அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
சு.ரா
அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
மு. பொன்னம்பலம்
சு.ரா. இறந்துவிட்டார். இச்செய்தி எனக்கெட்டியபோது அது என் மேல் மனத்தில் சிறிது நேரம் தரித்து நின்று, திடீரெனக் கீழ் இறங்கி என் ஆழ் இருப்பதைத் தொட்டபோது துயர் பூசிய இனந்தெரியாத உணர்வுகள் மேலாடி வந்தன.
‘இக்காலத்தில் எழுத்தாளனே அன்றைய ஞானிக்கடுத்த நிலையில் இருக்கிறான்’ என்று மு. தளையசிங்கம் எழுதினார்.
அவர் எப்பொழுதும் தன் நிலையை மற்றவர்களில் ஏற்றிப் பார்ப்பது வழமை.
ஆயினும் அவர் அவாவிய நிலை ஒரு சில தமிழ் எழுத்தாளர்களுக்கும் சித்தித்திருந்தது.
‘சித்தித்திருந்த’தென்றால் அவர்கள் சித்தர்களோ யோகிகளோ என்பதல்ல.
அதை மு.த. கருதவுமில்லை. மு.த. அவாவியதெல்லாம் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாத, தம் காலத்து முற்போக்குப் பாய்ச்சலுக்குத் தன்னை அர்ப்பணித்து வாழும் கலைஞனை.
அத்தகைய கீற்றுக்களின் சிலிர்ப்பு சு.ரா.வின் புன்னகையில் உள்ளோடி வெளிச்சமூட்டுவதைக் காணலாம்.
சு.ரா. தன் இளமைக் காலத்தில் மார்க்சியச் சித்தாந்தியாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால் கால முதிர்ச்சியில் அவரது சித்தாந்தம், வரையறைகளைக் கடந்த, உண்மையை நோக்கிய பிரவாகமாகப் பெருக்கெடுகிறது.
எங்கெங்கு தத்தளிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அதைச் சுமுகப்படுத்தும் முதலுதவிப் படை இவரது போக்கு.
இன, மத, சாதி வெள்ளத்தால் அடிபட்டு, இடம்பெயர்ந்து குந்தியிருக்கும் அகதியான அடிமட்டங்களுக்கு மீட்புப் பொதிகளோடு இறங்கும் எழுத்தாளுமை இவரது.
நேற்று முகத்தில் அறைந்தவனோடு இன்று முறுவலிக்கிறார். காறி உமிழ்ந்தவனோடு கை குலுக்குகிறார். தான் நிகழ்த்திய வேசைத்தனத்தை மறைக்க இவர் பேரை விற்ற கவிஞர்களையும் மன்னிக்கிறார். ஏன்?
சந்தர்ப்பவாதமா? தன்னலத் தேவையா?
இல்லை, தளையசிங்கம் கூறிய ஞானிகளுக்கடுத்த இன்றைய எழுத்தாளனுக்கு அத்தியாவசியமாகிவிட்ட உண்மைக்கான அர்ப்பணம் இவரிடம்.
அதனால்தான் மு.த. என்றவோர் ஈழத்துக் கலைஞனின் ஆற்றல் இவரை ஈர்க்கிறது.
உள்ளூரில் மு.த. புரியப்படாது பொறாமைக் காய்ச்சலுக்குள்ளாக்கப் பட்டிருந்தபோது அவரைப் புரிந்துகொண்ட மேன்மை சு.ராவுடையது. புரிந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய ஆளுமை அவருடையது.
இந்த ஆளுமையின் படிமம் எப்படியெல்லாம் விரிந்து படுகைபோட்டுப் பெருக்கெடுத்தது.
ஈழத்திலிருந்து தமிழகம் சென்ற எத்தனை எழுத்தாளர்கள் அவர் வீட்டில் நாட்கணக்கில் தங்கிச் சென்றிருக்கிறார்கள். என்னென்னவோ உதவியெல்லாம் அவரிடமிருந்து பெற்றுத் தேறியிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அந்த முகத்தில் உள்ளாழ்ந்த உளமார்ந்த புன்னகையின் சிலிர்ப்பு.
ஆனால் என்னுடைய அனுபவம் இது. மு.த.வின் அனுபவமும்கூட.
என்றைக்கும் ஒருவனின் பேராளுமையை எல்லாரும் ஜீரணித்துவிடுவதில்லை. அதனால் அவர்களின் ஆரோக்கியக் குறைவின் வெளிக்காட்டல்களான வாந்தியும் ஏப்பமும் இந்த ஆளுமைமேல் வந்து விழுகின்றன. இவர்களின் ஆரோக்கியக் குறைவின் உந்துதல் இவர்களைச் சுவரில் கரிபூசும் ‘கலைஞர்’களாக்குகிறது. தமது வக்கிரங்களையே மற்றவரில் ஏற்றிப் பார்க்கும் சுபாவம் இவர்களுக்குச் சுகம் தருவதாகிறது.
‘அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான்’ ஆக வாழ்ந்த சு.ரா.வைச் சுற்றி வக்கிர வளையங்கள் சுழலத் தொடங்கின, கலை இலக்கியம் என்ற பேரில்.
சடையப்ப வள்ளலால் பேணப்பட்ட கம்பனும் ஏனைய கவிஞர்களும் இப்படி மனநோயாளர்களாக மாறியதில்லை. ஆயிரத்தில் ஒருவராகத்தான் அவரைத் தம் கவிதா ஆற்றலால் ஞாபகப்படுத்திச் சென்றனர்.
நம் கவிஞர் பெருமான்களுக்கோ கிருஷ்ணமூர்த்தியும் கீதா உபதேசங்களும், இவர்கள் யாத்தளிக்கும் கவிதைகளும் இவர்களிடமிருந்தெழும் megalomania, schizophrenia பிசாசுகளின் பிறாண்டல்களால் விகாரமாக்கப்பட்ட இவர் முகங்களை மறைக்கும் கரித்துணிகளே.
‘நான்தான் தமிழிலே பாலுணர்வு பற்றி எழுதித் தமிழ்ச் சமூகத்தை ஆரோக்கியப்படுத்தும் மாமேதை’ என்று கூறிக்கொள்ளும் இன்னொரு வகை. உண்மையில் இவர்கள் உண்மையான மேதைகளான புதுமைப் பித்தனையும் சு.ரா.வையும் தாக்குவதன் மூலமே தம் பெயரை வாழவைத்துக்கொண்டிருக்கும் நவீன குருவிச்சைகள் (parasites).
இப்படி வக்கிர வளையங்கள் சு.ரா.வின் கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி வலம் வந்தன. வக்கிரங்களைச் சுற்றித்தான் சனி வளையங்கள் வலம்வருவது வழமை. ஆனால் சந்திரனுக்கேன் சனி வளையங்கள்?
காலம் தன் அச்சை விட்டுப் பிறழ்கிறதா?
பாரத நாட்டில் கங்கையும் காவேரியும் அள்ளிவரும் வண்டல்கள் இப்போது களைகளையே மேலோங்கிச் செழிக்க வைக்கின்றன, கற்பக தாருக்களையல்ல.
இது எந்த முனிவன் இட்ட சாபமோ?
கவிஞர் மு.பொ. காலம் சென்ற மு. தளையசிங்கத்தின் தம்பி. ஈழத்தின் முக்கிய விமர்சகர்களில் ஒருவர்.