நட்சத்திரங்களுக்குச் செல்லும் வழி
Photo Courtesy: aurpera
யாத்ரிகன் க்ருப்யா த்யான் தீஜியே... ரயில் ஒரு பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ரயில் பெரிய சிறிய ஊர்கள் பலவற்றைத் தாண்டிச் செல்கிறது, சிலவற்றில் நின்றும் பலதில் நில்லாமலும். ரயில் பெரிய நதிகள் பலவற்றைத் தாண்டிச் செல்கிறது, அதற்காக இரும்பாலான பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நதிகள் ரயிலைப் பொறாமையோடும் வெறுப்போடும் பயத்தோடும் பார்த்தபடி இருக்கின்றன, பின் கடலில் ஒன்றுகூடி அவை ரயிலைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்ளும் கிசுகிசுப்பு அலைகளில் கரைந்துபோகிறது. காடுகளுக்குள் மரங்களையும் பாதைகளையும் வெட்டி அமைக்கப்பட்ட ரயில் பாதை ஒரு பெரிய கறுப்பு வடுவைப் போலிருக்கிறது. ரயில் தன் வழியில் வரும் சில மலைகளின் மேல் ஏறி இறங்குகிறது. ரயில் தன் வழியில் வரும் சில மலைகளைக் குடைந்து செல்கிறது. ரயில் தன் வழியில் வரும் சில மலைகளைக் குடைந்து செல்கிறது. ரயில் தன் வழியில் வரும் சில மலைகளின் மேல் ஏறி இறங்குகிறது. ரயில் தன் வழியில் வரும் சில மலைகளைக் குடைந்து செல்கிறது.
உன்னிடமிருந்து இரண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறேன். என் அழைப்பை ஏற்காமல் மீட்டிங்கில் இருப்பதால் அரைமணிநேரம் கழித்து அழைக்கிறேனெனச் செய்தி அனுப்புகிறாய். ட்ரெயின் இரண்டரை மணிநேரம் லேட் எனப் பதில் அனுப்புகிறேன். இரயில் நிலையமும் இந்த ஊரைப் போலவே கொதிக்கிறது. நெரிசலான காத்திருப்பு அறையில் ஒருவழியாக மின்விசிறியின் கீழே இடம்பிடித்து அமர்கிறேன். நீ இருந்திருந்தால் ஏதாவது மாலுக்குப் போகலாம் என்றிருப்பாய். இப்போது ஃபோன் எடுத்ததுமே அதைத்தான் சொல்வாய்.
அதற்குள் இரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் மால்களைத் தேடிக் கண்டுபிடித்திருப்பாய். இங்கேயே வசதியாக இருக்கிறது என்று சொல்வேன். கோவப்படுவாய். எப்போதாவது உன்னிடம் சொல்லிவிட வேண்டும், எனக்கு அங்கே பயமாக இருக்கிறது என்று, யாராவது வந்து எப்போதுவேண்டுமானாலும் என்ன வேண்டும் என்றோ வேறு ஏதாவதோ கேட்டுவிட வாய்ப்பிருக்கும் ஒரு இடம். ரயில் நிலையத்திலும் பலமுறை போலீஸ்காரர்கள் வந்து எங்கே போக வேண்டும் என்று கேட்டபோதெல்லாம் போக எங்குமில்லாமலோ இருந்தோ பயந்திருக்கிறேன். இப்போது அப்படியில்லை, இவற்றைச் சமாளிக்கப் பழகிவிட்டேன். ஆனால் அதற்கு எப்போதேனும் பழகுவேன் என்று தோன்றவில்லை.
அரைமணிநேரத்திற்குப் பின் நீ அழைத்தபோது இது எதையுமே கேட்கவில்லை. சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னாய். ஒரு கதை சொல்லேன் என்றாய்.
ரயில் தன் வழியில் பல கதைகளுக்குள் புகுந்தும் சில கதைகளின் மேலே ஏறி நசுக்கியபடியும் செல்கிறது.
கேப்டன் ஜேம்ஸ் ஹார்ட் நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவுக்கு வந்திருக்கிறார். பல பணிகளுக்கிடையே அவர்களது ரயில்கள் இந்தியாவின் அடர்ந்த காடுகளைத் துளைத்து ஓடுவதைப் பார்ப்பதற்காகவும். இப்போது அவர் பயணித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாதை ஒருகாலத்தில் ஈடேற வாய்ப்பேயில்லாத திட்டமாக கருதப்பட்டது; எந்த குருட்டு நம்பிக்கையில் இதைத் தலைமையேற்றுத் தொடர்ந்தார் என்று அவருக்கும் தெரியவில்லை. ஆனால் கடலைப் பிளந்து வழியேற்படுத்த மோசஸுக்கு அருளிய கடவுள் தமக்கும் இந்த இருண்ட தேசத்தில் ஒளியின் வழியை எளிமையாக்க உதவுவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். கம்பெனிக்கும் அதன் தேவையிருந்தது. இப்போது ரயிலின் இடையறாத இரைச்சலுக்கு எதிர்ப்பதம் போலே பனியடர்ந்து அமைதியாக சூழ்ந்திருக்கும் மலையையும் காடுகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார். தார்ப்பாய் போன்றொரு துணியில் கசங்கலான சீருடையணிந்த ஒரு இந்தியப் பணியாளர் ஓடிவந்தார். கேப்டன் ஹார்ட்டின் முன் நின்று அபத்தமாக ஒரு சல்யூட் அடித்துவிட்டு ரயிலின் ஜன்னல் கதவுகளை இழுத்துமூடினார். எரிச்சலுற்ற ஜேம்ஸ் ‘வாட் இன் காட்’ஸ் நேம் ஆர் யூ டூயிங்’ என இரைந்தார். பயத்திலும் இன்னொரு கதவை மூடிவிட்டு. ‘சார், சாரி, தீஃப், சாவேஜஸ், ப்ளேஸ் டேஞ்சர்’ என உளறினார். ஜேம்ஸ் குழப்பத்தில் முழித்துக்கொண்டிருக்கையில் இந்தியப் படைவீரன் ஒருவன் வந்து அந்த இடத்தில் ஆதிவாசிகளின் தொல்லை இருப்பதாகவும் ஓடும் ரயிலில் உள்ளே நுழைந்து கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு இறங்கிவிடுவார்கள் எனவும் சில சமயம் கற்களை எறிவதோடு விஷ அம்புகளாலும் தாக்கக்கூடும் என்று தெளிவான ஆங்கிலத்தில் தெரிவித்தான். ஜேம்ஸ் அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு, தன் துப்பாக்கியைத் தயாராக வைத்துக்கொண்டு ஜன்னல்களைத் திறந்துவிட்டார். கேப்டன் ஜேம்ஸ் ஹார்ட் அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு, தன் துப்பாக்கி யைத் தயாராக வைத்துக்கொண்டு ஜன்னல்களைத் திறந்துவிட்டார்.
அப்போது எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும். அப்பா அம்மாவுடன் எங்கோ ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன். அடர்ந்த மரங்களிருக்கும் காடுகளிடையே ரயில் சென்றுகொண்டிருக்கிறது. விடியற்காலை நேரம். பனியில் சிறிது தூரத்துக்குமேல் சுற்றியிருக்கும் எதுவும் தெரியவில்லை என்பதால் அது நினைவிருக்கிறது. ரயில் பெரிய சுரங்கப்பாதையில் சட்டென்று நுழைந்தது. எனக்குக் காது முழுக்க அடைத்துக்கொண்டது. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த படபடவெனக் கடந்துசெல்லும் சுரங்க விளக்குகளாலோ அடைத்துக்கொண்ட காது களின் ஒலியற்ற இரைச்சலாலோ அச்சமுற்றேன். அழுகை கண் ஓரங்கள் வரை வந்துவிட்டாலும் எனக்கு பதிமூன்று வயது ஆகிவிட்டதால் கடித்து முழுங்கிக் கொண்டேன். பின் ரயில் சுரங்கத்திலிருந்து வெளியே வந்ததும் அப்பா சைகையில் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு மூச்சுவிடச் சொன்னார். காது பட்டென்று திறந்துகொண்டதும் சிரித்தேன். பின் கதவுகிட்ட போய் வேடிக்கை பார்க்கலாம் வா என்றார். அம்மா திட்டினார். இருந்தாலும் இருவரும் கதவருகே சென்றோம். ரயில் அதற்குள் அடுத்த சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. இம்முறை எனக்கு அந்தளவு பயமாக இல்லை. ஆனாலும் காது மறுபடி அடைத்துக்கொண்டது. சட்டென ரயில் சுரங்கப்பாதைக்குள் தண்டவாளத்தில் தேய்த்துக்கொண்டு நின்றது. எங்கள் கதவுக்கு நேராகக் கல்லில் குடைந்து ஒரு சிறிய இடம் இரு ஆட்கள் நிற்குமளவு ஏற்படுத்தப்பட்டு விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. சுவர் முழுக்கக் கறுப்பு வயர்கள் நரம்புகளைப் போல் ஓடின. மேலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.
நான் வேலைய விட்டுட்டேன்.
லூசு என்னாச்சு? திரும்ப அதே பிரச்சனையா?
ம்ம்ம்...
ம்ம்ம்...
உடனே என்ன நடந்ததென எனக்கு ஞாபகம் இல்லை. நினைவழிந்துபோன ஒரு கால இடைவெளியின் மறு எல்லையில் சுரங்கப்பாதையின் குடைவுக்குள் கிடந்தேன். ரயில் நின்றபோது நாங்கள் நின்றிருந்த கதவுக்கு எதிரிலிருந்த அதே குடைசலா என என்னால் அடையாளம் காணமுடியவில்லை. ரயிலைக் காணவில்லை. அம்மா அப்பாவும் இல்லை. நெஞ்சிலும் இடது நெற்றியிலும் குடையும் வலி. காதுக்குள் ரீங்காரச் சத்தம். லேசாக வெளியே எட்டிப்பார்த்தால் அடுத்த பத்தடி தூரத்தில் இருந்திருக்கக்கூடிய விளக்குகளே பனியில் சரியாகத் தெரியவில்லை. சுவரில் வடிந்து கீழே ஓடிய தண்ணீரில் ஊறிக் கால்கள் எரிச்சலுற்றன.
ம்ம்ம்...
ஏற்கனவே சொல்லியிருக்கேனா இந்தக் கதைய?
இல்ல, ஆமாம் இதெல்லாம் நிஜமா நடந்துச்சா? கதைதான?
சரி, சொல்றதக் கேளு.
சற்றுநேரம் கழித்து மெதுவாக வெளியே போகலாம் என்று முடிவெடுத்தேன். கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது. பனியாலோ அழுகையாலோ மூச்சுவிடக் கடினமாகியிருந்தது. மெதுவாக வெளியில் காலெடுத்து வைத்ததும் தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்க சுவரை ஒட்டி நின்றுகொண்டேன். சிறிது நேரம் ஆகியும் ரயில் வரவில்லை என்ற தைரியத்தில் மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தேன். அடுத்த விளக்கு இருக்குமிடம்வரை நடந்துசென்றேன். அது சற்றே பெரிய குடைசலாக இருந்தது. முதலிடத்தில் இருந்த சுவரைப் போல் இல்லாமல் கரடுமுரடான பாறையாகவே இருந்தது.
இரண்டு பக்கமும் வெளியேறும் வழி தெளிவாகத் தெரியாததால் இடதுபக்கம் செல்வதா வலதுபக்கம் செல்வதா என்று முடிவெடுக்க முடியவில்லை. அப்போது தான் அவளைப் பார்த்தேன். எல்கேஜி படிக்கக்கூடிய வயதிருக்கும் என்று அப்போது தோன்றியது. அவளது கண்கள் பெரிதாகவும் இருட்டில் லேசாகப் பச்சை நிறத்தில் மின்னுவது போலவும் இருந்தன. பயத்தில் உறைந்து நின்றேன். நான் வெளிச்சத்திலும் அவள் இருட்டிலும் நின்றாலும் அவளது வடிவத்தையும் கண்களையும் பார்க்க முடிந்தது. ஏனோ அவளும் பெண் குழந்தைதான் என்றும் தோன்றியது. ரயில் ட்ராக்கின் மேல் நின்று கொண்டிருந்தாள். கைகளை இருபக்கமும் நீட்டி பாலன்ஸ் செய்தபடி முன்னும்பின்னுமாக நடந்தபடியே என்னையும் அவ்வப்போது பார்த்துக்கொண்டாள். சற்றுநேரம் கழித்துதான் கவனித்தேனா இல்லை அவள் அப்போதுதான் வந்தாளா என்று தெரியவில்லை. அவளைப் போலவே இன்னொரு குழந்தை எனக்கு நேர் எதிரில் சுரங்கத்தின் மறுபக்கம் அமர்ந்திருந்தது. இருவரும் அவ்வப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும்போது சிரிப்பதுபோல எதுவோ ஒலிகளை ஏற்படுத்திக்கொண்டனர். பின் இரண்டாமவள் அங்கிருந்தே என்னைப் பார்த்து என்ன என்று தலையாட்டுவது போலிருந்தது. சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அவர்களைக் கவனிக்காவிட்டால் போய்விடுவார்கள். நான் வெளியே ஓடிவிடலாம். இல்லை அவர்களிடம் உதவி கேட்கலாம். ஆனால் அவர்களுக்கு நான் பேசுவது புரியும் என்றும் தோன்றவில்லை.
எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேனோ?
இன்னம் எவ்வளவு நேரம் இங்கயே உட்கார்ந்திருக்கணும்.
ரெண்டு மணிநேரம். போர் அடிக்குதா?
இங்க உட்கார்ந்திருக்க, ஆமா. உன் கதைய கேக்க, இல்ல. சொல்லு.
பின் அவர்கள் போய்விட்டார்கள். தங்களுக்குள் பேசியபடியே சென்றார்கள். மேலிருந்து நான் நிற்கும் இடத்தைச் சுற்றி ஒழுகத்தொடங்கியது. வெளியே மழை பெய்கிறதோ என்று யோசித்தேன். அப்பாவோ அம்மாவோ வேறு யாருமோ ஏன் இன்னமும் வரவே யில்லை. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். எந்தப் பக்கம் என்று ஞாபகம் இல்லை.
சற்றுத் தூரத்தில் ஒரு இடத்தில் வெளிச்சம் தெரிந்தது. இன்னொரு குடைசல். ஆனால் அதில் சுவரில் ஏணி ஒன்று சாய்த்துவைக்கப் பட்டிருந்தது. அதை நோக்கி நடந்தேன். எதுவோ என் காலின் மேல் ஏறி ஓடியது. அலறி, ஒரு கணம் உறைந்து நின்றபின்னும் எனது அலறல் எனக்கே கேட்டுக்கொண்டிருந்தது. எலியாக இருக்க வேண்டும். ஆனால் அப்போது ஒரு பெரிய எலியைக் கற்பனை செய்துகொண்டேன். அதன் பற்கள் கூராகவும் கண்கள் சிகப்பாக மின்னுவதாகவும். அந்த ஏணிக்கு மேலே சிறிய திறப்பு இருந்தது. பனியிலும் காலையின் சோம்பல் ஒளியிலும் மெல்லிய பச்சை தெரிந்தது. இதன்வழியாக மேலே ஏறலாமா? ஆனால் அது எங்கே இட்டுச்செல்லும்? சுரங்கத்தின் இரு திசைகளிலும் வெளியேறும் வழி தெரியவில்லை. அப்பா வந்தால், என்னைக் காணாமல் திரும்பிப் போய்விட்டால். எவ்வளவு நேரமாக இங்கிருக்கிறேன் என்று யோசித்தேன், ட்ரெயின் எவ்வளவு நேரம் பயணித்தபின் சுரங்கத்துக்குள் நின்றது, நேரத்தைக் கணக்கிட முயலும் எனது முயற்சிகள் தோல்வியடைந்தன. லேசாகப் பசிக்கத் தொடங்கியது. மெதுவாக அந்த ஏணியில் ஏறத் தொடங்கினேன். அவ்வப்போது கீழேயும் பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட மேலே வரை ஏறிவிட்டபோதுதான் கீழே சற்றுதூரம் தள்ளிநின்று மறுபடி என்னைக் கவனித்துக்கொண்டிருந்த அவளைக் கண்டேன். இம்முறை ஒருத்தி மட்டும்தான் இருந்தாள், கூட அவள் அம்மா வயதிருக்கக்கூடிய பெரியவர் ஒருவர் இருந்தார். வேகமாக ஏறத்தொடங்கினேன். அவர்கள் ஆர்வத்துடன் என்னை வேடிக்கை பார்ப்பதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட வெளியேறப்போகும்போது யாரோ மட்டைகளாலும் கிளைகளாலும் தலையிலேயே அடித்தார்கள். அலறிக்கொண்டே குனிந்து இரு படிகள் இறங்க, அந்தத் திறப்பின் மேல் ஒரு பெரிய பாறை உருட்டி மூடப்பட்டது. என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இருவரும் ஓடத் தொடங்கியிருந்தார்கள். நானும் இறங்கி விழுந்தெழுந்து அவர்கள் பின்னாலேயே ஓடினேன்.
சாப்பிட்டியா?
சாப்டேன், கதைய சொல்லு.
என்ன சாப்ட?
ஆம்லேட்
அப்புறம்
அவ்வளவுதான்.
போய் ஏதாவது சாப்பாடு சாப்பிடு.
கொஞ்ச நேரம் கழிச்சு போறேன். நீ சொல்லு, ப்ளீஸ்.
கொஞ்ச தூரம் வேகமாக ஓடியவர்கள். பின் நின்று நான் பின்தொடர்கிறேனா எனப் பார்த்துக்கொண்டு பொறுமையாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஓரிடத்தில் நின்றதும் மெதுவாக அருகில் சென்றேன். சைகையில் மெல்ல அருகில் வரச்சொல்லி அந்தப் பெரிய பெண் தலையைத் தடவிக்கொடுத்தார். அடுத்த ட்ரெயின் எப்போ வரும் என்று கேட்டேன். பின் அதையே ஆங்கிலத்திலும் சைகையிலும் கேட்க முயற்சி செய்தேன். அவர் சாப்பாடு வேண்டுமா என பதிலுக்குச் செய்கை செய்தார். நான் எதுவும் சொல்லாமல் நிற்க அவர்கள் நடக்கத் தொடங்கினார்கள். நானும் பின்னாலேயே நடந்தேன்.
சுரங்கத்திலேயே ஓரிடத்தில் லேசாக ஓராள் நுழையுமளவு பிளவிருந்தது. அதில் அவர்களைப் பின்தொடர்ந்து நடக்கக் கொஞ்சம் பெரிய அறை போன்ற இடத்திற்கு இட்டுச்சென்றது. ஓரத்தில் எரிந்துகொண்டிருந்த அடுப்பு மட்டும் அந்த அறையைச் சூடேற்றிக்கொண்டிருந்ததோடு மேலே மெல்லிய பச்சை நீல வெண்மையைக் காட்டியபடியிருந்த சிறிய திறப்புகளிலிருந்து வராத வெளிச்சத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அங்கே அந்த இன்னொரு பெண் குழந்தையும் அவர்கள் அப்பா வயதிருக்கும் ஒரு ஆணும் அமர்ந்திருந்தார்கள். அந்தக் குழந்தை அவரது முடியைப் பிடித்துப் பின்னால் இழுக்க அவர் அதை தூக்கிச் சுழற்றி விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். இன்னொரு மூலையில் இருட்டில் ஒரு கிழவி அரையுயிராகக் கிடப்பது தெரிந்தது.
சாப்பிட்டியா இல்லியா?
கொஞ்ச நேரம்
இப்போ போ
நீயும் போ
ம்ம்ம் சரி, ட்ரெயின் ஏறிட்டு கூப்புடுறேன் டாட்டா.
ஏய் சாரி சாரி தூங்கிட்டேன். ட்ரெயின் ஏறிட்டியா
ம்ம்ம் ரொம்ப நேரம் ஆச்சு. சாப்பிட்டியா
ம்ம்ம் நீ
ம்ம்ம்
எப்போ வருவ
நாளைக்குக் காலையில
ம்ம்ம், கத சொல்றியா...
ஏய் யாரும் கூட இருக்காங்களா என்ன?
இல்ல
ஹெலோ யாரு
யார்கிட்ட பேசுற... என்ன ஔர்ற
இல்ல வேற யாரோ பேசினாங்க
உனக்குப் பின்னாடி பாரு.
ஹெலோ. ஹெலோ.
ரயில் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து வெளியேறுகிறது. எதிர் இருக்கையில் இருக்கும் ரோஸ் சுடிதார் அணிந்த பெண் இங்கே சிக்னல் கிடைக்காதென ஹிந்தியில் சொல்கிறார். எனக்கு சிக்னல் இருப்பதாகக் காட்டுகிறது. சரியெனத் தலையாட்டுகிறேன். என் பையைச் சுட்டிக்காட்டிப் பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொல்கிறார். இந்தக் காடு ஆபத்தானதென்கிறார். இங்கிருக்கும் காட்டுவாசிகள் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஏறிப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு குதித்துவிடுவார்கள், திறந்திருக்கும் ஜன்னல்களை நோக்கி வெளியிலிருந்து கற்களை எறிவார்கள் என்கிறாள். பதிலளிக்காமல் மறுபடி உன்னை அழைக்க முயல்கிறேன்.
பயந்துட்டியா
ச்சீ பே
நீயும் என்ன பயமுறுத்ததான பண்ண
ம்ம்ம், சரி கத சொல்லு.
அங்கே அந்த நான்கு ஜோடி இரட்டைக் குழந்தைகளும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர். நடுவில் ஒரு சிறிய பெண் குழந்தை மட்டும் பரட்டைத் தலையோடு தனியாக உட்கார்ந்திருந்தாள். முதலில் அவள் முகத்தைப் பார்த்ததும் அவள் படு கோபமாக இருக்கிறாள் என்பதே தோன்றியது. அடுத்துதான் அவள் அச்சுஅசலாக என்னைப் போலவே இருக்கிறாள் என்பது தெரிந்தது. அவள் எந்த ஆச்சரியமும் படவில்லை, நான் வர ஏன் இவ்வளவு தாமதம் என்பதுபோலப் பார்த்தாள். எனக்கு இவர்களிடமும் இந்த இருட்டிலும் இத்தனை நாள், எவ்வளவு என்று எனக்குத் தெரியாது, தனியாக விட்டிருந்ததற்காக மன்னிப்பு கேட்கவேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அடுத்துத் தோன்றிய பயம் எல்லாவற்றையும் மூழ்கடித்தது. ‘வாண்ட் டூ ஈட் சம்திங் என இன்னொரு இரட்டையர்களில் ஒருவன் கேட்டான். என்ன சொன்னேன்’ என ஞாபகமில்லை, ஆனால் அவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். என்னைப் போலவே இருந்தவள் ஆவேசத்துடன் எழுந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள்.
மறுபடி சுரங்கத்துக்குள் வரும்வரை சிரிப்புச் சத்தம் லேசாகக் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் ஒரு விளக்கினடியில் முட்டிக்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டாள். அவளது ஆவேசம் அவமான உணர்விலிருந்து வருவது புரிந்தது. அதுபோன்ற பல சமயங்களில் எனது முகம் எப்படி இருந்திருக்கும் என இரண்டாவது நபராக இருந்து பார்க்க, நானும் அதே அவமானத்தையும் ஆவேசத்தையும் உணர்ந்தேன். கால்களைக் கட்டிக்கொண்டு அவள் பக்கத்திலேயே அமர்ந்தேன். அவள் மெதுவாக என்னை நிமிர்ந்து பார்த்து எவ்வளவு நாளா இங்க இருக்க என்று கேட்டாள். நான் பதிலளிக்கும் முன்னரே அவள் தொடர்ந்து நீண்ட நேரம் அழுதிருப்பதான குரலில் பேசத் தொடங்கினாள். அப்பாவோட ரயில்ல கதவு பக்கத்துல நின்னு வேடிக்கை பார்க்கும்போது திடீர்னு இந்த சுரங்கத்துக்குள்ள தவறி விழுந்துட்டேன். ரயில் போயிடுச்சு. எனக்கு எப்படி வெளிய போகறதுன்னு தெரியல. அவள் மீண்டும் தேம்பித் தேம்பி அழத்தொடங்க, தயங்கி, பின் ஆறுதலாகத் தலையைத் தடவிக்கொடுக்கத் தொடங்கினேன்.
பின் நீண்ட நேரம் கழித்து ரயில் வந்தது. நாங்கள் சுவரோடு ஒட்டிக் காதை மூடி நின்றுகொண்டோம். ரயில் எங்களிடமிருந்து சற்றுத்தூரம் முன்னே சென்று நின்றது. பொத்தான்கள் போடாமல் திறந்துவிடப்பட்ட வெள்ளைச் சட்டையும் நீட்டான கறுப்பு பேண்ட்டும் பல வண்ணங்களிலான மரத்தாலான நெக்லேஸும் அணிந்த ஒருவர் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார். அவருக்குப் பின்னாலேயே ஒரு குண்டு வெள்ளைக்காரர் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார். அவர் மூச்சிரைத்து நிற்க அவர் பின்னாலேயே கறுப்பு தடிமனான கோட்டும் மடித்துகட்டிய வெள்ளைவேட்டியுமணிந்த நபர் ஓடிவந்து துப்பாக்கியைப் பிடுங்கிச் சுட்டார். பின் போய் இறந்துகிடந்தவரிடமிருந்து பெட்டியைப் பிடுங்கிக்கொண்டு நடந்துவந்து வெள்ளைக்காரரிடம் கொடுத்தார். இருவருமாக ரயிலில் ஓடிச்சென்று ஏறும்வரை பார்த்துக்கொண்டிருந்தபின் நாங்களும் ரயிலை நோக்கி ஓடினோம்.
ஹெலோ.
கேக்குதா
ஹெலோ.
ஹெலோ
கேக்குது சொல்லு.
நான் கூட ரொம்ப பயந்துட்டேன். ஆனால் ரயில் கொஞ்ச தூரம் கூட போகல. அப்பா செயின புடிச்சு இழுத்து நிறுத்தியிருந்தாரு. என்னப் பார்த்ததும் அழுதுட்டார். என் உடம்பெல்லாம் நனைஞ்சு சேறா இருந்தது. அம்மா ரெண்டு பேரையும் அழுதுகிட்டே திட்டினாங்க. நிறைய பேர் எங்களையே பார்த்துப் பேசிகிட்டிருந்தது வெட்கமா இருந்தது. போகலாம் போகலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.
சரி தூக்கம் வருது.
ம்ம்ம் நானும் தூங்கறேன். டாட்டா.
பின்னொரு நாள் வேறொரு அலுவலகத்திலிருந்து வந்து என்னைக் கூட்டிச் செல்வதற்காகக் காத்திருக்கிறாய். இன்னமும் சோடியம் விளக்குகளிடமிருந்து விடுதலைபெறாத ஒரு தெருவில், மழையிரவில் நீ மட்டும் வெள்ளை மழைக்கோட்டணிந்தபடி அந்தப் பேருந்து நிறுத்தத்தின் விளம்பரப் பலகை வெளிச்சத்தின்கீழ் அமர்ந்திருக்கிறாய்.
எவ்ளோ நாள் அங்கேயே இருந்த
என்ன
எவ்ளோ நேரமாச்சு வந்து
ரொம்ப.
மின்னஞ்சல்: paperplane207.wordpress.com