மரணம் விடு தூது
அஞ்சலி: கே. விஸ்வநாதன்
மரணம் விடு தூது
கண்ணன்
பழக்கப்படுத்திக்கொள்ளும் பொருட்களைத்தான் தெரிந்துகொள்ள முடியும்.
மீண்டும் மீண்டும் பட்டுக்கொண்டேயிருக்கிறது. மரணம் பற்றிய செய்திகள் இப்போதெல்லாம் சகஜமாக வெளிப்படுவதுபோலத் தோன்று கிறது. மரணம் நெருங்கி, உரையாடித் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள முயல்வது போலவும் தோன்றுகிறது.
கலைச்செல்வனின் மரணம், சுனாமியில் சேதுராமன் குடும்பம் சின்னாபின்னப்பட்டது, அப்பாவின் மரணம், இப்போது ‘ஆரெம்கேவி’ விஸ்வநாதன். இவற்றோடு நண்பர்கள் தம் நண்பர்களை, பெற்றோரை, உற்றோரை, தம் மக்களை இழந்த செய்திகள். மரணம், மரணங்களால் சூழ்ந்து வருவது போன்ற உணர்வு.
0
விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னரே அவரைப் பற்றி வியாபாரத் தொடர்புகள் மூலமாகவும் நண்பர்கள் வழியாகவும் சில ஆண்டுகளாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. எல்லோருடைய தொனியிலும் அவரைப் பற்றிய ஒரு நட்சத்திர மதிப்பு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. நெல்லையின் பழமையில் புதிய காற்றுபோல அமைந்த அவரது வருகையும் இருப்பும் சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன.
1997இல் நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் முதலில் சந்தித்தேன் என்று ஞாபகம். பின்னர் நண்பர் சலபதியுடன் நெல்லையில் ஆரெம்கேவியில் சந்தித்து நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ‘அன்னை இட்ட தீ’ தொகுப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிப் பேசியபோது, அப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சில உதவிகள் செய்ய ஆர்வத்துடன் முன்வந்தார். அதன் பின்னர் ‘தமிழ் இனி 2000’, புதுமைப்பித்தன் நூல் வெளியீடு எனச் சில பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து உதவி கேட்டிருக்கிறேன். கேட்ட எந்த உதவியையும் அவர் அநேகமாக மறுத்ததில்லை.
அவரைச் சந்திக்கச் செல்லும்போது பேசவந்த விஷயம் 10 நிமிடத்தில் முடிந்துவிடும். எனினும் எந்தச் சந்திப்பும் ஒரு மணி நேரத்திற்குக் குறைவாக முடிந்ததில்லை. வெளியே காத்திருப்பவர்களின் எண்ணம் எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தி நெளியவைத்ததுண்டு. ஆனால் ‘பெரிய’ மனிதர்களின் அபத்தமான உளறல்களை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் துரதிர்ஷ்டத்தால் நெளியவேண்டிய சந்தர்ப்பம் அவர்முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. வயதில் சற்று மூத்த ஒரு நண்பருடன் பல விஷயங்களைத் தீவிரமாக விவாதிக்கும் தன்மையுடனேயே அச்சந்திப்புகள் அமைந்திருக்கின்றன. வேறொரு தளத்திலிருந்து நடப்புகளை நுட்பமாக அவதானிக்கும் ஒருவரின் பார்வையில் வெளிப்படும் புதிய கருத்துகளை அசைபோடும் சுகத்துடனேயே அந்தச் சந்திப்புகளிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.
0
உதவி கேட்பது சங்கடம் தரும் விஷயம். அதுவும் நண்பர்களிடம் உதவி கேட்டு நிற்பது மன நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயம். ஏனெனில் மறுப்பதற்கான வெளி அங்கு மிகவும் குறுகிவிடுகிறது. இதே காரணங்களுக்காக உதவி கேட்டு வருபவர்களை எதிர்கொள்வதும் மிகச் சங்கடமானதுதான். பணமும் அதிகாரமும் படைத்தவர்களுக்கு இந்த நெருக்கடி அன்றாடம் ஏற்படும். அன்றாடம் ஏற்படுவதாலேயே அவற்றை நுண்உணர்வுடன் எதிர்கொள்ளும் பண்பு அவர்களிடம் சிதைந்துவிடும் சாத்தியம் அதிகம். அந்தச் சாத்தியத்தை மீறி ஒவ்வொரு மனிதரையும் நுண்உணர்வுடனும் முழுமனதோடும் எதிர்கொள்ள முயன்றவர் விஸ்வநாதன். இச்சிறிய வயதில் மிகப்பெரிய வட்டத்தை அவரால் அரவணைக்க முடிந்ததற்கு இதுவே முக்கியக் காரணம்.
உதவி செய்யும்போது அதைத் தன்னுடைய பெருந்தன்மையாக அல்லாமல் தன்னுடைய கடமையாக, தனக்குக் கிடைத்த வாய்ப்பாக முன்வைப்பார். அவை சம்பிரதாயமான வார்த்தைகளாக அல்லாமல் ஆத்மார்த்தமாகத் தொனிக்கும். மறுக்கும்போது தனது இயலாமையால் இந்த அரிய யோசனையை ஏற்க முடியவில்லையே என்ற துக்கத்தை வெளிப்படுத்துவார். மறுக்கும் சங்கடத்தை அவருக்குத் தராத சிக்கனத்துடனேயே அவரை அணுகவேண்டும் என்று தோன்றும். மீண்டும் மீண்டும் கேட்க வைத்து நுட்பமாக அவமதிப்பது, பதில் தராமல் உருட்டுவது, தவிர்ப்பது எல்லாம் அவர் இயல்பிலேயே இல்லாத விஷயங்கள். பிறருக்கு உதவும் கலை கைவரப்பெற்றவர் விஸ்வநாதன்.
0
சமீபகாலமாக மாதமொரு முறையேனும் சந்தித்து வந்தோம். ‘தோழி.காம்’ என்ற இணைய தளத்தை ஆரெம்கேவியுடன் இணைந்து நடத்திவரும் வாய்ப்பு அவருடன் அணுகி உரையாடும் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி யிருந்தது. கடைசியாக ஜனவரி முதல் வாரம் ‘தோழி.காம்’ குழுவுடன் அவரைச் சந்தித்தேன். பல்வேறு விஷயங்களை, திட்டங்களைப் பகிர்ந்துகொண்டோம். “பெண் உடலை விளையாட்டுச் செய்திப் பகுதியில் ‘கண்ணியமான’ இதழ்கள் சுரண்டுவதை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்” என்றார் விஸ்வநாதன். ‘விளையாட்டுச் செய்தி’ எனும் புனிதத்தில் மயங்கி இத்தனை நாட்களும் இதை அவதானிக்காமல் விட்டோமே என்று நினைத்துக்கொண்டேன்.
நம் சமூகத்தில் நுண்உணர்வு கொண்டவர்களாகத் தம்மைக் கருதிக்கொள்பவர்கள் அநேகம். நுண்உணர்வு கொண்டவராகப் பிறரால் கருதப்படுபவர்களையும் பார்த்திருக்கிறேன். தம்மைப் பிறரும் சமூகமும் நடத்தும்விதம் பற்றிய நுண்உணர்வு கொண்டவர்கள், பிறரையும் சமூகத்தையும் தாம் கையாளும் விதத்தில் தடித்தனம் மிக்கவர்களாக இருப்பதே வழக்கம். இரு திசைகளிலும் நுண்உணர்வு கொண்டவர்கள் அரிதிலும் அரிது. அவர்களில் விஸ்வநாதனும் ஒருவர்.
மிகவும் மரபான ஒரு குடும்பத்திலிருந்து வந்து மிகவும் மரபான தொழிலில் ஈடுபட்டவர் அவர். ஆனால் அத்தொழிலில் நவீனத்தையும் புதுமையையும் புகுத்தியவர். சமூக மரபுகளோடு ஒட்டி ஒழுக வேண்டிய சூழலில் இயங்கியவர். ஆனால் எல்லாவற்றையும் பற்றிய ஒரு பார்வை, ஒரு விலகல், ஒரு மெல்லிய எள்ளல் அவரிடமிருந்தது. மிக நுட்பமான நகைச்சுவை உணர்வு. நாற்காலியில் சட்டெனச் சாய்ந்து, உடல் தளர, தலையை அண்ணாந்து தூக்கி, வாய்விட்டும் மனம்விட்டும் அவர் சிரிக்கும் காட்சி அடிக்கடி மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
‘இலக்கியத் தன்மை’ மிளிரும் ஒரு நண்பரை, ‘வியாபாரியை’ இழந்திருப்பது, பிண வியாபாரிகள் இலக்கியவாதிகளாகப் பவனிவரும் இன்றைய சூழலில் பேரிழப்பாக வருத்துகிறது.
மரணம் விடு தூதுதான் என்ன?