என் வாழ்வின் பெருந்துக்கம்
சு.ரா
என் வாழ்வின் பெருந்துக்கம்
பவுத்த அய்யனார்
சுந்தர ராமசாமி அவர்களின் மறைவு, என் வாழ்வின் கடைசி நிமிடம்வரை பெரும் துக்கத்தை அளிக்கக் கூடியது. வாசகனாக அவரிடம் அறிமுகமாகி, 18 ஆண்டுகளாக அவரது அன்பையும் உதவியையும் பெற்றுள்ளேன். மற்றவர் செய்யும் சிறு உதவியையும் மறக்காது தம் நூல்களில் நன்றி தெரிவிப்பது அவர் வழக்கம். ஆனால், தாம் செய்த பெரிய உதவிகளையும் யாரிடமும் சொல்ல மாட்டார். அவரது மனோபாவம் அப்படி.
சுந்தர ராமசாமி அவர்களின் எழுத்துகளைப் பற்றிப் பேச எவ்வளவோ பேர் உள்ளார்கள். அவர் எனக்குச் செய்த பல உதவிகள் என் வாழ்க்கையின் திசையையே மாற்றி அமைத்துள்ளன. எனக்கு மட்டுமல்ல, எவ்வளவோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார் என்பதை அவரது இறப்புக்குப் பின், நான் நேரில் சந்தித்துப் பேசிய சில நண்பர்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.
அன்பையும் மனிதாபிமானத்தையும் எழுத்தில் மட்டுமே காட்டாது, நிஜ வாழ்விலும் காட்டியவர் சுந்தர ராமசாமி. இதை நேரடியாகக் கண்டுணரும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முறையில், இப்போதாவது சொல்லியே ஆக வேண்டும் எனத் தோன்றுகிறது.
1987. அப்போது எனக்கு இருபத்து நான்கு வயது. பெங்களூரில் தவணை முறையில் பொருள்கள் கொடுத்துப் பணம் வாங்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். நாங்கள் இருந்த தாசரஹள்ளிப் பகுதியில் கன்னட மக்கள் அதிகம். அப்போது நடந்த தமிழர் X கன்னடர் கலாட்டாவில் எனக்கு உதை விழுந்தது. தமிழன் என்பதைத் தவிர்த்து வேறு எந்தத் தவறும் நான் செய்யவில்லை. என் பயத்தைக் கடைக்காரரிடம் கூற, ‘கோழை’ என்ற படிமம் மிஞ்சியது. வேறு பகுதியில் இருந்த கடைக்கு என்னை மட்டும் கூட்டிச் செல்லாமல் எல்லோரும் போய்விட்டார்கள். மிகுதியான நம்பிக்கை என் மீது. பண விஷயங்களிலும்.
உறவினர்களோ நண்பர்களோ இப்படி அந்தத் தனிமை பலவிதமான எண்ணங்களைத் தோற்றுவித்தது. தடுமாற்றம் நிரம்பிய பள்ளி வாழ்க்கை, என் சிறு வயதிலேயே அம்மா இறந்துபோனது. அதனால் பாட்டி, தாத்தா செல்லமாய் வளர்த்ததால் தான்தோன்றியாய் மாறிப்போனது எனப் பல நினைவுகள் அழுத்திக் கொண்டிருந்தன. காரணம் ஏதுமில்லாமலே சாகவேண்டும் எனத் தோன்றியது. சாவதற்கு முன்பு பிடித்தமான மனிதர்களைச் சந்திக்க விரும்பினேன். அப்போது பிடித்தமான மனிதர்களாக நான் நினைத்தது எழுத்தாளர்களை மட்டும்தான். கடையின் வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு, பெங்களூரை விட்டுத் திருடனாக வெளியேறினேன்.
பிடித்தமான மனிதர்களைப் பார்த்துவிட்டு இறந்து விடுவது எனப் புறப்பட்டு முதலாவதாகப் பார்த்தது சுந்தர ராமசாமி அவர்களை. நாகர்கோவில் 151, ஆர்.வி.புரம் என்ற முகவரி மட்டுமே என்னிடம். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல்தான் நான் முதலாவதாகப் படித்தது. ‘நடுநிசி நாய்கள்’ தமிழில் இப்படியெல்லாம் நவீனக் கவிதைகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளச் செய்தது. அவரது ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது. ஜே.ஜே. பெரும் மயக்கத்தை ஏற்படுத்தினான். அதன் தமிழ் நடையை வேறு புத்தகங்களில் அதுவரை படித்ததில்லை. மனத்தில் இருப்பதை எல்லாம் நாகர்கோவிலில் கொட்டிவிட முடிவுசெய்திருந்தேன்.
அதிகாலையில் நாகர்கோவிலை அடைந்தேன். தேவாலயங்கள் உயர்ந்து நிற்கும் ஓட்டு வீடுகள் நிறைந்த வீதி. மரச் சிலுவை கொண்ட கல்லறைகளைத் தாண்டி கலெக்டர் ஆபீஸ் அருகில் பெட்டிக்கடை வைத்திருந்தவரிடம் முகவரியைக் காட்ட, இரண்டு வீடு தள்ளி உள்ளதாகச் சொல்லி வழிகாட்டினார். மேலும் “வெளி நாடெல்லாம் போய் வந்தார். கதையெல்லாம் எழுதுவாரா” என ஆச்சரியத்துடன் அனுப்பிவைத்தார். இரண்டு வீடு தள்ளியிருந்த வீட்டை அடைந்தேன்.
“சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும். மதுரையிலிருந்து வந்திருக்கிறேன்.” கொஞ்சம் வேகமாகப் பேசி சொல்லி அனுப்பினேன். அதிகதூரம் மரியாதையை ஏற்படுத்தும் என்ற நினைப்பில். முதலில் உயரமான டம்ளரில் காபி வந்தது. பிறகு சுந்தர ராமசாமி வந்தார். “உங்களுடன் பேசவேண்டும்” என்று சொன்னேன். “இப்போது கன்னியாகுமரி செல்லுங்கள்; மாலை ஜவுளிக் கடையில் சந்திக்கலாம்” எனச் சொல்லி ஜவுளிக் கடைக்கு வரவேண்டிய வழியைக் கூறினார்.
கன்னியாகுமரி சென்றேன். முதன்முறையாகக் கடலைப் பார்த்தேன். கி.ரா.வும் லா.ச.ரா.வும் ஞாபகத்துக்கு வந்தார்கள். விவேகானந்தர் பாறைக்குச் சென்று சுற்றுச்சூழலை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமியிடம் வாங்கி வந்த ‘கோபல்ல கிராமம்’ நாவலை மணல் வெளியில் படுத்துக்கொண்டே படிக்க, மாலை வந்தது. கன்னியாகுமரி சிலையின் மூக்குத்தியைப் பார்க்காத ஏமாற்றத்துடன் நாகர்கோவில் வந்தேன். ஜவுளிக் கடைக்குச் சென்றேன். கடை அடைக்கும் வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அவரது காரில் வீட்டிற்குச் சென்றோம். காரை அவரே ஓட்டி வந்தார். அவரது வீட்டில் சீனிவாசன், ஸ்ரீகுமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். காலாற ரோட்டில் நடந்துகொண்டே கம்யூனிசம், புதுக்கவிதை, கிருஷ்ணன் நம்பி, ஐசக் அருமைராஜன் பற்றிப் பலவிதமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தேன். அவர் மிகுந்த அக்கறையுடன் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். ஜே. ஜே.யைப் பற்றிச் சொன்னேன். எதையெல்லாம் அவரிடம் கொட்ட வேண்டும் என்று நினைத்தேனோ அதை மறந்துபோனேன்.
திருவனந்தபுரத்தில் நகுலன், ஆ. மாதவன், நீல. பத்மநாபன் ஆகியோரைப் பார்க்கும் விருப்பம் இருந்தது. சொன்னேன். எழுத்தாளர்கள் தவிர்த்து, திருவனந்தபுரத்தில் பார்க்க வேண்டியவைகளாகப் பத்மநாப சுவாமி கோவில் (சிற்பச் சிறப்புக்காக), மிருகக்காட்சிச் சாலை, கோவளம் மற்றும் ஸ்ரீகுமார் தியேட்டரில் ‘சிதம்பரம்’ படத்தையும் சேர்த்துக்கொள்ளச் சொன்னார். இரவு அங்கேயே தங்கினேன். காலையில் ஆ. மாதவனின் செல்வி ஸ்டோர், பத்மநாப சுவாமி கோவில், ஸ்ரீகுமார் தியேட்டர் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கான வழிகளை விளக்கி வரைபடம் வரைந்து விளக்கிக் கூறினார். பத்மநாப சுவாமி கோவிலுக்குள் பேண்ட்டுடன் செல்ல இயலாது என்று சலவை வேஷ்டி ஒன்றையும் கொடுத்தார். தமிழின் உன்னதமான எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்த சந்தோஷத்துடன் திருவனந்தபுரம் போனேன். இதுவே சுந்தர ராமசாமியுடனான என் முதல் சந்திப்பு. திருடி வந்த பணத்திற்காக ஓராண்டுக் காலம் நான் வேலை பார்க்க வேண்டியிருந்தது.
திருவனந்தபுரம் எல்லாம் போய்விட்டு ஊருக்கு வந்தவுடன் அவருக்குக் கடிதம் போட்டேன். சில தினங்களிலேயே அவரது பதில் கடிதம் வந்தது. அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லவே முடியாது. தொடர்ச்சியான கடிதத் தொடர்பில் என் வாழ்க்கைப் பின்னணியைத் தெரிந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மேலூர் கணேஷ் திரையரங்கில் திரைப்படக் கருவியை இயக்குபவரின் உதவியாளராக இருந்தேன். எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த மேலூருக்குப் போய் வந்துகொண்டிருந்தேன். அப்போது அவர் எழுதிய கடிதமொன்றில், “வேலைக்கு எப்படிப் போய் வருகிறீர்கள்” என்று கேட்டு எழுதியிருந்தார். காலையில் பேருந்திலும் நள்ளிரவில் லாரியிலும் வந்து போவதாக எழுதினேன். அடுத்து வந்த கடிதத்திலேயே மதுரைக்கு உறவினர் ஒருவருடைய திருமணத்திற்கு வருவதாகவும் தன்னைச் சந்திக்கும்படியும் தேதி குறிப்பிட்டு எழுதியிருந்தார். நானும் அவர் எழுதியிருந்த தேதியில் மதுரைக்குப் போய்ப் பார்த்தேன்.
கல்யாண விருந்துக்கு அழைத்துச் சென்று என்னையும் தன்னுடன் சாப்பிடவைத்தார். “ஊரிலிருந்து மேலூருக்கு வேலைக்குச் செல்ல ஒரு சைக்கிள் இருப்பது நல்லதுதானே” என்றார். புதிய ஹெர்குலிஸ் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். சைக்கிளின் விலையாக ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். மூன்று புதிய ஐந்நூறு ரூபாய் தாளாகக் கொடுத்தார். அந்தச் சைக்கிளில் “Presented by Thiru Sundara Ramasamy” என்று ஊருக்கு வந்த பின்பு எழுதினேன்.
நான் எழுதிய கடிதங்களை வைத்து என் இலக்கிய ஆர்வத்தைத் தெரிந்துகொண்டார். “உங்கள் மனோபாவத்திற்குக் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பணிபுரிவது நல்லது என்று சொல்லி என்னை அங்கு சேர்த்துவிட்டார். வ.உ.சி. மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பணி. அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம்களை ஏற்பாடு செய்யவேண்டும். முகமறியாத மனிதர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிப் பணிபுரிந்து சேவைப் பணியின் ருசியை அறிய முடிந்தது. போகாத ஊர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளடங்கிய கிராமங்களுக்கெல்லாம் போயிருக்கிறேன். 1989லிருந்து 1991ஆண்டின் பாதிவரை என் வாழ்வின் மறக்க முடியாத ஆண்டுகள். விவேகானந்த கேந்திரத்தில் நான் பணிபுரிந்தது என் வாழ்க்கையின் திசையையே மாற்றி அமைத்தது.
விவேகானந்த கேந்திரத்தில் சேவை ஊதியமாக எனக்கு அறுநூறு ரூபாய் கொடுத்தார்கள். உணவு, தங்குமிடம் எல்லாமே அறுநூறு ரூபாய்க்குள்தான் சமாளிக்க வேண்டும். சில சமயங்களில் அந்தப் பணம் போதுமானதாக இருக்காது. உடனே சுந்தர ராமசாமிக்குப் பணம் கேட்டுக் கடிதம் எழுதுவேன். எந்தவிதக் கேள்வியுமின்றி இரண்டு நாட்களில் மணியார்டரில் பணம் வரும். பலமுறை இப்படி நடந்திருக்கிறது. அவரிடம் எப்படி இவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டேன் என்று பின்னாளில் ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது.
1994இல் என் திருமணம் நடந்தது. அதற்கு ஓராண்டுக்கு முன்பே நானும் முத்துப்பிள்ளையும் தீவிரமாகக் காதலித்தோம். முத்துப்பிள்ளைக்கும் அப்போதே அவரிடமிருந்து கடிதங்கள் வரும். புத்தகங்கள் வாசிக்கும்படி முத்துப்பிள்ளைக்கு எழுதுவார்.
எங்கள் திருமணம் உங்கள் தலைமையில்தான் நடக்கவேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தோம். எந்தவித மறுப்புமின்றி உடனடியாகச் சம்மதம் தந்தார். மேலூர் தெற்குத் தெருவில் நடந்த எங்கள் திருமணத்திற்கும் அருகில் இருந்த எங்கள் குட்டிக் கிராமத்திற்கும் வருகை தந்திருந்தார். முதல் விருந்திற்கு நாகர்கோவிலுக்கு வரும்படி அழைத்தார். ஒரு வாரத்தில் நாகர்கோவில் சென்றோம். எங்களுக்கான உடைகள், விருந்து என மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உபசரித்தனர் அவரும் அவரது வீட்டினரும்.
1996இல் நானும் முத்துப்பிள்ளையும் ஒருசமயம் நாகர்கோவிலுக்கு சுந்தர ராமசாமியைப் பார்க்கப் போனோம். அப்போது அங்கு மனுஷ்யபுத்திரன் இருந்தார். சுந்தர ராமசாமியின் ‘107 கவிதைகள்’ தொகுப்பின் நூலாக்கப்பட இருந்த பிரதியை மனுஷ்யபுத்திரன் என்னிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப் பார்த்து வந்தேன். மூன்றாம் பக்கத்தில் “அய்யனாருக்கும் முத்துப்பிள்ளைக்கும்” என்று இருந்தது. அந்த நூலை எனக்கும் என் மனைவிக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி. அப்போது தோன்றிய மனநிலையைச் சொல்லவே முடியாது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் நூலாகவும் சுந்தர ராமசாமியின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பாகவும் இருந்த அந்த நூலை நாங்கள் ஊருக்கு வந்த பின்பு கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் சுந்தர ராமசாமி.
சுந்தர ராமசாமியின் கடிதங்கள் மூலமாக எனக்கான ஒரு மொழியைக் கண்டடைய முடிந்தது. கடிதங்கள் மூலமாக எழுதவும் படிக்கவும் எனக்குப் பெரிய அளவில் தூண்டுதலாக இருந்துள்ளார். தான் படித்தவற்றில் சிறந்த நூல்களாகக் கருதுபவற்றைப் படிக்கச் சொல்வார். நூல் கிடைக்க வாய்ப்பில்லையென்றால் அனுப்பிவைப்பார். ஆரம்பத்தில் தினமும்கூட அவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். என் வாழ்வின் நெருக்கடியான சமயங்களில் அவரது வார்த்தைகள் என்னைச் சமனப்படுத்தியுள்ளன. நான் வேலை நிமித்தமாக எங்குச் சென்றாலும் அவருடனான கடிதத் தொடர்பை மட்டும் விட்டதில்லை. முதலில் டைப்ரைட்டரில் டைப் செய்யப்பட்ட கடிதங்கள். பின்பு கம்ப்யூட்டரில் அடிக்கப்பட்ட கடிதங்கள். அவர் அமெரிக்கா செல்லும் சமயங்களில் இ-மெயில் மூலம். ஒரு சில கடிதங்கள் மட்டுமே அவரது கையெழுத்தில் வந்தன. அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பது தெரியாமல் இரண்டு கடிதங்கள் எழுதினேன். அதை அவர் படிக்காமலே, எப்போதும் சந்திக்க முடியாத இடத்தை நோக்கிப் போய்விட்டார். சுந்தர ராமசாமியின் மறைவு என் வாழ்வின் பெருந்துக்கம்.
நெய்தல் அமைப்பின் சார்பில் 4.12.2005 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற சுந்தர ராமசாமி நினைவுகள் மதிப்பீடுகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.