பிறந்த நாளில் ஒரு கௌரவம்
பதிவு:
பிறந்த நாளில் ஒரு கௌரவம்
பவுத்த அய்யனார்
தமிழ்நாடு காந்தி நினைவு நிதி மற்றும் சர்வோதய இலக்கியப் பண்ணை ஆகிய அமைப்புகள் இணைந்து பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான நா. தர்மராஜனின் 71ஆம் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடின. கூடவே தர்மராஜன் மொழிபெயர்த்த காந்தி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான ‘மகாத்மா சில பார்வைகள்’ என்னும் நூலின் அறிமுகமும் நடந்தது.
நா. தர்மராஜன் இதுவரை 90 நூல்கள்வரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இதில் கட்டுரை, சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் நூல்கள் எனப் பல துறைகள் சார்ந்த நூல்கள் அடக்கம். சமீபத்தில் வெளிவந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கோட்ஸியின் ‘மைக்கேல் கே சில குறிப்புகள்’ நாவல் முதல் ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற வாழ்க்கை வரலாறு வரை தர்மராஜனின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை.
03.12.2005 அன்று மாலையில் நடந்த விழாவிற்குத் தலைமை வகித்தவர் சர்வோதய இலக்கியப் பண்ணையின் தலைவர் மு. மாரியப்பன்.
“தர்மராஜன் பற்றிப் புதிய பார்வை இதழில் சுந்தர ராமசாமி எழுதியது பெருமைப்படத்தக்கது. சாகித்திய அகாதெமி பரிசு தர்மராஜனுக்குக் கிடைக்காவிட்டாலும் அதைவிடப் பெரிய பரிசு சுந்தர ராமசாமியின் பாராட்டுரை” என்று வரவேற்புரையாற்றிய ‘காந்தி நினைவு நிதி’ தலைவர் க.மு. நடராஜன் கூறினார்.
“தோழர் ஜீவாவோடு நெருக்கம் கொண்டிருந்த தர்மராஜன் கல்லூரி ஆசிரியராகியிருக்காவிட்டால் தோழர் நல்லகண்ணு போல மிகச் சிறந்த அரசியல் தலைவராக வந்திருப்பார்” என்றார் சி. மகேந்திரன். “மார்க்ஸ், காந்தி, விவேகானந்தர் ஆகிய மூவருக்கும் எனக்கு வேறுபாடு தெரிவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘மகாத்மா சில பார்வைகள்’ நூல் குறித்து அழ. சோமசுந்தரம், க.ரா. கந்தசாமி ஆகியோர் பேசினார்கள்.
ஏற்புரை ஆற்றிய தர்மராஜன், த.நா. குமாரசாமி, சேனாதிபதி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றவர்கள் மொழிபெயர்ப்பின் மூலம் தமிழுக்கு வழங்கியுள்ள சொத்துக்களைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டார்.
அயராத உழைப்பு, அசாத்தியமான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் தமிழுக்குக் கணிசமான பங்காற்றியுள்ள தர்மராஜனின் பிறந்த நாள் விழாவை அவரது வாழ்நாள் சாதனைகளுக்கான பாராட்டு விழாவாகக் கொண்டாடிய விதம் அவரது பங்களிப்புக்குப் பொருத்தமான கௌரவமாக அமைந்தது.