சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
ஓவியம் - றஷ்மி
என். சிவராமன், மதுரையைச் சேர்ந்தவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இலக்கியம், இலக்கியச் செயல்பாடுகள், தனிப்பட்ட வாழ்க்கை எனப் பலவற்றையும் சு.ரா. சிவராமனுடன் மனம்விட்டுப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சு.ரா. என்னும் ஆளுமையின் கனவுகள், திட்டங்கள், செயல்பாடுகள், சிந்தனைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும் ஆவணங்களாக இக்கடிதங்கள் விளங்குகின்றன.
-ஆசிரியர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
23.8.86
அன்புள்ள சிவராமன்,
இதுவரையிலும் ராமகிருஷ்ணனிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லை.
நானும் கமலாவும் 30.8.86 சனிக்கிழமை தடம் எண் 511 திருவள்ளுவரில் காலையில் 8.15க்கு இங்கிருந்து கிளம்புகிறோம். டிக்கெட் பதிவு செய்வதாயிற்று. என் தம்பி நாகராஜன் இங்கிருந்து வேலை மாற்றலாகி மதுரை வந்து குடித்தனம் அமர்த்தி இரண்டொரு மாதங்கள் ஆகின்றன. நேராக அவர்கள் வீட்டுக்குப் போகிறோம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காந்திகிராமம் போய்விட்டு மதியம் மதுரை வந்து அதன்பின் நாம் மூவரும் நீங்கள் விரும்பும் இடத்தில் சந்தித்துக்கொள்ளலாம். சந்தித்துப் பேச ஹோட்டல் அறை அவசியமெனில் தயங்காது முன்பதிவு செய்துவிடுங்கள். ஏதேனும் ஒரு காரணத்தால் ராமகிருஷ்ணன் ஞாயிறு காலையிலேயே மதுரை வர நேர்ந்து பிற்பகல்/மாலை அங்கிருந்து கிளம்பக்கூடும் என்றால் நான் காலையில் மதுரையில் இருந்துவிட்டுப் பிற்பகல் காந்திகிராமம் போவேன். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குள் நான் காந்திகிராமத்தில் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் எனக்கு விவரம் எழுதுங்கள். அல்லது விஷயங்கள் தெளிவுபடப் பிந்துகிறது என்றால் என் தம்பியின் அலுவலகத்துக்கு நீங்கள் போன் செய்து விவரங்கள் கூறலாம். நீங்கள் மிக சாவகாசமாக இருந்தால் மட்டும் சனிக்கிழமை பஸ் நிலையத்துக்கு வாருங்கள். வெயில் பயங்கரமாக இருக்கும். அல்லது மாலை ஓய்வாக இருந்தால் என் தம்பியின் வீட்டுக்கு வரலாம். வசதிபோல் செய்து கொள்ளுங்கள்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
23.8.86
அன்புள்ள சிவராமன்,
இன்று காலை ஒரு கடிதம் தபாலில் சேர்த்திருக்கிறோம். அதன்பின் ராமகிருஷ்ணன் குரலை டெலிபோனில் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் இரவு 8 மணிக்கு மதுரை வருகிறாராம். அதற்குள் எங்கள் காந்திகிராமம் வேலையும் முடிந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை இரவு தங்குவதற்கு ஏற்ப நீங்கள் ஒரு ஹோட்டல் அறையைப் பதிவு செய்துகொள்ளுங்கள். விவரம் என்னிடம் நீங்கள் நேரில் தெரிவிக்கலாம் அல்லது நாகராஜனிடம் தொலைபேசியில் சொல்லிவிடலாம். நேரம் கிடைத்தால் கடிதம் எழுதுங்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின் நாம் சந்தித்துக்கொள்ளப்போகிறோம் என்பதை நினைக்க வெகு சந்தோஷமாக இருக்கிறது. ஏதும் புத்தகம் கொண்டுவர வேண்டும் என்றாலும் எழுதுங்கள்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
11.6.87
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 3.6.87 கடிதம். நீங்கள் அனுப்பிவைத்த வருமான வரிப் படிவங்கள் கிடைத்தன. கிடைத்த மறுநாளே நான் அவற்றை மணிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தேன். அவரும் பெற்றுக்கொண்ட விவரம் தெரிவித்து, அங்கு பெற வேண்டிய கையெழுத்துக்கள் பெற்று சென்னைக்கு அனுப்பிவைப்பதாக எழுதியிருக்கிறார்.
என் கவிதைத் தொகுதி வரவில்லை. சமீபத்தில் பல காரியங்களுக்காகப் பல முறை ராமகிருஷ்ணனுடன் போனில் பேச நேர்ந்தது. அச்சுதன் முகப்பு ஓவியம் வரைந்து தராததினால் அச்சேற்றம் முடிந்த நிலையில் தொகுதி வரத் தாமதப்படுகிறது என்றார். தொகுப்பு மிக ஒல்லியாக இருக்கிறது என்றார். எனக்கும் இதில் ஏமாற்றம்தான். என் கவிதைப் பார்வை பற்றிக் கட்டுரை எழுத முடியாமல்போனது இரண்டு விதங்களில் துரதிருஷ்டம். என் பார்வை என்ன என்று இன்னும் எனக்குத் தெரியாமல் இருக்கிறது. தொகுப்புக்கும் சதைப்பற்று அளிக்க முடியவில்லை.
* சௌந்தராவின் உடல்நிலை சென்ற மாதம் இறுதிவரை மிக நன்றாக இருந்தது. இப்போது ஒரு வாரமாக மீண்டும் மோசம். பரிகாரம் காண முடியாத பிரச்சினைகளுக்கு என்ன செய்வது? இப்போது நம் வீட்டில்தான் இருக்கிறாள்.
இங்கு மிகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். ஒரு பக்கெட் தண்ணீரில் நான் என் காலைக் காரியங்கள் எல்லாவற்றையும் முடித்துவிடப் பழகிக்கொண்டிருக்கிறேன். நேற்று முன் தினம் இரண்டு லாரி தண்ணீர் விலைக்கு எடுத்தோம். ஒரு லாரிக்கு 75 ரூபாய். மலேசியாவிலிருந்து விருத்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாத்ரூம் வந்து விடுமோ என்ற கவலை இப்போது எனக்கில்லை.
இங்கு பல பிரச்சினைகள். அவற்றை மிகுந்த ஊக்கத்துடன் சமாளித்துக்கொண்டு வருகிறேன். அதிகமும் நானே எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்தான். ஆனால் அன்றாடம் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு தோழமை இல்லையே என்று இருக்கிறது.
நான் சமீபத்தில் சென்னை போகும் உத்தேசம் இல்லை. சாந்தோம் கம்யூனிகேஷன் சென்டர் எனக்கு ஒரு அவார்டு தர விரும்புகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி மியூசிக் அகாடமியில் வைத்துச் சென்ற வருடம் இதே விஷயம் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு நான் போகாததினால் காரியம் நடக்கவில்லை. இந்த வருடம் நான் போகலாம்.
நீங்கள் ஜூலை மாதத்தில் இங்கு வரலாம் என்று தோன்றுகிறது. அப்போது தண்ணீர்க் கஷ்டம் தீர்ந்து என் பிரச்சினைகளும் சிறிது நிவர்த்திப்பட்டிருக்கும்.
புளிய மரத்தின் கதை திருத்தம் முடியவில்லை. அது ஒப்பனையா அல்லது ரண சிகிச்சையா என்று தெரியவில்லை. ரண சிகிச்சை என்றால் அப்படியே விட்டுவிடலாம் என்பது என் எண்ணம்.
அன்புடன்
சுரா
----
* சு.ரா.வின் மூத்த மகள்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
10.11.87
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 7.11.87 கடிதம். திருச்சூர் போய்விட்டு நேற்று இரவுதான் திரும்பி வந்தேன். அங்கு எனக்கு ஒரு சிறு வரவேற்பு. எம். கோவிந்தன், யு.ஆர். அனந்த மூர்த்தி, சச்சிதானந்தன், கே.ஜி. சங்கரப் பிள்ளை, எம். குமார பிள்ளை, ஆற்றூர் ரவிவர்மா என்று பலரும் கலந்துகொண்டார்கள்.
முதல் இதழுக்கு விஷயம் கேட்டு ஒரு சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டுமே எழுதியிருந்தேன். எழுதித்தருவதாக எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலருக்கும் முதல் இதழுக்கு எழுத சௌகரியம் இல்லை. இது எனக்குச் சிறிது கவலையைத் தருகிறது.
நீங்கள் முதல் இதழுக்கு எழுதவில்லை யென்றாலும் பின்னர் தொடர்ந்து எழுதுங்கள். நான் உங்களிடம் சொல்ல ஒன்றும் இல்லை. எல்லாம் நாம் பேசி விவாதித்த விஷயங்கள். மொழிபெயர்ப்பு விஷயத்திற்கும் நான் உங்களைத் திடமாக வைத்துக் கொண்டிருக்கின்றேன். சுயமாகவும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். அதுதான் முக்கியம்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
31.12.87
அன்புள்ள சிவராமன்,
காலச்சுவடு பைண்டிங் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பிரதிகளைத் தபாலில் சேர்க்கும் வண்ணம் வேலையை முடுக்கிக் கொண்டிருக்கிறேன்.
இதழின் பக்கங்களுக்கு அட்டையில் கனம் அதிகம் என்பதால் இதழை பின்பண்ணி அட்டையை ஒட்டினால் முதல், கடைசிப் பக்கங்கள் அட்டையோடு சேர்ந்து பிய்ந்து வருகின்றன. அதனால் அட்டையோடு சேர்த்து மேலே தெரியும்படி பின் செய்திருக்கிறோம்.
காலச்சுவடு வெளியீட்டை மதுரையில் வைத்துக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். ஜனவரி 17 ஞாயிற்றுக்கிழமை ஏற்ற நாளாகப் படுகிறது. இன்று இது குறித்து சுரேஷுக்கும் மார்த்தாண்டனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். நீங்களும் அவர்களுடன் கலந்து கொள்ளுங்கள்.
காலச்சுவடு இதழ்கள் இலக்கிய வாசகர்களுக்கு அதிகபட்சம் 5/6 தேதிக்குள் கிடைத்துவிடும் என்பதால் வெளியீட்டுக் கட்டத்தை விற்பனை, சந்தா இயக்கம், விமர்சனம் இம்மூன்றும் இணைந்ததாக வைத்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
நான் 5/6 தேதி வாக்கில் பெங்களூர் சென்று விட்டு 9/10 தேதி வாக்கில் ஊர் திரும்புவேன். என்னுடன் ஏதும் அவசரமாகக் கலந்துகொள்ள வேண்டியிருந்தால் திங்கட்கிழமை போனில் தொடர்புகொள்ளுங்கள். ஒருக்கால் நான் செவ்வாய்க்கிழமைகூட இங்கிருக்க நேரலாம்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
11.6.88
அன்புள்ள சிவராமன்,
அங்கு நீங்களும் பவானியும் குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன். இங்கு நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். கண்ணன் லீவுக்கு வந்திருக்கிறான். அவனுக்கு இப்போதுதான் பரீட்சை முடிந்திருக்கிறது.
சேர்க்கப்பட்டுள்ள – ஆனால் பணம் வந்து சேராத – சந்தாக்களையும் கட்டினால் சந்தா ஐந்நூற்றை எட்டிவிட்டது என்று சொல்லலாம். கோவை சமுதாயம் பிரசுராலயத்திலிருந்து ஒரு விளம்பர மேட்டர் வந்துள்ளது. ரூ. 187.50 - 25% கழித்து - விரைவில் அனுப்புவதாக எழுதியிருக்கிறார்கள். செல்வராஜ் விளம்பரங்களும் இந்த மாதம் இறுதிக்குள் கிடைக்க வேண்டும். முடிந்தால் அவரை நினைவுபடுத்துங்கள்.
மேட்டர் என்று சொல்லும்படி ஒன்றும் வரவில்லை. பின் பகுதிக்குச் சரியான விஷயம் அமைந்துவிட்டால் முன் பகுதி விஷயங்களைச் சரிகட்டிவிடலாம். டாக்டர் லோகியாவின் கட்டுரையை சங்கரலிங்கத்துக்கு அனுப்பியிருக்கிறேன். அவர் என்ன முடிவு செய்கிறார் என்பது தெரியவில்லை. முத்துசாமி தனது நாடகத்தை 15ஆம் தேதிக்குள்ளும், காந்தியைப் பற்றிய கட்டுரையை ரவீந்திரன் 20ஆம் தேதிக்குள்ளும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பொருளடக்கம் தீர்மானமாகாத நிலை பதற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது.
ராமகிருஷ்ணனுக்குச் சென்ற மாதம் 25ஆம் தேதி எழுதிய கடிதத்திற்கு இன்றுவரையிலும் பதில் வரவில்லை. ஒரு சிறு தகவலைக்கூட அவரிடமிருந்து பெறுவது சிரமமாக இருக்கிறது. அவருக்குப் பல விஷயங்கள் குறித்து எழுதியிருக்கிறேன். மேல் அட்டை விஷயத்தை எடுத்துக்கொண்டிருப்பதாக தீலிப் எழுதியிருந்தார். அந்த மட்டிலும் நிம்மதி.
இந்த மாதம் 26ஆம் தேதி சென்னையில் ஒரு கல்யாணம். அதற்கு நானும் கமலாவும் போக வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் சென்னையில் இருக்க வாய்ப்பு உண்டா?
பாரதி அச்சக உரிமையாளர்களைச் சந்தித்துப் பேசினேன். புதிய அச்சுக்களை இம்மாத இறுதிக்குள் தயார்செய்வதாகவும், ஜூலை முதல் தேதி காலச்சுவடை எடுத்துக்கொண்டு 10ஆம் தேதி முடித்துத்தருவதாகவும் தொடர்ந்து ஒரு புளியமரத்தின் கதையை எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள். சுப்ரமணியம் ‘முன் பணம் சிறிது தேவை’ என்றார். ‘உங்களுக்கு எழுதி எனக்கு எழுதச் சொல்லுங்கள்’ என்று நான் கூறியிருக்கிறேன்.
இங்கு நல்ல மழை. நேற்று இரவு முழுக்க மழை பெய்தது என்று நினைக்கிறேன்.
அங்கு நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பு.
அன்புடன்
சுரா
------
* ந.முத்துசாமி, எழுத்தாளர், நாடக ஆசிரியர் ** திலீப்குமார், எழுத்தாளர் *** செ.ரவீந்திரன், பேராசிரியர், நாடக விமர்சகர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
15.6.88
அன்புள்ள சிவராமன்,
ராமகிருஷ்ணனுடன் இப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டேன் நான் திரும்பி வர ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பொருட்டு. ஃபோட்டோஸெட் விஷயமாகத் தான் மிகவும் மோசமான மனநிலையில் இருப்பதாகவும் விவரங்கள் நேரில் சொல்கிறேன் என்றும் சொன்னார். அவருடைய நிலைமையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
நான் 23ஆம் தேதி வியாழன் காலை நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னை போய்ச் சேருகிறேன். இரண்டரை நாட்களுக்கு எனக்குக் கிடங்குத் தெருவில் வேலைகள் இருக்கின்றன. 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை நான் நண்பர்களைப் பார்க்க ஒதுக்கியிருக்கிறேன். 27ஆம் தேதி நான் கலந்துகொள்ள வேண்டிய திருமணம். அன்றே நெல்லை எக்ஸ்பிரஸில் திரும்புகிறேன். இந்த நாட்களில் நீங்கள் சென்னை வரும் வாய்ப்பு உண்டா? தெரிவியுங்கள்.
உங்கள் 13.6.88 கடிதம் நேற்றுக் கிடைத்தது.
இன்று, நாளை நாம் சொர்ணம் பிள்ளையைச் சந்திப்பேன். நேற்று எம்.எஸ்.ஸைச் சந்தித்தபோது உங்கள் கடித விவரங்களைக் கூறினேன். ரூபாய் இரண்டாயிரம் அச்சகத்திற்குத் தருகிறேன். மேற்கொண்டு பணத் தேவை பற்றி நான் சொர்ணம் பிள்ளையைக் கலந்துகொண்டு ராமகிருஷ்ணனிடம் நேரில் விவரம் தெரிவிக்கிறேன்.
காலச்சுவடுக்கு மேட்டர்தான் இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
செல்வராஜிடம் விளம்பர விஷயங்களை நினைவுபடுத்துங்கள்.
ஜூலை முதல் தேதி காலச்சுவடை அச்சுக்குத் தர வேண்டும் என்று இருக்கிறேன்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
18.10.88
அன்புள்ள சிவராமன்,
ஒரு புளியமரத்தின் கதை அச்சேற்றம் முடிந்து ஒரு வாரமாகிவிட்டது. படிவங்களைச் சென்னைக்கு அனுப்பும் விஷயத்தை இன்று – நாளை என்று ஒரு வாரமாகக் கடத்தி வருகிறார்கள். இன்று அனுப்பிவிடுவதாக உறுதிதந்திருக்கிறார்கள். அச்சேற்றம் நான் எதிர்பார்த்ததைவிடவும் நன்றாக வந்திருக்கிறது.
காலச்சுவடு சுமார் 50 பக்கங்கள் அச்சேறி விட்டன. மேலட்டை இன்னும் வந்து சேரவில்லை. ராமகிருஷ்ணனுக்கு இன்றும் நினைவுபடுத்தி எழுதியிருக்கிறேன்.
மோகன் ‘வயல்’ இதழுக்காக அரைப்பக்கம் விளம்பரம் தந்திருக்கிறார்.
இம்மாத இறுதிக்குள் ‘காலச்சுவடு’ வெளி வந்துவிடும்.
மதுரையில் நடுநிசியில் எனக்கு வந்த வயிற்று உபாதை அப்படியே தொடர்ந்து
கொண்டிருக்கிறது. மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன்.
மதுரை பேங்குக்கு வர வேண்டிய விஷயம், மதுரை டிவிஷன் பிராந்திய மானேஜர் பம்பாய் போய்விட்டதால் மாற்றிவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த புதன்கிழமை (26.10.88) வாக்கில் நான் வர நேரலாம்.
இத்துடன் அன்னம் புத்தக மையத்தின் கணக்கு அறிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் வசதிப்படும்போது அங்கு சென்று கணக்கு சரிதானா என்பதைப் பார்த்துவிட்டுப் பாக்கியை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
அங்கு திருமதி பவானியும் குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன்.
அன்புடன்
சுரா
-----
* பி.கு: சோட்டா அண்ணா ஞாயிறு இரவு புதுதில்லியில் காலமாகிவிட்டார்.
(சோட்டா அண்ணா-திண்டுக்கல் காந்திகிராமத்தின் நிறுவனர்களில் ஒருவர். சுராவின் சம்பந்தி.)
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
22.6.89
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 20.6.89 கடிதம். இங்கிருந்து நீங்கள் சென்ற பின் சென்னைப் பயணத்தில் மாற்றம் என்ன நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
சற்றுக் காலதாமதம் ஏற்பட்டாலும்கூட என் விஷயத்தை நீங்கள் ராமகிருஷ்ணனிடம் சொல்வதைத்தான் நான் விரும்புகிறேன். என் மனக்குறை உணர்வு ரீதியாக அவரைப் பாதிக்க வேண்டாம் என்பது என் எண்ணம்.
நான் ஜூலை மூன்றாவது வாரம் சென்னை போகக்கூடும்.
ஜே.ஜே. விற்பனைக்கு இல்லை என்று நேற்று ஒரு வாசகர் எழுதியிருக்கிறார்.
திரு. வீமனைச் சந்தித்ததில் நான் மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். நீங்களும் அவரும் இணைந்து ஒரு பெரிய காரியத்தைத் திட்டமிட்டுச் சாதிக்கலாம். அது மொழிபெயர்ப்பாகவோ அல்லது படைப்பாகவோ இருக்கலாம். உங்கள் அலைவரிசைகள் சரியாக இருப்பதுபோல் ஒரு எண்ணம்.
அன்புடன்
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
28.6.89
அன்புள்ள சிவராமன்,
நேற்றிலிருந்து காலச்சுவடைத் தபாலில் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
உங்களுக்குத் தனியாக மூன்று இதழ்கள் அனுப்பிவைப்பேன். இது சந்தா சேர விரும்புகிறவர்களின் பார்வைக்காக.
அடுத்த இதழில் டி.எஸ். எலியட்டின் பக்கங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
1. டி.எஸ். எலியட் வரைபடம் – ஓவியர் மருது – பச்சைத்தாள்.
2. டி.எஸ். எலியட் கட்டுரை – மொழிபெயர்ப்பு: ராஜலஷ்மி – நீங்கள் பார்த்தது.
3. டி.எஸ். எலியட் அறிமுகக் கட்டுரை – சிவராமன், வீமன்- மூன்று அல்லது நான்கு பக்கங்கள்.
4. டி.எஸ். எலியட்டின் மூன்று அல்லது நான்கு கவிதைகள் – மொழிபெயர்ப்பு பசுவய்யா.
நான் மொழிபெயர்க்க வேண்டிய கவிதைகளை – தமிழுக்கு வளைந்து கொடுப்பவையாக இருக்க வேண்டும் – நீங்களும் வீமனும்* கலந்துகொண்டு எழுதுவீர்கள் என்றால் நல்லது. மொழிபெயர்ப்பு செய்த பின் நாம் அமர்ந்து சரி பார்க்க வேண்டும். பொருட்குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எனக்கு மிகுந்த கிலி.
ஜூலை மாதம் 10ஆம் தேதி சென்னை போகிறேன். மதுரை மார்க்கம். நீங்களும் வர இயலுமா?
ராமகிருஷ்ணனிடமிருந்து கடிதங்களுக்குப் பதில் இல்லை.
அன்புடன்
சுரா
-----
பி.கு. லோகியா** கட்டுரைகளில் உங்கள் பார்வையில் சற்றேனும் பொருட்படுத்தத் தகுந்த பகுதிகளை மட்டும் (அச்சில் மூன்று/நான்கு பக்கங்கள் வரும் அளவுக்கு) மொழிபெயர்த்தால் போதுமானது.
(* வீமன், பேராசிரியர்
** ராம் மனோகர் லோகியா, சோஷலிஸ்ட் தலைவர்)
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
6.7.89
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 4.7.89 கடிதம். நீங்கள் வர இயலாத நிலை பற்றி முதலில் எழுதியிருந்ததில் சிறிது சோர்வு அடைந்தேன். இப்போது உங்கள் கடிதம் கிடைத்ததும் உற்சாகம் ஏற்பட்டது. செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்களில் என் வேலைகளை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை – நீங்கள் வரும் நாள் – சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். முதுகில் வலதுபுறம் இப்போது சிறிது வலி இருக்கிறது. பொதுவாக இது யாத்திரையில் அதிகமாகும். அதனால் நாடகங்கள் பார்க்க உடம்பில் தெம்பு இருக்குமா என்று தெரியவில்லை. சனிக்கிழமை மதுரை திரும்பலாம் என்று எண்ணம். ராமகிருஷ்ணனுக்கு அதிக வேலை இருந்தாலும் வெள்ளி காலை மட்டும் அவரைச் சற்று சரி செய்துகொள்ளச் சொல்லலாம்.
காலச்சுவடின் தரம் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் கவலைகள் அரிக்கத் தொடங்கியிருக்கின்றன. நாம் மூவரும் கலந்து பேச வேண்டிய விஷயங்களில் இது மிகவும் முக்கியமானது.
முன்பின் தெரியாத நண்பர் ஒருவர் காலச்சுவடு பின் அட்டைக்கு இரண்டு விளம்பரங்கள் வாங்கித் தந்திருக்கிறார். இன்று செக் வந்திருக்கிறது.
மற்ற விஷயங்கள் நேரில் பேசிக்கொள்ளலாமே.
அன்புடன்
சுரா