கற்பனாவாத சோஷலிசம்x விஞ்ஞான சோஷலிசம்
விவாதம்
கற்பனாவாத சோஷலிசம் X விஞ்ஞான சோஷலிசம்
செ.ச. செந்தில்நாதன்
உ.வ. கழகத்தின் ஹாங்காங் மாநாடு குறித்து எழுதிய ஒரு செய்திப் பதிவின்மீது ஆற்றப்பட்ட இரண்டு எதிர்வினைகளையும் படித்தேன். நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னதுபோலச் சொல்லி அந்தக் கட்டுரையை விமர்சித்திருக்கிறார்கள். நான் எழுதிய விஷயங்களைத் தெரிந்தோ தெரியாமலோ திரித்திருக்கிறார்கள். நான் அடிப்படையாகக் கவனம் ஈர்க்க விரும்பிய கருத்தை மட்டும் கவனத்தில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
உலக வர்த்தகத்தில் காணப்படும் சமனற்ற தன்மைகளைச் சரிசெய்வதற்காகவே உ.வ.க. உருவானது என்று கூறுவது கோயபல்ஸ் பிரச்சாரம் என்கிறார் சசிதரன். நான் அப்படிச் சொல்லவில்லை. அவரது கருத்தோடு ஒட்டிய கருத்துகளைத்தான் சொல்லியிருந்தேன். எனது கட்டுரையில் உள்ள இந்த வாசகங்களைப் படியுங்கள்:
“பிறந்தபோது முற்றிலும் வளர்ந்த நாடுகளின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிற, வளர்முக நாடுகளை ‘விருந்துக்கழைத்து விஷமளிக்கிற நயத்தக்க நாகரிகம் கொண்ட’ அமைப்பாக இருந்த உ.வ.கழத்தில் இப்போது முதல்முறையாக வளர்முக நாடுகளின் கூட்டுக்குரலுக்குச் சிறிது மதிப்புக் கிடைத்திருக்கிறது.”
போதுமான அளவு புரிதல் இல்லாமல் எழுதியதாகவும் குறைந்தபட்சம் சரியான தகவல்களைத் திரட்டி நடுநிலைமையோடு எழுதவேண்டும் என்றும் சசிதரன் கூறுகிறார். ஹாங்காங் மாநாடு நடந்து முடிந்த கையோடு இரண்டாம் நாளில் வெளிவந்த, மேலை நாட்டு மற்றும் மூன்றாம் உலக நாட்டு நாளிதழ்கள் மற்றும் பொருளாதார நோக்கர்களின் கருத்தை இணையத்தில் படித்து, பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட வலைத்தளங்களில் செய்தி சேகரித்தே அதை எழுதினேன்.
ஹாங்காங் மாநாட்டில் வளரும் நாடுகள் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாக நான் கூறவில்லை. யார் எவ்வளவு பெற்றார்கள், அல்லது இழந்தார்கள் என்ற விவரங்கள் அதிகபட்சம் ஒரு தகவல் பதிவு மட்டுமே. அதை மறுத்து சசிதரன் கூறுவதும் இப்படி ஆகிவிடலாம் என்கிற அனுமானம் மட்டுமே. அந்தப் பதிவில் நான் வலியுறுத்திய மைய விஷயம் இந்தப் புள்ளிவிவரங்கள் அல்ல. ஹாங்காங் சந்திப்பில் வளர்முக நாடுகள் (அவர்களுக்கிடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தன) தங்கள் பேரம் பேசும் திறனை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்பதையும் உ.வ.க. போன்ற தளங்களில் மேலை நாடுகள் கூறுவதை பார்வையாளர்கள்போலக் கேட்டுக்கொண்டிருந்து, தலையாட்டி ஏற்றுக்கொண்ட காலம் மாறத் தொடங்கியிருக்கிறது என்பதையுமே அப்பதிவின் மையக் கருத்தாகக் கூறியிருக்கிறேன். நான் படித்த அளவில் இது வரவேற்க வேண்டிய ஒரு மாற்றம் என்றே பல வளரும் நாட்டு அரசுகளும் நோக்கர்களும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இந்த மாற்றம் ஒரு திருப்புமுனை அல்ல, அது வளரும் நாடுகளின் தோல்வி, தோல்விக்குப் புது வியாக்கியானம் என்று சசிதரனும் ஹரியும் கூறுவார்களேயானால் நான் என்ன செய்ய முடியும்? ஹாங்காங்கில் நடந்ததைப் பம்மாத்து என்று கூறுகிற சசிதரனே போராட்டங்களால் ‘ஏதோ ஓரளவு மேலை நாடுகள்’ இறங்கி வந்திருப்பதாகக் கூறுகிறார். நான் மட்டும் என்ன அவர்கள் ஏகத்துக்கும் இறங்கி வந்துவிட்டார்கள் என்றா எழுதியிருந்தேன்? கொஞ்சூண்டு சந்தோஷத்தைத் தருகிற விஷயமாகத் தோன்றியதால்தான் அதைக் ‘கொஞ்சம் உவகை’ என்று குறிப்பிட்டேன். அந்தச் சிறு திருப்பம் தீர்மானகரமானது. ஆனால் வளர்ந்த நாடுகளின் உள்நோக்கத்தைக் குறிப்பிட்டு இருவரும் கூறிய எதிர்மறை ஆருடங்களை நான் மறுக்கப்போவதில்லை. வளரும் நாடுகள் இந்தப் பேரத்தைத் தொடர்ந்து நடத்தவில்லை என்றால் உலகமய எதிர்ப்பாளர்களின் ஆருடம் பலித்த மாதிரிதான்.
உலகமயமாதல் என்னும் நிகழ்வு உலக முதலாளியத்தின் நடப்பு இயக்கம். இதில் பிரதான சக்தியாக இருப்பது நியோலிபரலிச மற்றும் நவீன காலனியாதிக்கப் போக்கின் பிரதிநிதிகளான அமெரிக்காவும் அதன் பின்செல்லும் ஐரோப்பிய யூனியனும். அவர்களின் நிஜ நோக்கம் உலகமயமாதல் கூட இல்லை. வெறும் சந்தைக் காலனியம். ஆனால் வளர்முக நாடுகள் நிஜமான உலகமயமாதலை நோக்கி எதிர்வினையாற்றி, அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்தை உடனேயே முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் (அதற்கு ஒரு நெடுங்கால வரலாற்று இயக்கம் நடந்தேறியாக வேண்டும்), உலகப் பொருளாதாரத்தின் முக்கிய மாற்றங்களை நிச்சயமாகக் கட்டுக்குள் வைக்க முடியும். எனவேதான் உலக அமைப்புகளில் மாற்றுக் குரல்கள் தீவிரம் காட்டுகின்றன. உலகளாவிய அமைப்புகளைத் தூக்கி எறிவதால் அது நடக்காது, அதற்குள் இருந்து இயங்கினால் மட்டுமே அது நடக்கும்.
உலகமயமாதலைக் கண்மூடித்தனமாக எதிர்க்காதவர்கள் எல்லாம் புஷ்ஷின் கையாட்களில்லை. மாற்று அரசியல்-பொருளாதாரமான சோஷலிசப் பொருளாதாரம் இப்போதைக்குக் கனவு. கடந்த நூறு ஆண்டுகளாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்துக்குள் இருந்து போராடுவது சாத்தியமாகவும் வரலாற்று ரீதியில் பெரும்பாலும் சரியாகவும் இருந்துவருகிறது. இந்தச் சாத்தியத்திற்குட்பட்ட நிலையில், உலகமயமாதலை ஜனநாயகப்படுத்தல், அதைவெறும் அமெரிக்கமயமாதலாகச் சுருக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளைத் தடுத்தல், தெற்கு-தெற்கு பொருளாதாரத்தை மேம்படுத்துதல், பன்னாட்டு மூலதனத்தோடு இடையறாமல் பொருளாதார இடையீட்டைச் செலுத்துதல், தொழிலாளர் உரிமைகளை நிலைநிறுத்துதல், நிலைபெறு வளர்ச்சியைப் பேணுதல் போன்ற பொருளாதார ஜனநாயகமயமாக்க நடவடிக்கையில் ஈடுபடுவதே இன்றைய முதல் கடமையாகும். ஆனால் இவை அனைத்தையும் 80களுக்கு முன்பிருந்த அதே கோரிக்கை அல்லது போராட்ட வடிவங்களில் இன்று தொடரமுடியாது. இவை அனைத்தும் மாறுதலுக்குட்பட்டுப் புதிய பரிமாணங்களை எடுத்துவருகின்றன. இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அறிவுஜீவிகளும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வெறுமனே ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது அமெரிக்க எதிர்ப்பு போன்ற முழக்கங்களினூடே போராடும் இந்திய மார்க்சிஸ்ட்கள் இறுதியில் எல்லாவித முதலாளித்துவ நடைமுறையையும் (அதாவது 80களுக்குப் பிந்தையவை) எதிர்க்கும் கற்பனாவாத நிலைக்குச் செல்கிறார்கள். தாராளமயமாதல்-தனியார்மயமாதல்-உலகமயமாதல் எதிர்ப்பு என்ற பெயரில் எல்லாவிதமான பொருளாதாரச் செயல்பாடுகளையும் எதிர்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கடந்த 10 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியாவில் நடந்த ஒவ்வொரு மாற்றத்தின்போதும் இந்தியக் கம்யூனிஸ்ட்கள் எடுத்த நிலைப்பாடுகளைத் திரட்டிப் படியுங்கள். அவர்களது ‘நெடுநோக்கும் தொழில்நுட்பம் குறித்த மார்க்சியப் புலமையும்’ புலப்படும்.
கம்ப்யூட்டர் நுழைவை இந்தியக் கம்யூனிஸ்ட்கள் எதிர்த்தபோது, அது பலருடைய வேலையைப் பறிக்கும் என்பதற்காகத்தான் எதிர்த்தார்கள் என்னும் சாதாரண உண்மை கூடத் தெரியாமல் நான் எழுதவில்லை. அந்த உதாரணத்தைக் காட்டியது வேறு காரணத்துக்காக. சில புதிய போக்குகளை அதன் தொடக்க காலத்தோற்றங்களை வைத்தே முடிவுசெய்ய முடியாது என்பதைச் சுட்டிக்காட்டவே அதைக் கூறியிருந்தேன். இன்று தகவல் தொழில்நுட்பத் துறை மிகப்பெரிய தொழில் துறையாக வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை தந்திருக்கிறது. பொருளாதாரப் பார்வையில் பார்த்தால், தகவல் நுட்பமும் தொலைத்தொடர்பும் பெற்ற மேம்பாடு உலக முதலாளித்துவத்தைப் பெரிதும் மாற்றி உலகளாவிய வேலைப் பிரிவினையையே மறுவரையறை செய்திருக்கிறது. அதன் பலனை இந்தியாவும் அனுபவிக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகவல் நுட்பமும் தொலைத்தொடர்பு நுட்பங்களும் பிரதான உற்பத்திக் கருவிகளாக மாறியிருக்கின்றன.
80களில் கம்ப்யூட்டர் இந்தியாவில் நுழைந்தபோது இதுபோன்ற விஷயங்களை மார்க்சிஸ்ட்களோ வேறு யாருமோ முன்னறிந்தார்களா? அதே காலகட்டத்தில் கம்ப்யூட்டர் புரட்சி குறித்தும் அதன் பொருளாதாரத் தாக்கம் குறித்தும் துறை நிபுணர்கள் (‘முதலாளித்துவ அறிஞர்கள்’) எழுதியதை இவர்கள் படித்திருப்பார்களா? கம்ப்யூட்டரால் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று முன்னறிந்த இவர்களுக்கு அதனால் புதுவகை வேலைவாய்ப்பு பெரிய அளவில் உருவாகும் என்று முன்னறிய முடிந்ததா? முடியவில்லை, சாத்தியமும் இல்லை.
அதுபோலவே, இன்றைய வடிவிலான உலகமயமாதல் எனும் நிகழ்வு நடைபெறத் தொடங்கிய இந்த இரண்டு பதிற்றாண்டுகளில், உலகமயமாதலின் எதிர்கால விளைவுகளை, அதைப் பற்றிய முழுமையான புரிதலை, இன்றே நாம் பெற்றுவிடுவது சாத்தியமில்லை. ஆனால் அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுவதையோ முற்றாக அதை நிராகரிப்பதையோ ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதிகள்’ செய்ய மாட்டார்கள். இந்தப் போக்கைப் புரிந்துகொண்டு வெகுஜன நலன், தேவையின் அடிப்படையில் அதன் குவிமையங்களை மாற்றும் ஆக்கபூர்வமான எதிர்வினைகளையே அவர்கள் ஆற்றுவார்கள். எதிர்ப்பு, ஆதரவு, திருத்தம், மாற்றம், புதுமை எனப் பல கோணங்களில் அவை இருக்கும். சட்டம், போராட்டம், மாநாடுகள், ஒப்பந்தங்கள் எனப் பல வடிவங்களில் அவை இருக்கும்.
உலக ரீதியிலான அமைப்புகளையோ அந்நிய முதலீட்டையோ மார்க்சியர்கள் எதிர்க்கவில்லை, மாறாக அவற்றை இன்னின்ன கட்டுப்பாடுகளுடன்தான் ஏற்போம் என்று இடதுசாரியினர் கூறுகிறார்கள் என்கிறார் ஹரி. அது உண்மை என்றால் வரவேற்க வேண்டியதுதான். இடதுசாரிகள் மட்டுமல்ல, முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட என்ரான் போன்ற தில்லுமுல்லு நிறுவனங்களை ஏற்பதில்லை.
உலகமயமாதலின் மீது ஐனநாயகபூர்வ எதிர்வினையோடு தாக்கத்தை நிகழ்த்தமுடியும் என்ற நம்பிக்கையோடு நமது இடதுசாரிகள் போராட்டங்களை நடத்தவில்லை. அதை எதிர்த்து ஒழித்துவிடலாம் அல்லது சற்றே தள்ளிப்போடலாம் என்ற கற்பனையிலிருந்தே அதை நடத்துகிறார்கள். அவர்களது பொருளாதாரக் கொள்கைகளே அதற்குச் சாட்சி. உலகப் பொருளாதாரம் தொடர்பான எதிர்வினையை வெறும் அமெரிக்க எதிர்ப்பு என்ற பெயரில் சிதைக்கும் அந்தக் கொள்கைகளில் பல வெளிப்படையாக முற்போக்காகத் தோன்றினாலும் அவை மார்க்சிய உள்ளடக்கம் இல்லாதவையே. பொறுப்பற்ற போராட்டங்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. மார்க்சியர்கள் இன்றைய நியோ லிபரலிச ஆதிக்கத்துக்கு எதிராகச் செய்யக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகள் நிறைய இருக்கின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியும் லத்தீன் அமெரிக்காவின் இடது சார்பு அரசுகளும் அதைப் பல சமயங்களில் சிறப்பாகச் செய்துவருகிறார்கள். இந்திய, ருஷ்ய அரசுகளும்கூட சில சமயம் அதை சரியாகச் செய்கின்றன. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட்களும் ஐரோப்பிய இடதுசாரிகளும்தான் இப்போது தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். அது யாருடைய நலனுக்காக என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கொடி பிடிப்பது தவறு என்று நான் கூறியதாக சசிதரன் சொல்லியிருக்கிறார். இல்லை. அவற்றின் வெற்றிக்கு என்ன முன்நிபந்தனை என்பதைத்தான் கூறியிருந்தேன். நான் கூறியது இதுதான்: ‘இதுபோன்ற அமைப்புகள் ஏதும் இல்லாமல், அமெரிக்க கான்சலேட்களுக்கு எதிரில் செங்கொடி பிடித்த உங்கள் போராட்டங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று ஒத்துக் கொள்ளுங்கள்.’
இவர்கள் ஜனநாயகபூர்வமான உலகமயமாதலுக்கான சாத்தியத்தை முற்றிலும் மறுக்கிறார்கள், அல்லது எதைச் செய்வது என்று தெரியாமல் சிலபல போராட்டங்களை நடத்தித் தங்கள் புரட்சிக் கடனைக் கழித்துக்கொள்கிறார்கள். சாதாரணத் தொழிலாளர்களின், மாணவர்களின் இயற்கையான போர்க்குணத்தைத் துஷ்பிரயோகம் செய்வது அன்றி இது வேறென்ன?
பாவம் மார்க்சும் லெனினும்! இதற்காகவா அவர்கள் உலகளாவிய முதலாளித்துவ வளர்ச்சி பற்றித் தங்கள் ஆயுள் முழுக்க ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்கள்? இதற்காகவா கற்பனாவாத சோஷலிசத்துக்கும் விஞ்ஞான சோஷலிசத்துக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று விளக்க எங்கெல்ஸ் மெனக்கெட்டார்?