பாசாங்கற்ற ஓர் இருத்தலிய ஆத்மார்த்தம்
“எனக்கு என்னைப் பற்றிப் பூர்ணமாகத் தெரிந்திருக்கிறது.எனவே, எனக்குப் பிடிப்பதையும் பிடிக்காததையும் என்னால் சுலபமாக இனங்கண்டு கொள்ள முடிந்து விரைவாக அதற்குத் தகுந்தாற்போல் பிரதிபலிக்க முடிகிறது. இது என்னை மற்றவர்கள் மத்தியில் பொருந்தாதவனாக ஆக்கிவிடுகிறது” (‘எதிரே ஆகாயம்’, ஜுன் 1971, கசடதபற).
ஐம்பதாண்டுக்கு முன்பே இப்படியெழுதிவிட்டு, அண்மையில் மறைந்த கவிஞர் நாரணோ ஜெயராமன் (1945 - 2022), என் ஆசிரியர்.அவர் எனக்கு வகுப்பெடுத்ததில்லை; ஆனாலும் எனக்குப் பாடத்திலும் ஆய்வுக் கூடத்திலும் வாழ்விலும் இலக்கியத்திலும் பல கற்பித்தவர் அவர்.
அப்போது (1989 - 1992), மீனம்பாக்கம், அ.மா. ஜெயின் கல்லூரியில், நான் (இளம் அறிவியல்) கணிதம் படித்துக்கொண்டிருந்தேன். கணிதத்துடன், முதலாமாண்டில் இயற்பியலும், இரண்டாமாண்டில் வேதியியலும், மூன்றாமாண்டில் கணினியும் துணைப் பாடங்களாகப் படித்தேன். வேதியியல் ஆய்வுக்கூடத்தில் கவிஞரை அவ்வப்போது சந்தித்து உரையாடியிருக்கிறேன். தத்துவத் துறையில் பேராசிரியர் ஏகே இருந்தார். அவரோடுதான் எனக்கு முதலில் பழக்கம் ஏற்பட்டது. நான் நிறையப் பேச்சுப் போட்டிகளுக்குச் சென்று வென்று வருவதுண்டு. அப்போது ஒரு பையன் தத்துவத்துறையில் புதிதாகச் சேர்ந்திருந்தான். பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்திருந்தபோதிலும், அதை மறுத்துவிட்டுத் தத்துவம் படிப்பதை அவன் தேர்வு செய்திருந்தான். அவனுக்கும் எனக்கும் எப்படியோ ஒரு பழக்கம் ஏற்பட்டது. அவன் மூலம்தான், நான் தத்துவத் துறைக்குச் சென்று, ஏகேவையும் கவிஞரையும் சந்தித்தேன். எனக்குப் பழந்தமிழ் மீதும், நவீன இலக்கியத்திலும் பெரும் ஈடுபாடிருந்தது. அவனுக்கு உலகத் தத்துவத்தையெல்லாம் கரைத்துக் குடிக்கும் ஆசையிருந்தது. இதுபோன்ற வேறுபட்ட ஆர்வமுள்ள சில மாணவர்களை ஐந்தாறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்ப்பதாகப் பேராசிரியர் ஏகேவும் கவிஞரும் பேசிக்கொண்டார்கள். அப்போதே கவிஞருக்குத் தோற்றத்தில் சற்றே முதுமை ஆரம்பித்துவிட்டிருந்தது. அவரைப் பார்த்தவுடன், காரணம் சொல்லத் தெரியவில்லை, ஏனோ எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. இத்தனைக்கும் எனக்கு அங்கு தமிழ் கற்பித்த பேராசிரியர் ஒருவர், நான் கவிஞருடன் நெருக்கமாகப் பழகுவதைப் பார்த்துவிட்டு, “பார்த்துப்பா. அவர் ஒரு ‘சினிக்’.உன்னையும் கெடுத்துவிடப் போகிறார்!” என்று எச்சரித்ததுமுண்டு. என் நல்லூழால், இவரைப் பற்றிய பொறாமையால்தான் அவர் அப்படிச் சொல்கிறார் எனப் புரிந்துகொள்ளும் திராணி அப்போதேயிருந்தது எனக்கு!
அன்றே ஆங்கில அகராதியைப் பார்த்து, ‘சினிக்’ என்பதற்கு அர்த்தமறிந்து கொண்ட நினைவிருக்கிறது.இப்போது இந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதும்போதும், கூகுளில் தேடினேன். “மற்றவர்களுக்கு உதவுவதைவிடத் தங்கள் நலனை முன்னிட்டே மக்கள் செயலாற்றுகின்றனர் என நம்பும் ஒருவர்; தன்னல முனைப்பற்றவர் இல்லை என்னும் கருத்துடையவர்; எவர் பாலும் தன்னலமின்மையைக் காணாதவர்” எனப் போட்டிருக்கிறார்கள். இதில் ஏதும் தப்பில்லையே என்றுதான், இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். ஆனால், பெரியவர் நாரணோ ஜெயராமனை, இப்படி எந்தச் சிமிழிலும் அடைத்துவிட முடியாது. தான் முன்னறியாத என்னையும் என் ஆர்வத்தையும் பார்த்துவிட்டுத் தன் ‘வேலி மீறிய கிளை’ தொகுப்பைப் படிக்கத் தந்ததுடன், தன் வசமிருந்த சில கசடதபற இதழ்களையும் தந்து எனக்கு நவீன இலக்கியத்தின் உண்மை முகம் காட்டியவர் அவர். விருட்சம் இதழைக்கூட, அவர் மூலமே நான் படித்த நினைவிருக்கிறது. ‘பல்லக்குத் தூக்கிக’ளை எனக்குப் படிக்கத் தந்ததும் அவர்தான். சார்த்தர், காம்யூ, ஹென்றி மில்லர் என்று பலரையும் படிக்கத் தூண்டினார். என் பத்தொன்பதாம் வயதில், புரிந்தும் புரியாமலும் இவர்கள் எழுதிய சிலவற்றைப் படித்துப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவர் கவிதைகளில் இருந்த ஒரு நவீன உணர்வுடன் கூடிய கூரிய மொழிதான், என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவரை நான் சந்தித்த அந்த நாள்களில் (1989 - 1992), எழுதுவதை அவர் ஏறக்குறைய நிறுத்திவிட்டிருந்தார். அது பற்றி நான் அவரிடம் கேட்டதற்கு, “எல்லாமே ஒரு பழக்கமாத்தான் இங்க இருக்கு. எழுதறதும் பழக்கமாயிடுமோங்கிற பயத்திலேயே, நான் எழுதறத அல்மோஸ்ட் நிறுத்திட்டேன்”
என்றார். தமிழ்ல யாரப் படிக்கணும்னு நான் கேட்டபோது, எனக்கு அவர் சொன்ன ஒரே பெயர் சுந்தர ராமசாமிதான். ‘சவால்’ கவிதை எனக்கு மனப்பாடம். அதை அவரிடம் ஒருமுறை சொல்லிக் காட்டியிருக்கிறேன். “மொழியும் அனுபவமும் துறுத்தாம, இதுபோல் இணையணும்” என்றார் அவர்.
எனக்கும் அவருக்கும் ஒரு மிகக் குறுகிய காலப் பழக்கம்தான். அ.மா. ஜெயின் கல்லூரியில் படித்த அந்த மூன்று வருடங்களில், அதிகபட்சம் ஒரு 20 அலலது 30 முறைதான் நான் அவரைச் சந்தித்து உரையாடியிருப்பேன். இதில் இரண்டு தடவை அவர் வீட்டுக்கும், என் நண்பன் சைபர் சிம்மனுடன் சென்று வந்திருக்கிறேன். மாமி கொடுத்துக் குடித்த அந்த அபாரமான காஃபியின் ருசி, இன்னும் என் நாக்கிலிருக்கிறது. ஒருமுறை நாங்கள் போனபோது, அவர் வீட்டில் ‘தெவசம்’ நடந்துகொண்டிருந்தது. ‘வெளியே ஒருவன்’ எனக் கசடதபறவில் (ஜனவரி, 1972), அவர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.நான் பிறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கதை அது. இருபதாண்டுக்குப் பிறகும், அக்கதையில் விவரிக்கப்படும் சம்பவங்களின் சில சாயல்களை அங்கே நான் கண்டேன். இந்த மாறவே மாறாத இந்திய தமிழ் வாழ்க்கைமீது, நாரணோ ஜெயராமனுக்குக் கடும் சலிப்பிருந்தது; மானுடக் கூருணர்வை மழுங்கடிக்கும் பழக்கத்தின்மீது அவருக்குத் தீராக் கோபமுமிருந்தது. இவற்றின் வெளிப்பாடே அவர் படைப்புகள்.
1992இல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில், எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிக்க முடிவு செய்தேன். அவரிடம் சொன்னபோது, “சரி.படிங்க” என்று சொன்னதற்கு மேல், அவர் ஏதும் சொல்லவில்லை. அதற்கப்புறம், முப்பது வருடங்கள், அவரை நான் பார்க்கவேயில்லை. ஏன் என்ற கேள்விக்கு, என்னிடம் எந்தப் பதிலுமில்லை. ஏனோ பார்க்கவில்லை; அவ்வளவுதான் சொல்ல முடிகிறது. 1987இல் பத்தாவது முடித்துவிட்டுக் கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தேன். ஓரிரு முறைக்கு மேல், திரும்ப என் கிராமத்துக்கு நான் போகவேயில்லை. அப்படித்தான் இதுவும். ஆனால், கிராமத்தையும் நாரணோ ஜெயராமனையும் அடிக்கடி நினைத்துக்கொள்ளத்தான் செய்கிறேன். சரியாக முப்பதாண்டுக்குப் பிறகு, நான்கைந்து மாதங்களுக்கு முன்பு, டி.எம்.கிருஷ்ணாவின் தமிழ் நூல் வெளியீட்டு விழாவில், யதேச்சையாக அவரைச் சந்தித்தேன். என்னை அவராலும், அவரை என்னாலும் அடையாளம் கண்டுகொள்ளவே முடியவில்லை. இருவரது தோற்றத்திலும், அவ்வளவு மாற்றங்கள்! “ராஜகோபாலன் (ழ) சொன்னார். நீங்கள் என் மாணவர் என்று சொன்னதாக” எனக் கையைப் பிடித்துக்கொண்டு, அவ்வளவு ஆசையாகப் பேசினார். மாமியும் விசாரித்தார். (அந்தக் காஃபியை நான் இன்னும் மறக்கவில்லை என்று அவரிடம் சொல்லிவிட்டேன்!). இப்போதுதானே பார்த்தேன்! அந்த நாரணோ ஜெயராமனா போய்விட்டார்? “எண்ணங்கள் நிறைவேறும் என்ற பிரமையும் பின்னர் அவை பொய்த்துப் போவதும் எதற்காக? சந்தோஷமே கிடைக்காவிட்டாலும் சந்தோஷம் கிடைக்கும் என்ற நினைப்பைக் கொடுக்கும் சில கணங்களாவது நிம்மதியாகக் கழியட்டுமே என்பதற்காக இப்படி எல்லாம் நேர்கின்றதோ?” என்றொரு சிறுகதையில் எழுதியவரா போய்விட்டார்? “ஏதோ வருகிறோம், இருக்கிறோம், போகிறோம் என்றிரு” எனக் கவிதை எழுதியவருமா போய்விட்டார்?
சதங்கை, ஞானரதம், கசடசபற, தெறிகள், பிரக்ஞை, தீபம், அஃக், வானம்பாடி, விமர்சனம், விருட்சம், சுபமங்களா, தீராநதி, கல்கி எனப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதியுள்ளார். “உரையாடலில் நான் கேட்பவன், பேசுபவன் அல்லன்” எனத் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் நாரணோ ஜெயராமன், “பழக்கங்கள், சலிப்புகளாய் அசதி தருகின்றன” என்கிறார். ஜிட்டு வழிப்பட்ட இந்தத் தத்துவக் கூர்மையில்தான், இவரது சிருஷ்டியின் ஜீவனிருக்கிறது. இங்கொரு விமர்சனத்தையும் முன்வைத்துவிடக் கருதுகிறேன். “ஆண்டுக்கொரு முறை, அடையாறில் ஒரு பறவை கூவும், உன்னை அதில் வை, வாழ்வு உன்னில் புதிதாய்ப் பூக்கும்” என்று எழுபதுகளில் எழுதியவர், “காஞ்சி மாமுனியே போற்றி” என்று 2012இல் குரல் மாறுவதை எப்படிப் புரிந்துகொள்வதாம்? முப்பதாண்டுக்கும் மேற்பட்ட நீண்ட இடைவெளியில், இவர் கவிதைகளில், புதியன வந்து சேர்ந்ததாகத் தெரியவில்லை. எழுபதுகளின் ஜெயராமனே, இப்போதும் நம் கண்களுக்கு உயரமாகத் தெரிகிறார். “நான் எனப்படுகிற என்னையும் சேர்த்து, எல்லாவற்றையும், அக்குவேறாய் ஆணிவேறாய், கழற்றிப் பார்த்துவிட்டேன், என்னவோ இருக்கிறோம், என்னவோ செய்கிறோம், எதுவும் நிச்சயமில்லை, எதுவும் சாசுவதமில்லை, மொத்தத்தில் ஒன்றுமில்லை போங்கள்!” (ஏப்ரல் 29, 2017) என்றும், “நான் உள்ளும் பார்க்கிறேன், புறமும் பார்க்கிறேன், நீ, எந்த அடையாள வில்லை, வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்” (ஜனவரி 28, 2015) என்றுமெழுதுகிறார். இந்தத் தத்துவக் குரல் நமக்குப் புதியதன்று. ஆனால், ‘விரக்தி - பரவசம் - விசாரம்’ எனத் தன் வாழ்க்கை அனுபவங்களை முன்னிறுத்தி, “ஆம். நான், சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். மாயை, பிடிபட்டதாலோ என்னவோ” என்றொலிக்கும் பாசாங்கற்ற குரலில், ஓர் ‘இருத்தலிய ஆத்மார்த்தம்’ சுளீரெனப் பட்டுத் தெறிப்பதை, நாரணோ ஜெயராமனின் தனித்துவமென்பேன்.
‘தத்துவ ஆத்மார்த்தம்’ - பழைய வார்த்தை – புரிகிறது; அதென்ன, இருத்தலிய ஆத்மார்த்தம்? “கண்ணா, நீ காட்டும் பாதையை, நான் பகுத்துணர்ந்து, நல்லது அல்லாதனவற்றை, ஏற்கக்கூடாதவற்றை விலக்கிவிடுகிறேன், ஆனால், சரணடைய மட்டுஞ் சொல்லாதே! எனக்கு என்னவோ அது நெருடுகிறது!, நீயே என்னையறிந்து ஆட்கொள்!” என்கிறார். ‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்பதும் இதுதான். இங்கே பேசப்படும் (சரணடைய மறுக்கும்) ‘நெருடலை’த்தான், ‘இருத்தலிய ஆத்மார்த்தம்’ என்கிறேன். வாழ்ந்துபெற்ற அனுபவ விவேகத்தைப் “பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸ மொழியில் வெளியிடும் விசேஷத்தன்மை” கொண்டவராக பிரமிள் நாரணோ ஜெயராமனைக் கண்டுரைப்பதும் இப்படித்தான். எனினும், இவருடைய உலகம் - முழுமுற்றாக ஓர் ஆணின் உலகமே; நவீனப் பெண்ணுக்குரிய பிரதிநிதித்துவம் - இவரெழுத்தில் கூர்ப்பாகப் பதிவுறவில்லை.
“சத்தை குப்பைக் குவியலில், கண்ணாடித் துகள் - என்னில் வாழ்வு ஒளி!” என்பதுதான் அவரின் தரிசனம். இதையே, “சாந்த புஷ்டி” எனக் கொண்டாடினார் பிரமிள்.
இவர் படித்த அ.மா. ஜெயின் கல்லூரியிலேயே, ‘க்ரியா’ ராமகிருஷ்ணனும், இவர் பி.எஸ்சி. படிக்கும்போது பி.ஏ. பொருளாதாரம் படித்திருக்கிறார் (ஆனால், அப்போது இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை). தான் படித்த அதே கல்லூரியிலேயே, 1965ஆம் வருடம், வேதியியல் துறையில் விளக்குநராகச் சேர்ந்து விரிவுரையாளராகிப் பின் தத்துவத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகி, 2003இல் ஓய்வு பெற்றுள்ளார். கல்லூரி நிர்வாகத்தின் சில முடிவுகளுடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லையெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.இதுபற்றியும், அவருடைய அரசியல் ஈடுபாடுகள் பற்றியும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனால், “38 ஆண்டுகாலக் கல்லூரி வாழ்க்கை மாணவ, சக ஆசிரியர்கள் என மனித உறவுகளின் அனுபவப் பொக்கிஷமாகவும், போர்க்குணத்திற்குச் சந்தர்ப்பம் அமைத்துத் தந்த நிகழ்வுகளின் சவால்களாகவும் நிறைவேறின” என்று அவர் எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன். எழுபதுகளின் அரசியல் கதாநாயகனான ஜெயப்பிரகாஷ் நாராயணனிடமும், அவர்வழிச் சேகுவேராவிடமும் இவருக்குப் பெரும் ஈடுபாடுண்டு. “நடப்பு அரசியலில் ஜனநாயகம் புதைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் என்னாலும் உள்வாங்கப்பட்டுள்ளது” என்கிறார். “தலையை இழுத்துக்கொள்ள வழியில்லாமல்”, ‘அரசியல் கூடுகளை’ உடைத்து நொறுக்க வேண்டுமென்றும், “எல்லாம், அரசியல் ஆவேசத்துடன், அரங்கேறுகின்றன, எதிலும், ஆத்மார்த்த ஒளி துலக்கும், கனிவில்லை” என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.
‘மரணம்’ குறித்தும் அவர் சிந்திக்காமலில்லை. “உறவுகளில், சுற்றுவட்டாரத்தில், முதிர்ந்த இறப்புகளையெல்லாம், என் மனைவி தெரிவிக்கையில், எழுபதைத் தாண்டிவிட்டால், வண்டி ஓடுகிறவரை ஓடட்டும், என்கிறேன். புரிந்து, ஆமோதிக்கிறாள். மரணம் ஆராயப்பட வேண்டாம்; சம்பவிக்கட்டும்!” என்றெழுதியிருக்கிறார். அவர் மரணமும் இன்று ‘சம்பவித்துவிட்டது!’
மின்னஞ்சல்: sirisharam73@gmail.com