உற்சாகம் மிகுந்த நாட்கள்
பதிவுகள்: மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்
உற்சாகம் மிகுந்த நாட்கள்
ரவி
கவிதைக்கான மொழிபெயர்ப்புப் பயிலரங்கமொன்று சுந்தர ராமசாமி நினைவாக ஜனவரி 21, 22 தேதிகளில் சேலம் சௌத் கேட் ஹோட்டலில் நடத்தப்பட்டது. பயில்பவர்களாக அருள் முருகன், அழகரசன், அன்பரசி, ஆனந்த ராஜ், கங்காதரன், குவளைக் கண்ணன், கோகுல், பிரவின் பாபு, சிவகுமார், சுகுமார், சுஜாதா, தமிழரசி, புவனேஸ்வரி, புனிதப் ப்ரியா, பூபதி, மதுமதி, முகம்மது அஸ்லம், ராம் பிரசாத், ரமாதேவி, வெங்கடேசன், ஷீலாபானு ஆகியோர் கலந்துகொண்டனர். பங்கேற்பவர்களுக்கு இரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டு அவை இரண்டும் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தன. இந்தக் கவிதைகள் பயிலரங்கத்தில் செப்பனிடப்பட்டு ஒரு கவிதை ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் முன்னர் மொழிபெயர்த்தவரால் வாசிக்கப்பட்டது.
பங்கேற்றவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பேராசிரியர்கள் ஆர். ராஜகோபாலன், வி. சிவக்குமார், அழகரசன், நஞ்சுண்டன், பெருமாள்முருகன், கவிஞர் ஆனந்த் ஆகியோர் இக்குழுக்களுடன் கலந்துரையாடி வழிநடத்தினர். கவிதைகள் செப்பனிப்பட்டன. மொழிபெயர்க்கும்போது மூல ஆசிரியரின் நாடு, கலாச்சாரம் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டு, மொழிபெயர்ப்பின் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இரண்டு நாட்களிலும் அவ்வப்போது ராஜகோபாலன், நஞ்சுண்டன், அழகரசன், ஆனந்த், பொ.வேல்சாமி, பெருமாள்முருகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றுபோல் பேராளர்களாகப் பங்கேற்றனர், பயில்பவர்களுக்கு மொழிபெயர்ப்பதற்காகத் தரப்பட்டிருந்த கவிதைகள் அனைத்துமே சிறந்த தரத்திலானவை. அவற்றில் சுலபமான வெளிப்பாடுகளைக் கொண்டவையும் சிக்கலானவையும் கலந்தே இருந்தன. இந்தப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டவர்களிடம் இப்போது ஒரு ஆங்கிலக் கவிதை தரப்பட்டால் சிறு மாற்றங்கள் மாத்திரமே தேவைப்படுகிற ஒரு நல்ல மொழிபெயர்ப்பை அவர்களால் செய்துவிட முடியும். பயில்பவர்களுக்கு உதவியவர்கள் அனைவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலோ, ஆங்கிலத்திலோ தேர்ச்சி பெற்றவர்கள் கவிதை நாட்டமுடையவர்கள்.
கடந்த இருபது வருடங்களாக இலக்கியம் சார்ந்த கூட்டங்கள், கவிதைப் பட்டறைகளில் கலந்துகொண்டு வருகிற நான், இந்த இரண்டு நாட்களிலும் புதிதாக எதையோ உணர்ந்து கொண்டிருந்தேன். பயில்பவர்களின் ஆர்வம் பயிற்றுவித்தவர்களிடம் தொற்றி, இடையே இருந்த கோடு அழிந்து போயிருந்தது. இரண்டு நாட்களும் அங்கே உற்சாகம் மிகுந்திருந்தது. பங்கேற்ற பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து இது பரவிற்றா, பயிற்றுவித்தவர்களிடம் இருந்து இது பரவிற்றா? இரண்டு நாள் இலக்கியப் பயிலரங்கம் மிகுந்த உற்சாகத்தோடு, இவ்வளவு நிறைவளிப்பதாக இருந்ததற்குப் பங்கேற்ற அனைவரையும் காரணமாகப் பார்க்கிறேன்.
ஞாயிறு மாலைக் கவியரங்கத்துக்குத் தலைமையேற்ற வெ. ஸ்ரீராம் தனது அருமையான உரையினூடே ழாக் ப்ரெவரின் கவிதையொன்றை ஃபிரெஞ்சு மூலத்திலும், தமிழிலும் வாசித்துக் காட்டினார். சேலத்தில் ஒலிபெருக்கியில் ஃபிரெஞ்சு மொழி ஒலித்தது. பங்கேற்ற அனைவரும் தாம் மொழிபெயர்த்த கவிதையொன்றை பொதுமக்கள் முன்னர் வாசித்தார்கள். மக்களும் ரசித்ததுபோல் தெரிந்தது.
இப்படி ஒரு பயிலரங்கத்தை சாத்தியமாக்கிய நஞ்சுண்டனின் ஆர்வத்துக்கும் அவரது உழைப்பிற்கும், அவருக்குப் பின்பலமாக இருந்து உதவிய நண்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்தப் பயிலரங்கம் யாருடைய பெயரில் நடத்தப்பட்டதோ அவர் இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார், நெகிழ்ந்திருப்பார்.