இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
திரை
ரங் தே பசந்தி - இந்தித் திரைப்படம்
இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
நந்து சுந்தரம்
தேசபக்தியை மையமாக வைத்துப் படம் எடுக்கும் ஒரு நல்ல இயக்குநர் தாண்டக்கூடாத கோடு ஒன்று உள்ளது. யதார்த்தமான தேசபக்திக்கும் மலினமான தேசிய வெறிக்கும் இடையிலான கோடு அது. இந்தக் கோட்டைப் பற்றி ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுக்கு நன்கு தெரியும். சில இடங்களில் அவர் அதைத் தாண்டினாலும் பார்வையாளர்களிடமிருந்து திறமையாக அதை மறைப்பது தான் இந்தப் படத்தின் வெற்றி. படத்தின் செய்தி வெளிப்படையானது: எழுமின், விழிமின், தேசத்தைக் காப்பற்ற உழைமின். இன்னொன்றும் அதே அளவுக்கு வெளிப்படையானது: நீங்கள் தேசத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது ராகேஷும் அவரது குழுவினரும் கத்தை கத்தையாகப் பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்கள்.
படத்தின் செய்தி நுட்பமானதாக இருந்து அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்ளும் பொறுப்பு, பார்வையாளர்களுக்கு விடப்பட்டிருந்தால் ரங் தே பசந்தி இப்போது உள்ளதை விடவும் மேலான படமாக இருந்திருக்கும். அந்த நுட்பமான திரை மொழி மெஹ்ராவுக்குக் கைவரவில்லை. என்றாலும் செய்தி திரைக்கதையில் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அவர் திரைக்கதையில் கடுமையாக உழைத்திருக்கிறார். அதோடு, தனது படத்தைக் கரை சேர்க்க ஏ. ஆர். ரஹ்மான், ஆமீர் கான் என்னும் இரு பெரும் ஆளுமைகளை அவர் பெரிதும் நம்புகிறார். படத்தொகுப்பு, தயாரிப்புத் தரம், ஒலி அமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றுடன் இந்த இரு கலைஞர்கள் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.
படத்தின் ஆகச் சிறப்பான காட்சிகளையும் வசனங்களையும் பிறருக்கு விட்டுக் கொடுக்குமளவுக்கு ஆமீருக்குத் தன் நடிப்புத் திறமைமீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு மாபெரும் கேளிக்கையாளனுக்குரிய தேர்ச்சியுடன் படத்தை அவர் நகர்த்திச் செல்கிறார். மற்றவர்களுக்கு - குறிப்பாக அதுல் குல்கர்னிக்கும் சித்தார்த்துக்கும் - சிறப்பான பாத்திரங்களும் காட்சிகளும் வசனங்களும் கிடைத்திருக்கின்றன. இவையெல்லாம் இல்லாமலே ஆமீர் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். வெற்றிடத்திலிருந்து ஓர் உலகத்தைக் கட்டி எழுப்பும் திறமை இது. அவர் பஞ்சாபி தொனியில் பேசும் விதம், ரொட்டியை விழுங்க முடியாமல் சூவிடம் (ஆலிஸ் பேட்டன்) கதறி அழும் காட்சி, கொலை செய்யும்போது முகத்தில் தெறிக்கும் குரூரம் . . . ஆமீருக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான காட்சிகள் குறைவுதான்; ஆனால் தன் நடிப்பின் மூலம் படத்திற்கு அவர் கூட்டும் ஆழம் மிக அதிகம்.
உத்வேகத்துடன் இசையமைத்திருக்கும் ரஹ்மான் அற்புதமான இசை அனுபவத்தைத் தருகிறார். சூ இந்தியாவுக்கு வந்து இறங்கும்போது பின்னணியில் இழையோடும் மெட்டு பல இடங்களில் பல விதங்களில் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது; ஒரு இசைத் துணுக்காகத் தொடங்கி மெல்ல உருமாறி, கடைசியில் படத்தின் உணர்ச்சி மையமாகப் பரிணமிக்கிறது. பெரும் தொழிலதிபரான தனது தந்தையை (அனுபம் கெர்) கரண் (சித்தார்த்) சந்திக்கும் இடத்தில் ஒலிக்கும் இசைக்கோவை அந்தப் பாத்திரங்கள் அடையவிருக்கும் சோகமான முடிவை முன்னறிவிப்பதுபோல உள்ளது.
பெரும்பாலான பாடல்கள் முதல் பாதியிலேயே வந்துவிடுகின்றன. ஒவ்வொரு பாட்டு முடியும்போதும் படம் ஒரு அடியாவது முன்னால் நகர்ந்திருக்கிறது. பாடல்களின் நடுவில் இடம்பெறும் உரையாடல்கள் அபத்தமாக ஒலிக்கின்றன. பாட்டைப் பாட்டாக மட்டும் காட்சிப்படுத்துவதில் இயக்குநருக்குள்ள தயக்கத்தை இது அம்பலப்படுத்துகிறது. ஒரு ‘சீரியசான’ படத்தில் பாட்டை வெறும் பாட்டாக எப்படிக் காட்ட முடியும்!
கதையின் இரு முக்கியமான இழைகளினூடே மாறிமாறிப் பயணம் செய்கிறார் மெஹ்ரா. பகத் சிங், சந்திரசேகர ஆஸாத் உள்ளிட்ட ஐந்து புரட்சி வீரர்கள் பற்றிப் படம் எடுக்கும் சூவின் முயற்சிகள், அவள் எடுக்கும் படம் ஆகியவையே அந்த இரு இழைகள். படத்திற்குள் படம் என்ற உத்தியை மெஹ்ரா சிரமப்பட்டுக் காட்சிப்படுத்துகிறார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிறைந்தது என்பதால் கதைக்குத் தேவையில்லாதபோதிலும் மெஹ்ரா அதை விரிவாகக் காட்டுகிறார். ஜாலியன்வாலா பாக் படுகொலை, ‘சைமனே திரும்பிப் போ’ போராட்டம் ஆகியவற்றை மேலோட்டமான முறையில் சித்தரித்திருப்பது மோசம் என்றால், சமகால அரசியல் நிகழ்வுகளை அவற்றோடு ஒப்பிட்டுக் காட்டுவது அதைவிட மோசம்.
நடிகர் பட்டாளம் மிகவும் பெரியது - ஓம் பூரி போன்ற நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுமளவுக்கு. தனக்குப் பழக்கமாகிவிட்ட அம்மா வேடத்தில் மறுபடியும் கிரண் கெர். ஆண்களுக்கிடையே நிலவும் உறவுகளால் நிறைந்திருக்கும் திரைப் பரப்பில் சற்றே பெண் வாசனையைப் படர விடுகிறார்கள் சோஹா அலி கானும் ஆலிஸ் பேட்டனும். ஒலி அமைப்பு செறிவாக உள்ளது. படத்தொகுப்பில் அழகுணர்ச்சி சற்றுத் தூக்கலாகவே உள்ளது.
எதிர்பார்த்தபடியே கதையின் இரண்டு இழைகளும் ஒரு புள்ளியில் இணைந்துவிடுகின்றன. உணர்ச்சி கொப்புளிக்கும் கிளைமாக்ஸ் அழகாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. தர்க்க அறிவுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால்தான் இரண்டாம் பாதியில் நடைபெறும் சம்பவங்களை நம்ப முடியும்.
உச்சக்கட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு தோன்றும் காட்சிகளில் ஒன்றாக வஹீதா ரஹ்மான் கோமாவிலிருந்து எழுந்து வருகிறார். ஊழல், தரமற்ற அரசியல் ஆகியவற்றின் பிடியிலிருந்து பாரத மாதா எழுந்து வருவதன் உருவகமாகவே இது தோன்றுகிறது.