையில் தகவல் திரட்டுபவர்கள் நாளை சாதி அடிப்படையிலும் தகவல் திரட்டலாம் எனச் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். அப்படியான தகவல்களும் திரட்டப்பட வேண்டும். ஏனெனில் 1905இல் உருவாக்கப்பட்ட ‘மெட்ராஸ் போலீஸ் சர்வீ’ஸில் 1910ஆம் ஆண்டிலேயே முஸ்லிம்களும் (10%) கிறிஸ்தவர்களும் (7%) இடம்பெற்றுவிட்டனர். ஆனால் தலித்துகள் 1943இல்தான் அதில் முதன்முதலாக இடம்பெற முடிந்தது (4%).
1890இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய ராணுவ சாதிகள் (martial race) என்ற பொய்யான கருத்தாக்கம் இன்றும் நீடிப்பது மட்டுமின்றி, அது அரசியல் தளத்திலும் செல்வாக்குச் செலுத்துவதைப் பார்க்கிறோம். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டுமெனில் சமூகத்தின் மெய்யான நிலை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது.
பா.ஜ.க. குற்றம்சாட்டுவதுபோல காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ‘வாக்கு வங்கி அரசிய’லை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையானால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது அனைத்துச் சிறுபான்மை மதத்தினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த அது முன்வரவேண்டும். துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையோ இந்த நம்பிக்கைக்கு நேர் எதிராகவே இருக்கிறது.