கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
விவாதம்
கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
ரமேஷ் பிரேதன்
காலச்சுவடு 74 இதழில் விவாதம் பகுதியில் ‘பெண் எழுத்தின் அரசியல்’ என்னும் பெருந்தேவியின் கட்டுரைக்கான எனது சிறு எதிர்வினையாக இதைக் கொள்க.
‘எரிக்கா யுங்’இன் கட்டளைகள் என்ற கவிதையின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, அதற்கு எதிர்நிலையில் கவியின் பெயர் குறிப்பிடப்படாமல் சுகிர்தராணியின் வரிகளைத் தமிழிலிருந்து எடுத்தாண்டு ஒப்பிட்டு, பின்னதை நிராகரிக்கிறார். இப்படியான ஒப்பீட்டு வாசிப்போ அறிதல் முறையோ பின்நவீனத்துவ நோக்குக்கு எதிரானது என்பதைப் பெருந்தேவி அறியாதவர் அல்லர். பின்நவீனத்துவ நோக்கை இதே கட்டுரையில் வலியுறுத்தும் இவர், ஒன்றின் அறிதல் முறையை இன்னொன்றோடு ஒப்பிட்டு அந்த இன்னொன்றைத் தாழ்ந்தது எனச் சொல்லும் நவீனத்துவ பாசிச நோக்கைக் கையாள்கிறார். ஒரு சமூகத்தின் அறிதலை மற்றும் பிரதியை அதற்குச் சம்பந்தமற்ற இன்னொன் றோடு ஒப்பிடுவது பின்நவீனத்துவ நோக்குக்கு மாறானது.
“மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல
கம்பீரம் வீசுகிறது.”
மேற்குறிப்பிட்ட இந்த வரியை யுங்கோடு ஒப்பிட்டுப் பேசும் பெருந்தேவிக்கு இவ்வரிகளின் சமூகப் பின்புலத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்தியத் தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெண் தன் உடம்பின் மறைவிடங்களில் உள்ள முடிகளை நீக்கிச் சுத்தமாக வைத்திருப்பது என்பது அவள் பேணும் இல்லற ஒழுக்க நியதிகளுள் ஒன்று. இதை வாத்ஸ்யாயனமும் வரையறுக்கிறது. குறிப்பாக அவள் தன் பிறப்புறுப்பை முடிநீக்கிச் சுத்தம்செய்து அரைத்த மஞ்சளும் சந்தனமுமிட்டு மெழுகிக் கோலமிட்டு வாசலைத் திறந்துவைத்திருக்க வேண்டும். தவறினால் அவள் தனது ஆணால் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாவாள்.
பிறப்புறுப்பில் மயிர் சிரைப்பதற்குக் ‘கால் சவரம்’ என இடக்கரடக்கலோடு சொல்வார்கள். ஆண்களுக்குப் பண்டுவனும் பெண்களுக்குப் பண்டுவச்சியும் இரண்டொரு நாளுக்கு ஒருமுறை வீடு தேடிச் சென்று சுத்தம்செய்ய வேண்டும். கிராமத்து மேட்டுக்குடிப் பெண்களுக்கு இது தவறாமல் நடக்க வேண்டும். பணக்கார நகரப் பெண்களுக்கு இம்முடிகளை நீக்கப் பலவித லோஷன்கள் உண்டு. சாதாரணப் பெண்கள், கணவன் தன் ‘மொகரை’யை மழித்துவிட்டுப் போட்ட மொண்ணை பிளேடைப் பயன்படுத்திப் பயன்படுத்தி மென்தோல் தடித்துக் கொஞ்ச நாளில் தோலரிப்புக்கு ஆளாகிறார்கள்.
இது இப்படியிருக்க, இந்தக் ‘கால் சவரம்’ என்ற, பண்டுவச் சாதிமீது செலுத்தப்படும் தொழில்முறைக் குரூரம் இன்றும் இந்திய/தமிழகக் கிராமங்களில் தொடர்கிறது. இது மனித மலத்தை அள்ளித் தலையில் சுமந்து செல்லும் இழிதொழிலுக்கு இணையானது. இது குறித்து (கால் சவரம்) கண்மணி குணசேகரன், ஒரு கதை எழுதியிருப்பதாக ஞாபகம்.
இந்த இந்தியச் சமூக விவரங்களெல்லாம் யுங்குக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் யுங்கைத் தெரிந்த பெருந்தேவிக்குத் தெரியாமலிருப்பது தவறு.
குறியில் மயிர் சிரைப்பது பெண்ணொடுக்குமுறை மற்றும் சாதி ஒடுக்குமுறை (தொழில் ரீதியில்) சார்ந்தது. யுங்குக்கு ‘மழித்தலோ நீட்டலோ’ அவரது பிறப்புரிமை. ஆனால் சுகிர்தராணியின் கவிதையில் வெளிப்படும் ஒரு பெண்ணுக்கு அது அப்படி அல்ல; அவள் விரும்பிக்கூட அந்த இடத்தில் முடி வளர்க்க முடியாது. அவளது ஆண் உதைப்பான்.
ஆக,
“மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல
கம்பீரம் வீசுகிறது.”
இப்போது சொல்லுங்கள், இந்த வரிகளுக்கு இணையான, தான் சார்ந்த சமூகப் பொருள் பொதிந்த வரிகள் எரிக்காவிடம் இருக்குமா? தேடிப் பாருங்கள் பெருந்தேவி.
மேலும், மயிர்களை அழிக்கப்படாத காட்டு மரங்களாக்கிக் கம்பீரமாக நின்று காற்றை வீசுவது எத்தகைய கவித்துவ வீச்சு கொண்ட வரி என்பதையும் உணர்க.