‘பாரதி அகம்’ கருணை யோகன்
ஈழத்தில் சுமார் அரைநூற்றாண்டு காலமாகத் தமிழ்ப்பணி செய்த பேராசிரியர் செ. யோகராசா 2023 திசம்பர் திங்கள் 07 ஆம் நாள் காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; மலையகத்தின் தலவாக்கலைப் பிரதேசத்தில் திருமணம் முடித்து மட்டக்களப்பில் தனது குடும்ப வாழ்வைப் பேணியவர். கரவெட்டி கரணவாய் பாரதி அகத்திலிருந்து ‘கருணையோகன்’ என்ற புனைபெயரோடு இலக்கிய உலகுக்குள் புகுந்த அவர் பேராசிரியர் செ.யோ. என ஈழமெங்கும் பெயர் பெற்றார்.
ஈழத்துப் புவிசார் அரசியலிலும் இலக்கிய அரங்கிலும் சில ஒவ்வாமைகள் இருக்கின்றன. யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை மட்டக்களப்பில் அங்கீகரிப்பதும் அல்லது மட்டக்களப்புத் தமிழர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் அங்கீகரிப்பதும் அல்லது மலையகத்தர் ஒருவரை இவ்வாறு ஏற்றுக்கொள்வதும் ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. (போர்க்காலத்தில் இவ்வொவ்வாமை சார்ந்து துயரமான பல இழப்புச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.) இம்முரண்பாடுகளுக்கப்பால் தனித்துவமான வராக யோகராசா வாழ்ந்து மறைந்திருக்கிறார். இது அவரது மானிடக் குணாம்சத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம். அதேபோல இன்னுமொரு முரண்பாடும் இருக்கிறது. ஈழத்தில் தமிழ் பேசும் சமூகங்களான முஸ்லிம்கள் தமிழர்கள் கிறிஸ்தவர்களுக்குள் பிரதேசரீதியான, சமூகரீதியான பிரச்சினைகள் மேற்கிளம்புகிறபோது அவரவர் இலக்கியம்பற்றி அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்; அவற்றின் தனித்துவத்தைப் பரப்பத் தொடங்குகிறார்கள். ஆனால் இனரீதியான, சமூகரீதியான வேறுபாடுகளுக்கப்பால் யோகராசா தனது இலக்கியப் பணியை மேற்கொண்டவர். இவையெல்லாம் யோகராசா என்ற தனிமனிதனை முன்னிலைப்படுத்துகின்ற மிக முக்கியமான விசயங்களாகும்.
யோகராசா யாழ்ப்பாணத்தில் தனது ஆரம்பக் கல்வியையும் உயர்கல்வியையும் பெற்றுக்கொண்டவர். பல்கலைக்கழகக் கல்வியைக் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். கொழும்புவிலும் மாகோவிலும் தபால் அதிபராகக் கடமையாற்றியிருக்கிறார். பின்னர் மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் ஆசிரியர் வேலை பார்த்தவர். ஆசிரியராகக் கடமையாற்றுகிறபோதே தனது முதுமாணிப் பட்டத்தை மேற்கொண்டு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் வழிகாட்டலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1990களில் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும் பின்னர் அப்பல்கலைக்கழக மொழித் துறையின் தலைவராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றார். யாழ்ப்பாணம், தென்கிழக்கு, கொழும்பு, திறந்த பல்கலைக்கழகம் முதலானவற்றிலும் கடமையாற்றியிருக்கிறார். தமிழகத்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பெயர் பெற்றவர்.
யோகராசாவைப் புடைசூழ இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மிக முக்கியமானவர்கள். இவரது ஆய்வு ஈடுபாடுகளுக்கு இவர்கள் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறார்கள் சர்வதேசரீதியில் புகழ்பெற்ற பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி, பொன். பூலோசிங்கம், செல்வநாயகம் ஆகியோரும் இவரது ஆசிரியர்கள். இவரது பல்கலைக்கழக சக நண்பர்களாக பேராசிரியர் சித்திரலேகா மௌனகுருவும் பேராசிரியர் நுஃமானும் இருந்திருக்கிறார்கள். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் மௌனகுருவோடு கடமையாற்றியிருக்கிறார். தமிழ் தொடர்பான பரீட்சை நடவடிக்கைகளிலும் ஆய்வு நடவடிக்கைகளிலும் பேராசிரியர் தில்லைநாதனோடு உடனிருந்து பணியாற்றியிருக்கிறார். இவையெல்லாம் பேராசிரியர் யோகராசாவை ஈழத்துத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
தமிழின் பல துறைகளிலும் பணியாற்றியவர். வாய்மொழி இலக்கியம் பற்றிய தேடலில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்திருக்கிறார். அதன் உச்சமாக முச்சந்தி இலக்கியம் பற்றிப் புதிய கருத்துக்களை வெளியிட்டார். குறிப்பாக மலையகத்தில் முச்சந்தி இலக்கியம் பற்றிய கருத்துக்களை அவர் தனது ‘ஈழத்து முச்சந்தி இலக்கியம்’ என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். நாட்டாரியலில் ஜனரஞ்சக ஈடுபாடு உள்ள பல புலவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கிராமம் கிராமமாகச் சென்று அவர்களைத் தேடிப் பதிவு செய்வதில் கரிசனையோடு செயற்பட்டார். இதனைப் பேசுகின்ற முக்கியமானதொரு நூல் ‘ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு’. இந்நூல் தமிழில் கவனிக்கப்படாதிருந்த இலக்கியப் பாரம்பரியமான வாய்மொழிசார் எழுத்துப் பாரம்பரியத்தை விளக்குகிறது. புனைகதை பற்றிய பல்வேறு திறனாய்வு முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். தமிழகப் புனைகதையாசிரியர்களையும் ஈழத்துப் புனைகதையாசிரியர்களையும் தொடர்புபடுத்தி ஒப்பீட்டுரீதியான பல பதிவுகளை மேற்கொண்டவர். இவ்வகையில் அவரது ‘ஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும்’ என்ற நூல் முக்கியமானது.
அவருடைய இன்னுமொரு முக்கியமான பணியானது தமிழ்க்கவிதை பற்றிய ஆய்வுகளாகும். பாரதிமுதல் சமகாலக் கவிஞர்கள்வரை ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். ‘ஈழத்து நவீன கவிதை: புதிய உள்ளடக்கங்கள், புதிய தரவுகள், புதிய போக்குகள்’ என்ற நூலையும் அவர் ஆக்கியிருக்கிறார். சிறுவர் இலக்கியம் தொடர்பாகவும் ஈடுபாடுள்ளவராக இருந்தார். சங்ககாலம் முதல் இன்றுவரை இருக்கின்ற இலக்கியப் பரப்பில் பெண்களின் ஈடுபாடு தொடர்பாகக் காலாகாலங்களில் பல்வேறு கட்டுரைகளை முன்வைத்து எழுதியுள்ளார். சங்க காலப் பெண்கள், சோழர் காலப் பெண்கள், விஜயநகர -நாயக்கர் கால இலக்கியங்களில் பெண்கள், ஐரோப்பியர் காலத்துக்குப் பின் - தமிழ்ச் சூழலில் நவீனமயமாக்கமும் பெண்களும் எனப் பல்வேறு வகையில் தனியாகப் பெண்கள் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளையும் முன்வைத்துள்ளார்.
பல்வேறு இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றார். சுவாமி விபுலாந்தர்முதல் தினகரன் இஸ்மாயில்வரை புதிய பார்வையினையும் தேடல்களையும் முன்வைத்தவர். இந்த வகையில் குறிப்பிடத்தக்க முயற்சியாக ஈழத்தில் கைலாசபதியின் காலத்தில் எழுதிய எம்.எம்.எம். மஹ்ரூப் என்ற திறனாய்வாளர்பற்றி அவர் முன்வைத்த குறிப்புகள் மிக முக்கியமானவை. தினகரன் நாளிதழில் நாவல் தொடர்பாகவும் புதுக்கவிதை தொடர்பாகவும் மஹ்ரூப் முன்வைத்த கருத்துக்களை முன்னெடுத்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அவருடைய எல்லாப் பணிகளையும் பதிவு செய்வதாக முக்கியமான இரண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஒன்று, அவருடைய பணிநயப்பு தொடர்பாக வெளிவந்த ‘கருணையோகம்’ என்ற நூல். இந்நூலில் அவருடைய முக்கியமான நண்பர்களும் ஈழத்துப் பேராசிரியர்களும் உமா வரதராஜன், சோலைக்கிளி முதலான இலக்கியவாதிகளும் கட்டுரைகளை எழுதியுள்ளனர். யோகராசாவின் ஆக்கங்களும் அந்நூலில் பதிவாகியுள்ளன. மற்றது இலங்கையின் ஜீவநதி என்ற சஞ்சிகை அவரைப்பற்றிய பல்வேறு பார்வையினை உள்ளடக்கிய கட்டுரைகளையும் கவிதைகளையும் கொண்ட 2023 ஆனி மாத ஆளுமைச் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது.
அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தபோதும் மட்டக்களப்பிற்கு வந்தபோதும் அவரிடம் ஒரு தனிப்பட்ட பெரிய நூலகம் இருந்தது. தேடற்கரிய நூல்கள் அவரிடம் இருந்தன. குறிப்பாக ஈழத்தில் தமிழக சஞ்சிகைகளை தொடர்ச்சியாக வாசிக்கின்ற ஒருவராக அவரை அடையாளப்படுத்த முடியும். ஈழத்துச் மறைந்துபோன பல சஞ்சிகைகளைத் தேடி எடுத்ததோடு, ஈழத்தின் சஞ்சிகை வளர்ச்சிக்கு அரிய பங்களிப்பினையும் வழங்கியுள்ளார். அவ்வகையில் அவரது ‘ஈழத்தில் இலக்கியமும் இதழியலும்’ என்ற நூல் கவனத்திற்குரியது. இவ்வாறு தொடர்ச்சியாக ஆய்வுப் பணிகளிலும் தேடற்பணிகளிலும் ஈடுபட்ட அவருக்குத் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மிகத் துக்ககரமான சம்பவம், தடையாக அமையவில்லை. அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு தனது குடும்பப் பணிகளையும் சுமந்துகொண்டு இலக்கியப் பணிகளில் கறங்குபோல் சுழன்றார்.
அவர் கடைசியாக ஒரு மாதத்திற்குள்தான் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்தக் காலகட்டத்திலும்கூட இலக்கியம் பற்றிய சிந்தனையோடு இருந்தார். அவர் மரணிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் -மரணத்தை நெருங்கிய நாட்களிலும்கூட தன் நண்பர்களைச் சந்திக்கின்றபோதெல்லாம் இலக்கியம் பற்றி அளவளாவுவதையும் இலக்கியத்தில் வாழ்க்கைபற்றி என்னென்ன பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன என்ற கருத்துக்களையும்தான் பகிர்ந்துகொண்டிருந்தார். உண்மையில் தமிழுக்காகவே வாழ்ந்த தமிழியல் ஆய்வாளரை இழந்திருக்கிறோம்.