என்று வடியும் இந்தப் பெருமழை வெள்ளம்?
அ. முத்துலிங்கம் ஒரு முறை இப்படி எழுதினார்: “ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்ற கணக்கு சரியல்ல. சில கேள்விகளுக்குப் பல விடைகள் இருக்கும்.” இந்தக் கூற்றுக்கான நிரூபணமாகச் சென்னைப் பெருவெள்ளம் அமைந்துவிட்டது. மழை நாட்களைத் தொடர்ந்து சென்னைவாசிகள் எதிர்கொண்ட கேள்வி- ‘உங்கள் தெருவில் மழைநீர் வடிந்துவிட்டதா?’ இந்தக் கேள்விக்கு அவர்கள் ஒரே பதிலைச் சொல்லவில்லை. மந்தைவெளிக்காரர் ‘எல்லாம் இரண்டு நாளில் வடிந்துவிட்டது’ என்று சொன்னார். மைலாப்பூர்காரர் ‘எங்கள் தெருவில் மட்டுமில்லை, வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்தது, வடிய மூன்று நாட்களாகின’ என்றார். தென் சென்னையின் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வட சென்னையின் கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். மாறாக நகரின் மையப் பகுதிகளில் பிரதான சாலைகளையொட்டி வசிப்பவர்கள் பலருக்கும் வெள்ளம் விரைவில் வடிந்தது; மின்சாரமும் இணையமும் அடுத்