நூலக எரிப்பு: கலாச்சாரப் படுகொலை
யாழ்ப்பாணப் பொது நூலகம்
(ஒரு வரலாற்றுத் தொகுப்பு)
(தொ.ஆ.) என். செல்வராஜா
வெளியீடு
அயோத்தி நூலகச் சேவைகள்
ஐக்கிய ராஜ்யம், குமரன் புத்தக இல்லம்
கொழும்பு.
பக்.220
ரூ.1750
இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்த சமயம் பிரிட்டன் நகரங்களில் ஜெர்மானியப் படை குண்டுபொழியப் புறப்பட்டது. அப்போது ஹிட்லர், விமானிகளிடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் குண்டு வீசாதீர்கள் என்று உத்தரவிட்டான். பிரிட்டனின் விமானம் ஜெர்மனிக்குக் குண்டு வீசப் புறப்பட்டபோது பிரிட்டன் அதிபர், ஜெர்மனி பல்கலைக்கழகத்தைச் சேதப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.
கண்ணகி மதுரையை எரித்தபோதுகூட, தீத்திறந்தோர் பக்கம் சார்க என்றுதான் கூறினாள். இதைத் தொன்மமாக எடுத்துக்கொண்டாலும் அடிப்படையில் ஓர் அறம் இருந்ததை உணரலாம்.
1931ஆம் ஆண்டு மே 31ஆம் நாளில் யாழ்ப்பாணம் நூல் நிலையத்துக்குத் தீவைத்தபோது எந்தப் போர் அறமும் முன்வரவில்லை. யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்ட தேதியை ஜூன் 1 இரவு என்றும் கூறுகிறார்கள். ஒருநாள் முன்பின் என்றாலும் திட்டப்படி எரிக்கப்பட்டது உண்மை.
யாழ் நூலகம் 1981 மே 31ஆம் தேதி இரவு திமுதிமுவென்று எரிந்துகொண்டிருந்தபோது, யாழ் சம்பத்திலிசியர் கல்லூரிக் கட்டடத்தின் மாடியில் தன் அறை ஜன்னல் வழியே பார்த்தவர் தாவீது அடிகளார். அதைப் பார்த்து மனம் பதைக்க, கொழும்பு நண்பருக்குத் தொலைபேசியில் அந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறார். யாழ் நூலக எரிப்பு முதலில் செய்தியானது இவரால்தான். நூலகம் எரிந்து கண்முன் சாம்பலாவதைக் கண்களால் பார்த்த தாவீது அடிகளாரால் தாங்க முடியவில்லை. அடுத்த நாள் மாரடைப்பால் இறந்துபோனார்.
முன்னாள் காவல்துறை அதிகாரி எழுதிய ‘‘Memorable Tributs including the Jaffna Library Fire” என்ற நூலில் யாழ் நூல் நிலையத்தை எரித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்று உள்ளது. இது அப்பட்டமான பொய். உண்மையில் 97000 நூல்கள் கொண்ட 15910 சதுர அடி பரப்பு கொண்ட பிரமாண்டமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இலங்கை காவல்துறையினரே. விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டிய எட்வர்டு குணவர்த்தன என்னும் டி.ஐ.ஜி. அதிகாரிக்கு எரித்ததில் நேரடிப் பங்கு உண்டு. இவரது காவலர்களே நூலகத்தை எரித்தனர். வடமேற்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் காமினி ஜயவக்கிரம பெரேர என்பவரின் குழுவினருக்கும் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதில் பங்குண்டு. நூலகம் எரிந்தபோது தீயணைக்கும் வீரர்கள் வந்தனர்; அவர்களைத் தடுத்ததும் இலங்கை போலீசாரே. இது சாட்சியத்துடன் நிறுவப்பட்டுள்ளது. (ஈழநாடு, யாழ், 29.6.1981. தினபதி, கொழும்பு, 20.6.81)
யாழ்ப்பாண நூலகத்தின் எரிப்பு மூலம் நடத்தப்பட்டது கலாச்சாரப் படுகொலை; அந்தத் துறை பற்றிய விழிப்புணர்வை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு, திரும்பத் திரும்பச் சொல்வதற்கு நடந்த முயற்சிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப் பொது நூலகம் என்ற இந்த நூல்.
இது ஆவணத் தொகுப்பு. 70 கட்டுரைகள். அனைத்தும் ஆவணங்கள். யாழ் நூலகம் எரிந்த நிகழ்ச்சி, மறுபடியும் அதைக் கட்டுவதற்கு நடந்த முயற்சி, எரித்தவர்களை இனம்காண நடந்த முயற்சி என எல்லாவற்றையும் வெளியிட்ட பத்திரிகைகள், இதழ்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் செய்தித் தொகுப்புகள் அடங்கியது. எல்லாமே நேரடிச் சான்றுகள்.
யாழ் நூலக உருவாக்கம் 1894இல் தொடங்கினாலும் 1959இல் தான் முழுமையாகத் திறக்கப்பட்டது. ஆனந்தகுமார சாமி கதிர்வேல் பிள்ளை, ந.சி. கந்தையா பிள்ளை என அபூர்வமானவர்களின் சொந்தச் சேகரிப்புகள் இங்கே இருந்தன. டச்சு ஆட்சியில் வெளிவந்த (1585) தமிழ் நூல் என பல நூல்கள் இருந்தன. இந்த நூலகத்தை வடிவமைத்தவர் இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மராவ்; நூலக ஆலோசனை வழங்கியவர் நூலக அறிஞர் எஸ்.ஆர். ரங்கநாதன்.
நூலகம் எரிக்கப்பட்டதால் யாழ் மக்களின் இதயம் வெடித்துவிடும் என நினைத்தவர்களின் எண்ணம் வெடித்தது. சொந்தச் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை உயிர்பெற்றுவிட்டது.
புதிய நூலக ஆலோசனைக் கூட்டம் 1984இல் ஏப்ரல் 5இல் நடந்தது. மறுபடியும் இந்திய கட்டட அமைப்பில் நூலகம் உருவானது. 1998இல் மறுபடியும் நூலகம் உருவாகிவிட்டது. இந்தச் செய்திகளை வெளியிட்ட ஆவணங்களை (1981 முதல் 202, தொகுத்து முறைப்படுத்தியிருப்பது கடினமான வேலை. தினகரன், ஈழநாடு, வீரகேசரி, தினபதி, Tamil
times Londan, திசை, சரிநிகர், தினக்குரல், நம்நாடு (கனடா), எரிமலை (பாரீஸ்), ஞானம், B.B.C. Tamil, அலை என பல்வேறு பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வந்த செய்திகளைச் சேகரிப்பது கடினமான காரியம். எதிர்கால ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்.