அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
பதிவுகள்
அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
சல்மா
சில மாதங்களுக்கு முன் அம்பையிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ஸ்பாரோ (Sparrow Sound & Picture Archives for Research on Women) நடத்தவிருந்த ஒருவார கால ‘ரைட்டர்ஸ் கேம்ப்’பில் கலந்துகொள்ள என்னை அழைத்தபொழுது மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன்.
“நான் என்ன தயாரிப்புகளுடன் வரவேண்டும்” என்று கேட்டேன். “நீ ஒரு தயாரிப்பும் செய்துகொள்ள வேண்டாம், சும்மா வந்தாலே போதும்” என்றார் அம்பை. மிகப் புதிதான ஒரு அனுபவத்திற்குள் செல்வதற்கான மனத் தயாரிப்பு எனக்கு அந்த நிமிடமே உருவாயிற்று.
மும்பையிலிருந்து ஆறு மணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது காஸித் பீச் ரிஸார்ட். இந்தியாவின் சகல பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட ஐம்பத்தி நான்கு பெண் படைப்பாளிகளுள் நானும் குட்டி ரேவதியும் அடக்கம். மொத்தமாக 6 நாள்கள். கவிதை வாசிப்பது, விவாதிப்பது, வாக் போவது, கிராமப் பகுதிக்குச் செல்வது, படம் பார்ப்பது, யோகா, பந்து விளையாட்டு, நாடகம், நாட்டியம் மற்றும் டிஸ்கோ இவைதான் 6 நாட்களின் அட்டவணை.
இதுபோன்ற எழுத்தாளர்களின் சந்திப்புகளில் வழமையாகக் கையாளப்படும் ‘பேப்பர் பிரசன்டேஷன்’ என்ற நிகழ்வுக்கே இடமின்றி மிகுந்த ரசனையுடன் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது இந்நிகழ்வு. பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருந்த பெண் படைப்பாளிகள் ஆறு நாட்களுக்குத் தங்களது அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் விலகி வெவ்வேறு மொழிகளுடனும் புத்தம்புது முகங்களுடனும் அற்புதமான படைப்புகளோடும் உறவாட முடிந்ததில் வந்திருந்த ஒவ்வொரு படைப்பாளிக்குமே மிகப்பெரிய சந்தோஷம் என்பதை எல்லாத் தருணத்திலும் உணரமுடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
முழுக்க முழுக்கப் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, பெண்களின் உலகமாகவே மாறியிருந்த ரிஸார்ட் முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்த கவிதைகளும் விவாதங்களும் படைப்புகள் குறித்த பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுச் செல்லக்கூடியதாக இருக்க, இந்த முகாமை எந்த ஒரு தலைப்பினை ஒட்டியும் ஒருங்கிணைக்காத அம்பையின் நோக்கம்பெற்ற வெற்றி முழுமையானது. ஆக்கபூர்வமானதும்கூட. முன்னிரவுகளில் துவங்கி நள்ளிரவு வரை நீண்டுகொண்டிருந்த விவாதங்கள் அதிகாலை நடைப்பயிற்சிகளில் தொடர்ந்தன.
நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட, தனித்தனி ஆளுமை கொண்ட படைப்பாளிகளை ஒரே இடத்தில், சகல வசதிகளோடு, எந்த ஒரு சங்கடங்களும் தோன்ற வழியற்றுச் சந்திக்க வைத்ததன் பின்னணியில் எத்தகைய உழைப்பினைச் செலுத்த வேண்டியிருந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இதனை மனத்திற்குள்ளேயே உருவாக்கிச் செயல்படுத்துவதற்கான எல்லாவிதப் போராட்டங்களையும் எதிர்கொண்டு சாதிக்க முடிந்ததன் பின்இருப்பது முழுக்க முழுக்க அம்பையின் ஈடுபாடு மட்டுமே. அதோடு தூரத்தைக் காரணம் காட்டி இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்படுகிற எந்த ஒரு நிகழ்வுக்குமே தவிர்க்கப்படும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்தும் படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தது மிகமிக முக்கியமானதொன்று. இதற்காக விசேஷமாக அம்பையைப் பாராட்ட வேண்டும்.
இதுபோன்ற அனுபவம் இதுவரை யாருக்கும் வாய்த்திருக்கும் வாய்ப்பே இல்லை என்பதால் இந்த அரிய நிகழ்வினை ஒவ்வொருவருமே தங்களது பிரத்யேகமான உணர்வுகளாக மாற்றி மனத்திற்குள் இருத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஒரு சந்திப்பு முகாம் அந்தரங்கமானதொரு அனுபவமாக உருக்கொண்ட விந்தையை எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வதெனத் தெரியவில்லை.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ரிஸார்ட்ஸ்’ வளாகமெங்கும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவர்களது புகைப்படத்துடன் கவிதை வரிகளை இணைத்து வடிவமைக்கப்பட்ட ஆளுயரச் சுவரொட்டிகள் நிறுவப்பட்டு கௌரவிக் கப்பட்டிருந்தது புதுமையான அனுபவம். புதிது புதிதாக உருவாகிக் கனத்துக்கொண்டிருந்த நட்புகளும் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்வாக எங்கள் ஒவ்வொருவரிடமும் தங்கிவிட்டது அபூர்வமான அனுபவம்.
l
கேரளாவில் உள்ள திரூரில் வருடந்தோறும் ஐந்து நாட்கள் நடக்கக்கூடிய ‘துஞ்சன் சவுத் இண்டியன் பொயட்ஸ் மீட்’டில் இந்த வருடம் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன்.
எழுத்தச்சன் என்று போற்றப்படும் துஞ்சன் கேரளாவில் நம் கம்பனைப் போல மிகப் புகழ்பெற்ற கவி. அவரது நினைவாக இந்த விழா வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரிலுள்ள South zone Cultural Centreஇன் நிதியுதவியுடன் துஞ்சன் டிரஸ்ட் வளாகத்தினுள் ஒரு திருவிழாவைப் போல இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிற அதிசயத்தைக் கன்னடப் பெண் படைப்பாளி கவிதா ரய்யும் நானும் தீராத வியப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
அங்கிருந்த இரண்டு நாட்களில் ஒரு படைப்பாளியாகப் பெற முடிந்த அதிகபட்ச மரியாதையையும் அங்கீகாரத்தையும் சொல்வதற்கு வார்த்தைகளைத் தேடுமுன் நம்முடைய சூழல் நினைவுக்கு வந்து போகிறது.
ஐந்து நாட்கள் தொடர்ந்து நடந்தபடியிருந்த இசை, நடன, இலக்கிய நிகழ்வுகளுக்குக் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்த மக்களில் கணிசமான அளவுக்கு இளையவர்களையும் மாணவ மாணவிகளையும் இருந்ததைக் காண முடிந்தது. இலக்கிய ஆர்வமூட்டப்பட்ட மாணவ மாணவிகளை ஆசிரியர்களே அழைத்து வந்து கவிதை நிகழ்வுகளைக் கேட்க வைத்தார்கள். அதோடு கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்களைப் படைப்பாளிகளோடு உரையாட வைத்துக்கொண்டிருக்க, எதிர்பாராத கேள்விகளால் அவர்கள் எங்களைத் திகைக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
இறுதி நாளில் நடைபெற்ற பொது விவாதத்தில் பல்வேறு படைப்பாளிகளோடு வாசகர்களும் கலந்து கொண்டார்கள். அவர்களில் எண்ணிக்கையிலடங்காத அளவுக்கு இளையவர்களின் கூட்டம்.
படைப்புகளோடும் படைப்பாளிகளோடும் உறவாட அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் படைப்பாளிகளுக்கு அவர்களால் தர முடிகிற கௌரவத்தையும் ஒரு இலக்கிய விழாவுக்கு ஊடகங்கள் தந்த கவனத்தையும் கவனித்த பொழுது, மலையாள இலக்கியச் சூழல் குறித்த நமது அபிப்ராயங்கள் மேலும் மேன்மையுறுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
புகைப்படங்கள்: Priya D’Souza (Sparrow Collections)