தலாக் -குலாக்ஃ: தளையா, உரிமையா?
விவாதம்
தலாக்-குலாக்ஃ: தளையா, உரிமையா?
‘காலச்சுவடு’ ஜனவரி 2006 இதழில் வெளியான ‘ஹசீனா’ திரைப்படம் பற்றிய எனது கட்டுரையில் தலாக் குறித்து நான் தவறான தகவல் தந்திருப்பதாக வாசகர் காயல்பட்டினம் கே. எஸ். முகம்மத் ஷுஐப் தெரிவித்துள்ளார். குரானிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டிருப்பது குறித்து மார்க்க அறிஞர்கள் அளிக்கும் விளக்கம் எதுவாக இருப்பினும், நடைமுறையில் கணவன்மார்கள் ஒரே வீச்சில் ‘தலாக், தலாக், தலாக்’ என்று சொல்லி மனைவியைக் கைவிடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். முகமதியச் சட்டதிட்டங்கள் அமலில் இருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து இங்குவரும் வயோதிக அராபியர் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களுக்குச் சென்று இளம்பெண்களைக் காஜிகள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் இன்பம் துய்த்துவிட்டு, ஒரே மூச்சில் மூன்றுமுறை தலாக்குடன் வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டுச் செலவுக்கும் கொஞ்சம் பணம் தந்துவிட்டுப் போய்க் கொண்டிருப்பது தெரிந்த சங்கதிதானே! இது பற்றியும் கன்னடத்தில் ‘முன்னுடி’ என்று ஓர் அருமையான திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்வந்து பாராட்டுப் பெற்றது. அதிலும் தாராதான் பிரதானப் பாத்திரம் ஏற்றுப் பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றார்.
‘ஹசீனா’ திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர் பானு முஷ்டாக் என்ற பெண் வழக்கறிஞர். ஒரே தடவையில் மூன்றுமுறை தலாக் சொல்லி மணமுறிவு செய்யும் நடைமுறை முகமதியச் சமுதாயத்தில் இருப்பதால்தான் அவர் இவ்வாறு கதை எழுதுவதும் இஸ்லாமியக் குடிமைச் சட்ட வாரியம் பெண்களுக்கு இதிலிருந்து பாதுகாப்புத் தரவேண்டும் என்ற கருத்தில் ஒவ்வொருமுறையும் சொல்லப்படும் தலாக்கிற்கும் நடுவே இடைவெளி இருக்கவேண்டும் என விதிப்பதுமான நிலை உருவாகியிருக்கிறது அல்லவா?
மேலும், அன்பர் முகம்மது ஷுஐப் குறிப்பிட்டுள்ள வசனங்களை ஒருமுறைக்கு இருமுறை ஆழ்ந்து படித்தேன். அவையும்கூட ஆண்களுக்குச் சாதகமான கண்ணோட்டத்தில்தான் புலப்படுகின்றனவேயன்றி பெண்களுக்குச் சாதகமாக இருப்பதுபோலத் தோன்றவில்லையே. தலாக் கூறப்பட்ட பெண்கள் மூன்று மாதவிலக்குகள் வரை பொறுத்திருக்கவேண்டும் என விதிப்பது; தம் கருப்பையில் தலாக் சொன்ன கணவனின் கருவைச் சுமப்பவர்களாக அவர்கள் இருப்பின் அதனை மறைக்கக் கூடாது என்பது; இந்த இடைக்காலத்தில் ஒருவேளை கணவன் மனம் மாறித் தன்னால் தலாக் சொல்லப்பட்ட மனைவியுடன் வாழ விரும்பினால் அதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்பது; அவனது கருவைத் தான் சுமப்பதாலேயே தலாக் சொல்லப்பட்ட மனைவிக்கும் அதேபோல அவனது மனைவியாகத் தொடர உரிமை உண்டு எனக் கூறுவது; இவை ஆண்களுக்குள்ள அதிகாரத்தை வெளிப்படுத்துவது போலத்தானே தெரிகின்றன?
பெண்களுக்கும் மணவிலக்குப் பெறும் உரிமை குலாக்ஃ என்ற பெயரில் இருப்பினும், அதற்கு எவ்வளவுதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும் குலாக்ஃ சொன்ன மனைவிக்குக் கணவன் எவ்வித இழப்பீடும் தரத் தேவையில்லை என்பதோடு, பலவாறான உபாதைகளுடன் பத்து மாதம் சுமந்து, அதன் பிறகும் சிரமங்கள் பலபட்டுப் பெற்று வளர்த்த குழந்தைகளையும் மனைவியானவள் கணவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விட வேண்டுமென்று சொல்லப்படுகிறதே? பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுக்க நேரிடும் என்பதற்காகவே எல்லாக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு துராத்மாக்களான கணவன்மாருடன் தொடர்ந்து வாழவேண்டியிருப்பதாகவும் பல முகமதியப் பெண்கள் கூறுகிறார்களே?
தலாக் சொன்னால் பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என்பதால்தான் ஹசீனாவின் கணவன் சாமர்த்தியமாக அதனைத் தவிர்க்கிறான் என்று தமது கதையில் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் பானு முஷ்டாக். பெண்களுக்கு மணமுறிவு கோரும் உரிமை இருப்பினும் அதனால் பெண்களுக்குப் பயன் இல்லை என்றும் கணவனை எப்படியாவது தலாக் செய்யவைத்தால்தான் ஹசீனாவுக்குப் பலன் கிடைக்கும் எனவும் எழுதுகிறார் அவர். ஆக, நியாயமான காரணங்களுக்காக ஒரு மனைவி தன் கணவனிடமிருந்து வெறுங்கையுடன் தப்பிவருவதற்கு உரிமை இருப்பதாகத்தான் இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆண்கள் மிக எளிதாகத் தலாக் சொல்லிவிட்டுப் போவதுபோல் பெண்களும் குலாக்ஃ சொல்லிவிட்டுப் போய்விடுவது சாத்தியமா என்று தெரியவில்லை. பிற சமூகங்களில் பெண்களுக்கு இதற்குக் கூட வழியில்லாத காலம் ஒன்று இருந்தது; இன்று அந்த நிலைமை இல்லை என்று வேண்டுமானால் கூறலாம்.
கர்நாடக மாநிலத்தில் அண்மைக்காலம் வரை பெண்கள் நலன், பெண்கள் உரிமை ஆகியவற்றுக்காகச் சட்ட ரீதியாகவும் தெருவில் இறங்கியும் இடையறாது போராடிவரும் ‘விமோசனா’ போன்ற அமைப்புகளுடன் நான் இணைந்து செயலாற்றிவந்தேன். இன்றுங்கூட அந்தத் தொடர்பு அறுந்துவிடவில்லை. அடிக்கடி கர்நாடகத்திற்குச் சென்று இதுதொடர்பான பணிகளை மேற்கொண்டுவருகிறேன். கணவனை ஒரு சகிக்க முடியாத பிரச்சினையாக எதிர்கொள்ள நேரிடும் முகமதியப் பெண்கள், தீர்வுக்காக ஒளிந்து மறைந்துதான் எங்களை நாட வேண்டியுள்ளது. அப்படியும் அவர்களுக்கு எங்களால் சரியான பரிகாரம் தேடித்தர முடிவதில்லை. ‘ஜமாத்’ என்கிற வெளியார் கண்களுக்குப் புலப்படாத சங்கிலியால் தாம் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மனம் பொருமுவதைப் பார்த்துச் செய்வதறியாது திகைக்கும் கையறு நிலையில்தான் நாங்கள் உள்ளோம் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மலர் மன்னன்
சென்னை