'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'
எதிர்வினை
‘தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்’
‘காலச்சுவடு’ ஜனவரி 2006 இதழில் இடம்பெற்றுள்ள ‘தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்’ என்ற சிறப்புப் பகுதி தமிழியல் ஆய்வாளர்களுக்குக் கிடைத்த நல்விருந்தாகும்.
கம்பராமாயணத்துக்கான ‘செம்பதிப்பு’ இன்றுவரை ‘கைகூடாத கன’ வாகவே உள்ள சோக வரலாற்றைச் சிந்தையைத் தொடும் வகையில் சொல்கிறது சு. வேங்கடராமன் அவர்களுடைய கட்டுரை. ஈழத்தின் பதிப்பு முயற்சிகள் பற்றிப் பேசவந்த பொ. வேல்சாமி அவர்களது கட்டுரை (நன்கறியப்பட்டவர்களான ஆறுமுக நாவலர் மற்றும் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் தவிர்த்த) ஈழத்துப் பதிப்பாசிரியர்களுள் பலரைப் பற்றிய சுருக்க அறிமுகமாக அமைந்துள்ளது. இவர்களுள் வித்துவான் ந. சுப்பைய பிள்ளையின் தஞ்சைவாணன் கோவைப் பதிப்பின் சிறப்பைத் தமிழகத்தின் அந்நூற்பதிப்பு முயற்சிகளுடன் ஒப்புநோக்கிப் பொ. வேல்சாமி தந்துள்ள பாராட்டு ஈழத்தவர்களுக்கு மன நிறைவைத் தரக்கூடியது.
நாட்டார் வழக்காற்றியல் சார் பதிப்பு முயற்சிகள் ‘மாற்றாந்தாய் மனப் பான்மை’யுடன் அணுகப்பட்டுவந்த வரலாற்றை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கிறார் அ.கா. பெருமாள். தமிழ்ச் செம்பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராக ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை என்பாரை இனங்காட்டுகிறார் ராஜ் கௌதமன். இலக்கியப் பதிப்பு முயற்சிகளில் சமயக் கண்ணோட்டம் விளைவித்த தாக்கத்தைப் பெருமாள்முருகன் அவர்களின் கட்டுரை தெளிவாகவே எடுத்துரைக்கிறது. இவ்வாறே, விவிலியப் பதிப்பு முயற்சிகள் தொடர்பாக ஆ. சிவசுப்பிரமணியனும் பாரதியாரின் உரைநடை நூல்களின் பதிப்பு முயற்சிகள் பற்றிப் பழ. அதியமானும் ‘பாரதம் தந்த பகீரதன்’ ம.வீ. இராமானுஜாசாரியார் பற்றி ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களும் இசை நூல் பதிப்புகள் பற்றி நா. மம்மது அவர்களும் எழுதியுள்ளவை ஆழமும் நுட்பமும் சுவையும் பொருந்தியவையாக விளங்குகின்றன. தஞ்சை டி.என். இராமச்சந்திரன் அவர்களின் திருவாசகப் பதிப்புகள் தொடர்பான கட்டுரையின் குறிப்புகள் மிகுந்த பயனுடையன. முழுமையான கட்டுரையாகவே பதிவுசெய்திருந்தால் பயன் மிகுந்திருக்கும்.
‘தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்’ என்ற தலைப்புசார் பொருள்பரப்பு மேற்படி சில கட்டுரைகளோடு மட்டும் நிறைவுபெறாது. ‘சிலப்பதிகாரப் பதிப்புகள்’ மற்றும் ‘சித்தாந்த நூற்பதிப்புகள்’, புராண நூற்பதிப்புகள்’ ‘தொல்காப்பியம் பதிப்புகள்’ முதலியனவாக இப்பொருள் பரப்பு விரிவு பெறக்கூடியது என்பதையும் இங்குச் சுட்டுவது எனது கடமையாகிறது.
மேலும் ஒரு முக்கியக் குறிப்பு: சு. வேங்கடராமன் அவர்கள் தமது கட்டுரையில், ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனது கம்பராமாயணப் பதிப்பு முயற்சியில் அத்துறைப் புலமைமிக்க பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியமை’க்கான கவலையைப் பதிவுசெய்திருந்தார். ‘அதற்குப் பின்னால் இருந்திருக்கக்கூடிய அரசியல் எது?’ என்ற வினாவும் அக்கட்டுரையில் எழுப்பட்பட்டிருந்தது. இந்த ‘அரசியல்’ பற்றிய ஒரு முக்கியத் தகவல் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) அவர்களால் கணையாழி மார்ச் 2000 இதழில் (ப. 44) தரப்பட்டுள்ளது.
‘எஸ். வையாபுரிப்பிள்ளை நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கணையாழி கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவலின் சாராம்சம் வருமாறு :
“1950களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அமர்ந்திருந்த சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அப்பல்கலைக்கழகம் மேற்கொண்ட கம்பராமாயணப் பதிப்பு முயற்சியில் பங்களிப்புச் செய்வதற்குப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்களை அழைத்திருந்தார். ஆனால் வையாபுரிப்பிள்ளை யவர்களின் கால ஆய்வுகளில் அந்த அழைப்பார்வம் தொடர்ந்து செயல்பட முடியாதவாறு தடுத்துவிட்டனர். இவ்வாறு வையாபுரிப்பிள்ளையவர்களுக்கான அழைப்பைத் தடுக்க முயன்றவர்கள் தங்களுடன் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரத்தையும் இணைத்துக் கொள்ள முயன்றுள்ளனர். அதற்குத் தெ.பொ.மீ. மறுத்துவிட்டார்.”
வையாபுரிப்பிள்ளை அவர்கள் தொடர்பான இந்த நினைவிலே பேராசிரியர் தெ. பொ.மீ. அவர்களும் தொடர்புபடுகிறார். அவரது உயர் பண்பும் பதிவுபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கலாநிதி நா. சுப்பிரமணியன்
கனடா