கடல்
அவர்கள் காலுக்கடியில் கிடந்த வெதுவெதுப்பான கறுப்பு மணலை நீருக்குள் முங்கிக் கைகளில் அள்ளிக்கொண்டார்கள். மணல் கையில் சேறாய்க் குழைந்தது. அதே சமயம் உப்புத்தாளைப்போல் தொடுவதற்குச் சொரசொரப்பாகவும் இருந்தது.
கையில் திரட்டிய மணலை உள்ளங்கையில் புரட்டி முகம், தோள், மார்பு என்று பூசினார்கள். விடாமல் புறப்பட்டுவந்த பேரலைகளில் உடம்பில் பூசிய மணல் கரைந்து மார்பின்மீது கரும் சாம்பல்நிறச் சங்கிலிகளாய்ப் புரண்டது.
முகத்தில் பூசியிருந்த மணல் கரையாமல் இருக்க தலையைக் கவனமாகப் பின்னுக்குச் சாய்த்திருந்தார்கள். அலை வருகிறது என்று தெரிந்தபோது அதன் அசைவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைகளைக் கடல்மீது நன்கு பரப்பிக் கால் அகட்டி நின்றுகொண்டார்கள். இப்போது முகங்கள் உச்சிகால சூரியனைப் பார்த்தபடி இருந்தன. மூடியிருந்த கண்களுக்குப் பின்னால் இளஞ்சிவப்பு சிரித்தது.
மிசுனோ மட்டும் அவர்களுடைய கும்மாளத்தில் பங்கெடுக்காமல் கரையோரமாக அலைகளைக் கைகளால் அளைந்தபடி அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றான். அவர்கள் மூன்றுபேரையும் தாண்டிப் பெருங்கடல் மத்தியான வெயிலில் விரித்துவைத்த வெள்ளிநிற ஜமுக்காளமாய் ஜ்வலித்துக்கொண்டிருந்தது.
முகத்தில் கடல்நீர் தெறித்துவிடாமல் இருக்க அலைகளோடு எம்பிஎம்பிக் குதித்துக்கொண்டிருந்த நிஷினோ, கண்ணோரங்களில் எரிய ஆரம்பித்திருந்த உப்புநீர்த் திவலைகளைத் துடைத்துவிட்டபடி மிசுனோவை மிகுந்த வெறுப்புடன் பார்த்தான்.
“ஏய் மிசுனோ. இங்கவந்து குளிக்காம அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே. இந்த மாதிரி மண்ணைத்தான் வெள்ளைக்காரன் தோல் பளபளப்பா இருக்கணும்னு காசு கொடுத்து வாங்கி மூஞ்சியில பூசிக்கிறான். இங்க காசு கொடுக்காம சும்மா கிடைக்குது, பாரு.”
அவர்களுக்குச் சற்றுப் பின்னால் கைகளை விரித்தவாறு கடல்நீரில் மல்லாக்க மிதந்துகொண்டிருந்த யோஷிமுரா கைகளால் கடல்நீரைச் சப்தமெழ அறைந்தபடி பெருத்த வெள்ளைத் திமிங்கலம் போல் திரும்பி அவர்களை நோக்கி நீந்திவந்தான்.
“மிசுனோவை சீண்டுறதே உனக்கு வேலையாப் போச்சு நிஷினோ. அவனுக்கு என்ன இஷ்டமோ அவன் அதைச் செய்யட்டுமே.”
கடலின் வெளிச்சத்தில் கலைந்த தலைமயிரிலிருந்து விரல் நகங்கள்வரை நிஷினோவின் உடம்பு ஏறத் தாழ ஒளியுருவாகவே மாறியிருந்தது. அவன் மிசுனோவையும் யோஷிமுராவையும் சில கணங்கள் உறுத்துப் பார்த்தான். அவன் கன்ன மேட்டில் செந்நிறப் பூக்களாய் ரௌத்திரம் குடியேறியிருந்தது. கைகளைத் தலைக்கு மேல் நீட்டி சோம்பல் முறிப்பதுபோல் பாவனை காட்டியபடியே நிஷினோ கடல் ஆழங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு பேசினான்.
“நான் ஏன் கண்ட பெட்டை நாய்களயும் சீண்டனும்?”
நிஷினோவின் வார்த்தைகளுக்குப் பதில் சொல்லும் வகையில் மிசுனோ எதையோ சொல்ல நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட யோஷிமுரா அவன் கழுத்தைச் சுற்றிக் கையைப்போட்டுக்கொண்டு கரையை நோக்கி மிகப் பெரிதாய்க் கைகளை அடித்தபடி நீந்த ஆரம்பித்தான்.
“சீக்கிரம் வா மிசுனோ. உன்னைச் சுறா மீன் பிடிக்க வருது.”
யோஷிமுரா, மிசுனோவைப் பிடித்திருந்த விதத்தில் அசாத்தியமான நெருக்கம் இருந்தது. அவன் உதடுகள் அடிக்கடி மிசுனோவின் கழுத்தை உரசிக்கொண்டன. அவன் கை மிசுனோவின் மார்பு முழுவதும் நிறுத்தி நிதானமாய் அலைந்தது. நிஷினோ இருவரையும் கவனித்தபடியே கடலுக்குள் இடுப்பை முன்னும்பின்னும் அசைத்தபடி பெரிய அடிகளை எடுத்துவைத்து நடந்து வந்தான். அவன் முகத்தில் தேமல்போல் அரைச்சிரிப்பு ஒன்று ஒட்டியிருந்தது.
மூவரும் கடற்கரையில் விரித்துவைக்கப்பட்டிருந்த மூவர்ண கான்வாஸ் விரிப்பில் கடலைப் பார்க்கும் வகையில் அமர்ந்துகொண்டார்கள். அவர்களின் அருகே சாப்பாட்டுக் கூடை ஒன்றும் நீல வெள்ளை ஐஸ் பெட்டி ஒன்றும் திறந்திருந்தன. யோஷிமுரா ஐஸ் பெட்டிக்குள்ளிருந்து பீர் பாட்டில்களை எடுத்து மற்ற இருவருக்கும் சின்னச் சுழற்சியோடு வீசினான். மூவரும் கையில் பீர் பாட்டில்களைப் பிடித்துக்கொண்டு கடலைத் தொடர்ந்து வெறித்துப் பார்த்தார்கள்.
பிரம்பங்கூடையில் சிறுசிறு பொட்டலங்களாக அவர் களுக்காக உணவுவகைகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. பூவேலைப்பாடுகள் அமைந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றில் மூவருக்குமாய் இந்தோனேஷிய பாணியில் தேங்காய்ப் பாலில் சமைத்த சோற்றை அடைத்துத் தந்திருந்தார்கள். சோற்றில் அவர்கள் வழக்கப்படி பாண்டான் இலைகள் சொருகப்பட்டிருக்க வேண்டும். கடற்கரை மணல்மீது சொதசொதவென்று கிடந்த வெக்கையில் பாண்டான் இலைகளின் வாசமும் மிளகாய்த் துவையலில் துவட்டிய கவுச்சியின் வாடையும் மெல்லிய இழையாகப் பரவியிருந்தன. ஆனால் வெயிலில் நீந்திய களைப்பில் யாருக்கும் பசிக்கவில்லை. அவ்வப்போது குளிர் கலையாமலிருந்த பீரை மட்டும் வாய்க்குள் கவிழ்த்து மிக ஆழமாக இழுத்துக்கொண்டார்கள்.
“தோக்கியோ இரைச்சல விட்டு இந்த எடத்துல வந்து உட்கார்ந்திருக்குறது நல்லாத்தான் இருக்கு இல்ல?”
உதடுகளில் ஒட்டியிருந்த பீர் நுரையைப் புறங்கையால் துடைத்தபடி யோஷிமுரா பேச்சை ஆரம்பித்தான்.
கடற்கரை காலியாக இருந்தது. அது பணக்காரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த உல்லாச விடுதி. தங்குபவர்களுக்கான சொகுசு மூன்றரை வீடுகள் பழைய ஜாவா கட்டடப் பாணியில் இரண்டடுக்குக் கூம்புக் கூரைகளோடு கட்டப்பட்டிருந்தன. கூரைகள்மீது ஸீராப் என்ற கல்மரத் துணுக்குகளை ஓடுகளைப்போல அடுக்கி இருந்தார்கள். வீடுகளின் முன்வாசல், கூரைப் படகின் முன்புறம் போல் இருந்தது. முகப்புத் தளத்தின் இரு பக்கங்களிலும் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த கனமான தேக்குமரத் தூண்கள். வாசலை விட்டு வெளியில் நடந்தால் கடற்கரையை அடையும் வகையில் வீடுகள் கிழக்கு நோக்கி அமைந்திருந்தன. கடற்கரை நெடுக இதேபோல் சொகுசு வீடுகள். ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒன்றரை கிலோமீட்டர் இடைவெளி. உல்லாச விடுதியின் தலைவாசல் மேற்குத் திசையில் எங்கோ தூரத்தில் இருந்தது. நாளுக்கு ஒரு முறையோ இரு முறையோ அந்த வழியாக நடந்துவந்த டச்சுக்காரர்களையும் ஜெர்மானியர்களையும் மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.
வெள்ளைச் சீருடை அணிந்த ஊழியர்களைத் தவிர மற்ற இந்தோனேஷியர்களை விடுதிக்குள் காண்பது அபூர்வமாக இருந்தது.
கடற்கரையில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டிருந்த மூவரும் சர்வதேசப் பங்குச் சந்தையில் நிறைய சம்பாதித்தார்கள். தினமும் உருவாக்கப்படும் பத்தாயிரக் கணக்கான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அவற்றின் உதவியால் பங்குச் சந்தையின் ஏறுமுகத்தையும் வீழ்ச்சியையும் துல்லியமாய்க் கணிக்க, தோக்கியோவின் உச்ச பல்கலைக்கழகங்களில் அவர்கள் பெற்ற கணித அறிவு உதவியது.
“இந்தக் கடல் என்னமாய்ப் புரள்கிறது, பொம்பளைபோல.” யோஷிமுரா மீண்டும் பேச்சைத் துவக்கினான்.
“எல்லாக் கடலும் பொண்ணுதான் தெரியுமா? ஆனால் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வயதுடைய பொண்ணு. உதாரணத்துக்கு, இதோ இந்தக் கடல் இருக்கே, இது மத்தியான நேரத்துல புருஷ சுகத்துக்காகப் படுக்கையில் புரண்டுகிட்டு இருக்குற கல்யாணமான மத்திய வயதுப் பொம்பளை. அடக்கமானதாகத் தோணினாலும் ரொம்பவே ஆபத்தானது. தாய்லாந்துல ஹாட்யாய்ங்கிற இடத்துல ஒரு கடல் இருக்கு. நீலநிறப் பாவாடையக் கையில் தூக்கிக்கிட்டுச் சின்னச்சின்னதா வெள்ளைநிறப் பாதம் அலையடிக்க ஓடிவந்து உன் மூஞ்சில தண்ணியத் தெறிக்கவுட்டு விளையாடும். அது பல்கலைக்கழகத்துல படிக்குற இருபது வயசுப் பொண்ணு.”
அந்த இடத்தில் சிறிது நேரத்துக்கு ஆழ்ந்த அமைதி நிலவியது. மூவரும் எந்த சிறிய அசைவும் இன்றிக் கடலை உற்றுப் பார்த்தார்கள். குளிர்ச்சி இழந்திருந்த பீரை ஒருமுறை வாயில் சுழற்றிவிட்டு நிஷினோ அதைக் கடற்கரை மணல்மீது கனமாகத் துப்பினான்.
“தாய்லாந்துக்கு நானும் யாமாடாவும் போன வருஷம் கோடை விடுப்புக்குப் போயிருந்தப்போ ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துச்சு தெரியுமா?”
யாமாடா அவர்கள் மூன்று பேரோடும் வேலை செய்பவன். அவர்களது வேலையிடத்தில் அவர்களைப் போலவே முப்பத்தைந்து வயதாகியும் திருமணமாகாத நிறைய ஆடவர்கள் வேலை செய்தார்கள்.
“நான் யாமாடா, அவன்கூடப் படிச்சவங்க ரெண்டு பேரு இப்ப இருக்குறது மாதிரியே கடற்கரையில உக்காந்து ரொட்டியும் பழமும் தின்னுக்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு குரங்கு பக்கத்துல இருந்த கேட்டுமேல வந்து உக்காந்துகிட்டு எங்ககிட்ட பழம் வேணும்னு கைநீட்டிக் கேட்டுச்சி.”
“ஒரு வேளை உங்கூடப் படிச்ச பழைய கூட்டாளியா இருக்குமோ?”
யோஷிமுரா கேட்டுவிட்டு வெடித்துச் சிரித்தான். நிஷினோ சிரிக்கவில்லை. மாறாக சிரிக்கும் யோஷிமுராவையே உற்றுப் பார்த்தான். அவன் முகத்தில் எப்போதும் போல் அரைச்சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. மிசுனோ முழங்கால்களைச் சுற்றிக் கைகளைக் கட்டியபடியே கடலைத் தொடர்ந்து வெறித்துக்கொண்டிருந்தான்.
“சிரிச்சு முடிச்சுட்டியா. இப்பக் கதையக் கேளு. முதல்ல நாங்க அந்த குரங்குக்கு நிலக்கடலைகளையும் சிப்ஸையும் தூக்கிப் போட்டோம். ஆரம்பத்துல பயந்த குரங்கு நேரமாக ஆக எங்க பக்கத்துல வர ஆரம்பிச்சது. குரங்குக்கு விளையாட்டுக் காட்டின மும்முரத்துல பீருக்காக வச்சிருந்த நிலக்கடலைங்களும் சிப்ஸும் தீர்ந்துபோனதைப் பார்த்து யாமாடா கத்த ஆரம்பிச்சான்.
டீருன்னு என்ன நெனச்சானோ தெரியல. ஐஸ் பெட்டியில இருந்த கனமான பீர் டின்னை எடுத்து ஏதோ பிளாஸ்டிக் துண்டைக் கையுல வச்சுத் திருப்பித் திருப்பிப் பார்த்துகிட்டிருந்த குரங்கோட தலைமேல குறிபார்த்து அடிச்சான். பீர் டின் குரங்கோட நெத்திக்கு ஓரமா நங்குன்னு இடிச்சது. கேட்டோட முனையில ஏறி உக்காந்திருந்த குரங்கு தரைக்கு விழுந்ததும் யமாடாவோட கூட்டாளிங்க ரெண்டு பேரும் குரங்கைப் போயி ரெண்டு கையாலயும் தூக்கிப் பிடிச்சுகிட்டாங்க. இதுல வேடிக்கை என்னனா தலையில அடிப்பட்டதால குரங்குக்குக் கொஞ்ச நேரத்துக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. ரெண்டு பக்கமும் மனுஷங்க தூக்கியிருக்காங்கங்கிற பிரக்ஞையே இல்லாம கஞ்சா அடிச்ச மாதிரி பேய் முழி முழிக்குது. நாங்க எல்லாரும் பக்கதுல இளநீ விக்குற கிழவிக்கிட்டேர்ந்து கயிறு வாங்கிட்டு வந்து குரங்கோட கையையும் காலையும் நல்லா விரிய வச்சுக் கேட்டோட கட்டுனோம்.”
குரங்கு எப்படி கட்டப்பட்டது என்பதை நிஷினோ நடித்துக் காட்டினான். சுற்றி விழுந்திருந்த முற்பகல் வெயில் கூன்முதுகோடும் குட்டையாகவும் நிஷினோ செய்வதை எல்லாம்
நையாண்டி செய்வதுபோல் அவன் அசைவுகளைக் கடற்கரை மணல்மீது கறுப்பாய் நகலெடுத்தது.
“உயிர்பபயம்னு சொல்றாங்களே, அது எவ்வளவு உண்மையான விஷயம் தெரியுமா யோஷிமுரா? தன்னால இனிமே அசையவே முடியாதுனு தெரிஞ்சதுக்கப்புறம் அந்தக் குரங்கு கீச்சுக்கீச்சுனு உயிரே போற மாதிரி கத்திச்சுப் பாரு, அந்த ஓலம்தான் உயிர்ப்பயம். சாகுறதுக்கு முன்னாலயே பல ஆயிரம் தடவை பயத்துல சாகாம சாகுறது. யாமாடா முதல்ல குரங்குக்குப் பீர் ஊட்டிவிட முயற்சி பண்ணான். குரங்கு முரண்டு பிடிக்க கீழ கிடந்த ஒரு இரும்புக் கம்பை எடுத்து முனையால குரங்கோட வாயில குத்தியே அதோட பல்லையெல்லாம் யாமாடா உடைச்சான். அப்புறமா நேரடியாவே குரங்கோட வாய்க்குள்ள பீரை ஊத்தினோம். நான்தான் குரங்கோட தலையை நல்லா பின்னால சாய்ச்சுப் பிடிச்சுக்கிட்டேன். குரங்குக்குப் போதைனா அப்படி ஒரு போதை. முக்கா டின் பீரு முடியறதுக்குள்ள அதோட தலை போதையில தொங்குது. திடீர்னு முழிச்சுக்கிட்டுக் குரங்கு உதட்டைச் சப்பிச்சப்பி அலறலா என்னென்னமோ சொல்லப் பாக்குது. நாங்க குரங்கைச் சும்மா இருக்கவே விடல. பீரு ஊத்திக்கிட்டே இருந்தோம். அதோட தலை தொங்கத் தொங்க அதை இரும்பால அடிச்சு எழுப்புனோம். குரங்கு போதையில மயக்கமாகுது. அப்புறம் எழுந்து வலியில உயிர்போற மாதிரி கத்துது. அது ரொம்ப சின்ன ஊரு. சுத்துப் பயணிங்க யாருமே இல்ல. சுத்தி நிக்கற தாய்லாந்து கடைக்காரங்க எல்லாரும் கைதட்டி ஆரவாரமா சிரிக்குறாங்க. இதுவும் எங்களுக்கு ஒரு மாதிரி போதையாகிப் போச்சு. கடைசில குரங்கு உருவமே தெரியாதபடி உடம்பெல்லாம் வீங்கி ரத்த விளாறாகிக் கிடந்துச்சுப் போயேன். யாமாடாதான் கடைசியில ரெண்டு விரலை வச்சே குரங்கோட கொட்டைகள...”
நிஷினோ காற்றில் கையை நீட்டி பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பதுபோல விரல்களை அசைத்துக்கொண்டிருந்தான். அவன் நிழலும் பட்டாம்பூச்சி பிடித்தது.
“அதோட குரங்கும் செத்துப்போச்சு.”
நிஷினோ பல மணி நேரமாய் நாடகம் நடித்துக் காட்டிய நிழல் நாடகக் கலைஞனைப்போல் லேசாய் சுழன்று விரிப்பில் கனமாக அமர்ந்தான். அவனுக்குப் போதை ஏறியிருந்தது. அவன் கண்களும் முகமும் செம்பவளங்களாகச் சிவந்திருந்தன.
நிஷினோ ஓரக்கண்ணால் மிசுனோவைப் பார்த்தபடியே மீண்டும் பேசினான். அவன் முகத்தில் மீண்டும் அந்த அரைப்புன்னகை வந்து அமர்ந்திருந்தது.
“ஆனால் எனக்கு ஒரே ஒரு குறைதான். குரங்கோட இவ்வளவு விளையாடுன நாம அந்த இரும்பை எடுத்து அதோட சூத்துல சொருவாம போயிட்டோமேங்கிற குறைதான்.”
இப்போது நிஷினோ, மிசுனோவின் முகத்தை மீண்டும் உற்றுப்பார்த்து வெடிச்சிரிப்புச் சிரித்தான். மிசுனோ அசையாமல் அமர்ந்திருந்தான். மடித்துவைத்திருக்கும் தனது முழங்கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதில் மிசுனோவின் விரல்கள் வெளிறியிருந்தன.
நிஷினோ கைகளைத் தனக்குப் பின்னால் முட்டுக் கொடுத்தபடி விரிப்பில் சாய்ந்தான்.
“மனுஷங்களுக்கு மனுஷ மூஞ்சியைப் பார்த்தாலே பிடிக்கிறதில்லனுதான் நினைக்குறேன். வாய்ப்புக் கெடைக்கிறப்ப எல்லாம் எதிர்ல இருக்குற மனுஷ னோட ரூபத்தையும் சாயலையும் அடிச்சுச் சின்னா பின்னாமாக்கத்தான் முயற்சி பண்ணுறாங்க.”
அவர்களைச் சுற்றிக் கடலாய் அமைதி பெருகிக் கலைந்தது. மணலிலிருந்து விரிப்புக்குள் பிரவேசித்த மண் பூச்சிகள் அவர்களின் பாதங்களைக் கடிக்க ஆரம்பித்தன. யோஷிமுரா எழுந்துநின்று கால்களால் மணலைப் பலமாக மிதித்தான். ஒரு காலால் மற்ற காலைச் சொறிந்துகொண்டான்.
“இந்தக் கடல் எவ்வளவு அழகா இருக்கு. இப்படியே நேராப் போனா ஆஸ்திரேலியாதான். நடுவுல வேற எந்த நிலப்பகுதியும் இல்ல.”
சொல்லிவிட்டு மிசுனோவைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்கள் மிசுனோவின் மெலிந்த தேகத்தின்மீது ஆசையோடு அலைந்தன.
“ரெண்டாம் உலகப் போர் நேரத்துல இந்தோனேஷியா வரைக்கும் வந்த ஜப்பானிய ராணுவம் ஆஸ்திரேலியா மேலயும் படையெடுக்கத் தயாரா இருந்துச்சாம். அப்படி படையெடுத்திருந்தா ஆஸ்திரேலியாவுலகூட நம்ம கொடிதான் பறந்திருக்கும்.”
“ஹ சும்மா பொய்யி. ஆஸ்திரேலியா மேல படையெடுக் கிறதுக்குத் தேவையான தளவாடங்கள் நம்மகிட்ட இல்ல அப்போ.”
“இல்ல ஆஸ்திரேலியா வரைக்கும் போறதுக்கு போர்க்கால ஜப்பானுக்குத் தேவையான எல்லா ஆற்றலும் இருந்துச்சுனு ஆஸ்திரேலியாக்காரனே நம்புனான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டுல ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி துறைமுகத்தை வெற்றிகரமாத் தாக்குன கதை உனக்குத் தெரியுமா?”
அவர்கள் பீர் குடித்திருக்கும் முதிர் இளையர்கள். நன்றாகச் சம்பாதிப்பவர்கள். அவர்களது விவாதம் அகண்ட மத்தியானமாய், மணலுக்குள்ளிருந்து புறப்பட்டுவரும் மண் பூச்சிகளாய்த் தொடர்ந்தது.
மிசுனோ கடலையே இன்னமும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனிடம் தன் ரகசியங்களைச் சொல்லத் துடிப்பதுபோல் பொங்கிப்பொங்கி விழுந்தது.
இந்தக் கடல் பெரியது; மிகுந்த பொறுமை வாய்ந்தது. இதன் ஓலம் கேட்டில் கட்டிவைக்கப்பட்டு இரும்புக் கம்பியால் உடல் சிதைய அடித்து நொறுக்கப்பட்ட குரங்கின் அலறல்போல அவன் காதை அடைத்தது.
“இல்லை, நம்மால அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது. போனாலும் நிரந்தரமா ஜெயிச்சிருக்க முடியாது.”
விவாதம் செய்துகொண்டிருந்த யோஷிமுராவும் நிஷினோவும் திரும்பி விரிப்பில் அமர்ந்திருந்த மிசுனோவை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
“எல்லாத்துக்கும் நடுவுலதான் கடல் இருக்கே. அதைத் தாண்டுறது கஷ்டம்.”
மிசுனோ பள்ளியிலும் வேலையிடத்திலும் சில சமயங் களில் பொதுக் கழிப்பறைகளிலும் அவன் அனுபவிக்க நேர்ந்த, அனுபவிக்கப் போகும் அவமானங்களை நினைத்துக்கொண்டான்.
“ஆமா, எல்லாருக்கும் நடுவுல கடல் இருக்கு.”
மிசுனோ எழுந்துபோய் யோஷிமுராவை நிஷினோவின் முன்னிலையிலேயே ஆரத் தழுவி வாயோடு வாய் வைத்து முத்தமிட்டான்.
அவர்களுக்கிடையில் குளிர்ந்த நீலமாய்க் கடல் நிறைந்திருந்தது.
மின்னஞ்சல்: sithurajponraj134@gmail.com