கவிதைகள்
கவிதை
தேன்மொழி தாஸ்
சாம்பல் கூடாரம்
வெறுமை நூலாம்படையாய்க் கிடந்த
வீட்டின் தாழ்வாரத்தை
காற்றெனத் திறந்து வந்தாய்
பறவையின் சிறகடிப்பைச் சுற்றியுள்ள
வெளி காணும் அதிர்வை
அகம் ஏந்தியிருந்தது
உன் கண்களுக்கு மேலே
புருவம் மழையரும்பும் கிளையென
படர்ந்திருக்கையில்
ஆண்மையின் நிறம் சாம்பலென உணர்ந்தேன்
சாம்பல் கூடாரம் போல் நின்றிருந்த உன்னை
எனது கண்களின் மொழி தட்டித் திறக்க
குளிராய் இரு ஜோடி உதடுகள்
கூடி உறைந்தன
அக்கணத்தில்
இமைகள் உரசி மூடிய
இருட்டில் துவங்கிற்று நமக்கான காலம்
அதனுள்
முத்தத்தின் ஓடுடைத்துப் பறந்த
பறவைகளின் சிறகு ஒலி
அப்பாதையில் எல்லாம்
அடைகாக்கத் துவங்கியது ரோமங்களின் தாழ்வரை
முத்தத்தின் கருக்களை
உனது சாம்பல் நிறமும்
எனது இளம் சிவப்பு நிறமும் குழைகையில்
கந்தர்வச் சிலையசைவு
சிறு சாமந்திப் பூக்களடர்ந்த மார்பிலிருந்து
தாகத்தின் தடம் தேடி வழிந்தன
வியர்வைத் துளிகள்
சாம்பல் கூடாரத்தின் எல்லாக் கதவுகளையும்
திறந்து இமைகளில் துடைக்கையில்
தேகங்களின் பாடல் துவங்கியது
விரல்கள் இதழ்களாய்த் தழும்புகையில்
வியர்வைத் துளிகள் விரல்களாய்த் தழுவின
முத்தப் பறவைகள் அந்நேரம் சிறகு ஒடுக்கி
வீட்டின் உள்ளே முளைத்த காடுகளில் உறைந்தன
அதற்குப் பிறகும்
காட்டின் பாடலை
கரங்களில் ஏந்திபடி உறங்கினாய்.
0
கல்றையிலிருந்து புறப்படும் வரிகள்
மனதின் பள்ளத்தாக்குகளில் இருந்து
கவிதைகள் ஊர்ந்து
விரல்களை எட்டும்முன் நடுங்கி மறித்து
விறைக்கின்றன
பின் அவை
பாறைகளாய் இறுகிய
துக்கங்களில் நசுங்கியோ
காற்றாய் அலைகிற
நினைவுகளில் தடுக்கியோ
தூக்கமற்ற முகாந்தரங்களின்
கொடிதனில் தொங்கியோ
கொலை செய்யப்பட்ட
கவிஞனின் நிராசைமிக்க
கவிதை வரிகளை
கொண்டுவருகின்றன
அவ்வரிகளில் எல்லாம்
மரணத்திலும்
பாழடைந்த தன்மை
படிந்திருப்பதாகவே உணர்கிறேன்.
0
இரவுதோறும்
அக்கட்டிடத்தின் தாழ்வாரத்தில்
கூர்மையாக்கப்பட்ட வாள்
உறைக்குள் உறங்குவதென புறாக்களின் அலகுகள்
இறகுகளுக்குள் பதுங்கியிருக்கும்
பார்த்துக்கொண்டேயிருப்பேன்
காலையில்
எனது தனிமை அவ்வலகுகளில் சோம்பல் முறிப்பதும்
வெளிச்சத்தில் நீந்தும் இறகுகள் மேலே தூங்கத் துடிப்பதும்
பார்க்க அழகாகத்தான் இருக்கும்.
0
யாமி
இவள் குழந்தைகளின் கண்களில் சூரியன்
நிலவு ஈர்த்தபின் எஞ்சும் ஒளியினைத் தேக்கி வைக்கிறது
நகங்களின் நுனியில் எனது இரவைக் கடத்தி
தூக்கத்தை அடர்ந்த இருள் நிலங்களில் பயிரிட்டு
கனவுகளைப் பிடுங்கி நடுகிறாள்
அருகம்புல் பூக்களென
நாசியோரங்களில் நீண்டிருக்கும் ரோமங்கள் துடிக்க
கொலை செய்யத் தயாராகுகையில்
எனக்குத் துரோகம் இழைத்தவர்களை நினைவூட்டுகிறாள்
இரகசியங்களை ஒரு வெட்டியானைப் போல் புதைத்து
அதன் வாசனைகளை மறக்கக் கூடாதென மணல்களிடம்
மது அருந்தும் பெண்ணைப் போல் பேசுகிறாள்
அவளை அருகிலணைக்கையில்
ஏதோவொரு தேசத்தின் வரைபடம் விரல்களுக்கிடையே
ஆறுதலாய்க் கடக்கிறது
புணர்வதற்கெனத் தன்னை அழைக்கும் ஆண்மைக்கு எதிரே
உடல் முழுதும் வெறுப்புப் பரவ
மலைப்பாம்பென நிமிர்ந்து சீறுவாள்
என் படுக்கையறையின் ஜன்னல் ஓரங்களிலிருந்து
ஆணிடமிருந்து வெளிப்படும் இயலாமையின் ஒப்பாரி
நெருப்பிலிட்ட இசைத் தட்டென உருகி
இரவின்மேல் வழியும்
முதுகுத் தண்டின் கீழ் சீரான மலைத்தொடர்களென
முலைகளைத் தாங்கிக் கிடக்கும் அவள் கருவறைக்குள்
பாடும் வல்லமை மிக்க புல்வெளிகள் வளருகின்றன
அவைகள் அசைவதறிகையில்
எனது கருவறை தலைகீழாய்ப் புரள்கிறது
அப்போதெல்லாம் இனிப்பின் வாசனையறிந்து ஊர்கிற எறும்பென
என் விரல்கள் அவள் அடிவயிற்றைத் தேடி வருடும்
யாமி
அதீத காலத்தை விடவும் இனிமை மிக்கவள்
பாதி உறக்கத்தில் இவள் இதயத்திலிருந்து வெளிப்படும் சத்தமென
பூமி என்றாவது சுழலக்கூடும்
என்னைத் தேடுவதற்கான அவளின் பாடலை
ஒரு மலை முகட்டின் மேல் விட்டுச் செல்லப் பிரியப்படுகிறேன்
அவள் பாதத்தினடியில் பகல் கொய்யாப் பூவைப் போல் பூக்கிறது.
0
ஒளியறியாக் காட்டுக்குள்
என் மலை வாசஸ்தலம்
எனக்குள் கண்ணீர்த் துளிகளாய் இருக்கிறது
நீர்த்தேக்கத்தின் மேல் மிதக்கும்
தேயிலைத் தொழிற்சாலை
புகைவாசமிழந்த கப்பலாய் நிற்கிறது
தேயிலைத் தொழிலாளர்களின்
உரிமைப் போராட்ட வரிகளை
ஆண்டாண்டு காலமாய்ப் பெய்த மழை அழிக்காத போதும்
அவர்களின் உணர்வுகள்
ஒளியறியாக் காட்டுக்குள் பாதை தேடித் திரிகின்றன
அநேகமாய் ரத்தச் சிவப்பில் பூக்கும் பூக்களெல்லாம்
அட்டைகள் குடித்த பின் வழிந்த ரத்தம் ஈர்த்த வேர்களின்
கிளைகளிலிருந்துதான் பூத்திருக்கக்கூடும்
ரட்சகியின் பாடல் காற்றாய் அலைவதும்
அவ்வழியில்தான்
தேவாலயத்தைச் சுற்றிலும் புதர்களும்
பீடங்களில் அடைக்கலான் குருவிகளும்
வாழ்கையில்
மதில்களில் பதுங்கியிருக்கும் இசை விரும்பும் காதுகள்
மீன்களின் செதில்கள் போல் மடல்களை அசைக்கின்றன
முள்முடி தேடி லீலிப்பூச் செண்டு தேடி
அலைந்த இடங்களில்
புதுநன்மை பெற்றுக்கொண்ட
வெள்ளை தினத்தின் மகிழ்வுகள்
பூமரங்களாகி நிற்கின்றன
மெழுகுதிரி வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் எண்ணியபடி நடந்த
பாஸ்கா பண்டிகை
அக்குளிர் காலத்தோடு உறைந்து போயிருக்கக்கூடும்
ரெபேக்கா அத்தையின் கனிந்த உடல்
உலவிய மலைப் பாதை
உடைந்த கிடார் கம்பியாய்க் கிடக்கிறது
ஏ மலைப் பாதையே
எஸ்மியின் நினைவுகளை மறக்காமல் வைத்திருக்கிற
கல்லறையே
வழிநெடுக மண்ணிலிருந்து உடைந்து வெளிப்படும்
கடந்த காலச் சத்தங்களே
தேயிலை விதைகளின் கண்களே
என் மலை வாசஸ்தலம்
எனக்குள் கண்ணீர்த் துளிகளாய் இருக்கிறது.
0
தூக்கமற்ற காற்று
பனித் துளிகள் பின்னியலையும்
மெல்லிய வலைகளுக்குள்ளே
காற்றைச் சந்தித்திருக்கிறேன்
குளிரெடுத்துக் கைகளை
இறுகக் கட்டிக்கொள்ளும்
இடைவெளிகளில் அதன்
வெயிலாகும் தன்மையை உணர்ந்திருக்கிறேன்
சோலைக்குள் சூரியன் நடந்து வரும்முன்
தேயிலைக் காடுகளுக்கும்
தொழிற்சாலைகளுக்குமாய்
மனிதர்கள் நடந்து போன சுவடுகளில்
வெறுமையின் பாடலோடு ஒரு
வாசற்கூட்டியைப் போல் அது வரும்
பிரபஞ்சத்தின் எல்லா ஒலிகளும்
அதன் அங்கங்களின்
சிறகுதான் எனச் சொல்லி
குரல்களால் ஆன உடலைக் காட்டும்
அதன் மூச்சில்
உலகின் உயிர் ஒட்டியிருக்கும் துயரத்தையும்
பயணத்தின் எல்லை குறித்த பயத்தையும்
பாடிக்கொண்டே திரியும்
மழையின் பின் வெயில் காயும்
மலைப் பாதையினூடே
யாருமற்ற சமயங்களில்
வந்து சேரும்
தூக்கமற்ற
ஏதோ குற்ற உணர்வைச் சுமந்து திரிகிற
தணியாத தனிமையில் அவதியுறுகிற
ஒரு பைத்தியக்காரனின் மொழியில்
பெருஞ் சோகத்தை
வெளியெங்கும் வீசியபடி
புலம்பிக்கொண்டு வரும்
இக்காற்றின் வரிகளைத்தான்
என் அறையெங்கும்
எழுதிவைத்திருக்கிறேன்.
0
சத்தியமாய் எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை
நாம் பயணித்த சாலை
காலம் உடுத்தியிருந்த தூய்மையான
கருங்கல் ஆடை
திடமான கைகளாய் வயல்களும்
தரிசு நிலங்களும் அதற்கு நீண்டு கிடந்தன
அவ்வழி கடந்த அநேக பேருந்துகளுக்கு
கழுகின் கண்ணெனச் சக்கரம் சுழல்கையில்
கருவேலங்காட்டு¢ப் பூக்கள்
நட்சத்திரங்களாய்
நிழல்கள் மீது ஒளிர்ந்தன
அப்பூக்களின் மென்மை மண்ணின் மீதமரும்போது
காற்று பூவாய்ப் பிறக்க
அழுதிருக்கக்கூடும்
உனது படர்ந்த மார்பில் ஒரு பட்டாம் பூச்சி
காற்றோடு வந்தமர்ந்ததையோ
காதுமடலோரம் முத்தமிட்டபோது
உதிர்ந்த உணர்வையோ
இவ்வரிகளில் நான் எப்படிச் சொல்ல முடியும்
நாம் கடக்கும்போது நமைக் கடந்ததுபோல் நின்றிருந்த மரங்களுக்கு
இவைதனைச் சொல்லத் தெரிந்திருக்கலாம்
சத்தியமாய் எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை
ஏனெனில்
முந்தைய நாள்
உனது உள்ளங்கையிற்குள் சிக்குண்ட எனது பாதத்தில் பெய்த மழை தொடங்கி
இன்று வரை என்
இரவைத் தின்னத் துவங்கியிருக்கிறது தனிமை
நினைவு என் மேல் இலையுதிர் காலத்தை விரிக்கிறது
காற்று வீசுவதற்கு மட்டுமெனச் சொல்ல முடியவில்லை தெரியுமா
இலைகளுடனோ தனிமையுடனோ உதிர்கிறது
அத்திடமான கைகள் விரித்த சாலை வழி நீயும்
கண்டிருக்கலாம் காற்று உதிர்வதை
ஏனெனில்
உனது தனிமையும் அவ்வழிகளில் தானே
பிறந்த பிசுபிசுப்போடு நடுங்கி அலைகிறது.