காணாமல்போன குருவிகள்
பதிவுகள்: அற்றைத் திங்கள்: கோவை - ஜனவரி 15, 2006
காணமல்போன குருவிகள்
இளஞ்சேரல்
நிகழ்ச்சி தொடங்கும் முன்பே நிரம்பியிருந்த அரங்கம் குறும்படம் திரையிடும் சூழலை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தது. கர்நாடக மாநிலத்தின் குதிரேமூக் என்ற வனப்பிரதேசம் சூறையாடப்பட்டு அழிந்த பின்னணியையும் கானுயிர்கள் அழிந்து, நதி சிவந்து சாக்கடையாக மாறியது குறித்த படம் திரையிடப்பட்டது. அணைகட்டுதல் எனும் பெயரில் அழிக்கப்படுகிற வளமும் கானுயிர்களும் ஏராளம்.
ஞானியின் அறிமுக உரைக்குப் பின் சு. தியடோர் பாஸ்கரன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சூழலியல், சினிமா என்று இரண்டு மையமான துறைகளின் பின்னணியில் படைப்புச் சூழலைப் பேசினார்.
பிறந்தது கோவை மாவட்டம் தாராபுரம். தந்தை உலகப் போரில் பங்கெடுத்ததால் தனக்கும் உடன்பிறந்தவர்க்கும் விரும்பும்வரை கல்வி கற்க ஆங்கிலேய அரசு உதவியிருந்தது என்று கூறியவர் தனது தமிழ் கிறிஸ்தவப் பின்னணி, வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றைப் பற்றியும் விவரித்தார்.
400 ஏக்கர் பரப்பளவிலான சென்னைக் கிறிஸ்துக் கல்லூரியில் மேற்படிப்பு. தனது அறையிலிருந்து வனம்போன்ற பிரதேசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, விதவிதமான பறவைகளின் ஒலிகளைக் கேட்டது, இயற்கையைப் பார்த்துக்களித்தது ஆகியவையே தனக்குச் சூழலியல் ஆர்வம் ஏற்படுத்தின என்றார். திருமணப் பரிசாக மனைவி தந்த காமிராவின் மூலமாக இயற்கைக் காட்சிகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தாராம்.
1971இல் கசடதபற மூலம் க்ரியா ராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ஞானக்கூத்தன், பிரமிள், பாலகுமாரன், மகா கணபதி, எஸ்.வி. ராஜதுரை அறிமுகமாயினர். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் நட்பும் கிடைத்தது. முதல் சினிமாக் கட்டுரை கசடதபறவில் வெளியானது. ஆனந்த குமாரசாமி, சித்தரஞ்சன் தாஸ் குப்தா, அபர்ணா சென் போன்றோரின் கட்டுரைகள் பாதிப்பு ஏற்படுத்தின என்றும் குறிப்பிட்டார்.
சிவில் சர்வீஸ் எழுதியதில் 7 வருடம் தில்லியில் பணி. இங்கு அம்பை, இ.க. விசுவநாதன் நட்புக் கிடைத்தது. நல்கை மூலமாக இரண்டு ஆண்டு விடுப்பு எடுத்து சினிமா வரலாற்றினை 75-76இல் ஆய்வு செய்தார். பர்ட்டன்ஸ் டைன், பூஜின் கெய்லே, ராபர்ட் ஹார்ரேங்க்கு இணையாக ஆய்வு செய்ய முயன்றேன் என்றார். முதல் நூல் The Eye of the Serpentக்கு தேசிய விருது கிடைத்தது. இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் நட்பு ஏற்பட, மழைக் காலமும் குயிலோசையும் நூல் தொகுக்கப்பட்டது என்றார்.
குருவிகளை இப்போதெல்லாம் காண முடியவில்லையே என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். ஓட்டு வீடுகள் மறைந்தது ஒரு காரணம். பறவைகள், பூச்சிக் கூட்டங்களின் அழிவிற்கு நகரமயமாதலும் காரணம். பறவைகளின் பிறப்பும் வாழ்வும் மனித வாழ்விற்கும் ஒரு குறியீடு. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் கறிவேப்பிலை மரத்திற்கு விதவிதமான பறவைகள் வரும் என்றார். மரம் நடுவது குறித்த கேள்விக்கு என்ன மாதிரியான மரத்தை எந்தப் பகுதியில் நடுவது என்கிற விழிப்புணர்வு தேவை என்றார்.
பல்வேறு துறைகள் சார்ந்த வளமான வாழ்வனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பாஸ்கரனின் பேச்சில் ஆங்காங்கே சுவையான சிந்தனைகளும் வெளிப்பட்டன. இயற்கை, சுற்றுச்சூழல் முதலான பல விஷயங்களைத் தொட்டுச் சென்ற அக்கருத்துக்களிலிருந்து சில வரிகள்:
l வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்புகள் ஏராளமாய் உண்டு. நாம்தான் அதை அடையாளம் கண்டுகொள்வதில்லை. வெயில் நன்றாகக் கொளுத்தும்போதுதான் தமிழ்நாட்டில் எல்லாப் பூக்களும் மலர்ந்து மணம் நிறைகிறது. மாம்பழங்களும் பலாப்பழங்களும் வண்டிவண்டியாய் வந்திறங்குகின்றன. ஆனால் நாமோ, வெயிலால் ஏற்படும் சிரமத்தைப் பற்றி மட்டுமே பேசித் தீர்க்கிறோம்.
l The best years of one’s life என்ற கருத்தாக்கத்தில் எனக்கு இளமை முதலே உடன்பாடு கிடையாது. உறவுகளின் உன்னதத்தை அறிய முதுமையை ஏற்று உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
l அரசுப் பள்ளியில் தமிழில் படித்ததன் அனுகூலத்தை இன்று ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். நமக்கென்று ஒரு பாரம்பரிய அடையாளம் இருக்கிறது. அது மொழி சார்ந்த கலாச்சாரத்தின் மூலம் நம்மை வந்தடைகிறது. வாழ்வைச் செறிவூட்டுகிறது.
l இந்தப்பாதையை நாம் இன்று தடை செய்துவிட்டோம். இயற்கையை மதிக்காமல் வாழக் கற்றுக்கொண்டோம். நகரமயம், உலகமயம் என்ற புல்டோசர்களால் நம் கலாச்சாரப் பன்முகத்தன்மை மிதிபட்டு அழிகிறது.
அரங்கம் முழுவதிலும் படைப்பாளிகள், வாசகர்கள், சூழலியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என்று பல தரப்பினர் நிறைந்திருந்தார்கள்.
அவை நாயகன் உதவியுடன்