கன்மலைக் கழுகு
2012இல் காலச்சுவடுக்கு வந்த நான்காவது நாளிலிருந்து எம்.எஸ். என்ற பெரியவரைத் தெரியும் என்பது எந்த வகையிலும் பொருந்தாத வாக்கியம். அவரது முகத்தில் எப்போதும் மிளிர்ந்துகொண்டிருக்கும் சிரிப்பும் மூளையின் உற்சாகமும் சிறந்த ஞாபகசக்தியும் 80 வயதைக் கடந்து இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். “எம்.எஸ். சார்” என்று நிறைய சந்தேகக் கேள்விகளுடன் அவரை அழைக்கும்போது “என்னம்மோ” என்று அவர் கேட்கும் குரலில் எங்கள் வேலையைத் தவறில்லாமல் செய்ய கிடைத்த பதிலின் திருப்தி தெரியும்.
ஒரு அடி தூரத்தில் இருக்கும் எம்எஸ் கண்களில் கணினியில் எங்கள் கண்களிலிருந்து விடுபட்ட பிழைகள் அகப்பட்டு அழிந்துபோகும். அவரது கண்களின் கழுகுப் பார்வையின் கூர்மை அப்படி. எப்படி என்று கேட்டால், “பிழைகள் மட்டும் கண்களுக்குத் தெரிகின்றன,” என்கிற பதில் சிரித்தபடியே வரும். அவர் கோபப்பட்டுப் பார்த்தது கிடையாது.