கடிதங்கள்
கடிதங்கள்
தனியார் கேபிள் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வந்திருப்பதைப் பாராட்டி வரவேற்று, அதை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிக்கக் கூடாது எனச் சுட்டிக் காட்டியிருப்பது அரசின் கவனத்திற்குரியது. ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் நல்லதைச் செய்யத் தொடங்கியிருப்பதே விவாதத்தை உண்டாக்குகிறது. நுழைவுத் தேர்வு விஷயத்திலும் கவனத்துடன் செயல்பட்டிருக்கலாம்.
பொன். குமார்
சேலம் 636 006
கேபிள் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தும் மசோதா பற்றித் தலையங்கம் மூலம் பாராட்டியுள்ளீர்கள். எஸ்.சி.வி., சன் டி.வி. நிறுவனங்களைப் பழிவாங்குவதற்காகப் போட்ட சட்டம் இது. நாட்டை ஆள்பவர்களிடம் அதிரடி நடவடிக்கை கூடாது. ஆலோசித்து மக்கள் நன்மைக்காக ஒரு சட்டம் என்றால் வரவேற்கலாம். சன் டி.வி. போல் நிகழ்ச்சிகளைத் தர முடியுமா? சன் டி.வி. இல்லையென்றால் டி.வி.யே யாரும் பார்க்க மாட்டார்கள். அரசுப் போக்குவரத்தைத் தனியாருக்கு மாற்ற முயற்சித்த அரசு, கேபிள் டி.வி.யை ஏற்று நடத்துவது பழிவாங்கும் செயல் என்பது கண்கூடாகத் தெரிந்தும் அதை ஆதரிக்கும் காலச்சுவடு நடுநிலை தவறிச் செயல்படுவதாகக் கருதுகிறேன். தரமான இலக்கிய இதழான காலச்சுவடுக்கு அரசியல் தேவையா?
ஈ. சிதம்பரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125
காலச்சுவடு பிப்ரவரி 2006 இதழில் வெளியான விவாதம் பகுதிக்கான ‘புகழ்ச்சியின் மறுபக்கம்’ என்னும் தலைப்பில் கே. ரவிச்சந்திரன் எழுதியுள்ள விமர்சனம் குறித்து: தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக்கவும் அதற்கே உரியதான செக்குமாட்டுத் தனத்திலிருந்து விடுவிக்கவும் ஒரு மாற்று சினிமாவிற்கான முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு படைக்கப்பட்ட சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ ஏற்படுத்திய தாக்கமும் பதிவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ள ‘அளவுக்கதிகமான புகழ்ச்சி நல்ல கலைகளை வளரவிடாது’ என்கிற கருத்து உடன்பாடானதல்ல. காரணம், ‘தவமாய் தவமிருந்து’ விமர்சன ரீதியாகக் குறையுடைய படைப்பாக விளங்கியபோதிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவாலும் அங்கீகாரத்தாலும் காலத்தை வென்ற ஒரு முன்மாதிரியான படைப்பு என்பதாலும் தமிழ் மொழிக்கான அடையாளத்தோடு கலாபூர்வமான சுவாசத்தால் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நெஞ்சையும் கொள்ளை கொண்டதே இதன் சிறப்பம்சமாகும். சேரனின் கலை தாகத்துக்குக் கிடைத்துள்ள மக்கள் அங்கீகாரமானது அவரது கலைப்பயணத்தைத் தொடர ஊக்குவிக்குமே தவிர, ரவிச்சந்திரன் கூறியுள்ளதைப் போல் ஆகாது. தற்போதைய தமிழ் சினிமா உலகில் வணிக மோகமானது மன வக்கரிப்புகளின் உற்பத்திக் கிடங்குகளை மட்டுமே பெருக்கிவரும் சூழலில் திரைப்படத்தினுள் கலாபூர்வ அம்சங்களையும் அதற்கான சித்தரிப்புகளையும் காண இயலாத நிலையை உணர்ந்து, அதைத் தனது படைப்பின் மூலம் வழங்க முன்வந்துள்ள சேரனை விமர்சனம் என்கிற பேரால் சந்தேகிப்பதோ கொச்சைப்படுத்துவதோ தர்மமாகாது.
பா. செல்வவிநாயகம்
பெரம்பூர் 600 011
சு.ரா. அஞ்சலிக் கவிதையில் என்னுடைய பெயர் ‘ந. ஜெயபாஸ்கரன்’ என்று பிரசுரமாகியுள்ளது. என்னுடைய பெயரை நான் எழுதும்விதம் ‘ந. ஜயபாஸ்கரன்’ என்பதாகும். ஜெயபாஸ்கரன் என்ற பெயரில் நிறைய எழுதும் இன்னொருவரும் இருப்பதால் இந்த அற்ப விஷயத்தைக் குறிப்பிட வேண்டிய தாகிவிட்டது.
ந. ஜயபாஸ்கரன்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் தினம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருப்பது புத்தகக் கண்காட்சிக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும். கண்காட்சியில் ஆறு கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனை ஆகியிருப்பது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் நம்பிக்கையூட்டும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடின் அணுகுமுறையை அறிந்ததும் 450 கிலோமீட்டர் பயணம்செய்து அடுத்த வருடம் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெற வேண்டும் எனக் குக்கிராம வாசகனான நான் உறுதி எடுத்துக்கொண்டேன்.
ப. ராமகிருஷ்ணன்
காயக்காடு
‘நுழைவுத் தேர்வு ரத்து - கிராமப்புற மாணவர்களுக்கு நன்மையா?’ என்ற ரவிக்குமாரின் கட்டுரையை பிப்ரவரி இதழில் படித்தேன். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை நோக்கோடு பார்க்காமல் ஒட்டுமொத்தக் கல்விச் செயல்பாட்டுடன் பார்த்தால் இதன் பரிமாணம் இன்னும் விரிவாகத் தெரியும். தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளே இன்று கோலோச்சு கின்றன. பலரும் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்க்கவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளே படிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும் கல்வி மேம்பாட்டுக்கான கருவிகளும் அங்கு கிடைப்பது இல்லை. காரணம், ஆசிரியர் பற்றாக்குறை, பெற்றோர்களின் கவனமின்மை, பிள்ளைகளின் குடும்பச் சூழல் ஆகியவை. இத்தகைய சூழலை மீறி ஒரு கிராமப்புற மாணவன் நுழைவுத் தேர்வை நினைத்தே பார்க்க முடியாது. இந்த நிலையில் நுழைவுத் தேர்வு என்பதை ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கல்வி மாற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். படித்து ஒப்புவித்து, படித்ததை அப்படியே தேர்வில் கக்கும் நிலைமை, கல்வி என்ற செயல்பாடு அறவே மாற வேண்டும். மாணவர்களின் படைப்பாற்றல்; சிந்திக்கும் செயல்பாடு இவற்றிக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கக் கூடிய ஒரு கல்வி முறையைப் பற்றி நம் கல்வியாளர்கள் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது. அந்த நிலையில் நுழைவுத் தேர்வு கண்டு கிராமப்புற மாணவன் பயங்கொள்ள மாட்டான்.
ஞானஒளி
ஆரப்பள்ளம்