யாழ்ப்பாணப பார்வை
புத்தகப் பகுதி
பனிவிழும் பனைவனம்
(அனுபவப் பதிவு)
செல்வம் அருளானந்தம்
யாழ்ப்பாணப் பார்வை
இந்தத் தலைப்பு செல்வத்தின் புத்தகத்தில் வரும் ஒரு வரியிலிருந்து எடுக்கப்பட்டது. பார்க்கத் தக்காத ஓர் இக்கட்டான சூழலில் ‘யாழ்ப்பாணப் பார்வை’யை வீசி எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார் என்று செல்வம் எழுதுகிறார். இந்த யாழ்ப்பாணப் பார்வையைதான் செல்வம் கலாதியாகவும் கலகலப்பாகவும் அதே நேரத்தில் கவலை தரும் தொனியிலும் இந்தப் பிரதியில் பதிவு செய்திருக்கிறார். தமிழரின் வாழ்வில் இரண்டு அம்சங்கள்தான் தொடர்ந்து சுழன்றுகொண்டிருக்கின்றன. ஒன்று காதல், மற்றது மோதல். இந்த நூலில் இது இரண்டும் உண்டு. இரண்டுமே தோல்வியில் முடிவடைகின்றன. ஆனால் இது ஒரு நிறைவான புத்தகம்; விடுதலை அளிக்கும் புத்தகம்.
இந்த எழுத்து துன்பமும் இன்பமும் வலியும் பகடியும் நிறைந்த ஒரு நினைவு கூறல். இங்கே சொல்லப்பட்டவை எந்த ஒரு சரித்திரப் புத்தகத்திலும் பதிவு செய்யப்படப்போவது இல்லை. ஆனால் இவை ஈழத்தமிழரின் வாழ்வில் நடந்தவை. ஓர் இனம் ஒரு காலகட்டத்தில் அனுபவித்த, உட்படுத்தப்பட்ட வியப்புகளும் விக்கினங்களும் வியாகுலங்களும் அவர்களின் பலமும் பலகீனமும் எந்தவிதத் தீர்ப்பும் இல்லாமல் இங்கே சொல்லப்படுகிறது. இங்கே கூறப்பட்டது ஒருசிலரின் நினைவுகளில் இன்னும் இருக்கலாம். செல்வத்தின் எழுத்து அந்தச் சரித்திரத்தை ஆணவப்படுத்தியது மட்டுமல்ல, இந்தச் சம்பவங்கள் அவரை என்ன மாதிரியான ஆளாக மாற்றியது என்றும் கூறுகிறது. இங்கே கூறப்பட்டவை சும்மா நினைவலைகளோ, ஞாபக்குறிப்புகளோ அல்ல. அதற்குள்ளாக ஒரு கதையமைப்பையும் கருவையும் உருவாக்கி ஓர் இலக்கிய செளந்தரியத்தைக் கொடுத்திருக்கிறார். பக்தித் தன்மை இல்லாமல் பழங்கால நினைவுகளைக் கலையம்சம் கொண்ட கெட்டிக்காரத்தனமான புனைவிலக்கியமாக செல்வம் மாற்றியிருக்கிறார். இந்த நூலில் வரும் மனிதர்கள் உன்மையான மாந்தர்களாகவே இருக்கலாம். செல்வத்தின் எழுத்தில் சுவைநலஞ் சான்றவர்களாக வடிவமைக்கப்பட்டிருகிறார்கள்.
இந்த நூல் தொன்மம், காதல், யாழ்ப்பாண சாதி அடுக்குகள், அரசியல் பிரதிபலிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள மிகவும் வியக்கத்தக இலக்கிய இணைவு. “யாழ்பாணத்தான், மட்டக்களப்பான், மன்னாரான் என்ற வேற்றுமையே மறைஞ்சு, அவன் சிங்களவன், இவன் முஸ்லீம், அவன் யாழ்ப்பாணத்தான், இவன் கிழக்கான், மற்றவன் மலை நாட்டான்” என்று பிரிந்து நிற்க விரும்பாத கனவியலான இலங்கை இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது..
கல்கியின் நூல்கள்போல் தொக்கையானபாகங்களை அடுக்கிக்கொண்டுபோனால் டுபாய் பூர்ஜ் காலீஃபாவைத் தொடும் அளவுக்குப் புத்தகம் எழுதுவது செல்வத்தின் மரபணுவில் இல்லை. யாழ்ப்பாண தேசிய கொறியல் தீனியான ஒல்லிப் பனங்கிழங்கைப்போல் குறைந்த பக்க நூல்களை எழுதுவதுதான் இவருக்கு மதிப்பையும் மக்களிடையே மரியாதையையும் கொடுத்திருக்கிறது. பனங்கிழங்கு நோஞ்சலாக இருந்தாலும் பருத்தித்துறைப் பரியாரியார்கள் சொல்வது போல் உடம்புக்கு நல்லது. செல்வத்தின் ஆக்கம் உங்கள் இலக்கிய தாபத்திற்கு நல்லது.
செல்வத்தின் இன்னும் ஒரு தனிச்சிறப்பு எளிய மக்களுக்காக, அவருடைய எளிய மொழியில் உடனடித் தன்மையான பாணியில் அவர்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் எழுதுவது. அவரைச் சுற்றியிருப்பவர்களை உற்சாகப்படுத்தவும் தன் நிலைப் பாட்டைத் தெரியப்படுத்தவும் செய்கிற நடுநிலைமையற்ற பனுவல் இது. ‘ஒருவன் இன்னொருவனை அடித்துக்கொண்டு நிற்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்பவனும் அல்லது அதைப் பார்க்காத மாதிரி விலத்திக்கொண்டு போகிறவனும் அடிக்கிறவன் பக்கம்தான் நிற்கிறான்’ என்ற வரிகள் பக்கம் சாரா நிலையும் இன்னுமொரு நிலைதான். அது ஆண்டகைகள், சாதிக்காரர்களின் ஏற்கெனவே இறுக்கமாக்கப்பட்ட தற்போதைய நிலையை இன்னும் திடப்படுத்துகிறது. செல்வத்தின் நடுநிலைமையை பற்றிய விமர்சன வாசகம் பேருந்துகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் இடம்பெறக்கூடிய தகுதியுடையது.
இது ஒரே நேரத்தில் அறிவார்ந்த, உணர்ச்சிகரமான ஓர் இலக்கிய அனுபவத்தை உருவாக்குகிறது. குறள், சங்கக் கவிதை, கிறிஸ்தவத் திருமறை, திருவாசகம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், கண்ணதாசன் பாடல்கள் கொண்ட பின்நவீனத்தின் கலவை இது. இந்த இலக்கிய உத்தி இனம், தமிழ்த் தேசியம், சாதியம், விடுதலை இயக்கங்களைச் சற்றுப் பின்தள்ளி யாழ்ப்பாணக் கிடுகுவேலிக் கலாச்சாரத்துடன் 18ஆம் நூறாண்டின் கிறிஸ்தவ மதப் பரப்பாளர்கள் பாஷையில் சொன்னால் சல்லாபிக்க முடிகிறது.
தனக்கே உரித்தான ஒரு பாணியை செல்வம் உருவாக்கி இருக்கிறார். சமகாலத்தின் நேரடி விமர்சனமாக நல்ல கதையை எழுத முடியும் என்று செல்வம் நிரூபித்திருக்கிறார். இந்நூல் செல்வத்தின் வழக்கமான ஏக்கம், நுணுக்கமான சமூக, அரசியல் அவதானிப்பு ஆகியவற்றின் கலவையுடன் எழுதப்பட்டுள்ளது.
‘மழை தூறியபோது பெய்த மழையை மறைக்கக் குடைபிடித்துக்கொண்டு நின்ற பத்மினி உள்ளே வாருங்கள் என்ற அவரின் வார்த்தையில் அரசியல்வாதிகள் சொல்கிற மாதிரி, ‘ஒரு குடையின் கீழ் வாருங்கள்’ என்ற கோசத்தின் உண்மையை அன்றைக்கு விளங்கிக்கொண்டேன்’ என்ற வார்த்தைகளில் பகடியும் இருக்கிறது; அரசியல்வாதிகள் பற்றிய ஏளன இகழ்ச்சியுமிருக்கிறது. மதச்சார்பற்ற எழுத்திலும் இறையியல் கருத்து எதிரலையயும் பார்க்கலாம். ‘காரிருளில் பேரொளியைக் கண்டேன்’ என்ற வேதவாக்கியம் இதற்கு மேதகு எடுத்துக்காட்டு.
இந்தக் கதையில் 70களின் யாழ்ப்பாணத்தைக் காணலாம். அப்போது 65 சதத்தில் சினிமா பார்க்க முடிந்தது. அதைவிட எல்லாவற்றிற்கும் யாழ்ப்பாண இளைஞர்கள் முன்வரிசையில் நிற்கவேண்டியிருந்த நாட்கள் இவை. இந்தக் கலாச்சார அப்பியாசத்தை செல்வத்தின் வரிகளிலேயே தருகிறேன்: “நான் அறிந்து எங்கட இளைஞர்கள் முன்வரிசைக்கு நிக்கிறது நினைவுக்கு வந்தது. எப்பிடியாவது படிச்சுப் பல்கலைக்கழகம் போக வேணும் எண்டு ரீயூசன் போனா . . . அங்க முன்வரிசை. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய்ப் பிழைக்கிறத்துக்காக ஏஜேன்சியளுக்கு முன்வரிசை... பிறகு போராட்டம் செய்து அடிமை விலங்க றுக்கப் போறம் எண்டு இயக்கங்களிலை இணையுறத்துக்கு முன் வரிசை . . . ” சினிமா தியட்டரில் படம் பார்த்துவிட்டு மூத்திரமடிக்க அங்கேயும் முதல் வரிசை. நீங்கள் படித்த கடைசி வரி செல்வத்துடையதல்ல. நான் சும்மா சேர்த்துக்கொண்டது.
ஈழத்து எழுத்துக்களில் இரண்டு சங்கதிகள் முக்கியமாக இருக்கும். விடுதலை இயங்கங்கள், யாழ்ப்பாணச் சாதியம். இவை இல்லாவிட்டால் ஒடியல் மா போடாத யாழ்ப்பாணக் கூழ் போலிருக்கும். “ஆனால் என்ன... ஒருவன் போராட முன்னுக்கு வந்தால் ஒன்பது பேர் காட்டிக்கொடுக்க நிற்கிறாங்கள்”; “விடுதலைப் போராட்டம் தொடங்க முதலே காட்டிக்கொடுக்கும் போராட்டம் தொடங்கிவிட்டது”; “மாட்டின் போனால் என்ன? யோகேஸ் வரன் வந்தால் என்ன? இந்தப் பிரச்சினையை ஆரும் தீர்க்கப் போறது இல்லை”, என்ற வார்த்தைகள் அரசியல்வாதிகள், இயக்கங்கள்பற்றி யாழ்ப்பாணத்தானின் உள்ளார்த்த ஏளன இகழ்ச்சியும் வெறுப்பும் ஏமாற்றமும் சந்தேகமும் தெரிகிறது.
‘தமிழர்களுக்கு இனி கஸ்ரம்தான்... ஆயுதம் வந்துவிட்டதெல்லே’ என்ற இந்த வரிகள் அ. சிவானந்தனின் ஆங்கில நாவலின் தீர்க்க தரிசனமான கடைசிப் பத்தியை நினைவூட்டுகிறது. துப்பாக்கிகளின் காலம் ஆரம்பமாகிவிட்டது. இப்போது யோகியின் கையில் துப்பாக்கி இருந்தது. யோகியின் எளிச்சியுடன் அறப்போராட்டம் முடிந்துவிட்டது. இனி தமிழரின் விமோசனத்திற்கு ஆயுதந்தான் விடை என்று சிவானந்தனின் நாவல் முடிவடைகிறது. ஈழத்தமிழர் வாழ்வில் துப்பாக்கிக் கலாச்சாரம் புகுந்தபின் செல்வத்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது? அதை அவரே சொல்லட்டும்: “உண்மையிலை நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளிகிட்டதுக்கு பத்மினியின்ர பிரச்சினை மட்டும் காரணமில்லை. தமிரசுக் கட்சி அரசியலைத் தாண்டி, ஆயுதப் போராட்ட ஆயுத்தங்கள் நடக்கத் தொடங்கியதை உணரத் தொடங்கினேன். காலமும் வயதும் சூழலும் சாதகமாக அமைய, எனக்கும் அதோட ஒரு மெல்லிய தொடர்பு இருந்தது. அத்தோடு நானும் சேர்ந்து இறுகி விடுவேனோ என்றும் அச்சப்பட்டேன்.” இந்த அச்சம் அந்த நாட்களில் பல ஈழத் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது.
இந்தப் பக்கங்களில் நிறைய சாதியம் பேசப்படுகிறது. இங்கே சாதி பார்க்கிறவர்கள் வழமை யான கெட்ட மனிதர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் அல்லர். ஒடுக்கப்பட்டவர்களே ஒடுக்கப் பட்டவர்களை வஞ்சிக்கிறார்கள். கீழே நான் தந்திருக்கும் வரிகளை வாசியுங்கள்: “இண்டைக்கும் மீன் பிடிச்சுக் கொண்டிருக்கிற உங்கட குடும்பங்களுக்கு இது பிரச்சினை யில்லாமல் இருக்கலாம். இப்ப உத்தியோகம் பார்த்தாலும் சுண்ணாம்பு எரிச்சுக் கூலி வேலை செய்யிற பரம்பரையிலை போய்ச் சம்மந்தம் செய்யிறது எங்கட சாதிக்கே அழகில்லை தெரியுமோ;” இவை இரண்டும் பத்மினியின் அக்கா சொன்ன பொன் மொழிகள். “வெளிநாட்டுக்குப் போனால் நான் மேலோங்கி ஆகிவிடுவேனோ’ என்று சொல்லி அவவை என் மடியில் சரித்தேன்” என்ற செல்வத்தின் வரிகளில் வலியும் தெரிகிறது, அவரின் வல்லமையற்ற தன்மையும் தெரிகிறது.
அவருடைய எழுத்தில் ஒரு நேரடித் தனமும் உள்ளது; உள்ளபடி எடுத்துரைக்கும் தன்மையும் உண்டு. இது கல்கி யுகம். நான் புராண அவதாரத்தைச் சொல்லவில்லை. நம் காலத்துப் புனைகதை புருஷரைக்குறிப்பிடுகிறேன். கல்கியை மேற்கோள் காட்டாமல் கட்டுரை எழுதுவது செல்வம் ஆராதிக்கும் கத்தோலிக்கத் திருச்சபை எற்கெனவே நிர்ணயித்த ஏழு பாவங்களில் இன்னுமொரு புதிய பாவத்தைச் சேர்க்க வேண்டிவரும். ‘அலை ஓசை’யில் வரும் சீதாவை ராகவன் முதல்முறையாகப் பார்த்தபோது அவளின் உணர்ச்சியைக் கல்கி இப்படி வெளிப்படுத்துகிறார்: ‘தன்னைப் பார்ப்பதைக் கண்டாள். வெறுமனே பார்த்ததோடு இல்லை; புன்னகையும் புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகை ஜோதிமயமாக்கின.’ இதே ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்ணுக்கும் ஆணுக்கும் நடந்தபோது செல்வத்தின் வரிகள் இப்படிச் சொல்லுகின்றன: “போகும்போதுதான் பார்த்தேன் பத்மினியும் அதில் ஒரு ஆள் என்று. அவளும் என்னைத் திரும்பிப் பார்த்தாள். நெஞ்சு திடுக்கிட்டுப் போயிற்று.” அலங்காரங்கள் ஒன்றுமில்லை. கற்பனை விபரிப்புகள் இல்லை. அவருடைய எழுத்தில் ஒரு பதனிடப்படாதபச்சையான உண்மை இருக்கிறது.
இந்த எழுத்தில் போதாமையே இல்லையா? மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வ’னில் ஏராளமான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தொங்கவிடப் பட்டதுபோல், செல்வத்தின் ஆக்கத்திலும் ஊர்ப்பட்ட கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? சாதிக் கட்டுப்பாட்டுக்குள் செல்வத்தை வைத்துக்கொள்ளப் பார்த்த ஜோசேப்பு மாஸ்டர் என்னவானார்? இவருக்கும் பத்மினிக்கும் இடையே நின்று சாதியம் பேசிய அவருடைய சகோதரியின் சாதிய வெறுப்புநிலை யாழ்ப்பாண மணிக்கூடு உயரத்தைத் தொட்டுவிட்டதா அல்லது நிலாவெளிக் கிணற்றின் அடித்தளத்துக்குச் சென்று தணிந்துவிட்டதா? செல்வம்மீது கண்வைத்த அந்த மன்னார்ப் பெண் எங்கே? யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு ஒருவர் நல்ல சாதியாயிருக்க வேண்டும், அல்லது பணக்காரராக இருக்க வேண்டும் இவை இரண்டும் இல்லாவிட்டால் சண்டியராக இருக்க வேண்டும் என்று சொன்ன சந்திரனின் கதி என்ன?
‘பொன்னியின் செல்வன்’ பற்றி எழுந்த கேள்வி செல்வத்தின் நூலுக்கும் பொருந்தும். ஒரு கதை அகநிலை மற்றும் கற்பனையில் மூழ்கி வரலாற்றை எழுதினால் அது சரித்திரத்திற்குத் துரோகம் செய்கிறதா? வெளிப்படுத்துகிறதா? ஆலன் சீலியின் ‘அசோகா’ நாவலில் வரும் புத்தர் இப்படிக் கூறுகிறார்: ஒரு புனைகதைப் படைப்பு வரலாற்றுப் புரிதலுக்கான பாதையை ஒளிரச் செய்தால் அது சரித்திரப் புரட்டல்ல.
எல்லாரையும் போலவே செல்வத்துக்கும் மேசமான பழக்கங்கள் உண்டு. அவர் துஷ்டத்தனமான தமிழ்ப் படப் பிரியர். அவரைச் சந்தோஷப்படுத்த இந்த முன்னுரையைச் சினிமாத்தனமாக முடிவுக்குக் கொண்டுவருகிறேன். ‘பாசமல’ரில் சிவாஜி பாத்திரம் அவருடைய சினிமா தங்கையான சாவித்திரியை ஜெமினியிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொடுப்பார்: “ஆனந்தா. என் கண்ணையே உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்.” இதைத்தான் செல்வம் செய்திருக்கிறார். அவருடைய கைவண்ணத்தை உங்களுடைய கையில் கொடுத்திருக்கிறார். இந்த நூலை சிவாஜி பாத்திரம் கேட்டமாதிரி பத்திரமாக அலுமாரியில்பூட்டி வைக்காதீர்கள். படியுங்கள், பரவசமடையுங்கள், பதறுங்கள். ஆனந்தப்படுங்கள், ஆவேசப்படுங்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று எதையுமே ஒற்றைத்தனத்தில் கட்டுபடுத்த முயலும் இந்ந நாட்களின் இந்தத் துவித, இரும பிரதிபலிப்புகளையே இந்த நூல் எதிர்பார்க்கிறது. அதையே செல்வமும் எதிர்பார்க்கிறார், விரும்புவார்.
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ஒரு பல்நடுங்கும் படு குளிரான பெர்மீங்க மார்கழி இரவு
10.12.2022
(முன்னுரையிலிருந்து)