பெரியாரும் ராஜாஜியும் ஆய்வாளர்களும்
டிசம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள ‘அன்பார்ந்த எதிரிகள்’ என்னும் கட்டுரைகள் புதிய செய்திகளைத் தரவில்லையென்றாலும் ஆச்சரியமளித்தன. காரணம், பரந்த வாசிப்புக் கொண்ட நண்பர்கள் முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதியும் பழ. அதியமானும் தங்கள் கட்டுரைகளில் தெரிவித்திருந்த செய்திகளிலிருந்த தகவல் பிழைகள்.
பழ. அதியமானின் ‘பெரியார் - ராஜாஜி, அன்பார்ந்த எதிரிகள் கட்டுரை’ யதார்த்தம் நன்கறிந்தவர் இராஜாஜி. ஆனால் அதைத் தன் மண்டைச் சுரப்பால் மாற்றிக் காட்டியவர் பெரியார்.தலை உடைந்ததா, கல் நொறுங்கியதா என்பது 1967இல் மக்களுக்குத் தெரிந்தது” என்கிறது (பக்.24).
1967இல் பெரியாரின் மண்டைச் சுரப்பு கல்லைக் காத்து நின்றது.அதை உடைக்க முற்படவில்லை. காங்கிரஸ் பெற்றுவந்த வாக்குகளை விட எதிர்வாக்குகள் அதிகம் என்ற யதார்த்தத்தை அறிந்த இராஜாஜி “கண்ணீர்த்துளி’களைக் கொண்டு கல்லை உடைத்தார் (திமுக ஆட்சிக்கு வரும்வரை மண்டைச் சுரப்பு தி.மு.கவைக் கண்ணீர்த் துளிகள் என்றுதான் விளித்து வந்தது. காண்க பழைய விடுதலை இதழ்கள்,) ராஜாஜி அண்ணாவுடன் இணைந்து வகுத்த வியூகம்தான் கல்லை உடைத்து நொறுக்கியது. கல்லை நொறுக்கியதற்காக ஏதேனும் பாராட்டுக்கள் அளிக்கப்பட வேண்டு
மானால் அது அண்ணாவிற்கும் ராஜாஜியை உள்ளடக்கிய கூட்டணிக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஈ.வே.ராவிற்கு அல்ல.
“திராவிடர் கழகம் உங்களுக்கு (பார்ப்பனருக்கு) எதிரானது அல்ல. உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்ட முடியாமல், ஒன்றுபட முடியாமல் இருக்கும் தடைகளை ஒழிப்பதுதான் எங்கள் வேலையே ஒழிய மற்றப்படி உங்களை ஒழிப்பது எங்கள் கொள்கை அல்ல” என்று உங்களுக்கு வசதியான மேற்கோளைக் கட்டுரையில் கொடுத்திருக்கிறீர்கள். அது பெரியாருக்கே செய்யும் துரோகம் என்பதை அதியமான் அறிவாரா?
ஏனெனில் பெரியார் பார்ப்பனர்களை ஒழிக்க மட்டுமல்ல, அழிக்க வேண்டும் என்பதையே கடைசி மூச்சுவரை கொள்கையாகக் கொண்டிருந்தார். அவரது மரணசாசனம் என்றறியப்படும் அவரது இறுதிப் பேருரையில் அவர் சொல்கிறார்: “ சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோ? அய்ந்து கொள்கை. என்ன கொள்கை? 1. கடவுள் ஒழியணும் 2. மதம் ஒழியணும் 3. காந்தி ஒழியணும் 4. காங்கிரசு ஒழியணும் 5. பார்ப்பான் ஒழியணும். அன்றைய முதற்கொண்டு இன்றைய வரைக்கும் இந்த அய்ந்து கொள்கைகள்தான் நடக்கின்றன” (19.12.1973 தி.நகரில் ஆற்றிய உரை) கவனிக்க ‘பார்ப்பான் ஒழியணும்’. (பார்ப்பனியம் என்று அவர் சொல்லவில்லை.)
ராஜாஜி பதவிகளைத் தேடி அலைந்தவர் என்பதைப் போன்ற தோற்றத்தை “வகித்த சிறு பதவிகளையும்” என்று தொடங்கும் பத்தி (பக் 26) ஏற்படுத்துகிறது. உண்மை என்னவென்றால் ராஜாஜியைத் தேடி, பதவிகள் வந்தன. 1937 தேர்தலில் மொத்தமிருந்த 215 இடங்களில் 159 இடங்களைக் காங்கிரஸ் வென்றது. ஆளுநருக்கு மிக அதிக அதிகாரங்கள் இருப்பதாலும் அவர் அதை முறையின்றிப் பயன்படுத்தக்கூடும் என்பதாலும் பெரும்பான்மை பெற்றிருந்தபோதிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மறுத்தது. தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் என ஆளுநரிடம் உறுதி மொழி பெற்றுக்கொண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என சத்தியமூர்த்தி போன்றவர்கள் காங்கிரஸ் தலைமையை வற்புறுத்தினார்கள். ஜூன் 22ஆம் தேதி வைஸ்ராய் காங்கிரஸோடு இணக்கமாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஜூலை 1ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி அதை ஏற்றது. ராஜாஜியை ஆட்சி அமைக்கக் கேட்டுக்கொண்டது (காண்க: விசாலாட்சி மேனன் எழுதிய From movement to Government -The Congress in United Provinces.)
ராஜாஜி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தில் சத்தியமூர்த்தி பேசியதாவது: “இந்தியாவின் முடிசூடா மன்னனாக, இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராக, இருக்குமாறு நான் சி.ஆரிடம் மன்றாடுகிறேன். அவர் அதை ஏற்க மறுக்கிறார். ஆனால் ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. காங்கிரஸ் தொண்டரின் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள உச்சபட்ச கெளரவத்தை ஏற்க மறுத்தவர், சட்டமன்றத்தில் கட்சியை வழிநடத்தும் பெரும் பொறுப்பை, யாரும் நன்றி உணர்வு பாராட்டாத பணியை (enormous and thankless task) ஏற்குமாறு வற்புறுத்தி இணங்கச் செய்ய வைக்கப்பட்டுள்ளார்” (ராஜ்மோகன் காந்தி எழுதிய தி ராஜாஜி ஸ்டோரி.)
படேல் மறைவுக்குப் பின் நேருவின் அழைப்பின் பேரில்தான் மத்தியில் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 1952இல் காங்கிரசி லிருந்து ஒதுங்கிக் குற்றாலத்தில் ஓய்வில் இருந்தவரை வலிய அழைத்து முதல்வராக்கினார்கள்.
“தீண்டாமை உள்படச் சமூகச் சீர்கேடுகளை நீக்குவது இராஜாஜிக்கு முன்னுரிமை அம்சங்கள் அல்ல,” என்ற வரியைக் கண்டதும் திடுக்கிட்டேன். இது எவ்வளவு அபத்தமான வரி என்பது இதே இதழில், ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள கட்டுரை உணர்த்தும். பதி எழுதுகிறார்: ‘‘ராஜாஜியின் இரண்டேகால் ஆண்டு ஆட்சிக்காலம் பலவகையிலும் முக்கியத்துவமுடையதாக அமைந்தது. தேர்ந்தெடுத்த சில மாவட்டங்களில் மதுவிலக்கை ராஜாஜி செயல்படுத்தினார். கோவில் நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது.” இந்தக் கோயில் நுழைவுச் சட்டம் என்பது தீண்டத்தகாதவர்களைக் கோயிலுக்குள் நுழைவதை அனுமதிக்கும் சட்டம். சரி இது எப்போது இயற்றப்பட்டது? 1939இல் ராஜாஜி ஆட்சியில்! நாடு சுதந்திரம் பெற்றது 1947இல் எனப் பாடப்புத்தகங்கள் சொல்கின்றன.
வைக்கம் போராட்டம் பற்றிய செய்திகளும் அரைகுறையாக உள்ளன. ‘தலைவர்கள் சிலரை அனுப்பக் கேட்டு இராஜாஜிக்கு ஜார்ஜ் ஜோசப் எழுதினார்’ யாரையும் அனுப்ப முடியாது என ராஜாஜி பதிலளித்தார் என்கிறது கட்டுரை. ஏன் அனுப்ப மறுத்தார்? இந்தப் போராட்டத்தை இந்துத் தலைவர்கள்தான் முன்னெடுத்து நடத்த வேண்டும். சிரியன் கிறிஸ்துவரான ஜார்ஜ் ஜோசப் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என காந்தி 1924இலேயே தெரிவித்துவிட்டார். ஆதாரம்? ஆஸ்திரேலியப் பேராசிரியர் ராபின் ஜெஃப்ரி Social Scientist என்ற ஆய்விதழில் Temple Entry Movement in Travancore 1860-1940 என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் எழுதுகிறார்: “Christians had been soured on the campaign in April 1924 when Gandhi instructed the Syrian Christian Congressman George Joseph to leave the Satyagraha strictly to Hindus.”
போராட்டத்திலிருந்து விலகியிருங்கள் என்று காந்திஜியால் கேட்டுக்கொள்ளப்பட்ட ஒருவர் போராட்டத்திற்கு ஆள் அனுப்புங்கள் எனக் கேட்டால் ராஜாஜி எப்படி அனுப்புவார்?
ஆ.இரா. வேங்கடாசலபதி தனது கட்டுரையில் “ராஜேந்திர பிரசாத்திற்கு நேரு ஆதரவு இருந்ததால் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ஆகும் வாய்ப்பு மயிரிழையில் தவறியது” என்று எழுதியுள்ளார். ஆனால் உண்மை என்ன? ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதி ஆவதைத் தடுத்து நிறுத்த முயன்றவர் நேரு. அவர் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க விரும்பினார். காரணம் என்ன?
அரசமைப்புச் சட்டம் வடிவம் பெற்றுக்கொண்டிருந்த இறுதிக் கட்டத்தில், 1949இல் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அழுத்தங்கள் தோன்றின. ராஜாஜி நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்கான முதல் காரணம் அவர் ஏற்கெனவே கவர்னர் ஜெனரலாக இருந்து கொண்டிருக்கிறார். பதவியின் பெயரை மட்டும் மாற்றினால் போதும். இரண்டாவதாக ராஜாஜியின் மதச்சார்பின்மை நோக்கு நேருவினுடையதைப் போன்றது. ஆனால் அதே நேரம் பலர் ராஜாஜியை ஏற்கத் தயாராக இல்லை. காரணம் அவர் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது கட்சியை விட்டு வெளியேறியிருந்தது. ராஜாஜியை குடியரசுத் தலைவராக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த நேரு அதற்காக உண்மையை மறைக்கக்கூட முயன்றார் என Nehru A Troubled Legacy என்ற நூலை எழுதிய ஆர்.என்.பி. சிங் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி குறிப்பிடுகிறார். 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதியன்று நேரு, பிரசாத்திற்கு எழுதிய கடிதத்தில் படேலிடம் தான் பேசியதாகவும் ராஜாஜியைத் தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். இதனால் சினமடைந்த பிரசாத், தான் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் கட்சியில் தனது பதவி மதிக்கப்பட வேண்டும் என்றும் பதில் எழுதுகிறார். அந்தக் கடிதத்தின் நகலை படேலுக்கும் அனுப்பிவைக்கிறார்.
கடிதத்தைப் படித்த நேரு தன்னுடைய தந்திரம் பலிக்க வில்லை என்பதை உணர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார். பிரசாத்திற்கு அவர் அனுப்பிய பதிலில், “இதுபற்றி படேலுக்கு ஏதும் தெரியாது” என்றும் “இந்த முடிவுக்கும் அவருக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை” என்றும் எழுதுகிறார்.
ராமச்சந்திர குஹாவும் ராஜாஜி குடியரசுத் தலைவர் ஆவதை நேரு ஆதரித்ததாக எழுதியிருக்கிறார்.
உண்மை இப்படியிருக்க பதி, “ராஜேந்திர பிரசாத்திற்கு நேரு ஆதரவு இருந்ததால் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ஆகும் வாய்ப்பு மயிரிழையில் தவறியது” என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது, வியப்பளிக்கிறது.
மின்னஞ்சல்: maalan@gmail.com