எம். யுவன் கவிதைகள்
அசந்தர்ப்பம்
கிழவனின் காமம்போல
அல்லது
பேரிளம்பெண்ணின் மழலைபோல
பகலில் கவிந்த இருள்போல
அல்லது
நள்ளிரவின் கூர்மைபோல
பேதையின் பேருரைபோல
அல்லது
காதலியின் மௌனம்போல
மரணவீட்டில் நகைப்பொலிபோல
அல்லது
பகற்கனவில் கலவிபோல
வந்து தீர்கிறது இக்கணம்.
உறங்கும் உடல்மீது ஊரும் கனவென
அல்லது
சவத்தில் சொட்டிய கண்ணீர்த் துளியென
தானாகப் புரள்கிறது - ஒரு மிடறு
திகைப்பின் துளியை
அருந்தித் திகைக்கிறேன். கனம்
தாளாது நசுங்குகிறேன். ஆனாலும்
ஒவ்வொரு முறையும்
தடுமாறி
காலூன்றி
நிமிர்ந்துவிடுகிறேன்.
-------------------------
இதுவும்தான், அதுவும்தான்
மரத் தண்டிலிருந்து பட்டையை
உரிப்பதென
இடத்திலிருந்து வேளையைப்
பிரித்தேன். அப்போது
எங்கே இருந்தேன்
இப்போதிலா, இங்கேயா?
இன்னொரு சமயம்
காம்பிலிருந்து இலந்தையைப்
பறிப்பதென
விண்மீன் ஒன்றைப்
பறித்தெடுத்தேன்.
உள்ளங்கையில் திகழ்ந்தது
குளுமையா வெம்மையா?
பின்னொரு நாள்
குழிப்பந்து ஆட்டத்தில்
கோள் ஒன்றைச் சேந்தியெடுத்துத்
தவழவிட்டேன். உருண்டுருண்டுருண்டு
அது போய்ச் சேர்ந்தது
அண்டத்தினுள்ளா வெளியேவா?
பழைய கட்டடத்தைப் புதுப்பிப்பதென
இறந்த காலத்தின் அலகொன்றைப்
புத்துயிர்க்க முனைந்தேன். உடனடியாய்
அது என் வசிப்பிடமானது
நிஜமா பிரமையா?
கண்ணீர் பெருகித் திகைத்த பொழுதில்
தயிரிலிருந்து வெண்ணெய் கடைவதென
முறிந்த உறவிலிருந்து அன்பைத்
திரட்டக் கிளம்பினேன்.
ஊமத்தங்காய் வடிவில்
திரண்ட முள்பந்து உள்ளங்கையில்
அழுத்தி ரத்தமெனக் கசிந்தது
வேதனையா நிம்மதியா?
எதுவானால் என்ன,
சட்டையைக் கழற்றும்
பாம்பின் ரணம் தீர
இன்னொன்று உதித்து
போர்த்தி மூடுகிறது.
உரித்த சட்டை பளபளக்கிறது
உரிந்த உடம்பும்தான்…