இன்றும் காந்தி
நூற்றாண்டைக் கடந்த பின்பும் ஓர் ஆளுமையும் அவரை வியந்து சொல்லப்பட்ட புகழ்மொழியும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. புதுப் புது விவாதங்களுக்கு அந்த ஆளுமை இலக்காகிறது. திரும்பத் திரும்ப அந்தப் பாராட்டு வாசகம் மேற்கோள் காட்டப்படுகிறது.
‘இதுபோன்று சதையும் ரத்தமும்கொண்ட ஒரு மனிதர் இந்த பூமியில் நடமாடினார் என்றால் அதை எதிர்காலத் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்’
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் இந்தக் கூற்று காந்தியைப் பற்றிய உரையாடல்களிலும் இடையீடுகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஆம். நம்ப முடியாமையின் பின்புலத்திலும் காந்தி நம்பியே ஆக வேண்டியவராகத் திகழ்கிறார்.
காந்தி – மானுட வரலாற்றின் மகத்தான புதிர்களில் ஒன்று. இன்னும் விடுவிக்கப்படாத புதிர். என்றும் அவிழாத மர்மம். ஒவ்வொரு தருணத்திலும் காலத்தையும் இடத்தையும் சமூகங்களையும் தாண்டி அவரது பொருத்தப்பாடு உறுதி பெற்றே வருகிறது. காந்தி போற்றப்பட்ட அளவு வரலாற்றில் வேறு எவரும் கொண்டாடப்பட்டது இல்லை. ஒரு தரப்பில் அவர் அவதாரமாகவே கருதப்படுகிறார். அதேசமயம் அவர் மீது கொட்டப்பட்ட வசைகளுக்கும் கணக்கு இல்லை. இந்தத் தரப்பில் அவர் குலத்தைக் கெடுத்த கோடரிக் காம்பாகத் தூற்றப்படுகிறார். உண்மையில் காந்தியின் ஆளுமை இந்தப் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்ட புள்ளியிலேயே நிலைகொண்டிருக்கிறது. அந்த இருப்பின் மர்மம் எல்லாக் காலத்திலும் தொடரும் என்றே நிகழ்காலம் முன்மொழிகிறது.
காந்தி என்ற ஆளுமையும் அதிலிருந்து படரும் கருத்தியல் வெளிச்சமும் ஆதரவுத் தரப்பினருக்குத் தேவையாகவும் மாற்றுத் தரப்பினருக்குத் தவிர்க்க இயலாததாகவும் இருந்து வருகின்றன.
காந்தியைத் தேசியவாதியாக வரையறுத்தால் அவர் சர்வதேசியவாதியாக உருவம் பெறுகிறார். இந்து மதவாதியாகச் சித்தரிக்கப்பட்டால் சர்வமத சமரசராகிறார். சனாதனியாகக் குறைகாணப்படும் அதே கணத்தில் சீர்திருத்தவாதியாக எழுகிறார். சாதியைத் தாங்கிப் பிடிப்பவர் என்று குற்றம் சாட்டலாம். ஆனால் அவர் சாதிக்கு அதீதமானவர். இஸ்லாமியருக்கு ஆதரவாளர். அதே சமயம் அவர்களுக்குப் பகைவரும் கூட. முதலாளியத்துக்குத் துணைபோனவர். ஆனால் தொழிலாளர் உரிமைக்காகவும் முன்னின்று போராடியவர். ஏகாதிபத்தியத்தை நகம் முதல் சிகைவரை எதிர்த்தவர். எனினும் அதன் நடைமுறையாளர்களுடன் இணக்கம் பேணியவர். அறிவியலுக்கு முரணானவர்; இருந்தும் அதை வெறுக்காதவர். பெண்களின் மீது கட்டுப்பாடுகள் விதித்தவர். அவரே அவர்களது சுதந்திரத்தை வலியுறுத்தியவர்.
எதிர் இணைகளின் முனைகளிலிருந்தே காந்தி பார்க்கப்படு கிறார். ஆனால் அவரது முதன்மை இரு முனைகளுக்கும் நடுவிலானது; அல்லது அவை எட்டாத தூரத்திலிருப்பது. அவரது சிந்தையும் செயலும் பிரிக்க இயலாதவை. அதனால்தான் தனது வாழ்க்கையையே தனது செய்தி என்று அவரால் துணிந்து சொல்ல முடிந்தது. தனி மனிதர் என்ற போதும் அவர் சமூக மனிதர். சமூகத்தின் அங்கமாக இருந்தபோதும் தனிமையானவர். அதனால்தான் அவரால் சத்தியத்தை அஞ்சாமல் சோதனை செய்ய முடிந்தது.
தன்னை ஆதரிப்பவர்களுக்கு இடையில் அவர் இருப்பதுபோலவே தன்னை வெறுப்பவர்களுக்கு நடுவிலும் காந்தி இருக்கிறார். இன்னும் பொருத்தமாகச் சொன்னால் எல்லாருக்குள்ளும் காந்தியின் ஏதாவது ஒரு கூறு இருக்கிறது. அதுதான் அவரை இன்றைக்கும் பொருத்தமுள்ளவராகவும் தேவையானவராகவும் தவிர்க்க இயலாதவராகவும் ஆக்குகிறது. பாதிக்கப்படுபவர்களும் பாதிப்பவர்களுமான முரண் தரப்புகளுக்கு இடையில் பாதிக்கப்படுபவர்களின் சார்பாக வாதிடும் வழக்குரைஞராக காந்தியே முன்னிருத்தப்படுகிறார்.
‘காந்திக்குப் பிந்தைய காந்தி’ என்ற கட்டுரையில் (தி லிட்டில் மாகஸீன் , இதழ் 1, மே 2000) அஷீஷ் நந்தி நான்கு காந்திகளை அறிமுகப்படுத்துகிறார்.
முதலாமவர் இந்திய அரசியலின் காந்தி, இரண்டாமவர் காந்தியர்களின் காந்தி, மூன்றாமவர் அறிவுலகத் தத்தாரிகளின் காந்தி, நான்காமவர் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா இடங்களிலும் அச்சுறுத்தும் நிலைமைகளும் மனிதாபிமானமற்ற ஆர்ப்பாட்டங்களும் கோலோச்சும்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக இடுங்கிய தெருக்களில் கோலூன்றி நடந்து செல்லும் காந்தி. மானுடச் சிக்கல் கொந்தளிப்பு நிலையை அடையும்போது நான்காம் காந்தியின் தேவை வெகுவாக உணரப்படும் என்று அஷீஷ் நந்தி குறிப்பிடுகிறார். இன்றைய நமது காலம் அதுபோன்றது. எனவே தன்னியல்பாகவே காந்தி உணரப்படுகிறார்.
காலச்சுவடு வெளியிடும் இரண்டாவது காந்தி சிறப்பிதழ் இது. காந்தியும் காந்தியமும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியிருந்த 2008 இல் ஜனவரி இதழ் ‘அறியப்படாத காந்தி ‘ – சிறப்புப் பகுதியுடன் வெளியானது. கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழில் உயிர்பெற்று நடந்து வரும் காந்திய உரையாடல்களுக்குக் காலச்சுவடு காந்தி இதழும் ஒரு தூண்டுதல். அதைத் தொடர்ந்து காந்தியைப் பற்றிய பரவலான உரையாடல்கள் நிகழ்ந்தன. பல தரப்புகளில் கருத்தாடல்கள் நடந்தன. காந்தியைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகும் நூல்கள் வெளியாயின. காந்தியச் செயல்பாடுகள் கவனத்துக்கு வந்தன.
2008க்கும் 2022க்கும் இடையிலான கால அளவில் காந்தி மறு வாசிப்பு செய்யப்பட்டிருக்கிறார். மறுபடி கண்டடையப்பட்டிருக்கிறார். அதற்கு இந்தச் சிறப்புப் பகுதியே சான்று. 2008 ஆம் ஆண்டு வெளியான சிறப்புப் பகுதியில் வெளியான கட்டுரைகளில் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணனின் கட்டுரை நீங்கலாகப் பிற அனைத்தும் மொழிபெயர்ப்புகளாகவே இருந்தன. அஷீஷ் நந்தி, யூ.ஆர். அனந்தமூர்த்தி, ராமச்சந்திர குஹா, ஏ.கே. அப்துல் மஜீத் ஆகியோரது ஆக்கங்கள் தமிழில் பெயர்த்து வெளியிடப்பட்டன. தமிழில் எழுதப்பட்ட ஆக்கங்கள் இல்லாமற் போனதும் எழுத ஆட்களில்லாமல் இருந்ததும் குறையாகவே தென்பட்டது. கடந்த பதினான்கு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் காந்திய விழிப்புணர்வு அந்தக் குறையைக் களைந்திருக்கிறது.
இந்தச் சிறப்புப் பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் அனைத்தும் புதிய தலைமுறையினரால் எழுதப்பட்டவை. காந்தியைப் புதிய நோக்கில் வாசித்து எழுதப்பட்டவை. எழுத்தில் மட்டுமல்லாமல் சிந்தனையிலும் வாழ்க்கைச் செயல்பாட்டிலும் காந்தியை இவர்கள் முன்னிருத்துகிறார்கள். இன்றும் காந்தி நம்மோடு இருக்கிறார் என்று சொல்வதன் சான்று இந்தப் பகுதி.
கொடுங் கனவின் காலத்தில் வாழ நாம் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். சகிப்பின்மை, பகைமை, சமூக அவமதிப்புகள் நம்மைச் சுற்றித் தாண்டவமாடுகின்றன; மேலான மானுட விழுமியங்கள் சரிந்து விழுகின்றன. இழிபடு போர், கொலை, தண்டம் நமது அரசியலைப் பின்னியிருக்கின்றன. இந்தச் சூழலில் காந்தியின் மெய்ஞ் ஞானத் துணிவே நாம் முன்னேறும் பாதையின் ஒளி.